Thursday, January 23, 2014

Coffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்


நான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அம்மாயி தான் காப்பி குடிக்கும் போது நான் ஏங்கி பார்க்கிறேன் என்று ஒரு வாய் குடிக்க கொடுத்து பழக்கிவிட்டதாக அம்மா சொல்வார்கள். அம்மா தடுத்தாலும் பிள்ளை ஏக்கமா பாக்கறா குடுத்த சப்பு கொட்டி குடிக்கிறா ஏன் தடுக்கிறே என்று அடக்கி விடுவார்களாம். அப்படி என்னை தேவியாக்கும் காப்பி பாணம் எனக்கு தொட்டில் பழக்கம். அதற்காக எல்லா காப்பியையும் குடித்து விட மாட்டேன், நல்ல A ரக பிபேரி காப்பி கொட்டைகளை 50% விதமும் B ரக காப்பி கொட்டைகளை 50% சரிபட வறுத்து, 100 கிராமுக்கு 10 கிராம் சிக்கரி கலந்து அரைத்து வைத்த திருச்சி புகழ் பத்மா காபியை அல்லது கிராமத்தில் காப்பி ராமு அண்ணா கொண்டு வந்து தரும் ரமா காபி இவை மட்டுமே பிரியமானது. அதுவும் காப்பிக்கு பாலில் , தண்ணீர் அளவு அதை காய்ச்சும் முறையும் மிக முக்கியம், டிக்காசன் அதிகமா சக்கரை குறைவாக சேர்த்து ஒரு சிப் அருந்தும் போது நாவில் பரவுமே ஒரு சுவை, ஆஹா காப்பி மனிதரை தேவராக்கும் பாணம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.

திருமணமாகி ப்ரிதாபாத் போய் சேர்ந்த புதிதில் காப்பித் தூள் சரியாக கிடைக்காத காரணத்தாலும் மேலும் அங்கே கிடைக்கும் பாலில் கலந்த காப்பி சுவை நாவிற்கு ஒவ்வாத காரணத்தாலும் தேனீரில் இஞ்சி எலக்காய் இன்னபிற விசயங்களை சேர்த்து ஒருவாறு நாவினை ஒப்பேத்தி கொண்டிருந்தேன். கிட்டதட்ட ஒராண்டுக்கு காப்பி அருந்துவது அறவே இல்லாது போனது. பின்னர் டெல்லி முனீர்கா ரமா ஸ்டோர் அருகே ஒரு காப்பித் தூள் கடை மிக சிறப்பாக காப்பித் தூளை அரைத்து தருவார்கள் என்று அறிந்து அங்கே போய் வாங்கி வந்து காப்பி அருந்தும் போது திருச்சி பத்மா காபியின் அதே சுவையை மீட்டெடுக்க முடிந்தது. இந்த சுவைக்காக வேறும் காப்பிப் பொடி வாங்குவதற்காகவும் அந்த சாக்கில் சரவணபவனில் சாப்பிடுவதற்காகவும் ப்ரிதாபாத்திலிருந்து வார இறுதியானால் டெல்லி செல்வோம். அப்படிப்பட்ட ஒரு பொற்காலமது.

பெங்களூர் வந்து தனியளாக இருந்த ஒரு ஆறு மாத காலத்தில் என்னிடம் மிக குறைவான பாத்திரங்களே இருந்தது, அதில் காப்பி பில்டர் இல்லை. அதனால் மீண்டும் இஞ்சி ஏலக்காய் டீக்கு என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். அதன் பின்னர் அம்மா கூட வந்து இருக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் எப்படி தான் காப்பியை விட்டாயோ அதிசயமா இருக்கு என்றார்கள். அவர்கள் அப்படி ஆச்சரியப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஒரு படி உயர டம்பளிரில் முக்கால்பாகம் காப்பி கொடுத்தால் கூட முகம் சுண்டிக் கொள்வேன் என்று முழு டம்ளராக அல்லவா காபிக் கொடுத்து வளர்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் போய் அம்மா "வயிறு காப்பிக்கு பசிக்குது" என்று கூட சொல்வேனாம். அது எனக்கு நினைவில்லை ஆனால் அம்மா இதை அடிக்கடி சொல்வார்கள். அவ்வளவு பிரியம் எனக்கும் காப்பி மீது.

இத்தனை காப்பி ப்ரியம் கொண்ட நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே என் அலுவலத்தில் காப்பி வாசனை, அலுவலத்தில் மட்டுமல்ல ஸ்டார் பக்ஸ் காபே, லாவாசா இட்டாலியன் காபே, இத்தாயி என்று எல்லா இடத்திலும் ஏகபோகமாய் காப்பி மணம் மனதை மணக்குமளவுக்கு ததும்பி வழியும். நாவை அடக்கவே முடியாதபடி அந்த காபியின் மணம் நம்மை எங்கிருந்தாலும் ஈர்க்கும். அத்தனை ஆர்வமாய் போய் அவர்கள் தரும் சின்ன வாளி அளவில் இருக்கும் பெரிய குவளையில் காப்பியை நுரை பொங்க எடுத்து வந்து ஒரே ஒரு சிப் வைத்தால் போதும் காறி துப்பும் அளவிற்கு காப்பியின் மீது வெறுப்பாகி விடும். அமெரிக்கா சென்ற முதல் வாரத்தில் அலுவகத்தில் தினம் காப்பியை எடுப்பேன் பின்னர் அப்படியே வாஷ்பேசனில் கவிழ்த்து விடுவேன். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் வரை முழுமையாக காப்பியை வெறுக்க ஆரம்பித்தேன். அங்கே தேனீரும் நாம் நினைக்கும் சுவையில் கிடைக்காது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நல்ல காப்பி கிடைக்கவில்லையே என்று நா ஏங்கி போகும் தமிழ்நாட்டு காப்பி ப்ரியர்களுக்கு காப்பி ப்ரியர்களுக்கு சன்னிவேலில்(Sunnyvale) இருக்கும் கோமள விலாஸ் (திருச்சிக்காரர் இயக்கி வருவது) http://www.komalavilas.com/ மற்றும் http://www.madrascafe.us/ மெட்ராஸ் காப்பேயும் நல்ல வடிகால். சாப்பாடு, டிபன் முக்கியமாக காப்பி எல்லாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையுடன் கிடைக்கும். ஆகா அமெரிக்கா சென்று வந்த முதல் ஆறு மாதம் நான் காப்பியை அறவே தொடவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள் அங்கிருக்கும் காப்பி என்னை எந்த அளவு வெறுப்பேத்தி விரட்டி இருக்குமென்று.

தற்சமயம் அக்குபிரஸ்ஸர் என்று ஒரு உடலையே மருத்துவர் ஆக்கும் மருத்துவ முறையொன்றின் பொருட்டு பால், தயிர் இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்று, காப்பி டீ குடித்தே ஆக வேண்டுமென்றால் ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காப்பி குடியுங்கள் என்றும் அறிவுத்தப்பட்டு, பால் சேர்த்து காப்பி குடிப்பது முற்றாக நின்று போனது. கடந்த முறை திருச்சி சென்ற போது நவகிரக கோவில்கள் சென்றதில் எனக்கு பிடித்த விசயம் நாங்கள் அருந்திய கும்பகோணம் டிகிரி காப்பியே, மேலும் திருச்சியில் இருந்து பெங்களூர் வரும் நெடுங்சாலையில் தீபாவளிக்கு சென்று வரும் போது தான் கிருஷ்ணகிரி டோல்(toll) தாண்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் டிகிரி காப்பி கடையொன்றை கண்டோம். அங்கே காபி அருந்துவதற்கென்றே அடுத்த முறையும் காரில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன் அவரிடம், ஹூம்ம்ம்ம் இனி என்று பால் ஊத்தி நல்ல காப்பித் தூளால் தயாரிக்கப்பட்ட டிக்காசன் காப்பியை எப்போது குடிப்பேனோ தெரியவில்லை. I miss you coffee.

இப்போது பரிபூர்ணமாய் உணர்கிறேன் காப்பி மனிதரை தேவனாக்கும் பாணமென்று நன்றி சுகுமாரன் சார்.  பிரபஞ்சன் எழுதி இருப்பதாக அவர் தான் சொன்னார்.

Monday, January 13, 2014

மென் உணர்வுகளின் சங்கமிப்பு - திரிவேணி

 கவிஞர் தூரன்குணாவின் முதல் சிறுகதை தொகுப்பான "பாதரசம்" வெளியீடாக வந்திருக்கும் "திரிவேணி" சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் நெஞ்சார்ந்த நினைவுகளை புரட்டிப்பார்க்க ஏதுவான, மிக எளிய மொழிவளத்தில் எழுதப்பட்ட கவித்துவமான நூல். ஒரு நல்ல கதை சொல்லியின் கதை அவனை கதைக்குள் காட்டிக் கொடுக்கும். அதனை வாசிக்கும் போது அவன் உணர்ந்த வலி, துக்கம், சந்தோசம், பரவசம் எல்லாவற்றையும் வாசிப்பவர் உணர இயலும். இன்னும் மிகைத்து சொன்னால் வாசிக்கும் தருணத்தில் வாசகன் தானே கதைக்குள் சொன்று கதையாளியாக மாறும் ஒரு விசித்திர அனுபவம் தருவதே மிக சிறந்த எழுத்தின் வடிவம். அது கதையோ, கவிதையோ எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். அத்தகைய கூடுவிட்டு கூடு பாயும் அனுபவத்தை இந்த தொகுப்பின் பல கதைகளில் தந்திருக்கிறார் தூரன் குணா. வாசிப்பு ஒரு பேரனுபவம், சில நூல்களை கையில் எடுத்தவுடனே மின்னல் வேகத்தில் முடித்துவிடும் சுவாரஸித்தில் எழுத்தப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட இலகுவான மொழியின் வசீகரமாக எழுத்தப்பட்டது தான் இந்த திரிவேணி. கடுமையான பணிகளுக்கு இடையில் வேலையில் போக்கினையும் மன அழுத்தை குறைத்து கொள்ளவும் வேறு எதேனும் வலையில் படிக்கும் இடைப்பட்ட நேரத்தில்(6 மணி நேரம்) திரிவேணியை வாசித்து முடிக்க முடிந்தது.
 தூரன் குணா முன்னுரையில் கதைக்கான களத்தையும் தன் பற்றிய பின்புலத்தையும் வாழ்வாதாரம் வேண்டி தன்னை தானே ஊர்கடத்தி கொண்ட பலரது குரலை "நினைவின் ஊரை சுமந்து  கொண்டு நிலவொளியில் வாழும்" என பிரகணடப்படுத்துகிறார். இவர் கதை வெளிவந்த பத்திரிக்கைகளும், இவருடன் உரையாடலில் இருக்கும் ஆளுமைகள் நாஞ்சுண்டான், கோணங்கி, ஆதவன் தீட்சண்யா மற்றும் பலரும்,  இவரின் பிம்பத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிக பிராகாசமாக்கித் தருகின்றார்கள். சில கதைகளை வடிவங்களை உதாரணமாக "சாரப்படுத்துதல்" வடிவத்தில் முயற்சித்தாக குளம்படி நிலம் என்ற கதையின் வடிவம் சார்ந்தும், உயிரெழுத்து இதழில் வெளியாகி, இந்த நூற்றாண்டின் சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டதாக இவர் சொல்லி இருக்கும் "கர்ண மகாராஜா" சிறுகதையினை சார்ந்தும் எனக்கு மாற்று கருத்துண்டு. அதை இறுதியில் பகிர்தலே சிறந்தது.
  தூரன் குணா பயில்வது கவிதை என்று, இவரது இரண்டு கவிதை நூல்கள் வெளியாகி இருக்கின்றது என்ற அவரது அறிமுக உரையின் வாயிலாகவும், "செந்தீயின் சிறுதுளிகளாய் காடெங்கும் மெட்டபாப்பாத்திகள் தன் போக்கில் குழந்தைகளென அலைந்து கொண்டிருக்கும்"(குளம்படி நிலம்), "சுண்ணாம்பு பூசப்பட்ட காரைசுவர்களுக்கு வெளியில் கசியும் மின்விளக்கொளி, மௌன ரகசியமாய் இருளில் வெளியில் ததும்புகிறது"(மின் மினிகள் எரியும் மூன்றாம் சாமம்), "பயனுடைய ஒன்றாக எனக்கு வாழ்வில்லை, அது காலி செய்யப்பட வேண்டிய கோப்பை"(கைக்கிளை சிலுவை)  போன்ற வரிகளாலும் அறிகிறேன்.

  "சுகிலதம்" இந்த கதையே இந்த தொகுப்பினை சார்ந்து உடனடியாக என்னை எழுத தூண்டியது. தலைப்பினை பார்த்து கொஞ்சம் மனசங்கடத்தோடே படிக்க ஆரம்பித்தேன் ஆயினும் துளியும் விரசமற்ற கதையிது. கதையாளியின் கதை கற்பனை அனுபவத்தை அப்படி உணரக்கொடுத்த இந்த கதையில் அகம் சார்ந்த சில உணர்வுகள் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழந்தையின்மைக்கு தான் காரணமோ ஆகிவிட கூடுமோ என்ற அகச்சிக்கலை தன் மனைவியிடம் மிகுந்த கடுமையான வார்த்தை வெளிப்படுத்துவதிலும், சில நாட்களாக வேலையில் சரிவர செய்யாது இருப்பதாய் மேளாளர் சொல்லவதாய் பதித்தும், மரணம் சார்ந்த அச்சம் கொள்வதும் என்று மிக அழகாக வரைந்திருக்கிருக்கிறார். இந்த கதையினை படித்து முடித்ததும் ஒரு இனம் புரியாத உணர்வொன்று உறக்கம் கலையாத ஒரு சராசரி நாளை உத்வேகமும் மிக ஆக்கபூர்வமாகவும் மாற்றி தந்தது. கைகிளை சிலவை என்ற கதையும் எந்த வித மாற்று கருத்துமற்ற சிறந்த கதையாகும். மேலும் பல சிறந்த கதைகளான திரிவேணி, கொவ்வை படர்ந்த வேலி, அந்தர நதி, கள்ளன், இருளில் மறைவர்கள் போன்ற சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த சிறுகதை நூல்.
 
  அந்தர நதி, சுந்தர ராமசாமியின் திரைகள் ஆயிரம் என்ற நெடுஞ்கதையில் வரும் புதிர் முடிச்சுகளை போல் முடிச்சுகள் கொண்டதாக இருக்கின்றது. தனியாய் வாழும் ஒரு பெண்ணின் மேல், ஒரு ஆணுக்கு இருக்கும் இருக்கும் பொதுபுத்தி சார்ந்த எண்ணம் இந்த கதையில் நாயகனுக்கும் இருக்கிறது, இந்த கதையில் நாயகி போதையில் மயங்கிய அவனுக்கு உதவும் போது கையை பிடிக்க, குருதி படித்த கத்தியை போலிருந்த ஒரு அழுத்தமான பார்வையை வீசி விட்டு போவதகாக சொல்லி இருப்பது நாயகியின் நிலைபாட்டையும் அவளை சார்ந்த புதிரை மேலும் வலுவாக்கி இருக்கின்றது. மிக ஆறுதலாக இருக்கின்றது இந்த கதையின் கண்ணியம். மேலும் இருளில் மறைபவர்கள் என்ற கதையில் வரும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மனிதாபிமனத்தை அழகாக படம் பிடித்திருப்பதும் கண்களை நிறைக்கிறது.
  காலச்சுவடில் வெளியான திரிவேணி(நூலின் தலைபினை கொண்ட சிறுகதை) என்னை மிக கவர்ந்த கதைகளில் ஒன்று. கதை அம்மா(குயிலாத்தாள் என்கிற மயிலாத்தாள்), மகள்(சரசு என்கிற சரஸ்வதி), பேத்தி(பாப்பா என்கிற மைதிலி) மூன்று பெண்களை சார்ந்தது. மிக நெகிழ்வான கதை. அன்னை இளம் வயதில் விதவையாகிறாள், அவள் பெண் கணவனுடன் வாழ பிடிக்காமல் அம்மாவை அண்டி வருகிறாள், அவள் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த ஒரு கதைக்குள் மூன்று கதைகள் இருக்கின்றன, மூன்றையும் சேர்த்து படித்தால் முழுகதையாகவும் இருக்கிறது. சிறுகதையின் இந்த வடிவம் மிக புதுமையாகவும் வரவேற்க்க தக்கதாகவுல் இருக்கின்றது. அதே சமயம் இந்த கதையிலும் சரசு கணவனை இந்த அளவு வெறுக்க என்ன காரணமென்று சொல்லப்படாமல் போனது புதிராகவும் அதே சமயம் கதையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைந்ததாகவும் எனக்கு தெரிகின்றது. மைதிலி தற்கொலைக்கு செய்யும் அளவுக்கான கொடுங்காரணம் (அம்மா பெண்ணை திட்டும் வெறும் வாய் வார்த்தை திட்டுகளுக்காகவா ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வாள்?) எதுவுமில்லை. அந்த தற்கொலை பாரங்கல் சுமப்பது போன்ற வலியினை தரவேண்டிய அந்த சம்பவம், ஒரு நீர்குமிழி வெடித்தது போன்ற அதிர்வை மட்டும் தருவது மட்டுமே இந்த சிறுகதை சிறு குறை.  ஒருவேளை இது தூரன் குணா அவர்கள் கண்டறிந்த ஒரு சம்பவமாக இருக்கும்.  கதைபடுத்தும் போது சில இடத்தில் , சம்பவத்தின் ஊகம் மட்டுமே எழுத்தாகி இருக்கிருக்கலாம் அதனால் ஆழம் கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. மற்றபடி இது மிக சிறந்த கதையாகும்.

 "கொவ்வை படர்ந்த வேலி" என்ற சிறுகதை கல்கியின் சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதையெனயும் அதுவே தனது முதல் கதை என்றும் இந்த கதையை சார்ந்து தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்து இருக்கிறார். ஒன்று விட்ட அண்ணன் தங்கையின் இனிய உறவினை, அன்பை, சகோதர பாசத்தைப் பற்றி பேசுகிறது கதை. கன கச்சிதமாக அமைந்து விட்ட கதை களத்தில் உடன் பிறந்த தங்கையற்ற அண்ணன் சகோதரியின் பாசத்திற்கு ஏங்கும் மேலும் சில காட்சிகளையும், சித்தப்பாவின் அப்பாவின் பகைமையுணர்வை வேலி தாண்டி வரும் கிடாயை மிரட்சியாக துரத்தும் சிறுமியின் காட்சி சித்திரத்தில் சொல்லியதில் மட்டுமின்றி இன்னும் அழுத்தமான நிகழ்வுகளை சேர்த்திருந்தால் இந்த கதை ஆக சிறந்த கதையாகி இருக்கும். இவர் முதல் கதை என்றதால் இவை விடுபட்டு போயிக்கக்கூடும். ஆயினும் மிக அழக்கான சிறந்த சிறுகதை இது.

கார்போரேட் என்ற கதையில் கடைசி வரி மட்டுமே கதையின் மொத்த உணர்வை சொல்லி விடுகிறது. அந்த வரியை மட்டுமே ஒரு வரி கதையாக்கி இருந்திருக்கால் அத்தனை அழுத்தம் கொண்ட வரி அது. அந்த வரிக்கு முன் வரும் அனைத்து சம்பவங்களும் படிக்க சுவாரஸியமான சிலர் தற்காலத்தில் அனுபவத்து கொண்டிருக்கும் சம்பவங்கள். கள்ளன் என்ற கதையிலும் கடைசி வரி கதையை வேறு ஒரு தளத்துக்கு உயர்த்தி வைக்கிறது. கடின மனங்களிக்கிடை மென்மை, மென் மனங்களிடை உள்ள கள்ளம், பணம் வெறும் பணம் எதை தான் செய்ய வைக்காது?
கிழக்கில் ஒரு காலம் மற்றும் குளம்படி நிலம் போன்றவை நவீன கதைகளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. சகடம் மற்றும் கர்ண மகாராஜா இரண்டும் வேறு வடித்தில் முயன்றிருந்தால் இன்னும் மிக சிறந்த கதையாகி இருக்க கூடும். இவற்றை அணுகுவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சிறுகதை வடிவ மாற்று முயற்சிகளில் விளைவான அதே சமயம் சம்பவங்கள் அழுத்தி பின்னப்பட்ட கதைகளாக அமைந்துள்ளது. கதைத் தொகுப்பில் சில கதைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் கதைகள்.

ஒரு விதத்தில் இந்த தொகுப்பின் ஒரு சில சுமாரான கதைகள் என்று நான் கணித்து வைத்திருந்த கதைகளில் குளம்படி நிலமும், கர்ண மஹாராஹாவும் உண்டு. ஒருவேளை இந்த சிறுகதைகளின் வடிவம் சார்ந்த குழப்பம் என்னை அந்த சிறுகதைகளைகளிலுள் பயணப்பட தடுத்திருக்கூடும். குளம்படி நிலத்தில் கதை முற்று பெறவில்லையோ அல்லது சொல்ல வேண்டிய முக்கியமான கருத்து விடுபட்டு போனதோ, சில சம்பவங்களின் தொகுப்பாகி போனதோ என்ற குழப்பமும் உண்டு எனக்கு. மேலும் சுமாரானென நினைத்த கதைகளே மிக சிறந்த கதைகளாக பேசப்பட்டிருக்கும் போது மற்ற கதைகள் சார்ந்து சொல்ல வார்த்தைகள் வசப்படவில்லை. இருப்பினும் திரிவேணியில் வாசிக்கும் போது எனக்குள் பதிந்த சில விசயங்களை பகிரும் பொருட்டே இப்பதிவு.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம்
இந்த புத்தகத்தினை வாங்க

 திரிவேணி(சிறுகதைகள்)-தூரன் குணா-பாதரசம் பதிப்பகம் (ஸ்டால் எண்:654)