Saturday, May 24, 2003

யாசோதரையின் யாகம்

மஞ்சள் ஒற்றாடை உடுத்தி பழுத்த துறவி போல சித்தார்த்தின் மனைவி யசோதரை அந்த வனத்தில் தனித்து அமர்ந்திருந்தாள். அவள் தவம் மெய்ப்பட்டது. ஆறு வருடம் கழித்து அவள் கணவன் வர இருக்கின்றாராம். எண்ணிப் பார்த்தாள் தன் பழைய வாழ்வதனை. எத்தனை ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை. கண் நிறைந்த மாமன் மகனே காதலானாக பின் கணவனாக. அரண்மனை வாழ்க்கை, ஆயிரம் பணியாட்கள். தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிய மாமனே மாமனார். சுவைக்க கனி வகைகள், பொழுதை இன்பமாக கழிக்க நந்தவனங்கள். ஆடல் பாடல்களுக்கு குறைவில்லாத அந்தப்புரம். பதி்மூன்று வருடங்கள் எத்தனை இனிமையாக இருந்தது ஒரே ஒரு குறையை தவிர. பிள்ளை வரம். அதுவும் பதிமூணாம் வருடம் கிடைக்கப் பெற்றது. எத்துணை மகிழ்வடைந்தார் என் கணவர் நான் கருவுற்ற செய்தியை கேட்டு. என்னை அர்ச்சிக்காத குறை தான். ஆடை ஆபரணம் என்று அள்ளி குவித்தனர் மாமனும் கணவரும். இந்த உலகே அழகானது போல எத்துணை அருமையாக இருந்தது என் வாழ்க்கை.

ஆனால் ஆண்மகவை பெற்று அடுத்த நொடி முதல் இந்த உலகில் இருக்கும் அத்தனை துயரங்களையும் ஒன்றாக பெற்றது போல ஒரே இரவில் இருண்டல்லவா போனது என் வாழ்க்கை. என்ன நினைத்தாரோ ஏது அறிந்தாரோ இத்துணை அன்பானவளை நொடியில் துறந்து சென்ற இடம் தான் தெரியாது. தவித்த தவிப்பொன்ன? உண்ண மறந்து உறங்க மறந்து பித்துப் பிடித்தவள் போல இருந்த கொடுமை தான் என்ன? தனிமை கொடுங்கொடுமை. அதிலும் இளமையில் தனிமை இன்னுமல்லவா கொடுமை. இன்று வருகின்றாயா! வா! உன்னிடம் கேட்க வேண்டும் சில பல கேள்விகள் அதற்கு தானே இந்த தவம்.

வந்தார் கௌதம புத்தார் முன்னாள் சித்தார்த் இன்னாள் ஞானம் பெற்ற புத்தர். வந்தார். தன் தந்தையிடம் "எங்கே யாசோதரை என்றார்?" அந்த அறையில் என்றோரு அறை காட்டினார் உள்ளே சென்றார். வந்தாள் யசோதரை புத்தரின் காலில் வீழ்ந்தாள் கதறி அழுதாள். அழுது தீர்க்கும் வரை காத்திருந்தார் புத்தர். ஆரம்பமானது யசோதரையின் கேள்வி கணைகள்

"ஏ புத்தரே உன்னை இப்படி கேட்க வேண்டும் என்று தான் இத்தனை நாள் காத்திருந்தேன். ஒரு பிள்ளைக்கு அதுவும் பதிமூன்று ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு பெயர் சூட்டக் கூட தந்தை என்று நிற்காமல் உன் ஞானம் பெரிதென்று எங்கோ சென்று விட்டாய். தந்தையாய் அந்த பிள்ளைக்கு என்ன செய்தனை நீ?

"உன் மேல் கொள்ளை பிரியம் வைத்து இந்த உலகே தெரியாமல் துன்பம் என்பதென்ன என்ன தெரியாமல் பாசம் நேசம் கொட்டி வளர்த்தாரே என் மாமன், அவருக்கு ஒரு மகனாய் உன் கடமையை செய்தாயா?"

"உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் இந்நாட்டு மக்கள், நீ மன்னனாகி நல்வாழ்வை அவர்களுக்கு அளிப்பாய் என்று. ஆனால் நீயோ ஏதோ போதி மரம் தான் உன் பெற்ற தாய் போல போய் அடைக்கலமடைந்து விட்டாய். உன் கடமை தவறிவிட்டாய்"

"இந்த ஆறு வருடங்களாக பகலை பாழாய் கழித்தேன். இரவை ஏங்கி கழித்தேன். மாமன் மகன் என்ற காரணத்தால் மணந்தேன். உன்னை மணந்த காரணத்தால் இல்லதுள்ளேயே துறவறம் பூண்டேன். உன்னை போல பிச்சை எடுத்து மட்டும் தான் உண்ணவில்லை. ஆனால் அடம்பர ஆடை அணிகலனை துறந்தேன். ஒரு வேளை மட்டும் உண்டேன். உறங்க கடும் தரையை மட்டும் உபயோகபடுத்தினேன். என்னை மறுபடியும் மணக்க முன் வந்தோரிடம் மறுத்தேன். ஏன் தெரியுமா? ஒரு நாள் நீ வருவாய், அன்று இந்த கேள்வியை உன்னிடம் கேட்க வேண்டும் என்றே காத்திருந்தேன்."

"ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதே உன் போதனையாம் நீ போதி மரத்தில் அடியில் உணர்ந்தறிந்ததாம். ஆனால் நான் சொல்வேன் என் எல்லா துயரத்திற்கும் காரணம் கௌதம புத்தனே நீர் தான் ஆவீர்"