Thursday, January 24, 2008

ப‌டித்த‌ க‌விதைக‌ள்

தப்பித்தலின் சாத்தியங்கள்...
============================

நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..

விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

- காயத்ரி

வசந்தத்தின் திரட்சி
===================

கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய
விழுதுகளாய்
மண்ணோடு பிணைந்து விடும்
பிரயத்தணங்களோடு
எப்போதும் எதிர்த் திசையில்
ஒரு பயணம் நினைவுகளால்
கடந்து விட முடியாதவையாய்
மீண்டும் மீண்டும் பேசிப் போகும்
உன் வார்த்தைகள்
தொடர் செவி மடுத்தலில்
மறைந்திருக்கும் இன்னுமொரு பொருள்
முகம் காட்டிச் சிரிக்கும்

நிகழும் வசந்தங்களைப்
பதுக்கி வைத்துக் கொள்ள
திட்டமிட்ட வேளையில்
பயமுறுத்தும் இதற்கு முன்
தாண்டிச் சென்ற கோடை

இருந்தும்
என் காலடியிலெங்கும்

வசந்தத்தின் திரட்சி
பயத்தின் நிழல் மீறி
நாற்றுக்களாய் நெளிந்து
துளிர்விடத் துவங்கியிருக்கும்

- திலகபாமா

...
====

கண்கள் இறுக்கி
கொஞ்சமேனும் மூச்சடக்கி
ஆலம் விழுதைப் பற்றி
காற்றோடு பயணிக்கும் உற்சாகத்தை
உள்ளங்கை உராய்தலுக்கு அஞ்சி
தவறவிட்டதுண்டு ...

- ல‌ஷ்மி சாக‌ம்ப‌ரி

க‌ன‌வில் அல்லி ப‌திய‌ன்க‌ள்
=========================

எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் வடிவொத்து
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லிதாளுக்கு

- கௌரிப்ரியா