Thursday, December 24, 2009

பரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி

வெள்ளி கிழமை காலையிலேயே எதிர் அறை தமிழ் நண்பர் இன்று மாலை நாங்கள் வெளியே சொல்லும் திட்டத்தில் இருக்கின்றோம் நீங்கள் வர இயலுமா என்றார். சரி என்று சொல்லி வைத்திருந்தேன். அலுவலக எண்ணை வாங்கி கொண்டு அவரும் பக்கத்து அறை தோழி சென்று விட்டனர். வேலையில் மூழ்கியிருந்த நேரம் மாலை 5 மணிக்கு நண்பரின் அழைப்பு வந்தது. நாங்க இங்கே இருந்து கிளம்ப போறோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஹோட்டலில் இருப்போம். சித்தி விநாயகர் கோவில் செல்வதாக திட்டம் நீங்கள் சரியாக 6 மணிக்கு அறைக்கு வந்தால் எல்லோரும் போகலாம் என்றார். அவசர அவசரமாக மிச்சமிருந்த வேலையை முடித்துவிட்டு வேகமாக ஓடி வந்து அவர்களோடு சென்றேன். வழக்கம் போல் மெட்ரோ டி-சென்ரம் சென்று அங்கிருந்து இன்னும் ஒரு மெட்ரோ பிடித்து ஃபர்ஸ்ரா(Farstra) என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து ஒரு 5 நிமிடம் நடந்து சில படிக்கட்டுகள் ஏறினால் அருள் மிகு சுவீடன் சிறீ(ஸ்ரீ) சித்தி வினாயகர் ஆலயம் என்ற அன்பான பெயர் பலகை வரவேற்கும்.

அருள் மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் என்று தமிழ் எழுத்துகளை சுவீடனின் கண்டால் எப்படி இருக்கும். பரவசம் பொங்காது. அப்படிப்பட்ட பரவசத்தில் தான் இந்த
பதிவு. ஆம் சுவீடனில் சித்தி வினாயகர் ஆலயம் இருக்கின்றது. இலங்கை தமிழர்களால் நடத்த பெறும் இந்த ஆலயத்தை பற்றி என் பயண கட்டுரையில் மட்டும் அடக்கி விட முடியாத ஆவலால் தனி பதிவு. விநாயகர் தாள் சரணம்.

நாங்கள் உள்ளே நுழைந்த போது ஒரு 30 முதல் 35 பேருக்கு குறையாமல் கோவிலில் குழுமி இருந்தனர். நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை என்று தேன் மதுர குரலில் ஒரு அம்மையார் முருகன் மேல் பாடிக் கொண்டு இருந்தார். தொடர்ந்து இன்னும் ஒருவர் பிள்ளையார் கீத்தனம் கீச் குரலில் பாடி முடிக்க ஆரத்தி நடந்தது திவ்யமாக.

ஒரு சாம்பினாரி தூபக் கோல் போன்ற ஒன்றில் மூன்று வெற்றிலைக்கு நடுவில் ஒரு உடைத்த தேங்காய் மூடியும் அதன் மேல் ஒரு ஆரஞ்சு பழமும் வைத்திருந்தது பார்க்க மிக
நேர்த்தியாக அழகாக இருந்தது. சாப்பாடும் சாப்பரும் பரிமாறப்பட்ட இலையும், ஒரு தட்டில் நிறைய மோதங்களும் இருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பார்க்க
அருமையாக இருந்தார் வசந்த மண்டப்பத்தில்.

கோவில் மூலஸ்தானத்தில் பிள்ளையாரும், கொடி மரத்தை ஒட்டிய தூணோடு தும்ப விநாயகரும் நம்மை ஒரு சேர வரவேற்க்கின்றனர். கொடுமரத்திற்கு முன் பலிபீடம்முன் மூங்சூரும் கூட இருப்பது நம் ஊரில் இருப்பது போன்றே உணர்வை தருகின்றது. பிள்ளையார் கோவில் விட்டு வெளியே பார்வையை ஓட்டினால் பிரதானத்தின் வலப்பக்கம் ஒரு சிறு மண்டப்பத்தில் சிவனும் இடப்பக்கம் அம்பாளும், அப்படியே கோவிலை சுற்றினால் வலதுகோடியில் மஹாலஷ்மியும், இடது கோடியில் வள்ளி,தெய்வானை சமேத முருகனும், சற்றே முன்புறமாக நவகிரங்களும் வசந்தமண்டபத்தை தாண்டி பைரவரும் வீற்று இருக்கின்றனர்.

ஆரத்தி முடிந்து அனைவர்க்கு அளிக்கப்பட்ட விபூதியில் அப்படி ஒரு ஜவ்வாது வாசனை, வீடு வந்து சேரும் வரை கூட அதன் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கின்றது. பின் பாலும்,
பூக்களும்,சந்தனம் குங்குமமும் வழங்கப்பட்டன. கொஞ்சம்(ஒரு கரண்டி) எலிமிச்சை சாதம் தரப்பட்டது. சரி செல்லலாம் என்று எத்தனித்தால் பெரிய பாத்திரத்தில் சாம்பார் சாதம் சுடச்சுட கொண்டு வைத்தார்கள் அனைவர்க்கும் ஒரு தட்டில் சாம்பார் சாதமும், கொஞ்சம் பருப்பும், தயிரும் கூடவே அரை மோதகமும்(மிக அருமையாக இருந்தது உண்டு முடித்து சுவையாக இருக்கின்றது என்று மீண்டும் கேட்க சென்றேன் அதற்குள் தீர்ந்து விட்டது) கொடுத்தார்கள். இரவு உணவிற்கு வேறு எதுவும் தேவையில்லாத அளவிருந்தது அங்கே அருந்திய பிரசாதம்.

வயிரும், மனமும் நிறைந்ததொரு வார இறுதியின் தொடக்கத்தை என்னால் மறக்கவே முடியாது. சித்தியோடு புத்தியும் தரும் சீர் மிகு விநாயகர் அருள் பெருகட்டும் எங்கும்.

சுவிட் சுவீடன் - பகுதி 2

சுவீட் சுவீடன் மெட்ரோவும்,செல்ப் சர்வீஸ் சூப்பர் மார்கெட்களும் இந்தியாவிலேயே பார்க்க கிடைப்பதால் இது ஒன்றும் புதிய உணர்வை கொடுக்கவில்லை.(ஆனால் சில்லறை பெருவதற்கும் மீதி சில்லறை தருவதற்கும் மெசின் இருக்கு புதுமையா) ஆனாலும் பனி சூழ்ந்த சுவீடன், பசும் புல்வெளி ஆங்காங்க வெண்பனி இயற்கை போட்ட ரங்கோலி, சில சமயம் சோப்பு நுரை பரப்பியது போல, சில சமயம் இட்லி மாவை கொட்டி பரப்பியதை போல, கேக் மேல் பரப்பிய ஐசிங் போல இப்படி பலவிதங்களில் அழகாக இருக்கின்றது. பனி பொலியும் போது பஞ்சு மிட்டாய் வெள்ளை கலரில் பறப்பது போல ரசிக்கும் படி இருக்கின்றது அறைக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருக்கும் வரை. வெளியே நடக்கும் போது என்னதான் கனமான ஜாக்கெட் போட்டாலும்,க்ளவுஸ் போட்டாலும், சாக்ஸ்,சூ போட்டாலும் கையும் காலும் விரைத்து போவதும், தரையில் நடப்பதே பனிக்கட்டி மேல் நடப்பது போல வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது. சில நாட்கள் காலையில் அலுவலகம் வரும் போது நம் ஊர் போல இருக்கும் ரோடும், தரையும். ஆனால் மாலை திரும்பும் முன் பனி பொழிந்து எங்கும் வெள்ளை கம்பளத்தை விரித்தது(தூய வெள்ளை நிறம் பார்க்க கொள்ளை அழகு) போல ஆகிவிடும். மரம்,செடிகளில் ஆங்காங்கே தங்கியபடி இருக்கும் பனித்துகள் பார்க்க கொள்ளை அழகு. சில சமயம் மரங்கள் பூத்த வெள்ளை பூப்போல இருக்கும் அவை.

எண்களால் ஆனது சுவிடன் உலகம். ஹோட்டல் நுழைவாயிலில் ஒரு சந்கேத எண் அடித்தால் தான் கதவு திறக்க கதவோடு இணைக்கப்பட்ட பாதுகாப்பு கருவி அனுமதி தருகின்றது. அதன் பின் அறைகள் இருக்கும் வரண்டாவில் ஒரு 4 இலக்கத்தை அடிக்க வேண்டி இருக்கின்றது அதை தாண்டி கதவை திறக்க ஒரு எண், பூட்டிவிட்டு வெளியே வர இன்னொரு எண்(சாவியோடு உள்ள பூட்டும் உண்டு இந்தியர்களுக்காகவே இந்த ஏற்பாடு என்றாள் ஹோட்டலை நிர்வாகிக்கும் பெண். என்ன தான் இலக்க எண்கள் கொடுத்து படு பயங்கர பாதுக்காப்பென்றாலும் இந்தியர்கள் மட்டும் பூட்டு சாவி கேட்கின்றார்களாம், இருக்காதா பின்னே பூட்டை பூட்டி அதை ஒரு முறை தொங்கி திறக்கவில்லை என்று தெரிந்ததும் தானே மனதுக்கு நிம்மதி பிறக்கின்றது நமக்கு.) சரி இப்படி தங்கும் இடத்தில் தான் இத்தனை இலக்க எண்களை மனனம் செய்ய வேண்டுமென்றால், பணி இடமோ அதற்கு மேல், நுழைவாயில், வாரண்டா மட்டும் இல்லாது மின்தூக்கியில் ஏற ஒரு எண், இறங்க ஒரு எண்(அடகொன்னியா உங்க பாதுகாப்பு உணர்ச்சிக்கு அளவே இல்லையா?) ஒருவேளை இறங்கும் எண்ணை தப்பாக அழுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்து E மாடிக்கு(அதானுங்க நுழைவாயில், entrance floor) வரும் முன் அங்கே இருக்கும் காவலாளர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய் விடுவார்களாம்.(அவ்வளவு fast)

நான் பணி நிமித்தம் சென்ற அலுவலக்கதில் ஒரு மாலை சூடான விவாதத்தின் இடையில் உடன் இருந்த சூவிடன் அலுவலக பணியாளர் குடிக்க டீ வேண்டுமா என்றதும் சரி என்றேன். அவர் யாரிடமோ சொல்ல ஒரு மனிதர் கரும்காபி எடுத்து வந்தார், அவர் பார்க்க ஆபிஸ் பாய் மாதிரி இல்லை. பால் வேண்டும்,சர்க்கரை வேண்டும் என்று நான் படுத்தியதும் அந்த மனிதர் வெளியே சென்று வாங்கி வந்தார். அலுவத்தின் போன் ஆப்ரட்டேர், அட்மின்ஸ்ட்ரெசன் சம்மந்தப்பட்ட வேலை அனைத்து அவர் தான் பார்ப்பராம். அலுவலகத்தில் எப்போதும் பழவகைகள் இருக்கும் அதை வாங்கி வருபவரும் அவர் தானாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஆளுக்கு Rs.10000 என்று எங்கள் அலுவலத்தில் இருந்து பெறும் கம்பெனியின் முதலாளி அவர் என்றால் கொஞ்சம் வியப்பாக இல்லாமல் என்ன செய்யும்?

சுவிடனில் வந்து கொஞ்சம் சுவிடிஷ்(அது என்ன டிஷ் என்பவர்க்கு அது தான் சுவீடனின் மொழி) புரியும் வரை கொஞ்சம் கடினம் தான். சூப்பர் மார்கெட் சென்று ஒரு சோப்பு பவுடர் வாங்க வேண்டுமானாலும் அங்கே இருப்பவரிடம் இது சோப்பு பவுடர் தானே என்று கேட்க வேண்டி இருக்கின்றது. பால்,தயிர் என்று எதுவுமே ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை. எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் சுவிடனில் சுவிடிஷ் பேச தயங்குவதே இல்லை இந்த மக்கள். என்னோடு பணி புரியும் சக பணியாளி, தான் செய்த மென்பொருளை என்னிடம் காட்டும் போது அதில் எழுதப்பட்டுருந்த விளக்கங்கள்(comments) சுவிடிஷில் இருந்தது(விட்டா இவிங்க மென்பொருளை கூட சுவிடிஷில் எழுதி விடுவார்கள் போலும்) அவ்வளவு மொழிப்பற்று.

வார இறுதியில் சுவிடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சென்றோம் கிருஸ்துமஸ் இப்போது தான் முடிந்து இருக்கின்றது அதனால் எல்லா இடங்களிலும் பல விதமான வண்ண விளக்குகள் இருந்தன. ஸ்டாக்ஹோமில் பெரிய மார்கெட் இருக்கின்றது. அங்கே எல்லாம் கிடைக்குமாம். ஆனாலும் நமது திநகர் மார்கெட் போல் எல்லாம் இல்லை. சும்மா சுவீடன் வந்ததற்கு சென்று பார்க்கலாம். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒன்றொன்றும் ஒவ்வொரு அலங்காரத்தில்(interior decoration) ரசிக்கும் படியாக இருக்கின்றது. இங்கே இருக்கும் குழுந்தைகள் பெரும்பாலும் அழுவதோ, அதிகம் அங்கிங்கும் ஓடுவதோ கிடையாது, கன்ன சிவப்போடு அமைதியான பொம்மைகள் போலிருக்கின்றன.சுவிடன் சாப்பாட்டு விடுதிகளில் வெஜிடேரியன் என்றால் நான்கைந்து உருளை கிழங்கை அவித்தும் சில இழை தழைகளை அவிக்காமலும் தருகின்றார்கள்.

சுவீட் சுவீடன் - பகுதி 1

அலுவலகத்தில் நான் இணைந்த போதே கம்பெனியின் முதன்மை தொழிற்நுட்ப அதிகாரி(CTO) பணி நிமித்தமாக அடிக்கடி சுவீடன் செல்ல வேண்டி இருக்கும் உங்களுக்கு ஆட்சேணை எதுவும் இருக்கின்றதா என்று கேட்டு இருந்தார். நானும் இல்லை எனச் சொல்லி வைத்திருந்தேன். உடனே விசா பெற ஏற்பாடு செய்தார்கள். விசா வந்தது. கிட்டதட்ட விசா வந்து இரண்டு மாதம் பயணம் ஒன்றும் திட்டமிடப்படவில்லை. நானும் மறந்து போய் இருந்தேன். திடீரென ஒரு நாள் மடல் வந்தது: அடுத்த வாரம் உங்கள் பயணம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தயாராகுங்கள் என்று. மடமடவென எல்லாப் பொருட்களையும் வாங்கி கொண்டே இருந்தேன்... கிளம்பும் நாள் வந்துவிட்டது.

அங்கே குளிர் -15 டிக்கிரி என்றதும் அதற்காக வாங்கிய ஜாக்கெட் போட்டால் அத்தனை கனமாக இருந்தது. எனக்கு அப்போதிருந்தே டென்ஷன் ஆரம்பித்து விட்டது. இத்தனை கனமான ஆடையை அணிந்து ஒரு மாத கால கடும் குளிர் பிரதேசத்தில் எப்படி காலம் கடத்த போகிறேன்று.

பயணநாளில் வீட்டிலிருந்து விமானம் வரை எந்த தடங்கலும் இன்றி (என்னுடன் இன்னும் இருவர் வந்ததால் எந்த கவலையும் எனக்கிருக்கவில்லை) 7 மணி நேரம் பயணத்திற்குப் பின் ஹெல்சிங்கி (ஃபின்லாண்ட்) வந்தடைந்தோம். விமானம் ஆப்கானிஸ்தானை கடக்கும் போது, ஒரு மலைத் தொடரில் பனி மூடி(வெள்ளை சிமெண்ட் கொட்டும் போது ஒரு வித புகையோடு கொட்டும் இடத்தை மூடுமே அது போல) இருந்ததது. பார்க்க மிக அழகாக இருந்தது. ஆனால் அது இமய மலையா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை. (அது இந்துகுஷ் மலையாம்)

ஹெல்சிங்கியில் வந்து பார்த்ததும் தான் தெரிந்தது வந்த மூவரில் இருவருக்கு முதல் விமானத்திலும், எனக்கு மட்டும் அடுத்த(5 மணி நேரம் கழித்து) விமானத்திலும் இடம் ஒதுக்கபட்டிருந்தது. கேட்டால் முதல் விமானம் நிறைந்து விட்டது என்றும் என் பயணத்தை மாற்ற முடியாதென்றும், அந்த விமானத்தில் யாராவது ஒருவராவது செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் அனைவரின் சாமான்களும் அந்த விமானத்தில் செல்லவதாகவும் தெரிந்ததால் என்னை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். அங்கே போய் அந்த விமான நிலையத்தில் காத்திருக்கின்றோம் என்று சொல்லிக் கிளம்பினார்கள்.

நான் தனியாக 5 மணி நேரம் வேறு கடத்த வேண்டும்; அத்துடன் அங்கே போய் எப்படி அவர்களை கண்டு பிடிப்பது, எங்கே இருப்பார்கள் என்று பல கவலை வாட்ட, கூடவே கனமான ஜாக்கெட் வேற இன்னும் படுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நல்லவேளை ஹெல்சிங்கி விமான நிலையத்தில் ஒய்-பைய் இருந்ததால் என் மடிகணினி மூலம் இணையத்தில் ஒரு வலம் வந்தேன். மாதவிபந்தல், தமிழ் உலா பாவை பதிவுகளை பார்த்தேன். நர்சிம், பரிசல், நுனிப்புல், அனுஜன்யா (வழக்கம் போல் பழைய பதிவு), மொழி விளையாட்டு என்று வழக்கமாக வலம் வரும் அனைத்து வலைப்பூக்களைப் பார்த்தும் ஒரு மணி நேரம் தான் கழிந்திருந்தது. மேலும் வலைமேய முடியவில்லை. பயண அலுப்பு வேறு. அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்க முயற்சித்தேன் அதுவும் முடியவில்லை. அந்த 5 மணி நேரம் கழிப்பது பெரும் பாடாயிற்று.

ஒரு வழியாக அடுத்த விமானத்தை பிடித்து, ஸ்டாக்ஹம் விமான நிலையத்தை அடைந்தேன். (விமானத்தில் பக்கத்து இருக்கைகாரர் பொதுவாக பேச ஆரம்பித்து தொழில்நுட்பம் வரை பேசினார். என்னால் முடியவில்லை ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசினேன் ஏதோ.) அங்கே சொன்னபடி என்னோடு வேலைபார்க்கும் உடன் வந்த நண்பர்கள் காத்திருந்தார்கள். அங்கிருந்து அனைவரும் கிளம்பி என்னை அக்லாவில் எனக்காக ஒதுக்கப்பட்ட கெஸ்ட் ஹவுசில் இறக்கிவிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடம்(சீஸ்தா) சென்றார்கள்.

சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5

அடுத்த‌ வார‌ம் என்னுடைய‌ க‌டைசி வார‌ இறுதி அத‌னால் என் விருப்ப‌ப்ப‌டி மலை ப‌னிச‌ர‌க்கு போக‌ எல்லோரும் முடிவெடுத்தார்க‌ள். காலையில் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன். என் ப‌ய‌ண‌ச் சீட்டை ஒரு ச‌ட்டையுள் வைத்து சேர்த்து துவைத்து விட்டு இருந்தேன். அதில் நான்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ தேவையான‌ அள‌வு ப‌ய‌ண‌ சீட்டை அதில் இருந்த‌து. எப்ப‌டியோ அத‌ன் துண்டுக‌ளை சேக‌ரித்து ஏதோ ஒரு ந‌ம்பிக்கையோடு வெளியே கிள‌ம்பியாற்று. மெட்ரோவில் ஓத்துக் கொண்டார்க‌ள் ஆனால் பேருந்தில் அதை குப்பைத் தொட்டியில் போட‌ போனார் அத‌ன் ஓட்டுனர். கெஞ்சி குத்தாடி அவ‌ரிட‌ம் இருந்த‌ பய‌ண‌ச்சீட்டு துண்டுக‌ளை வாங்கிக் கொண்டு ஒரு ந‌ண்ப‌ரும் நானும் அடுத்த‌ பேருந்தில் வ‌ருவதாக‌ சொல்லிவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அனுப்பிவிட்டு, சேர‌ வேண்டிய இட‌ம் தெரியும் என்ப‌தால் அதே இட‌ம் போகும் வேறு பேருந்துக்கு சென்றோம். அங்கே ஒரு ஆத்தா அங்காள ப‌ர‌மேஸ்வ‌ரி என் ப‌ய‌ண‌ச்சீட்டை ஒரு புன்ன‌கையோடு ஏற்று கொண்டு நாக்கா ஸ்ர‌ண்டு அழைத்துச் சென்றாள்.

ஆனால் இற‌ங்கிய‌ உட‌னேயே தெரிந்து விட்ட‌து அந்த‌ இட‌ம் இத‌ற்கு முன் வ‌ந்த‌ இட‌மில்லை. கூட‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர் சுவீட‌னுக்கு புதிது. என்னிட‌ம் கைபேசி இல்லை. உட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர் தான் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் பேசினார். அவ‌ர்க‌ள் சொன்ன‌தாக‌ சொல்லி என்னை நீண்ட‌ தூர‌ம் அழைத்து சென்றார் அவ‌ர் ந‌ம்பிக்கையாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருந்தார். ச‌ரி அவ‌ரிட‌ம் அவ‌ர்க‌ள் ச‌ரியாக‌ சொல்லி இருப்பார்க‌ள் என்று நினைத்தேன். ஆனால் நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்த‌ பின் தான் தெரிந்த‌து ஒரு வேளை த‌வ‌றான‌ இட‌த்திற்கு வ‌ந்து விட்டோமோ என்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாகிவிட்ட‌து. ஒரு குழுவாக‌ வ‌ந்தோம் ந‌ம்மை காணாம‌ல் அவ‌ர்க‌ள் த‌வித்து போவார்க‌ள். அவ‌ர்க‌ள் நேர‌மும் ந‌ம்மால் விர‌ய‌மாகும் என்று நினைவே என்னை வாட்டிய‌து.

அந்த‌ இட‌ம் மிக‌ அழ‌காக‌ இருந்த‌து. ஒரு ஏரி இருந்த‌து. அதில் நீருற்று இருந்த‌து. அழ‌கான‌ சிலைக‌ள் இருந்த‌ன‌. ப‌னி போர்த்த‌ சிறு குன்றுக‌ள் என்று எல்லா இட‌மும் ந‌ன்றாக‌ இருந்த‌து. ஆனால் நான் தான் க‌வ‌லையில் எதையும் ர‌சிக்க‌வில்லை. உட‌னிருந்த‌ நண்ப‌ர் ஏன் ப‌ய‌ம் நானிருக்கேனில்லை என்றார். என‌க்கு பய‌மில்லை ஆனாலும் இப்ப‌டி ஆகிவிட்ட‌தே ஒரு ப‌ய‌ண‌ச்சீட்டு எடுத்து இருக்க‌லாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் பேருந்திலிருந்து இற‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து அங்கே ஒரு க‌டைகாரிட‌ம் விசாரித்தால் போக‌ வேண்டிய‌து நாக்கா ஃபோர‌ம் என்று தெரிந்த‌து. ஒரு ப‌ய‌ண‌சீட்டு த‌ரும் இய‌ந்திர‌த்தில் ஒரு 30 கோனாரை போட்டு ஒரு பய‌ண‌ச்சீட்டை எடுத்து ஒரு ம‌ணி க‌ழித்து ஒரு பேருந்தில் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்குமிட‌ம் சேர்ந்தோம். மீண்டும் ப‌னிம‌லை ச‌றுக்காம‌ல் கிள‌ம்பினோம் அன்றும்.

சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4

ம‌றுநாள் சென்னை ந‌ண்ப‌ர் கிள‌ம்புவ‌தாக‌ இருந்த‌து. அனைவ‌ரும் அவ‌ர் அறையில் கூடினோம் ஒன்றாக‌ உண‌வ‌ருந்தி, உங்க‌ள் இந்தியா அலைபேசி எண் என்ன‌? ம‌ட‌ல் முக‌வ‌ரி என்று வின‌வ‌ல்க‌ள், இனிய‌ ப‌ய‌ண‌ வாழ்த்துக‌ள் இத்தியாதி இத்தியாசி எல்லா ச‌ம்பாஷ‌ணையும் ந‌ட‌ந்தேறிய‌து. அவ‌ரை பிரிந்த‌து மிக‌ வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. நாங்க‌ள் ஐவ‌ர் நால்வ‌ரானோம். அவ‌ர் அறையை க‌ட‌க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வித்தியாச‌மான‌ உண‌ர்வு.

அத‌ன் அடுத்த‌ வார‌ இறுதிக்குள் எங்க‌ள் குழுவில் மேலும் நால்வ‌ர் வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அதில் மூவ‌ர் த‌மிழ‌ர். என் உல‌க‌ம் மாறிய‌து. த‌மிழ் பேச்சு, பாட்டு என்று சுவீட‌னுள் ஒரு புது உல‌க‌த்தில் இருந்தேன். கிட்ட‌த்த‌ட்ட‌ இந்தியாவை விட்டு வெகு தூர‌த்தில் இருக்கின்றோம் என்ற‌ உண‌ர்வே இல்லை என‌க்கு. நால்வ‌ர் எண்வ‌ரானோம். வாழ்க்கையின் மினி த‌த்துவ‌த்தை உண‌ர்ந்தேன் ஒருவ‌ர் போவார் இன்னும் ப‌ல‌ர் வ‌ருவார் இது தானே வாழ்க்கை.

அந்த‌ வார‌ இறுதியில் ப‌னி பொலிவு மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌து. கணுக்கால் வ‌ரை கால் புதையும் வ‌ரை ப‌னியின் அட‌ர்த்தி இருந்த‌து. மிக‌ வித்தியாச‌மான‌ சாலையில் கூட‌ ப‌னி மூடி இருந்த‌து. தொட‌ர்ந்து ப‌னி பொழிந்து கொண்டு இருந்த‌து. வெளியில் கிள‌ம்பினோம். ப‌னித்துளிக‌ள் த‌லையில் வ‌ந்து த‌ங்க‌ த‌ங்க‌ அதை வில‌க்கிய‌வாறு ந‌ட‌ந்தோம். முக‌த்தில் வ‌ந்து போதும் மென்மையான‌ ப‌னி ர‌ம்ய‌மாக‌ இருந்த‌து. ம‌ழை போலில்லை ப‌னிப் பொலிவு. ஆடை ந‌னையும் என்ற‌ அய்ய‌மில்லை. ப‌னியில் ந‌னைந்தாலும் குளிர்வ‌தில்லை. அது ஒரு ஆன‌ந்த‌ நிலை. வெளியே கிள‌ம்பி வ‌ந்த‌தும் எங்க‌ள் விடுதிக்கு முன் இருக்கும் மேட்டில் வழ‌க்க‌ம் போல் சிறுவ‌ர் சிறுமிய‌ர் ச‌ர‌க்கி விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு ப‌ட‌கை நானும் வாங்கி ச‌ர‌க்கினேன். அங்கே ஒரு ப‌னி பொம்மை செய்து வைத்திருந்தார்க‌ள். ந‌ம் ஊர் சோலைக்கொலை பொம்மை போல‌. அழ‌க்காக‌ இருந்த‌து அந்த‌ பொம்மை.

புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை வெளியே அழைத்து செல்ல‌ வேண்டும் என்று நினைத்து டி‍சென்ர‌ல் சென்று ப‌னிச‌ர‌க்கு இட‌ம் செல்ல‌ முடிவாயிற்று. புதிய‌வ‌ர் யாரும் ப‌ய‌மின்றி உட‌னே ச‌ரி என்று சொன்ன‌து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நானும் ச‌ர‌க்கு கால‌ணி அணிய‌ வேண்டியாற்று, இந்த‌ முறை போன‌ முறை போல‌ அல்லாது கொஞ்ச‌ம் எளிதாக‌ இருந்த‌து. ஆனால் ப‌னி பொலிவின் கார‌ண‌மாக‌ பாதையே கூட‌ ச‌ருக்க‌க்கிய ப‌டி இருந்த‌து. க‌ள‌த்தில் இருங்க‌வே ஒரு ம‌ணி நேர‌ம் ஆகிய‌து.

நான்கு முறையாவ‌து சுற்றி வ‌ர‌ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மூன்ற‌ரை சுற்று தான் சுற்ற‌ முடிந்த‌து. அத‌ற்க்குள் த‌ய‌வு செய்து உங்க‌ள் கால‌ணிக‌ளை திருப்பி த‌ர‌வும் என்று சுவிடிஷில் அறிவிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். அதுவ‌ரை ஒழுங்காக‌ ந‌ட‌ந்த‌ நான் ச‌ற்று வேக‌மாக‌ ந‌ட‌க்க‌ முய‌ன்று, முடிக்கும் நேர‌த்தில் விழுந்தேன். விழுத்தால் தான் எழுவ‌து சிர‌மாயிற்றே. திரும்பி பார்த்தால் எங்க‌ள் குழுவில் ஒரு ந‌ண்ப‌ர் ஓடி வ‌ந்து கொண்டு இருந்தார் என‌க்கு கைக்கொடுக்க‌, நெகிழ்த்தேன். ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளும் வ‌ந்து என்னை வேக‌மாக‌ இழுத்து செல்வ‌தாக‌ விளையாட்டிக்கு இழுத்து விழ‌ வைத்தார்க‌ள் மீண்டும். :(

சுவீட் சுவீடன் - பகுதி 3

அடுத்த இரண்டு வாரங்களும் அலுவலகம் அறை மைக்ரோவேவ்(அடுப்படி) வேலை வேலை மற்றும் வேலை என்றவாறு கழிந்தது. ஒவ்வொரு வார இறுதியிலும் அலுவலக நண்பர்களை எங்காவது செல்லலாமா என்று கேட்பேன் அவர்களும் சொல்கின்றோம் என்று சொல்லி ஒன்றும் சொல்லாமல் விட சமையல் தூக்கம் இணையம் வேறு வழியே இல்லாமல் அலுவலையாவது முடிப்போம் என்று கழிந்தது. ஆனால் வித்தியாசமாக நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வார இறுதியில், வெள்ளி இரவில் விடுதி வரண்டாவில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி புரிய வந்திருந்த நான் தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்த ஒரு குழுவை(group) சந்தித்தேன். இந்த குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் வேறு. நாளை நாங்கள் வெளியே செல்கின்றோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களோடு வரலாம் என்றார் சென்னையை சேர்ந்த அந்த நண்பர்.

மறுநாள் நானும் தயாராகி வெளியே செல்ல கிளம்பினோம். அந்த குழுவில் ஒரு நண்பர் பனி துகள்களை கை நிறைய வாரி அடுத்தவர் மீது எறிந்து விளையாடுவது போல என்னை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அவர்கள் நால்வரும் பனிதுகள்களை ஒருவர் மீது ஒருவர் எறிய ஆரம்பித்தனர். பின் நடக்க ஆரம்பித்தோம். எங்கள் விடுதிக்கு எதிரே பெரிய மேடான இடம் இருக்கும். ஒரு 50 படிகட்டுகள் ஏறிதான் மெட்ரோ ஸ்டேசன், மார்கெட் எல்லாம் போக வேண்டும். அங்கிருந்து பார்த்தால் எங்கள் விடுதி மற்றும் சில கட்டிடங்கள் எல்லாம் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கும். மிக பரந்தவெளி முற்றிலும் பனியால் சுழப்பட்ட வெள்ளி பள்ளத்தாக்கு போல பார்க்க பிரம்பிப்பாக இருக்கும்.அந்த பள்ளத்தாக்கில் மேட்டிலிருந்து கீழ் வரை சில சிறுவர்கள் ஒரு ப்ளாடிக்காலான படகு போன்ற ஒரு வஸ்துவில் அமர்ந்து நாம் சரக்கு மரத்தில் சறுக்குவோமே அதை போல சறுக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். பார்த்தால் நமக்கும் கூட ஆசை வரும்.

மெட்ரோ நிலையம் அடைந்தபின் அவர்கள் ஒருவருக்குள் ஒருவராக தங்களை கேட்டு கொண்டனர் எங்கே செல்ல வேண்டும் என்று(அடப்பாவிகளா எங்க போகணும் தீர்மானம் பண்ணாமலேவா கிளம்புவீக) ஒரு வழியாக பனிசறுக்கு விளையாடுமிடம் செல்லலாம் என்று முடிவாயிற்று. அங்கே போய் அனைவரும் விளையாட வேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் ஆயிற்று. அங்கே சென்றதும் தான் தெரிந்தது. மீண்டும் ஸ்டாக்ஹோமே கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் பார்த்த அதே இடங்கள். ஒரு இடத்தில் நிறைய பேர் பனி சறுக்கு விளையாடி கொண்டு இருந்தார்கள். உடன் வந்த நண்பர்கள் வாங்க நீங்களும் கட்டாயம் பனி சறுக்கியே ஆக வேண்டும் என்று கட்டயமாக அந்த சறுக்கு காலணிகளை வாங்கி தந்தார்கள். வாங்கி போட்டு கொண்டு வைத்த முதல் அடியே விழுந்தேன். மீண்டும் எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து(விழுவதில் பிரச்சனை இல்லை பின் எழுந்து நிற்பது மிக சிரமாக இருக்கின்றது) குழந்தை போல சிறிய அடி வைத்து ஒரு மணி நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து அந்த காலணிகளை கழட்டிவிட்டு நம் காலணிகளை அணிந்தால் ஏதோ வித்தியாசமா(எஸ்டிரா பிட்டிங்க் இல்லாத)ஒன்றை போட்டிருப்பதை போல ஒரு உணர்வு. பத்தடி நடந்த பின் தான் விழமாட்டோம் வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கிறோம் என்ற நம்பிக்கை வருகின்றது.

அடுத்த வாரம் வெள்ளி மாலை அருள்மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் சென்று வந்தது மிக திருப்தியாக இருந்தது. சனியன்று பனிமலை இருக்கும் ஒரு இடம் செல்ல வேண்டும் என்று நண்பர்கள் பணித்தனர். அங்கு சென்று மலை பனிசரக்கு(ஸ்கியிங்) செல்வதாக திட்டம். மிக பயத்தோடு சென்றேன். முற்றிலும் வெள்ளை தோல் போர்த்த பனிமலை எவ்வளவு அழகு, எவ்வளவு குளுமை. கால் நரம்பின் வழியாக தலை வரை ஒரு சில்லிட்ட உணர்வு பரவும். சொல்ல மிக பரவசமாக இருந்தாலும் ஊஊகுகு ரொம்ப குளிர். அந்த மலையின் சரிவுகளை கண்டதும் ஒருவரை தவிர அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட தப்பித்தேன். ஞாயிறு அன்று ட்ரோட்டின்கோம் மாளிகை சென்றோம். மாளிகை என்று பெரிய எதிர்பார்ப்போடு சென்றால் சற்று ஏமாற்றமே தரும். சில ஓவியங்களை தவிர வேறு எதுவும் சொல்லும் படி இல்லை.

சுவீட் சுவீட‌ன் - இறுதி ப‌குதி

ஒருவ‌ழியாக‌ சுவீட‌னில் இருந்து கிள‌ம்பும் நாள் நெருங்கிய‌து. முத‌ல் நாள் சாயுங்கால‌ம் ஒரு டெனிக்க‌ல் முஸிய‌ம் சென்றோம். அங்கே ஒரு 4டி சோ பார்த்தோம். ப‌ம்பாயில் பார்த்ததை போல‌ தான் க‌ன்செப் ம‌ட்டும் தான் வேறு. ஆனால் ந‌ன்றாக‌ இருந்த‌து. அதே போல் முதுகில் அடிக்கும் சேர்க‌ள், முக‌த்தில் ப‌னி அடிக்கும் ஏதோ. ஒன்றே ஒன்று ம‌ட்டும் வித்தியாச‌ம் திரையில் எலி க‌டிக்கும் போது இறுக்கையை க‌டிப்ப‌து போல‌ இருந்த‌து. ஏனோ சிரிப்பு வ‌ந்த‌து. என்னை போல‌வே எல்லோரும் சிரித்த‌ன‌ர். ஒரு வினாடி வினா ந‌ட‌ந்த‌து. எங்க‌ள் குழும‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் முத‌ல் ம‌திப்பெண் பெற்றார்.அந்த‌ முஸிய‌த்தில் எல்லா வித‌மான‌ கார்க‌ள், ர‌யில்க‌ள், க‌ப்ப‌ல், விமான‌ம், தொலைபேசிக‌ள் இன்னும் ப‌ல‌வென்று நிறைய‌ இருந்த‌து. இந்திய‌ இசையாக‌ த‌மிழ் பாட‌ல்க‌ள் ஒலித்த‌து. நான் கேட்ட‌ போது ராசா கைய‌ வைச்சா ஒலித்துக் கொண்டு இருந்த‌து. அத‌ற்கு முத‌ல் பாட‌லும் த‌மிழ் தானாம். கேட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.

ம‌றுநாள் கிள‌ம்ப‌ வேண்டும். என் அறையில் இருந்த‌ ச‌மைய‌ல் பொருட்க‌ளை எல்லாம் எதிர் அறைக்கு மாற்றிவிட்டு, என் இந்திய‌ அலைபேசியையும், ம‌ட‌ல் முக‌வ‌ரியையும் கொடுத்து, ம‌ன‌ம் தொடும் வார்த்தைக‌ள் பேசி பிரிய‌ ஆய‌த்த‌ம் ஆனேன். ம‌றுநாள் ஒரு ந‌ண்ப‌ர் வ‌ந்து வ‌ழி அனுப்பினார். விழியில் துளிர்ந்த‌ ஒரு துளி க‌ண்ணீர் ப‌ரிசாக்கினேன் அவ‌ர்க‌ள் பாச‌த்திற்கு. செல்லும் வ‌ழி எங்கும் வெள்ளை ப‌னியையும், அதே ப‌னி போல‌ தூய‌ ந‌ட்பையும் பாச‌த்தையும் பொழிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் இனி எப்போது பார்ப்பேன் என்று நினைத்த‌ப‌டி ஸ்டாக்ஹோமிலிருந்து ஹெல்சிங்கி வ‌ந்து அங்கிருந்து டில்லி அடைந்தேன்.

ப்ரிபெய்ட் டாக்ஸியை கேட்டேன் 700 மேல் ஆகும் என்றார்க‌ள் வீடு வ‌ரை விட‌, கையில் முன்னூறு இந்திய‌ ரூபாய்க‌ளும், சில‌ அமெரிக்க‌ டால‌ர்க‌ளுமே இருந்த‌து. ப்ரிபெய்ட் டாக்ஸி மேனேச‌ரிட‌ம் காக்கா பிரியாணி சாப்பிட்டு அக்வோ பீனா கேட்கும் ர‌ன் விவேக் போல‌ டால‌ர் வாங்கிபீங்க‌ளா, கார்ட் அக்செப்ட் ப‌ண்ணுவீங்க‌ளா என்றேன். அவ‌ர் பார்த்த‌ பார்வை பார்த்து ந‌ன்றி சார் என்று சொல்லி 20 டால‌ரை மாற்றினேன் ஸ்சேன்ஞ் சார்ஞ் 100 ரூபாய் வாங்கி விட்டார்க‌ள். ஒரு வ‌ழியாக‌ வீடு வ‌ந்து. த‌ண்ணி இல்லை, க‌ர‌ண்ட் இல்லை, இன்ட‌ர்நெட் இல்லை என்று எல்லா இல்லைக்கும் அவ‌ரை திட்டி தீர்த்து, த‌மிழ் இசை அலைவ‌ரிசைக‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்த‌தும் தான் நான் இந்தியாவில் இருப்ப‌து போல‌ எண்ண‌ம் வ‌ந்த‌து. வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளையும் ரோஜாவையும் க‌ண்ட‌தும் உள்ள‌ம் நிறைந்த‌து. வீட்டு வேலைக்காரி தீதீ ஆகேயே கேயா. ஆப் ந‌கித்தே ஹ‌ம் ப‌ரிசான் கோஹையேன் என்ற‌ பாச‌த்தில் நெகிழ்ந்து போனேன். எப்ப‌டியோ இர‌ண்டு மாத‌மாக‌ கைபேசி இல்லாம‌ல், தொலைக்காட்சி இல்லாம‌ல், க‌ன‌மான‌ ஜாக்கெட் இப்ப‌டி இருந்த‌து மிக‌ வித்தியாச‌மாக‌ இருந்த‌து.

நாடோடியின் கிச்சன்

ஒரு வழியாக சுவீடன்(ஸ்டாக்ஹோம்) வந்து சேர்ந்தாயிற்று. அந்த அன்று நண்பர்கள் விடு்தியில் விட்டு விட்டு தங்கள் இடம் சென்றனர். அது ஒரு ஞாயிற்று கிழமை என்பதாலும் பயணகளைப்பாய் இருந்ததாலும் இந்திய நேரப்படி நடு இரவை தாண்டி இருந்தாலும் சூட்கேஸ் மற்றும் பைகளில் இருந்த எதையும் எடுத்து வைக்க முடியாத காரணத்தால் அப்படியே உறங்கி போனேன். காலையில் எழுந்ததும் விடுதியின் வரவேற்பறையில் கேட்டு அருகில்(ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்) ஒரு சூப்பர் மார்கெட்க்கு(நம் நீல்கிரீஸ் போல இருந்தது)சென்றேன். கடையில் இருந்தவர்களை பால் எது தயிர் எது என்று கேட்டு வாங்கினேன்(எல்லாம் கெரகம் சுவீடிஷ்ல இல்ல எழுதி இருக்கு, முதல் முறை கேட்டு சரியாக வாங்கி வந்தேன் அடுத்த முறை தெனவெட்டாக நானாக எடுத்து வந்த பால் மிக கெட்டியாக பால் போலவும் அல்லாது தயிர் போலவும் அல்லாது ஏதோ ஒன்றாக இருந்தது). ஒரு பிரட் பாக்கெட் போல இருந்த ஒன்றை எடுத்து பில் போடுபவரிடம் இஸ் திஸ் வெஜ் என்றேன். இட் இஸ் பிரெட் வாட் டி யு மீன் பை இஸ் திஸ் வெஜ் ஆர் நான்வெஜ் என்றார் நக்கலாக. சரி தான் என்று வாங்கி வந்தேன்.

அன்று காலை ஏதோ உண்டு விட்டு, சமைக்க நேரம் இல்லாததால் அலுவலகம் சென்று விட்டேன். மதியமும் சாப்பிடவில்லை, சாயுங்காலம் வந்ததும் அகோர பசி, கொடுமைக்கு அடுப்பு வேறு இல்லை, மைக்ரோவேவ் மட்டும் தான்.(வீட்டில் எதற்கு மைக்ரோவேவ் இடத்துக்கும் காசுக்கும் கேடா இதில் என்ன செய்ய முடியும் எதை எடுத்தாலும் வாங்கி வைக்க வேண்டியது தானா என்று அவரை தீட்டிய படி மைக்ரோவேவில் சமைக்க பழகாதது இப்படி ஒரு பின்விளைவாக வரும் என்று யாருக்கு தெரியும்) அதில் நான் செய்த உப்புமாவை பற்றி ஒரு கதை தான் எழுத வேண்டும். பத்திரம் வைத்து தளிக்க 6 நிமிடம் எண்ணை சூடக்க வேண்டும். பின் எடுத்து கடுகு போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வைத்து உளுந்து போட்டு, பின் எடுத்து வெங்காயம் போட்டு அதை வதக்குவதக்குள் நான் வதங்கிவிட்டேன். அப்புறம் ஒரு வழியாக தண்ணீர் ஊற்றி சூடாக்கி உப்புமாவை கிண்டி உண்டால் ஆஹா எவ்வளவு சுவையாக இருந்தது தெரியுமா? நான் அவ்வளவு அருமையான உப்புமாவை இதற்கு முன் உண்டதில்லை அவ்வளவு அதிகமான அளவு உப்புமாவையும் உண்டதில்லை. எல்லாம் பசி செய்யும் அற்புதம். சுவீடன் வந்ததில் இருந்து அதிகம் பசிக்கின்றது.

எங்காவது கசக்கும் ஜாம் சாப்பிட்டு இருக்கின்றீர்களா? சுவீடனில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஜாம் தேடி தேடி,கிடைத்ததும் ஆஹா கண்டேன் சீதை என்றவாறு ஒரு ஆரஞ்சு பழம் படம் போட்ட ஜாம் பாட்டிலை எடுத்தேன். அதில் உள்ளே சிறிய துகள்கள் போன்ற ஏதோ இருந்தது. நானும் அது என்ன என்று கடை(டன்)கரனிடம் கேட்டேன் இட் இஸ் ஆரஞ்ச் என்றான். சரி என்று நம்பி எடுத்து வந்து அதை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு திறந்து சாப்பிட்டால் ஒரே கசப்பு ஏன்னா அது தெரிந்த துகள்கள் எல்லாம் ஆரஞ்சு பழ தோலாம். :( அதே போல ஒரு முறை மாதுளை ஜீஸ் வாங்கி வந்து ஒரு கோப்பையில் ஓத்தி குடித்தால் தொண்டையில் ஒரே அறிப்பு. அந்த ஒரு கோப்பையை குடித்து முடிக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அலுவலகம் எடுத்து போய் ஒரு நண்பரிடம் கொஞ்சம் கொடுத்தேன் அவர் இது ஒயின் போல் இருக்கின்றது என்றார். அட பாவிகளா இப்படித் தான் ஒயின் இருக்கும் என்றால் அந்த கெரகத்தை எப்படி குடுக்கிறீங்க என்றேன். அந்த ஒரு லிட்டர் பாட்டலை அவரிடமே கொடுத்து விட்டேன். ஆனால் சுவீடனில் ஜீஸ் மிக விலை கம்மியாக கிடைக்கின்றது(ஒரு லிட்டர் பழரசம் 9 கோரோனா தான்) ஆரஞ்சு மற்றும் மிக்ஸ் பழரசங்கள் நன்றாக இருக்கின்றன.

சுவீடனில் கிச்சன் பற்றி எழுத்தும் போது நாராயணி அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர்களை நான் மெட்ரோ ரயிலில் தற்செயலாக சந்தித்தேன். நான் சுவீடன் வந்த வாரம் அலுவலக நண்பர்களிடம் எங்காவது செல்லலாமா என்று கேட்டதற்கு போகலாம் என்று கூறி அழைத்துச் செல்லும் போது டிக்கெட் வாங்க சொன்னார்கள் சரி என்று போனால் 180 கோரோனா வாங்கிக் கொண்டு 16 முறை பயணிக்க ஏதுவான ஒரு பயண அட்டையை வாங்கி தந்தார்கள். அதை உபயோக்கித்து ஒரு முறை தான் சென்று வந்திருந்தேன் அதனால் சும்மா சென்று வரலாமே சென்று மெட்ரோ நிலையம் சென்று ஒரு ரயிலில் ஏறி சோல்னா சென்ரமில் இறங்கி சும்மா கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்தேன். அடுத்த நிலையத்தில் ஒரு பெண் தன் அலைபேசியில் தமிழில் பேசியபடி நான் பயணித்த அதே பெட்டியில் ஏறி அமர்ந்தார். நான் போய் நீங்கள் தமிழா நானும் தமிழ் என்றதும் அறிமுக உரையாடல்கள் முடிந்ததும் நான் சீஸ்தா செல்கின்றேன் அங்கே தான் பச்சை மிளகாய் கிடைக்கும் என்றார். சரி என்று நானும் அவரோடு சென்றேன். அவர் அழைத்து சென்றது சீஸ்தா கோரோசன் என்ற இந்தியர் நடத்தும் கடை அங்கே எல்லா இந்திய காய்கறிகளும் கிடைக்கின்றன. இங்கே தயிர் நன்றாக கிடைக்கும் வாங்கி உண்ணுங்கள் என்று ஒரு பிரண்ட் தயிரை காட்டினார்.(ஒரு பெயிண்ட் டப்பா சாயலில் இருந்த அந்த டப்பாவை வாங்கிக் கொண்டேன் அதில் ஒரு மீசைக்காரன் படம் போட்டு இருந்தது) மேலும் சில டிப்ஸ் தந்தார். மக்காச்சோளம் மற்றும் பச்சை பட்டாணி அடைத்த டப்பாவை காட்டி வாங்கோங்க மாலை நேரம் உண்ண அருமையாக இருக்கும் என்றார். வாங்கிக் கொண்டேன். மேலும் பேன் பீஸாவை காட்டி இது கூட நன்றாக இருக்கும் வாங்கிக்கோங்க என்றார்.

நாராயணி கூறியது போல தயிர் மிக அருமையாக இருந்தது. அது சாப்பிட தயிர் போல இருந்தாலும் பார்க்க வெண்ணை அல்லது வெண்ணிலா ஐஸ்கீரிம் போல இருந்தது. மக்காச்சோளம் டின் திறக்க சாவியோடு(பெப்ஸி டின்னில் இருக்குமே அது போல) இருந்தது அதனால் எளிதாக திறந்து சாப்பிட்டு விட்டேன். ஆனால் அந்த பச்சைபட்டாணி டின் மிக படுத்தி விட்டது. திறக்க மிக கடினமாக இருந்தது. கத்தி(விடுதியில் ஆடு வெட்டும் அளவிற்கு பெரிய கத்தி கூட இருந்தது), முள் கரண்டி, ஸ்பூன் என்று எல்லா ஆயுதம் மற்றும் மெக்ஸிமம் எனர்ஜி கொஞ்சம் மூளை இதை பயன்படுத்தி திறந்து உண்டால் சிறிது இனிப்பான சுவையோடு நன்றாக தான் இருந்தது. பேன் பீஸா பசிக்கு நல்ல விருந்தாக இருந்தது. ஒரு நாள் நல்லிரவு திடிரென பசியால் விழிப்பு வர அந்த பீஸா தான் உதவிற்று. முன்னமே சொன்னது போல சுவீடன் வந்ததிருலிருந்து அதிகம் பசிக்கின்றது.

இப்படியாக இரண்டு மூன்று வாரம் கழித்ததும், ஒரு வெள்ளி மாலை அசதியாக என்ன சமைப்பது என்று யோசித்தவாறு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த சமயம் பின்னாலிருந்து ஒரு குரல் நீங்க தமிழா என்று ஆமாம் என்றதும் ஆஹா என்று திரும்பி பார்த்தேன் மூன்று பேர் அதில் ஒருவர் தமிழ் மற்றவர்கள் கன்னடர்கள் ஆனால் அவர்களுக்கும் தமிழ் புரியுமாம் அவ்வளவு தான் வரண்டாவில் நின்று பெரிய அரட்டை ஆயிற்று. மறுநாள் ஒன்றாக உண்ணலாம் என்றும் முடிவாயிற்று. நான் இரண்டு காயும் அந்த சென்னை நண்பர் சாம்பார் மற்றும் சுண்டலும் செய்தார். சாம்பார்க்கு வைத்த பருப்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரசமும் செய்தேன். மற்றவர்கள் சிக்கன் மற்றும் ஆம்லேட் செய்து வந்திருந்தனர். மற்றுமொரு தோழி கேரட் அல்வா செய்து கொண்டு வந்தார். 5 பேரும் சேர்ந்து உண்டது ஏதோ ஒரு கல்யாணத்திருக்கும் போய் வந்தது போல் இருந்தது. இதுவரை தனிமையே துணையாக இருந்தவளுக்கு இது மிக வித்தியாசமான உணர்வாக இருந்தது. அன்று மட்டும் அல்லாமல் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஒன்றாகவே உண்டோம். கொஞ்ச நாளில் அந்த சென்னை நண்பர் கிளம்ப வேண்டி இருந்தது. அவர் அறையில் இருந்த எல்லாம் மசாலா ஐட்டங்களையும் எண்ணெய் பால் கன்ப்ளாஸ் ப்ரட் எல்லாம் என் அறைக்கு கொண்டு கொடுத்தார். அவர் சென்றதும் ஏதோ பெரிய இடைவெளி வந்தது போல இருந்தாலும் மீதி இருந்தா நால்வரும் ஒன்றாக உண்பது வார இறுதியில் வெளியே செல்வது என்றபடி கழித்தோம். மேலும் இரு வாரம் கழித்து நான்கு நண்பர்கள் வந்து இணைந்து எங்கள் குழு 8 பேர் ஆனா குழுவானது. அவர்கள் கொண்டு வந்த அடையார் ஆனந்தபவன் புளிக்காய்ச்சல், காரக்குழம்பு, வத்தகுழும்பு, கருகப்பிள்ளை தொக்கு என்ற ஐயிட்டங்கள் என் அறையை நிறைத்தன. பொதுவாக என் அறையில் தான் குழுமி உண்போம் அதனால் அனைவரின் பாத்திரிங்கள் மற்றும் கரண்டிகள் எல்லாம் என் அறையில் நிறைந்திருக்கும் பின் என் இரண்டு ஸ்பூன் இங்கே இருக்கு, என் அந்த பாத்திரம் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற எல்லோரும் தேடுவார்கள்.

ஆரம்ப நாள்களில் கடுகு,உளுத்தம் பருப்பு, மஞ்சள் இத்தியாதி இத்தியாதிகளை அப்படியே அதன் பேக்கிங் பேகிலேயே சேமித்து வந்திருந்தேன். பின் ஒரு நாள் மொபின் வாங்கி வந்த போது அது தீர்ந்த பின் ஆபத்பவனாக அஞ்சரை பெட்டி போல உபயோகமாயிற்று. மேலும் சேர்ந்த பல டப்பாக்கள் மற்றும் பாட்டில்களால் அது ஒரு சீரான கிச்சனாக மாறி இருந்தது. நான் கிளம்பும் முதல் நாள் எல்லா மசாலா ஐயிட்டம், எண்ணெய், பால் கன்ப்ளாக் எல்லாம் எதிர் அறையில் அடைத்துவிட்டு, இருந்த பழரசமெல்லாம் குடித்து தீர்த்து ஒரு வழியாக கிளம்பி இந்தியா வந்தடைந்தேன். பல அனுபவங்களையும் தன்னம்பிக்கையும் தந்தது இந்த நாடோடி கிச்சன். இந்தியா வந்து கேஸில் சமைப்பது என்னவோ ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது. :)

Tuesday, November 24, 2009

பிரிவின் துயர்

சங்கப்பாடல்களின் பிரிவின் துயரை பெரும் அளவில் பெண்களே பேசி இருக்கின்றார்கள். பசலை படித்திருத்தல், கைவளை கழன்று விழுதல் என்று பெண்ணிற்கே பிரிவின் துயர் அதிகம் என்று காட்டி உள்ளார்கள் சங்க காலத்து பெரியோர். அப்படிப்பட்ட பிரிவின் ஆதங்கமாக ஐந்திணை ஐம்பதில் பாலைத் திணையிலிருந்து ஒரு பாடல்.

"கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தான் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து?"

"நல்ல குணங்கள் நிறைந்த தோழி, கடிது ஓடும் கானல் நீரை "நீர் ஆம்" என்று எண்ணி, ஆண்யானை தன் துணையோடு நெடும் தூரம் அலைத்தோடி பின் கால் ஓய்து விழும், வெடிப்புகளும் வெம்மையும் நிறைந்த அப்படிப்பட்ட கொடுங் கானம் வழி, என் கை வளையல்கள் கழண்டு விழும் படி என்னை துறந்து செல்வாரோ நம் தலைவர்?"

இந்த சங்கக்கவிதையை படிக்கும் போது சமீபத்தில் படித்த பாலைத் திணை என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாலைத்திணை காயத்ரியின் கவிதை நினைவிற்கு வருகின்றது.

அவரவர் கைமணல்

அவரவர் கைமணலைத் துழாவிக் கொண்டிருந்தோம்
எவரெவர் கைமணலோ இவை என்றேன்
பிறகு மணலறக் கைகழுவி விட்டு
எங்கோ சென்றோம்.
                                                    - தேவதச்சன்
கடற்கரையில் மிகப் பிரியமானவருடன் அமர்ந்து நிலவோளியும் நிம்மதியும் நிறைந்த தென்றல் தழுவும் ஒரு மாலையில், துழாவும் கைமணல் கூட க‌ட‌ல் போல் விரியும் கவிதைக்கான‌ ப‌டிம‌ம் தான்.
இப்படிப்பட்ட சூழலில் பேசப்படும் எல்லாமே அழகாக இருக்கும். அந்த சூழலையே கவிதையாக்கிய ‘அவரவர் கைமணல்‘ என்ற தேவதச்சனின் கவிதையை வாசித்ததும் என்னுள் தழைத்தெழுந்த சிந்தனைகளை தருகிறேன்.

அவரவர் கவிதை
IMCAHES1YKCA7KAA8WCAT7S9Q6CAKXQ8YZCA6PZFRZCANDTR6ZCAQC4OSZCA0JYAZ0CAEMCA8XCACRT9MXCAJ24LS3CAJ0L2LRCA6NJ55YCAMBGSN3CAOZBZJFCAVRZVTXCAW06HLVCABIQOVMCAQC1PPI கவிதை படைப்பாளிகளுக்கு, என்னையும் சேர்த்து இருக்கும் ஒரு சுவையற்ற வழக்கம் தத்தம் கவிதைகளைப் பற்றி பேசித்திரிதல். அவரவர் கவிதையை பற்றியோ அனுபவம் பற்றியோ அடுத்தவரிடம் பேசுவோம். அவை அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தில் எவராலேயோ படைக்கப்பட்டதோ அல்லது உணரப்பட்டதாகவோ தான் இருக்கின்றது.
எந்தக் கவிதையை பேசினாலும் அது என்றோ உணரப்பட்ட அனுபவமாகவே இருக்கின்றது. பின்னும் பேசிப்பேசி தீர்க்கின்றோம். பேசி கவிதைகளை காற்றில் உலவவிட்டு மெல்ல திரும்புவோம் அவரவர் வெளிக்கு திரும்புகின்றோம் சுவடுகள் கலைத்து.

அவரவர் பிரச்சனை
2 தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது அனைவ‌ரும் அறிந்த‌ ஒரு சொல்லடை. அப்படித்தான் அவரவர் வாழ்க்கை பிரச்சனைகள் எல்லாம் அவரவர்க்கு பெரியதாக தெரிகின்றது.
பிரச்சனைகள் அவரவர் துழாவும் கைமணல் போன்றது. அடுத்தவர் கைமணலை பார்க்க ஆரம்பித்தால் தம் கைமணல் மிகவும் குறைவானதென்று தெரியவரும். நம்மிலும் கீழே வாழ்பவர் கோடி என்ற கண்ணாதாசன் வரிகளை உணர்ந்தெடுத்தால், மணலறக் கை கழுவுதல் வசப்படும்.
பிரச்சனைகளை சிறிது தள்ளி நின்று பார்த்தால், கவனித்தால் பிரச்சனைகள் சுமையல்ல என்பது புரியவரும். அத‌ன் பின் தெரியும் பிரச்சனை மணல் போன்றதே, பெரியதல்ல மிகச்சிறியதென்று. எந்த நேரத்திலும் மணலறக் கைகளை க‌ழுவ‌து போல பிரச்சனைகளும் எளிதாக தீர்க்க கூடியவையே என்பதும் புரியும்.

அவரவர் கருத்து
1HCAY52AK7CA2W23HBCA28IXDVCA0H44F8CAHBL1MJCA1ECP7FCABA78WVCAZP3O3MCAC3CDG3CAOGC8Y3CAT5PORWCA0KCDT0CA6231WECA6345BLCAWOQAEGCA9XWDWUCA8NM9JPCAXVV37RCA1GHKCC நண்பர்கள் இலக்கியவாதிகள் கூடுமிடம் அல்லது கூடி பயணிக்கும் வேளைகளில் அவரவர் கருத்துக்களை அழுந்தக் கூறுவோம். அவரவர் கருத்துக்களை விவாதிப்போம். விவாதம் ஆரோக்கியமான விசயமே மேலும் அவை அறிவை வளப்படுத்தும்.
விவாதம் சில சமயம் சர்ச்சையில் கூட முடியலாம். ஆயினும் கூட்டமோ பயணமோ முடிந்த பின் தத்தம் கருத்துக்களை தம்மோடு வைத்துக் கொண்டு அந்த அனுபவத்தை சுமந்தபடியோ அவரவர் வீட்டுக்கும் வழக்கமான வாழ்க்கைக்கும் திரும்புவது வழக்கமான வழக்கம் தானே. அதன் பின் அந்த சர்ச்சைகள் கைவிடப்பட்ட கடற்கரை மணல் போல் அடையாளம் தொலைத்து போகும். அந்த கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் எல்லாம் பின்னொரு கூட்டத்தில் வேறு விதமாக அலச பெறும்.

அவரவர் கர்வம்
tn_love-art-cutecouple-acrylic தான்.. தனது என்ற கர்வமில்லாத மனிதன் எங்குமில்லை எனலாம். குறைந்தபட்சம் மனிதனுக்கு தன் உடல் பற்றிய கர்வம் இருக்கவே செய்கின்றது. எந்த ஆசையுமே இல்லாத சராசரி மனிதனின் ஆதார எதிர்பார்ப்பாக இருப்பது அடுத்தவர் முன் தான் மதிக்க பெற வேண்டும் என்பதே.
இதற்காகவே ஆடை அலங்காரங்களில் நடையுடை பாவனைகளில் அல்லது இதுகளற்ற ஏதோ ஒன்றை துழாவிக் கொண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் ஆழ்ந்து பார்ப்பின் இந்த உடல் நம்முடையது மட்டுமே என்ன. உடல் ஒரு சட்டை தானே. ஆன்மாவன்றோ அழிவற்றது.
அவரவர் உடல் எவரெவர் உடலோ. பட்டினத்தார் சொல்லும் "எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் இட்ட குழி" என்ற பாடல் தேவதச்சனின் இந்த கவிதைக்கு மிகவும் பொருந்தத்தக்கதாகும்.
ஆகையால் தான் தன் உடல் தன் கருத்து தன் பிரச்சனை தன் கவிதை என்ற எல்லா கர்வமும் மாயையே. துழாவிய கைமணல் போல எப்போதும் எதையும் சிந்தையில் ஒட்டாது வைத்திருந்தால் வாழ்வு மிக சிறப்பாகும்.
000

Saturday, October 24, 2009

த‌ம்பி யாத்ராவிற்கு



யாத்ராவை சமீப காலமாக தான் தெரியும். தூறல்கவிதைகள் முத்துவேல் கவிதை எனக்கு அனுஜன்யாவின் வலை மூலமும், அங்கிருந்து யாத்ராவின் கவிதையும் அறிமுகமானது. சென்ற முறை சென்னை வந்திருந்த போது நீண்ட நேரம் யாத்ரா, முத்துவேல், வாசுதேவன், லஷ்மண் மற்றும் சந்திரசேகருடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. பின்னர் யாத்ராவுடன் அடிக்கடி அரட்டையிலும் தொலைப்பேசியிலும் பேச முடிந்தது. இவர் மென்மையான குணம் மிக கவர்ந்த விசயம். இவரை என் தம்பியாக பெற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி. இவர் சமீபமாக எழுதிய தரை மற்றும் எறும்பின் பயணம் என்ற கவிதைகளை படித்தேன். மிகவும் நெகிழ்வாக உணர்ந்தேன். வேலை மற்றும் சிறு மனகசப்போடு இருந்த என்னை மீட்டது இந்த கவிதைகள். வெற்று வார்த்தைகளால் விளக்க இயலாத உணர்வுகளை பெற்றிருந்த தினம் அந்த கவிதைகளை வாசித்த தினம். அந்த கவிதைகள் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவை. விக்கித்த வார்த்தைகளால் சிறு பின்னூட்டமிட்டு வேலைப்பளுவின் காரணத்தால் வார இறுதி வரை நேரம் கேட்டிருந்தேன்.


தரை
====
கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்த இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.


இந்த கவிதையின் பாடுபொருள் சாதாரணமாக எல்லோராலும் நோக்கப்பட்டிருக்கும் ஒரு விசயம். இந்த படிமத்தை இவ்வளவு அழகான உணர்வாக்கிய யாத்ராவின் விரல்களுக்கு மோதிரம் தான் போட வேண்டும். இங்கே தரையின் ஈரம் என்பது ஒரு உணர்வு. இந்த கவிதையின் உணர்வை எந்த உறவோடும் ஒப்பிட்டு பார்க்க இயலும். ஒவ்வொரு உறவின் உணர்வின் தொடக்கமும் முழு தரை நிறைந்த ஈரமாகவும் தளும்பியபடியும், பின் சற்றே உலர ஆரம்பித்து அந்த உணர்வுகளுக்கு அர்த்தமாக்கும் சில வடிவங்களும், அந்த வடிவங்கள் சில சமயம் அழகானதாகவும் சில சமயம் புரிந்து கொள்ள முடியாதவையாகவும், சில சமயம் அகோரமாகவும் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து முடிந்ததும் அந்த மாய வடிவங்கள் மனதிரையில் ஓடிய படியே இருக்கும். மீண்டும் ஈரம் கோர்க்கும் ஈர காயும். இந்த ஈர உணர்வை சந்தோசம், சோகம், வருத்தம், சண்டை என்று எந்த உணர்வோடும் கட்டிப்பார்க்க முடியும். காதல், நட்பு, நேசம் ஒருவரிடத்தோ, ஓரிடம் காரணம் அறிந்தோ அறியாமலோ தவிர்க்க முடியாமல் முடிந்து போய் மற்றோரிடம் தொடர்வதோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த கவிதை இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டியது. நெகிழ்வோடு வாழ்த்துகிறேன் யாத்ரா வாழ்க பல்லாண்டு.


எறுப்பின் பயணம்
================
சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி
நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு
சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊறியபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்
ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க
ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்
ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்
என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்


எறுப்பின் பயணம் இந்த நிகழ்வும் அனைவராலும் பார்க்கப்படும் நிகழ்வு தான். எதை கண்டாலும் கவிதை கொட்டுகின்றது என் தம்பிக்கு. பாராட்ட வார்த்தைகளை தேடி திசை தெரியாத எறும்பைப் போல தவிக்கின்றேன் நானும். சிறு நிதானிப்பு, சிறு வளைவு சக எறும்புகள் செல்லும் திசையில் செல்லுதல், போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி போதல் ம்ம்ம்ம்ம் நம் தினசரி வாழ்வின் பயணத்திற்க்கும் எறும்பின் பயணத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. "யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்" எறும்பாய் உணர்ந்தாலும் தன் மென்மையான குணத்தை உணர்த்தி இருக்கின்றார். "பருகுவதற்கு யாருமற்று யுகயுகமாய் தனித்திருக்கும்" இந்த தனிமை கொஞ்சம் வெறுமை எல்லோரிடத்தும் ஒரு சமயம் உணரப்பட்டதாகவே இருக்கும். மேலும் பல கவிதை எழுதுவாயாக யாத்ரா.

Thursday, September 24, 2009

குடைக்குள் வானம்

உனது குடை விரிப்புகளில் சட்டென
அடங்கியது எனக்கான வான்

க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா?

ந‌ம் க‌ட‌வுள‌ர் எல்லோரும் ஐடிய‌ல் இல்லை. ந‌ம் ந‌ம்பிக்கையின் உச்ச‌ப‌ட்ச‌ம் என்ன‌? க‌ட‌வுள் ச‌த்திய‌மா என்ப‌து தானே! கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா? த‌மிழ் க‌ட‌வுள் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் கும‌ர‌ன் முன்கோப‌க்கார‌ன். ஒரு மாங்க‌னிக்காக‌ குடும்ப‌த்தை பிரிந்த‌வ‌ன். க‌ற்பு, க‌ள‌வு என்று இருவித‌த்திலும் ம‌ண‌ம் புரிந்த‌வ‌ன்.

அவ‌ன் த‌ந்தை ஈச‌னும் அப்ப‌டியே இரு ம‌னைவி, த‌ன்னை ம‌திக்காத‌ மாம‌னார் வீட்டுக்கு போக‌ கூடாது என்று ம‌னைவியை அந்த‌ உல‌க‌ மாதாவைச் சொன்ன‌வ‌ர். கோப‌ம் வ‌ந்தால் ம‌னைவியையும் ச‌ரி, உண்மைக்காக‌ வாதாடும் ந‌க்கீர‌னையும் ச‌ரி சுட்டெரிப்ப‌வ‌ர்.

இவ‌ர் மைத்துன‌ன் விஷ்ணுவோ ஆயிர‌ம் நாம‌ம் கொண்ட‌வ‌ன், ம‌னைவிமார்க‌ளுக்கு க‌ண‌க்கே கிடையாது. ஒரு ம‌னைவியிட‌ம் மோதிர‌த்தை கொடுத்துவிட்டு முத‌ல் ம‌னைவியிட‌ம் ம‌ண‌ல்வெளியில் தொலைத்துவிட்ட‌தாக‌க் கூறி ம‌ட்டைய‌டி வாங்குப‌வ‌ர். இவ‌ர் ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் முறைமீற‌ல்க‌ள் ஒன்றா இர‌ண்டா எல்லாம் சொல்ல‌வே இந்த‌ ஒரு ப‌திவு போதுமா?

பிர‌ம்ம‌னோ நான்கு முக‌ம் கொண்ட‌வ‌ர் இவ‌ருக்கும் ம‌னைவிமார் இருவ‌ருரோ மூவ‌ரோ க‌தைப்ப‌டி. சர‌ஸ்வ‌தி,சாவித்திரி,காய‌த்ரி. ஆனா கும்பிட‌ற‌ங்க‌வ‌ங்க‌ எல்லோருக்கும் போய் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அது மெய்ப்பொருள் என்று வ‌ர‌த்தை வாரி வ‌ழ‌ங்கி பின் அடுத்த‌ க‌ட‌வுள‌ரிட‌ம் போய் நிற்ப‌து இவ‌ர் வழ‌க்க‌ம்.

ச‌ரி ச‌ரி அடிக்க‌ வ‌ராதீங்க‌ எல்லாத்தும் கார‌ண‌ம் இருக்கு. க‌ட‌வுள‌ர் யாரும் த‌வ‌றான‌ உதார‌ண‌ங்க‌ள் இல்லை அவ‌ர்க‌ள் யாவ‌ரும் ஐடிய‌ல் தான்.

ஏதோ என‌க்கு தெரிந்த‌ விள‌க்கங்க‌ளை த‌ர‌ முய‌ல்கின்றேன். மாங்க‌னிக்காக‌ குடும்ப‌ம் பிரிந்த‌ கும‌ர‌ன் இளைஞ‌ர்க‌ள் த‌ன் பெற்றோரை சார்ந்தில்லாம‌ல் தானே த‌ன் காலில் நிற்க‌வேண்டும் என்ற‌ க‌ருத்தை எடுத்துக்காட்டுகின்றார். க‌ற்பு க‌ள‌வு ம‌ண‌ம் மேட்ட‌ருக்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

இறைய‌னார் ஈச‌ன் முக்கால‌மும் உண‌ர்ந்த‌வ‌ர் தாட்சாய‌ணிக்கு த‌ந்தையால் அவ‌மான‌ம் நேரும் என்று தெரிந்தே த‌டுத்தார், தானென்ற ஆண‌வ‌த்தால் அல்ல‌. இவ‌ர் கோப‌த்திற்கு பின்னால் தான் உண‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து ச‌க்தியும் சிவ‌னும் ஒன்றென்று. அப்ப‌டிச் சுட்டெரித்த‌ கார‌ண‌த்தால் தான் த‌ன்னில் பாதியாக‌ ச‌க்தியை கொண்டு அர்த்த‌நாரீஸ்வ‌ர‌ர் ஆனார். நக்கீர‌னுக்கு நெற்றிக்க‌ண் காட்டி த‌மிழுக்குகாக‌ அவ‌ர் த‌ன்னையும் த‌ருவார், க‌ட‌வுள் என்றாலும் த‌மிழை காக்க‌ குர‌ல் த‌ருவார் என்ற‌ பெருமையை தான் பெற்று தந்தார் அந்த‌ இறைய‌னார். இவ‌ரின் கொஞ்சு த‌மிழில் வ‌ந்த‌த‌ல்ல‌வா "கொங்குதேர்" என்ற‌ குறுந்தொகைப் பாட‌ல். இர‌ண்டு ம‌னைவி விச‌ய‌த்திற்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

விஷ்ணு க‌ண‌க்கிலும் ம‌னைவிமார்க‌ள் பிர‌ச்ச‌னையை பொதுவாக‌ எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் ந‌ட‌ந்த‌ முறைமீற‌ல் எல்லாமே அத‌ர்ம‌த்தை அத‌ன் வழியே சென்று அட‌க்க‌ த‌ர்ம‌த்தை நிலைநாட்ட‌வே தான்.

பிர‌ம்மாவின் இள‌கிய‌ ம‌ன‌துக்கும், "உல‌கில் எங்கெல்லாம் த‌ர்ம‌ம் அழிந்து அத‌ர்ம‌ம் த‌லை தூக்குகின்ற‌தோ அங்கெல்லாம் நான் வ‌ருவேன்" என்ப‌த‌ன் ஊடுகோலே கார‌ண‌ம். "க‌ட‌வுள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை சோதிப்பான் கைவிட‌மாட்டான் கேட்ட‌வ‌ர்க‌ளுக்கு வாரி வாரி வ‌ழ‌ங்கிவிட்டு, திருந்த‌ வாய்ப்ப‌ளித்து பின் திருந்தாவிட்டால் த‌ண்ட‌னை த‌ர‌வே" இவர் வ‌ர‌ம் த‌ருவார். இவ‌ர் ப‌டைக்கும் க‌ட‌வுள் ஆயிற்றே. காக்கும் ம‌ற்றும் அழிக்கும் க‌ட‌வுள‌ர் த‌ம்த‌ம் வேலையை செவ்வ‌னே செய்வ‌ர்.

ச‌ரி இப்போது க‌ட‌வுள‌ர்க்கு ப‌ல‌ ம‌னைவிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ நியாய‌ம் க‌ற்பிக்க‌? அத‌ற்கும் த‌ர்ம‌ம் இருக்கின்ற‌து.

ஒரு நாட்டை ஆள்ப‌வ‌ர் எல்லா துறையையும் த‌ன் கையில் வைத்துக் கொள்ள‌ இய‌லாது. அந்த‌ அந்த‌ துறைக்கு ஒரு எக்ஸ்பேர்ட்ஸ் வேண்டும். அதைப்போல்தான் ச‌ர‌ஸ்வ‌தி க‌ல்விக்கும், ம‌ந்திர‌ ச‌க்திக்கு காய்திரியும், அந்த‌ ம‌ந்திர‌ ச‌க்திக்குள் இருக்கும் ஜோதி வ‌டிவ‌ம் சாவித்ரி என்றும் வைத்த‌ன‌ர் முன்னோர். அப்ப‌டியாக‌ புத்தி ச‌ம்பந்தமான‌ ஆளுமைக்கு ச‌ர‌ஸ்வ‌தி, காய‌த்ரி, சாவித்ரி இவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர் பிர‌ம்ம‌ தேவ‌ன். ஆக ச‌ர‌ஸ்வ‌தி, சாவித்ரி, காய‌த்ரி அனைவ‌ரும் புத்தி என்ற‌ ஒரு விச‌ய‌த்திற்குள் அட‌க்க‌ம் அந்த‌ வகையில் பார்த்தால் பிர‌ம்ம‌னுக்கு ஒரே ஒரு ம‌னைவியின் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளே காய‌த்ரி ம‌ற்றும் சாவித்ரி.

விஷ்ணுக்கு ப‌ல‌ ம‌னைவிய‌ர் இருப்ப‌து போல‌ தோன்றினாலும் அவ‌ர் அனைவ‌ரும் ம‌ஹால‌ஷ்மி, பூமாதேவி என்ற‌ இருவ‌ருக்குள் அட‌ங்கி விடுவ‌ர். மஹால‌ஷ்மி செல்வ‌த்திற்கு அதிப‌தி. பூமாதேவி நில‌ம் நீர் காற்று என்ற‌ ம‌ற்றை செல்வ‌ங்க‌ளுக்கு அதிப‌தி. ஆக இவ‌ர்க‌ள் எல்லாவித‌ செல்வ‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌னித்த‌னி வ‌டிவ‌ங்க‌ளே ஆயினும் ஒரே வ‌டிவ‌மே. ஆகையால் விஷ்ணுக்கும் ம‌னைவி ஒருவ‌ளே. ஏக‌ ப‌த்தினி விர‌த‌ன் ராம‌ன் ம‌ட்டும‌ல்ல எல்லா விஷ்ணு ரூப‌மும் அப்ப‌டியே.

சிவ‌ச‌க்தி வீர‌த்திற்கும் உட‌லில் அசையும் அனைத்து ச‌க்திக்கும் அதிப‌தி. க‌ங்கை உயிர்வாழ தேவையான‌ த‌ண்ணீர். த‌ண்ணீரால் ஆன‌து தானே உட‌ம்பும். உட‌ல் முழுதும் ஓடும் ர‌த்த‌மும் த‌ண்ணீர் க‌ல‌வை தாமே. ஆகையால் ச‌க்தியும் க‌ங்கையும் இருவ‌ர் போல் தெரியும் ஒருவ‌ர்.

மேலும் க‌ட‌வுள‌ர் க‌ண‌வ‌ன் ம‌னைவி மாம‌ன் ம‌ச்சான் என்று ம‌னித ச‌முக‌த்தில் இருக்கும் உறவுக‌ளோடான‌ ஒப்பீட்டிற்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் வேறு. ந‌ம் ந‌டைமுறையோடு பார்த்து அறிவிய‌ல் ஆராய்ச்சி எல்லாம் செய்யின் வீண் குழ‌ப்பமும் தேவைய‌ற்ற‌ சிந்த‌னையுமே மிஞ்சும்.மீண்டும் சொல்கிறேன் கடவுள் என்கிற‌ நித‌ர்ச‌ன‌ உருவ‌க‌ங்கள் மூலமாக‌த்தான் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் என்று சொல்லி ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்க‌ வேண்டும். மேலே சொன்ன‌து போல‌ புத்திப்பூர்வ‌மாக‌ என்று நினைத்து விப‌ரீத‌மாக‌ யோசித்தால் கிடைக்கும் வெளிச்ச‌ம் பய‌ம் தான் த‌ரும். பின்வ‌ரும் க‌விதை போல‌.

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

-- ல‌ஷ்ம‌ண்.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி II



சங்கப்பாடலில் இருக்கும் சிக்கலே அதை நாம் உள்வாங்கி கொள்ளும் விதமே. இந்த சிக்கலுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது இதன் மொழி. மொழி நமக்கு புரியாதவரை இப்பாடல்களுக்கு எழுதப்பட்டிக்கும் உரையையே நாம் பெரிதும் நம்ப வேண்டி இருக்கின்றது. உரை எழுதுவரின் புரிதலும், அவர் கற்பனைக்கு எட்டும் விசயங்கள் சங்கபாடல் களத்தில் எல்லையை வகுக்கின்றது. எனக்கும் அப்படி சில சங்கப்பாடல்கள் சிக்கலை வகுத்தன. அப்பாடலின் வரும் சில வார்த்தைக்கு வேறு அர்த்தம் எடுத்தால் முழுப்பாடலின் பொருளே மாறிவிடுகின்றது. அப்படி பொருள் மாறும் கூறப்பட்ட உணர்வு நிலையும் மாறிவிடுகின்றது. அப்படிப்பட்ட உணர்வு நிலையையும் முடிந்த அளவில் பொருத்தி சில கவிதைகளை எடுத்துக் காட்டியுள்ளேன்.


கைந்நிலை (பாட‌ல் 2) - உணர்வு நிலை தனிமையில் உடல் வாதை


வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்

பகுதி ஒன்றில் சொல்லப்பட்ட கைந்நிலை பாடலின் வரும் வெந்தபுனம் என்ற வார்த்தையை வெந்த + புனம் என்று பிரிந்து பார்த்தால் அப்பாடலின் பொருளே முற்றாக மாற வாய்ப்பிருக்கின்றது வெந்த என்பது முதிர்ந்த அல்லது அடர்ந்த என்ற பொருளாக நாம் உட்கொள்ளவும் இயலும். அப்படிப்பட்ட பொருள் எடுக்கும் போது இந்தப்பாடலின் முழு பொருளும் உணர்வு நிலையும் மாறிவிடுகின்றது.


அடர்ந்து முதிர்ந்த காட்டில் மேலும் சுகந்தமாக்க சந்தன மணத்தை சுமந்து வருக்கின்றது அருவி. அப்படிப்பட்ட அடர்ந்த காட்டினை சார்ந்தவர் நம் தலைவன், அவர் வரும் வழியில் காட்டின் அடர்ந்த தன்மையாலும், அருவிக்கு நீர் வரும் மிருகங்களாலும் பல ஆபத்துகள் இருக்கலாம் அதை நினைத்தும் அதனால் அவன் வாராது போய் விடுவோனே என்று எனக்கு நடுக்கமாக இருக்கின்றது என்று தோழியிடம் கூறுகின்றாள்.


இப்படி தலைவி புலம்ப காரணம் தலைவன் மேல் கொண்ட காதலும், காதலால் தனிமையுற்ற தன் உடல் படுத்தும் பாடேயன்றி வேறென்ன காரணமாக இருக்க இயலும்.


இப்படிப்பட்ட பிரிந்த அல்லது இழந்த காதலை பற்றி அழகான பல படிமங்களை சூரியன் தனித்தலையும் பகல் கவிதை தொகுப்பில் பல இடங்களில் தொகுத்து கொடுத்திருக்கின்றார் தமிழ் ந‌தி. ஒரு நாளும் இரண்டு அறைகளும் என்ற கவிதையில் (கவிதையின் கரு வேறு ஆனால் இந்த சங்கப்பாடலுக்கு உகந்த வரிகள் என்பதால் இந்த வரிகளை இங்கே குறிப்பிடுகின்றேன்)

“நெடுநாளாய்த் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த் துளிகளெனத் ததும்புகின்றன”


பிரிந்த தலைவனை நினைத்து புலம்பும் தலைவி தன் உடல் வாதையை இதை விட அளவாக அழகாக சொல்ல இயலுமா என்று வியக்கிறேன். இந்த தனிமையும் தவிப்பும் இன்னும் பல இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது. அதே தொகுதியில் வண்ணங்களாலான நீர்க்குமிழி என்ற கவிதையில்


"பூட்டப்பட்ட அறையினுள்
விலங்கென அலைகிறது வேட்கை"

தொட‌ரும்...


குறிப்பு: இந்த‌ தொட‌ர் க‌ட்டுரையின் சில‌ ப‌குதிக‌ள் அக‌நாழிகை மார்ச் இத‌ழில் கைந்நிலை சில‌ பாட‌ல்க‌ளும் க‌னிமொழியின் அக‌த்திணையும் என்ற‌ த‌லைப்பில் க‌ட்டுரையாக‌ வெளி வ‌ந்திருக்கின்ற‌து. ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ளும் த‌ற்கால‌ பெண்க‌விஞ‌ர்க‌ளும் என்ற இந்த‌ ஆக்க‌ம் அக்க‌ட்டுரையின் நீட்சியே. வெளியிட்ட அக‌நாழிகைக்கு என் சிர‌ம் தாழ்ந்த‌ வ‌ந்த‌ன‌ங்க‌ளும் ந‌ன்றியும்

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி I

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி I


ச‌ங்க‌பாட‌ல்க‌ளில் ஏனோ பெரும் ஈர்ப்பென‌க்கு. ஏன் என்று சொல்ல‌வியலாத‌ ஆவ‌ல். அவ்வ‌ப்போது சில‌ க‌விதைக‌ளை வாசிப்ப‌தும் அது சொல்ல‌ வ‌ரும் ஆழ்க‌ருத்துக்க‌ளை உள்வாங்கி அசைபோடுவ‌தும் பின் அப்ப‌டியே விட்டு விடுவ‌துமாக‌ ந‌க‌ர்ந்த‌ப‌டி இருந்த‌து என் ப‌ய‌ண‌ம்.

ச‌மீப‌ கால‌மாக‌ சில‌ பெண்க‌விஞ‌ர்க‌ளின் தொகுப்பை தொட‌ர்ந்து வாசிக்கும் போது ஆழ்ம‌ன‌தில் புதைந்து கிட‌க்கும் சில‌ ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ளில் சொல்ல‌ப‌டும் ஒரு சில‌ விச‌ய‌ங்க‌ள் அப்ப‌டியே ஒரு மென் அலை போல‌ க‌ண் முன் வ‌ந்து போகும்.

பசி, தூக்கம், காமம் என்ற அடிப்படை உணர்வு நிலை சங்ககாலம் முதல் இந்த காலம் வரை தொடர்வதே. உணர்வுகள் எதுவும் புதிதில்லை எல்லாமே எப்போதும் உணரப்பட்டதாகவே இருக்கின்றன். ஆனால் ஒவ்வொருவரும் அதை வெளிப்படுத்தும் விதமே வேறாகும்.

ப‌தினென்கீழ்க‌ண‌க்கு நூல்களில் கைந்நிலை, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது மேலும் குறுந்தொகை இவற்றில் இருந்து கவர்ந்த சில பாடல்களில் உணர்வு நிலை அப்படியே ஒத்தும் அல்லது அதே உணர்வை வேறு வடிவத்திலும் படம் பிடித்திருக்கும் தற்கால பெண்கவிஞர்களில் சில கவிதைகளையும் தொகுத்து வழங்க நினைத்திருந்தேன்.

இதை ஒரே க‌ட்டுரையாக்காம‌ல் ஒரு தொட‌ராக‌ வ‌ழ‌ங்க‌ நினைத்திருக்கிறேன்.
என்னை வாசிக்கும் அன்ப‌ர்க‌ள் தொட‌ர்ந்து என‌க்கு அளிக்கும் ஊக்க‌த்திற்கு என்னுடைய‌ ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அவ‌ர்க‌ள் இதையும் வாசிப்பார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையோடு...

கைந்நிலை (பாட‌ல் 2) - உண‌ர்வுநிலை ந‌ம்பிக்கையின்மை

வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்

வெந்த‌ காட்டிற்கு அத‌ன் வாச‌ம் மாறி சுக‌ந்த‌ம் உண்டாகும் வண்ணம் ச‌ந்த‌ன‌ம் ஏந்தி வ‌ரும் அருவியை கொண்ட‌ ம‌லைக‌ளை உடைய‌ த‌லைவ‌ன் வ‌ருவானோ அல்ல‌து ராம‌ல் போவானோ என்று என் நெஞ்ச‌ம் ந‌டுக்குகின்ற‌து என் தோழி என்ப‌தே இந்த‌ பாடலின் பொருள்.

இந்த‌ வெந்த‌ காடு என்ப‌து ஒரு ப‌டிம‌ம். த‌லைவ‌ன் இன்னும் தலைவியை ம‌ண‌க்க‌வில்லை அவ‌ளோடு காத‌ல் கொண்டு அல்லது அவ‌ளை காத‌ல் கொள்ள‌ செய்து பிரிந்து போய் விட்டான் என்பதையும் அவ‌ன் பிரிந்த‌ துய‌ரையே அப்ப‌டி சொல்லி இருக்கின்றாள் என்ப‌தே இந்த‌ பாட‌லின் சிற‌ப்பு. வெந்த‌ காட்டிற்கு சந்த‌ன‌மிட்டு அதன் நாற்ற‌த்தை போக்க‌ இய‌லுமா என்ன‌? காடு வெந்து கிடந்தாலென்ன‌ த‌ன் பாட்டுக்கு ச‌ந்த‌ன‌ ம‌ண‌ம் ப‌ர‌ப்பி ஓடிக் கொண்டிருக்கின்ற‌து அருவி. அது வாச‌ம் ப‌ர‌ப்புவதை போன்ற‌ ஒரு மாயை ந‌ம்பி இருப்ப‌தை போல‌வே தானும் த‌லைவ‌ன் வருவானோ என்று ந‌டுக்க‌முற்று இருப்ப‌தாக‌ குறிப்பாக‌ உணர்த்துகின்றாள்.

அவ‌ள் ப‌ச‌லையை ம‌றைத்து, திரும‌ண‌ம் த‌விர்த்து த‌லைவ‌னும் வருவானோ மாட்டானோ என்று ந‌ம்பிக்கை த‌ள‌ர்ந்து ந‌டுக்க‌முறுவ‌தாக‌ கூறும் இவ‌ள் ந‌ம்பிக்கையின்மையை ஒத்து இருக்கின்ற‌து கனிமொழியின் சிக‌ர‌ங்க‌ளில் உறைகின்ற‌து கால‌ம் என்ற தொகுதியில் இருக்கும் வில‌க‌ல் என்ற‌ க‌விதை. க‌விதையின் க‌ரு முற்றாக‌ வேறு ஆனால் இர‌ண்டுக்கும் ஆதார‌ம் இழையோடும் ந‌ம்பிக்கையின்மை

எப்ப‌டிச் சொல்வாய் என்று ஆர‌ம்பிக்கும் இக்க‌விதையில் இவ‌ரின் பிரிய‌த்துக்குரிய‌ ஒருவ‌ரை சார்ந்த விச‌ய‌மொன்று இவ‌ருக்கு தெரிந்து விட்ட‌து அந்த‌ விச‌ய‌த்தை அவ‌ர் கூறுவாரோ அல்ல‌து சொல்லாம‌லே விடுவாரோ என்ற‌ ந‌டுக்க‌ம் க‌விதை முழுவ‌தும் பரவி இருக்கின்ற‌து. அந்த‌ பிரிய‌மான‌ ந‌ப‌ருக்கு அது ச‌ந்தோச‌ம் தரும் விச‌ய‌ம் தான் இனிப்போடு வ‌ருவாயோ என்று கேள்வியூடே இதை ந‌ம‌க்கு உண‌ர்த்துகின்றார் க‌னிமொழி. ஆனால் அந்த‌ விசயத்தை இவ‌ரிட‌ம் சொல்ல‌ த‌யங்கும் அல்ல்து சொல்லி விட்டு த‌ன்னுடைய‌ உற‌வை முறித்துக் கொள்வாரோ என்ற‌ ப‌ய‌த்தை என் க‌ண்க‌ளை த‌விர்த்து கூறுவாயோ என்று கேட்டு ந‌ம் ம‌ன‌த்தையும் ஆழ‌ பாதிக்கின்றார். இவ‌ருக்கு மிக‌ நெருக்க‌மான‌வ‌ர் என்ப‌தையும் விய‌ர்வைத் துளிக‌ள் காய‌த்துவ‌ங்கும் கிற‌ங்கிய‌ த‌ருண‌த்திலா என்று கேட்டு விள‌க்குகின்றர். இவ்வ‌ள‌வு நெருக்கம் ஆயினும் ஏதோ கார‌ணத்தால் சொல்லாம‌ல் கூட‌ பிரிந்து விடுவாயோ என்ற‌ வ‌லியை அழுந்த‌ கூறி இருக்கின்றார்.

எப்போது சொல்வாய்
என்று காத்திருக்கின்றேன்
ந‌ல்லெண்ண‌ங்க‌ளையும்
புன்ன‌கையையும்
ஒரு நேர்க்கோட்டில் குவித்து
உன் க‌ண்க‌ளைச் ச‌ந்தித்து
உறுதியான‌ கைகுலுக்க‌லுட‌ன்
வாழ்த்துச் சொல்ல‌...

வழியினுடேயும் உன்னை வாழ்த்த‌வே இருக்கும் என் அன்பை புரிந்து கொள் என்று கூறி த‌விக்கும் இந்த‌ க‌விஞ‌ரின் ம‌ன‌த்தில் இருக்கும் ந‌ம்பிக்கையின்மை ஆறுத‌ல் நாடி த‌விக்கும் இவ‌ர‌து க‌வி வ‌ரிக‌ள் ம‌ன‌திலிருந்து நீங்க‌ நீண்ட‌ நாட்க‌ள் ஆன‌து.

தொட‌ரும்....

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IV



கைந்நிலை (பாட‌ல் 23) உண‌ர்வு நிலை ந‌ம்பிக்கையின் ஊற்று

சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் - தோழி! - நமர்?


ஒலி எழுப்பும் அம்பேற்றிய‌ வில்லும் கொடுங்கோப‌மும் கொண்ட‌, எதை கொல்கின்றோம் என்ற‌ சிந்த‌னையோ இர‌க்க‌மோ இல்லாமல் கொல்வ‌தை ம‌ட்டுமே தொழிலாக‌ கொண்ட‌ ந‌ம‌ன் போன்ற‌ வேட‌ர்க‌ள் ஓடும் போது ச‌ருகான‌ இலைக‌ள் ஓசையெழுப்பும் மிகுந்த‌ வெப்ப‌முடைய‌ இந்த‌ கான‌த்தில் இந்த‌ வேனிற்ப‌ருவ‌த்தில் சென்ற‌ ந‌ம் த‌லைவ‌ன் ந‌ம்மை விட்டு நீங்கிய‌ சொன்ற‌ தொலைவை நினைத்து பாராம‌ல் இருக்க‌வா இய‌லும் சொல் தோழி.

இப்பாட‌லின் உட்பொருளாக‌ க‌ண்டால் தோழி த‌லைவ‌ன் மேல் கொண்டிருந்த‌ அதீத‌ காத‌ல் அவ‌ன் வ‌ழியில் அவ‌னுக்கு நேர‌ இருக்கும் துய‌ர‌ங்க‌ளை, அபாயங்க‌ளை எண்ணி அஞ்சி இருப்ப‌தாக‌ நினைக்க‌ தோன்றுகின்ற‌து. வேனிற் கால‌ம் சென்று இருக்கும் தலைவ‌னின் ப‌சி, தாக‌ம், கொலை செய்த‌ அஞ்சாத வேட‌ர் இவையல்ல‌ இப்பாட‌லில் கார‌ணி, இடையாற‌து பிரிவால் மௌனமாக‌ அர‌ற்றும் உட‌லை தான் ஓடும் இலை ஒலி வெங் கானத்து என்று கான‌த்தின் மேல் ஏற்றி விட்டு சொல்லி இருக்கின்றாள். என்னை போல‌ த‌லைவ‌னும் ஏக்க‌முற்று இருக்கின்றானோ என்ற‌ க‌வ‌லையும் வேறு சேர்ந்தே வாட்டுகின்றது அவ‌ளை. ச‌ர‌ ச‌ர‌க்கும் ச‌ருகை போலும் இவ‌ளுட‌ல், இவ‌ள் பிரிவை ஏதாவ‌து ஒரு கார‌ண‌த்தால் நினைவூட்டிய‌ப‌டியே இருக்கின்ற‌ர் உட‌னிருப்போர். பிரிவு தொலைவு த‌ன்னை த‌கிர்ப்ப‌து போல் த‌லைவ‌னைக்கும் த‌ன் நினைவினை ஏதாவ‌து ஊட்டிய‌ வண்ணிருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கை அவ‌ளுக்கு நிறைய‌ இருக்கின்ற‌து. இந்த‌ உண‌ர்வையே அகத்திணையில் மிச்ச‌ம் என்ற‌ க‌விதையில் கனிமொழி கூறி இருக்கின்றார்.


ந‌ட்போ காத‌லோ இர‌ண்டும் ம‌ற்ற‌ அதீத‌ பிரிய‌மோ ஏதோ ஒன்றால் பிணைந்த‌ இருவ‌ரை மென்திரை போல‌ ப‌டியும் சிறு இடைவெளி கால‌ப் பெருவெளியில் நீண்டு வ‌ள‌ர்ந்து இவ‌ரும் பிரிய‌ கார‌ண‌மாகி போகும் க‌தை அனைவ‌ரும் உண‌ர்ந்த‌தே. அப்ப‌டிப்ப‌ட்ட‌ இடைவெளியையும் பெரிவையும் பேசும் இக்க‌விதையில்

என்றேனும் ஒரு க‌ண‌ப்பொழுதில்
ந‌ம் க‌ன‌வுக‌ள் உர‌ச‌க்கூடு‌ம்
ந‌ம்பிக்கையில்
வீசியெறியாம‌ல் வைத்திருக்கின்றேன்
இவ்விருட்ச‌த்தின் விதையை

என்ன‌ ஒரு ஆதர்ச‌மான‌ ந‌ம்பிக்கை த‌ன் காத‌ல் நினைவுக‌ள் மீது. அந்த‌ நினைவுக‌ள் உனை என்னோடு சேர்க்கும் மீண்டும் ஒரு விருட்ச‌த்தை உருவாக்கும் முன்பிழுந்திருந்த‌ அவ்விருட்ச‌த்தின் விதை என்ற‌ க‌னிமொழிக்கு ச‌ங்க‌கால‌ த‌லைவியின் ம‌ன‌நிலை பெருதும் பொருத்த‌மாக‌வே இருக்கின்ற‌து.

இதே பாடலில் தலைவி தொலைவு இலர்கொல் என்று கூறுமிடத்தை மிகைப‌டுத்தி பார்க்கும் போது அவ‌ள் சிறு கவலையும் கொண்டவாளாகவும் எனக்கு தெரிகின்றாள், தான் தலைவனை பிரிந்து வாடுகின்றாள் தன் காதலை காமத்தால் தவிக்கும் உடலை மறைக்க இயலாது தவிக்கிறாள். இந்த‌ உண‌ர்வுநிலை மேல் சொல்ல‌ப்ப‌ட்ட‌திலிருந்து ச‌ற்றே மாறுபட்டதாக‌ இருந்தாலும், இதே உண‌ர்வின் நிலையை பச்சை தேவதை தொகுப்பில் சல்மாவும் கூறி இருக்கின்றார்.

பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்.

தன்னருக்கில் இல்லாத தலைவனை அவன் நினைவில் வாடும் தலைவியின் மனநிலையை ஒட்டி மிக அருகில் தான் இருக்கின்றது சல்மாவின் நீங்குதலின்றி கவிதையும்.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி III

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி VI


குறுந்தொகை (பாடல் 6) உண‌ர்வுநிலை வ‌ருத்த‌மும் கூற‌ல் இயலாமையும் ஏக்க‌மும் எதிர்நோக்க‌லும்

கழனி மாஅத்து விளைந்துகு தீங்கனி
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே


இந்தப் பாடல் ஒரு பரத்தை கூறுவது போல இருக்கின்றது. என் தலைவன் மகனின் தாய் அவனை வீட்டில் கண்ணாடி பிம்பம் எப்படி தன் முன் நின்பவரின் ஆட்டத்தை அப்படியே பிரதிபலிக்குமோ அப்படியே ஆட்டி வைப்பவளாம். என் தலைவன் அப்படிப்பட்ட இடத்திலிருந்து அவன் தானே வந்தான். மாமரத்தில் முதிர்ந்து உதிர்ந்த கனியானது வயலில் இருக்கும் வாளை மீன்கள் கவ்வி செல்வது போல தான் இதுவும் இதிலென்ன தவறு என்கிறாள்.


இந்த பாடலில் ஆடிப்பாவை என்பது தான் சிறப்பான திருப்புமுனையான வார்த்தை. ஆடிப்பாவை என்பது நிலைக்கண்ணாடியை படிமமாக கொண்ட விசயம். நிலைக்கண்ணாடி என்பது நம்மை மறைக்காமல் பிரதிபலிக்கும் ஒன்று. நிறைகளை குறைகளையும் சேர்த்தே ந‌ம்மை காட்டும். அப்படிப்பட்ட நிலைக்கண்ணாடியை தனது கவிதையின் அருமையாதொரு படிமமாக உபயோகித்து இருக்கின்றார். ச‌ல்மாவின் பச்சை தேவதை கவிதைத் தொகுதியில் நீக்கமுடியாத வரிகள் என்ற கவிதையில்

நீ அருகிருந்த வேளை
நிலைக்கண்ணாடி பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

இவ்வ‌ரிக‌ளில் த‌தும்பும் வ‌ரிக‌ளின் வேத‌னை உற்று நோக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து. மிகுந்த‌ துய‌ர‌மும் வேத‌னையும் வெளிக்காட்டிக்க‌வியலாத‌ அல்ல‌து காட்டிக் கொடுக்க‌ விரும்பாத‌ ஒரு உயிரின் ம‌ருக‌லும் இதில் த‌தும்பி வ‌ழிகின்ற‌ன‌. என்னதான் நான்கு சுவருக்குள் ந‌ட‌க்கும் அதிகார‌ங்க‌ளும் அடுக்கு ஆளுமுறைக‌ளுமாயினும் பெண்ணின் வருத்தங்களையும் வலிகளையும் அவ்வீட்டு நிலைக்கண்ணாடி அறியுமன்றோ?

இந்த பாடலில் மாற்று பொருளாக ஆடிப்பாவையை ஆடும் விழிப் பாவைகள் என்றும் கொள்ளலாம். அப்படி பொருள் கொள்ளும் போது இந்த பாடல் தலைவியின் கோணத்தில் சொல்லப்பட்டதாக பொருள் கொள்ளலாம். முதிர்ந்த மாங்கனியை கழனியில் வாளை மீன்கள் கவர்வதை போல பரத்தை உன்னை கவர்ந்து சென்று விட்டால் ஆயினும் என்றேனும் நீ வாருவாய் என உன் புதல்வனின் தாயாக விழிப்பாவைகள் இடையறாது ஆடிய வண்ணம் காத்திருக்கின்றேன்.

தேன்மொழி தாஸ் ஒளியறியாக் காட்டுக்குள் என்ற தன் தொகுப்பில் ஒரு கவிதையில்

எப்போதாவது உனது வருகை
கண்களுக்குள் தலைகீழாய் விரியும் காளானாய்க்
கருவிழி அசைய
கதவு திறப்பேன்.

க‌ருவிழி அசைய‌ என்ப‌தை ஆடிப்பாவை என்ப‌தோடு ஒப்பிட்டு, த‌லைம‌க‌ன் வ‌ருகைக்கு ஏங்கி காத்திருக்கும் பெண் ம‌யிலென‌ இந்த‌ க‌விதையின் உண‌ர்வுநிலையை ஒப்பீடு செய்ய‌லாம். தலைகீழாய் விரியும் காளானாய்க் இங்கே விஞ்ஞானம் பேசுகின்றது. விழிக்குள் காணும் காட்சி த‌லைகீழாக‌ தான் ப‌தியும் அதை சொல்வ‌தாக‌வும் அல்ல‌து இந்த‌ வ‌ரிக‌ளை நீ வ‌ரும் வேளை என் த‌லைகீழ் விச‌ய‌ங்க‌ள் பெரும் பிர‌ச்ச‌னைக‌ள் யாவும் நேராகி சென்றுவிடுகின்ற‌ன‌ என்று சொல்வ‌தாக‌வும் எடுத்துக் கொள்ள‌லாம். நீண்ட நாளாக்கு பின் வரும் தலைவனுக்கு காணும் இருக்கும் கண்களில் ஏக்கம் கவிதையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V


தொட‌ரும்...

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V



ஒரு பெண் த‌ன் ப‌ருவ‌த்தின் விழைவை எவ‌ரிட‌மும் ப‌கிர‌ முடியாத‌ சிக்க‌லான‌ சூழ‌லில் தான் ந‌ம் ச‌மூக‌ம் இருக்கின்ற‌து. பெண்ணுக்கே அமைந்த‌ நாண‌ம் த‌ன் தாயிட‌ம் கூட‌ த‌ன் ப‌ருவ‌த்தின் உட‌ல் மாற்ற‌ங்க‌ளையும், அத‌ன் விழைவையும் ப‌கிர‌ முடியாம‌ல் வைத்திருக்கின்ற‌து.

பெண்ணின் காம‌ம் பொதுவாக தவறாகவே சமூகம் பார்க்கின்றது. இத்த‌கைய‌ சிக்க‌லான‌ உண‌ர்வின் போராட்டம் ச‌ங்க கால‌ம் முத‌ல் இந்த‌ கால‌ம் வ‌ரை தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌து.

கைந்நிலை (பாட‌ல் 59) உண‌ர்வுநிலை நாண‌மும் (கூற‌ல்) துணிவின்மையும்

தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி! - 'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?' என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு.

வெகுளித்த‌ன‌மான‌ பேச்சினையும் ம‌ருளும் மான் போல‌ பார்வையும் கொண்ட‌ த‌லைவி, தாழை ம‌ட‌ல்க‌ளும் நாரையும் நிறைந்த‌ நீர் நிலை கொண்ட‌ நெய்த‌ல் நில‌த்தின் குளுமையை தன்னுட‌ன் கொண்ட‌ த‌லைவ‌னை, "புழ‌க்க‌டை க‌த‌வின் வ‌ழி நுழைந்து செல்லும் அறிவ‌ற்ற‌வ‌ன் யார்?" என்று புழ‌க்க‌டை கதவினை அடைத்துவிட்டாள் ந‌ம் அன்னை என்றாள் தோழி.

க‌ள‌வொழுக்க‌த்தில் திளைத்திருக்கும் த‌லைவிக்கு அவ்விச‌ய‌ம் அன்னைக்கும் தெரிய‌வ‌ந்த‌ கார‌ண‌த்தால் விரைவாக‌ உன் தலைவனிட‌ம் பேசி ம‌ண‌ம் புரிவாயாக‌ என்று குறிப்பால் உணர்த்தினாள் என்றும் இதை எடுத்துக்கொள்ள‌லாம்.

களவொழுக்கம் சரியா தவறா என்ற பிரச்சனையை புறந்தள்ளி வைத்துவிட்டு பார்ப்போமேயானால், நான் இன்னாரை என் வாழ்க்கை துணையென ஏற்க பிரியப்பட்டேன் என்பதை கூட சொல்ல தயக்கம் கொள்ளும் தலைவிக்கு அவள் நாணம் அல்லது இன்னபிற காரணமோ இருக்கலாம். அன்னைக்கு தன்னை தன் உள்ளம் உணர்த்தி விரும்பியவனை மணந்து கொள்ளுமாரு தோழி அறிவுருத்துவதே இதற்கு சாட்சி.

இதையே சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள் என்ற தொகுப்பில் அறியாமை என்ற கவிதையில் சிறுவயதிலிருந்து தாயின் விரல் பற்றி நடந்த நான், இப்போது அவள் அறிந்த இவ்வுடலை அவளிடமிருந்து மறைக்கும் பருவம் அடைந்து விட்டேன் என்று வாதையில் வருந்தும் இவர் அன்பான தாயிடம் எப்படி சொல்வேன்

உன் மேல் கொண்ட
காதலையும்
என்
பருவம்
உன்னை நாடுவதையும்

என்று வினவும் இவர் மனநிலையும் உணர்வும் சங்க தலைவிக்கு சற்றும் மாறுப்பட்டதில்லை. இங்கும் நாணமே தடையாக இருக்கின்றது. ஆனால் உள்ளம் அவனையே மேலும் மேலும் உருகி உருகி நினைத்து வாடுகின்றது.

வெளிப்படையாக தனக்கு திருமணம் செய்ய சொல்லி எந்த காலத்திலும் பெண் தன் பெற்றோரிடம் கூட கேட்க இயலாது. இந்த சிக்கலையே சங்கத்தலைவியும் சக்திஜோதியும் பகிர்ந்திருக்கின்றார்கள்.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IV

தொட‌ரும்...

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி III



கைந்நிலை (பாடல் 26) - உணர்வு நிலை காட்சிப் பிழை போல மனப்பிறழ்ச்சி

இந்த‌ பாட‌லின் ஓரிரு வார்த்தை சிதைந்து போயிருக்கின்ற‌ன‌.

குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
.... .... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்; - பொன் நேர் நிறத்தாய்! -
அரிது, அவர் வாராவிடல்.

செந்காந்த‌ள் ம‌ல‌ர் க‌ண்ட‌ சேவ‌ல் த‌ன்னோடு ச‌ண்டையிடும் மற்றுமொரு சேவ‌ல் என்றெண்ணி பிட‌வ‌ம் கொடுமேலேறி நின்ற‌ சேவ‌ல் பின் அதை பொருந்தீ என்று அஞ்சி அங்கிருந்து அக‌ன்று சென்று விட்ட‌து. பொன்னை போல் மின்னும் நிற‌த்தை உடையவளே அவ‌ர் வாராம‌ல் போனால் ந‌ம் வாழ்வ‌து அரிதாகிவிடும்.

செந்நிற‌ காந்த‌ள் ம‌ல‌ர்க‌ள் க‌ண்ப‌தற்கு எரியும் நெருப்பென‌ இருக்கும், அதை தொலைவிருந்து க‌ண்ட‌ சேவ‌ல் தோற்ற‌ மயக்கத்தில் அது ஒரு சேவ‌லென்றும் பின் அதையே தெளிவாக‌ காணும் போது நெருப்பென்று அஞ்சுவ‌தாக‌ வ‌ரும் இந்த‌ பாட‌லில் உட்க‌ருத்தாக‌ த‌லைவ‌ன் மேல் த‌லைவி கொண்ட‌ அவ‌ந‌ம்பிக்கை நன்கு புல‌ப்ப‌டுகின்ற‌து, கான‌ல் நீரை காத‌லென்று எண்ணி ஏமார்ந்த‌ விச‌ய‌த்தை சூச‌க‌மாக‌ சொல்லி இருக்கின்றாள் த‌லைவி மேலும் அவ‌ன் திரும்பி வார‌விடில் அரிது என்று சொல்லுமிடத்தில் அவ‌ளுடைய‌ ம‌ன‌வ‌லியை வெளிப்ப‌டுத்தி இருக்கின்றாள். இந்த‌ பாட‌லை அக‌த்திணையின் மாறும் உன் முகம் என்ற‌ க‌விதையோடு ஒப்பிட‌லாம்.

மிக‌ அசாதார‌ண‌மான‌ மொழியில் காத‌ல் க‌ண‌வ‌னின் காத‌ல் மற்றும் க‌ல்யாண‌ம் அல்ல‌து அதை போன்ற‌தொரு பிணைக்கப்பட்ட‌ சூழ‌லின் போது நிக‌ழும் ஏமாற்ற‌ங்க‌ளை அழ‌காக‌ பேசியுள்ளார் இக்க‌விதையில். க‌விதை ஆர‌ம்பிக்கும் போது அவ‌ன் காத‌லின் க‌ட்டுண்டு கிட‌க்கும் த‌ன்னிலையை மென்மையாக‌ தெரிவித்துள்ளார். அத்த‌னை காத‌லும் ஆண்மைச் செருக்கும் வெற்றியின் வெறியும் என்னை த‌கிக்கின்ற‌ன‌ என்று சொல்லுமிடம் த‌ள‌ர்ந்து போகிறார்.

விளிம்புக‌ள் சிவ‌ந்த‌ விழிக‌ளின்
இருளில் த‌ட‌ம் தெரியாது த‌டுமாறுகிறேன்
நீ யாரென்று அறியாது

என்ற‌ வ‌ரிக‌ளில் க‌னிமொழியின் உயிர்வ‌லி உர‌க்க‌ ஒலிக்கின்ற‌து. நெரும்பை செந்காந்த‌ள் ம‌ல‌ரே நினைத்து ர‌சித்து நுக‌ர்ந்து பின் வெதும்பிய‌ நிலை புரிகின்ற‌து. இதையே தமிழ்நதியின் சூரிய‌ன் த‌னித்த‌லையும் ப‌க‌ல் தொகுதியில் பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது என்ற கவிதையில்

படகேறி வந்தபோது பார்த்த கடல்
இளம்பச்சை என்றான்
பின் தயங்கி இரத்தம் என்றான்


என்ற வரிகளை படிக்கும் போது பதறுகிறது. அந்த அளவு வன்முறை வாட்டிய மனிதர்களுக்கு இயற்கை கூட வேறு வடிவமாக தெரிகின்றது. வேதனை தான்.

(தொடரும்...)

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி II

Wednesday, June 24, 2009

அம்மாவுக்கு

"நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா"

அட கொடுமையே இந்த பாட்டையுமா ரிமிக்ஸ் பண்ணீட்டாங்க. நல்லவேளை சிவாஜி, பத்மினி இரண்டு பேருமே போய் சேர்ந்துட்டாங்க. இல்லாட்டி இந்த பாட்டை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று தோன்றியது. அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு நாதஸ்வரம் என்றால் ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் கேட்கும் எல்லா நாதஸ்வர இசையும் ஒன்று போலத் தான் தெரியும் எனக்கு ஆனால் அம்மா அது என்ன பாடல் அது என்ன ராகம் எல்லாம் சொல்வார்கள். நகுமோமோ அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். அம்மா ரொம்ப சார்ப். எந்த விசயம் என்றாலும் உடனடியாக கற்று கொள்வார்கள் அம்மாவிற்கு தெரியாத விசயமே கிடையாதோ என்று தோன்றும்.

தொலைபேசியில் அழைத்தேன். அம்மா ஹலோ சொல்லும் விதமே அழகாய் இருக்கும்.

"ஹலோஓஒ"

"ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க"

"நான் நல்லா இருக்கேன்ம்மா நீ எப்படி இருக்கே"

"நல்லா இருக்கேன்ம்மா சும்மா பேசலாம்ன்னு போன் பண்ணேன். உடம்பெல்லாம் நல்லா இருக்கா கால் வலி இருக்கா?"

"ம்ம் உடம்பெல்லாம் நல்லா இருக்கும்மா கால் வலி பரவாயில்லை அடுத்த வாரம் டாக்டரிடம் போகனும்"

"காலையில் என்ன சாப்பிட்டீங்க?"

"தட்டபயிரு துவையல் அரைச்சி சோறு பொங்கினேன் நீ என்ன செய்தே"

"நேத்து ரசம் இருந்துச்சி, அதோட வெண்டைக்காய் வறுத்து, கொடமுளக காயும் செய்து சாப்பாடு வைச்சி இருக்கேன்"

"கொடமுகளாவா நான் இதுவரை செய்தது இல்லை எப்படி செய்யறது?"

"ரொம்ப ஈசி தான்ம்மா பச்சைமிளகாய்,வெங்காயம்,தக்காளி எல்லாம் லைட்டா வதக்கிட்டு, கொடமிளகாயையும் வதக்கிட்டு உப்பு,சாப்பார் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு வேக வைக்கணும் அவ்வளவு தான் 10 நிமிசத்துல செய்துடலாம்"

"சாப்பாட்டோட கலந்து சாப்பிடலாமா?"

"ம்ம் சாப்பாட்டோடயும் சாப்பிடலாம், சப்பாத்தியோடும் சாப்பிடலாம்"

"சரி செய்து பார்க்கறேன். வேறென்ன விசயம் சொல்லும்மா"

"வேறொன்னுமில்லம்மா உடம்பை பார்த்துக்கோங்க எதாவது விசயம்ன்னா போன் பண்ணுங்க"

"சரிம்மா வைக்கிறேன்."

எனக்கு பழைய நாட்கள் ஞாபகம் வந்தது. தினம் திட்டு விழும். காலையில இவ்வளவு நேரம் தூங்கற, ஒருவேலையும் உருப்படியா பண்ண தெரியலை. ஒருநாளாவது வந்து சமையல் செய்ய துப்பில்லை. எங்கே போய் என் பேரை கெடுக்க இருக்கியோ. என்ன வளர்ப்பு வளர்த்திருக்கான்னு என்னைதான்டி சொல்லுவாங்க.... இப்படி தினம் ஒரு முறையாவது அர்ச்சனை கிடைக்காத நாளே இருக்காது. இன்று சமையலில் டிப்ஸ் அவர்களுக்கே தருவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது. இன்று இருக்குமிடத்தில் எவ்வளவு மரியாதை எனக்கு. ஏகப்பட்ட நல்லபேர். அம்மா எல்லாம் நீங்கள் கற்று தந்தது தான் அம்மா. உங்கள் நல்ல குணத்தில் 10% தான் என்னிடம் உண்டு அதற்கே இவ்வளவு நல்ல பெயர் எனக்கு.

I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

Sunday, June 7, 2009

யாதுமான‌வ‌னுக்கு

ரோஜாப் பூக்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் சோலையில் அல‌ர்ந்த‌ தென்ற‌ல் விழி த‌ட‌வ‌ விழித்தெழுந்தேன் ஒரு புது காலை பொழுதினில். பொன் வ‌ண்ண‌ம் பூசிய‌ க‌திர‌வ‌ன் சிரித்த‌ப்ப‌டி என்னை பார்த்திருந்த‌து என் வாழ்வின் புது வ‌ர‌வை என‌க்கு அறிவித்த‌ப‌டி. இட‌துக‌ண், இட‌து புஜ‌ம், இட‌து தொடை துடித்து எனக்கான எல்லா சிற‌ந்த‌ ச‌குன‌ங்க‌ளையும் உண‌ர்த்தி சென்ற‌து நீ என்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம். தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.

க‌ண்ட‌தும் தோன்ற‌வில்லை நீ என‌க்கென‌ இருக்க‌ பிற‌ந்த‌வ‌ன் என்று. இத‌மான‌ புன்ன‌கை எனை ஈர்த்திருந்த‌து ஆயினும் ம‌ற்ற‌வ‌ரில் ஒருவ‌னாய் தான் தெரிந்தாய் நீ என‌க்கு. விடிய‌லில் தொட‌ங்கி உன்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம் வ‌ரை உண‌ர‌வில்லை வாழ்வின் உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ளை உன்னோடு க‌ழிப்பேன் என்று.

ஒன்றாக‌ உண்ட‌ பொழுதுக‌ள், கூடி பய‌ண‌த்த த‌ருண‌ங்க‌ள், நீ என்னை தூர‌த்திருந்து ர‌சித்திருந்த‌ ச‌மய‌ங்க‌ள் அத்த‌னையும் அழ‌கான‌ நிக‌ழ்வுக‌ள். ஒரு முறை என்னை சீண்டிய‌ சில‌ரை உன் கோப‌ க‌ணையால் சுட்டெரித்தாயே மென்மையான‌ உன‌க்குள்ளா இத்த‌னை கோப‌ம்? என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌. ஞயாப‌க‌ம் இருக்கின்றதா நாம் சென்று வ‌ந்த‌ கோவிலில் என‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கொத்து மரிக்கொழுந்து உன்னை போல‌ அழ‌கானதாக‌வும் வ‌ச‌னையோடுமிருந்த‌து. நீ அளித்த‌ நெற்றி குங்கும‌ம் இன்றும் நின்று சிரிக்கின்ற‌து.

என்ன‌ பார்க்கின்றாய் என்றால் உன்னை தான், உன் ஒவ்வொரு அசைவையும் ம‌ற்ற‌வ‌ரிட‌த்து நீ செலுத்தும் அக்க‌ரையும், உன் அணுகு முறையையும், தாயென‌ நீ பொழியும் அன்பையும் அணுஅணுவாக‌ ர‌சிக்கின்றேன் என்பாய். உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய் அப்புற‌ம் என்ன‌டா உற‌ங்கும் போது பார்க்க‌ என்றால் அது உன‌க்கு தெரியாத‌டி எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌ உண‌ர்வென்று, வார்த்தைக‌ளால் விள‌க்க‌ முடியாதென்பாய். ஆனால் ஒரு நாளும் நான் உற‌ங்குவ‌தை பார்த்த‌தில்லை என்ப‌து தானே உன் புல‌ம்ப‌ல் இன்று வ‌ரை. என‌க்கு உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ற‌தும் நீ ப‌த‌றிய‌தும் அளித்த‌ அர‌வ‌ணைப்பில் நான் க‌ண்டேன் இன்னுமொரு தாயாய் நீ என‌க்கு.

உன்னை க‌ட்டிக் கொள்ள‌வா ஒரு க‌ண‌ம் என்ற‌ போது உன்னை விட‌ இறுக்க‌ க‌‌ட்டிக் கொண்ட‌து நான‌ல்ல‌வா? நெற்றியோட‌ நீ இட்ட‌ முத்த‌த்தில் ஆர‌ம்பித்து இன்று வ‌ரை நீ த‌ந்த‌ முத்த‌ங்க‌ள் எண்ணிக்கையில் அட‌ங்க‌வில்லை. உன‌க்கு என்னை பிடிக்குமா என்றால் ம்ம்ம்ம் என்ற‌ப‌டி இத‌ழ் நிறைய‌ முத்த‌ம் த‌ருவாய். இறுக‌ அணைத்திடுவாய். என் எழுத்தை நீ எழுதிய‌து போல‌ ஏந்தி கொள்வாய். இணுக்க‌ம் இணுக்கமாய் விம‌ர்சிப்பாய். தாங்கி கொள்வாய் எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.

Sunday, May 24, 2009

காதல் பனித்துளிகள்

அடர்ந்திருந்த மேகத்தில் இருந்த துளிகள் எல்லாம் புலம்பிக்கொண்டிருந்தன இப்படி சிறைபட்டபடி இருப்பதற்கு, எங்கெங்கோ அலைவதற்கு பிடித்த இடத்தில் கடலிலேயே கிடந்திருக்கலாமென்று. சட்டென அடித்த காற்றில் சிலிர்த்த மேகத்திலிருந்து துளிர்த்தன நீர்துளிகள் துள்ளி குதித்தன மகிழ்ச்சியில். வெளி காற்றின் ஈரம்பட்டு பனி துளிகளாய் உறைந்து போயின, பிறந்திருந்த பனி துளியில் இரண்டு மிக சிறப்பானது. ஒன்றின் மேல் ஒன்றிருக்கு அதீத காதல். கை கோர்த்த படி சுதந்திர காற்றை சுவாத்தபடி பாட்டுகள் பாடிய படி பறந்து திறிந்தன. காதலுற்ற பனிதுளி தன் காதலியின் மேலிருந்த காதலினால் கைபிடித்த படியே பறந்திருந்தது. காதலி பனித்துளிக்கு கை பிடித்திருந்தது சற்றே தன் சுந்திரத்தை இழந்தது போல இருந்தது. விட்டு விட்டு மெல்ல பறந்தது. துடித்து போல காதலன் பனித்துளி ஓடி வந்து மீண்டும் கரம் பிடித்துக் கொண்டது, கை விட்டு விடாதே கண்மணி அடிக்கின்ற காற்றில் இரு வேறு திசையில் பிறிந்து பரந்திடுவோம். அதுவா நீ விரும்புவது என்று கேட்டது. காதலி பனித்துளிக்கும் அந்த காதலும் அக்கரையும் பிடித்து போய் விட மெல்ல மெல்ல மிதந்த படி பூமியை நோக்கி பறந்து வந்தன அவ்விரு துளிகளும்.

ஒரிடத்தில் பறந்த பறவை கூட்டத்தை பார்த்து குதூகலித்தது காதலி பனித்துளி. அந்த பறவை மேல் அமர்வோம் அது போகுமிடமெல்லாம் நாமும் பறப்போம். இப்படியே மிதந்திருந்தால் கொஞ்ச நேரத்தில் பூமியை அடைந்து விடுவோம் அப்புறம் விழுந்த இடத்தில் கிடக்க வேண்டியது தான் மீண்டும் கதிரவன் நம்மை கரைக்கும் வரை அதானாலே மேலும் மேலும் பறந்திடுவோம் என்றது. காதலன் பனித்துளிக்கோ என்ன ஆகுமோ என்ற பயமிருந்தது. காதலி பனித்துளி மீண்டும் கூறியது வாழ்க்கையில் எல்லாம் முயற்சிக்க வேண்டும் பயந்தொடுங்கி இருந்தால் எதையும் அனுபவிக்காமலே பிறந்தோம் அழிந்தோம் என்றாகி விடுவோம் என்றது. காதலன் பனித்துளி சற்றே யோசித்தது. சரி தான் காதலியின் கை பற்றி சுற்றி திரிய அருமையாக தானே இருக்கும் என்ற நினைத்தது. இரண்டும் மெல்ல பறவைக்கு மேலே வந்தன. சரியாக பறவையின் இறகில் விழுந்தன. சற்றே சறுக்கிய காதலனை இறுக பற்றிக் கொண்டது காதலி பனித்துளி. அப்பாடா விழுந்து இருப்பேன் நல்ல வேளை உயிர் காத்தாய் தோழி என்றது காதலன் பனித்துளி. வெள்ளையாய் சிரிந்தது காதலி பனித்துளி. இரண்டுக்கும் புது அனுபவமது. பறவையில் வேகத்துக்கு தங்களை பழக்கபடுத்தி கொண்டுது. பின் பறவையோடு பறத்தல் அவர்களுக்கு சுவாஸியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நெடுந்தூரம் பயணித்தபின் பறவைக்கு பனித்துளிகள் பாறமாகி போனது. கொஞ்ச நேரத்தில் அவை இருந்த சிறகினை உதிர்த்துவிட்டு பறந்தது. சிறகு மிக வேகமாக பூமியை நோக்கி பறந்திட பனித்துளிகள் பயந்து போயின. என்ன நேருமோ என்ற அச்சத்தில் அடங்கி ஒடுங்கி போயின. வேகமாக கீழிறங்கிய சிறகு ஒரு மரக்கிளையில் தஞ்சமடைந்தது.

பயத்தில் பனித்துளிகள் மேலும் உறைந்து போயின. படபடப்படங்க அதிக நேரமானது. கிளையில் தாலாட்டில் மெல்லிய பூங்காற்றில், மரத்தில் பூத்திருந்த பூக்களை கண்டுகளித்த காதலி பனித்துளிக்கு மீண்டும் உற்சாகம் பிறந்தது. அதற்கு எப்போதும் பயமென்பதே கிடையாது போலும். ஓடிஆடி மகிழ்ந்தது. காதலன் பனித்துளி அதை மெல்ல அதட்டியது. கண்ணே நாம் இருப்பது ஒரு சிறகின் மேல் அதுவும் மரகிளை கவனம் தேவை. கீழே இருப்பது ஆபத்தான தார்சாலை என்றது. காதலி பனித்துளிக்கு கவலையில்லை. மகிழ்ச்சி கண்ணைக் கட்டியது. மேலும் மேலும் குதித்தாடியது. ஒரு சடுக்கில் சிறகை விட்டு வெளியே கீழே விழ தொடங்கியது. பதறிய காதலன் பனித்துளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தானும் குதிக்க எத்தனித்தது. சற்றே அடர்ந்து வீசிய காற்று காதலன் பனித்துளியை திசை மாற்றி பசும் புல்வெளியில் பறத்தியது. காதலி பனித்துளி தார் சாலையில் விழுந்து காதலனை பிரிந்ததை எண்ணி தவித்து போனது. சற்றே தொலைவில் இருந்த புல்வெளியிலிருந்து காதலன் பனித்துளி கண்ணீர் சிந்தியவாறு காதலி பனித்துளியை பார்த்துக் கொண்டு இருந்தது.

மறுநாள் மிக ரட்சத சப்த்தோடு ஒரு வாகனம் வந்தது. தார்சாலை மீதிருந்த பனித்துகள்களை அகற்றியவாறு அந்த வாகனம் சென்று கொண்டு இருந்தது. காதலன் பனித்துளி கண்ணெதிரே நசுங்கி பொசுங்கும் காதலி பனித்துளியை காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி பெருகிய கண்ணீரில் அந்த புல்வெளி முழுவது கடலானது. கழிவிரக்கம் பெருகி பொங்கிட தன் இனத்தை ஒன்று சேர்த்த பனித்துளி இறுகி பனிப்பாறையாகியது. அதன் மேல் மேலும் பனித்துளிகளை போர்த்தி மற்ற இடம் போலவே ஆக்கியது. அதன் மேல் நடந்த மானிடரை சறுக்கி விழ செய்தது. சறுக்கி ஒவ்வொரு எண்ணிக்கையையும் "உங்கள் வாகனம் வசதிக்காக செல்ல தானே என் காதலி போன்ற எண்ணற்ற பனித்துளிகளை கொன்று குவித்தீர்கள்" என்று பெருங்குரலில் கூவியபடி தன் காதலிக்கு சமர்பித்தது. சாகவரம் பெற்ற பனிப்பாறையாய் அங்கே வாழ்ந்திருந்தது.

பிடித்த கவிதைகள்

தண்ணீர்

பாத்திரங்கள் மாறுகின்றன
வடிவங்களும்
ஆனாலும்
நான் ஒரு போதும்
பாத்திரங்களல்ல
எனினும்
நான் பாத்திரங்களைப் போலிருக்கிறேன்
தவிர்க்க முடியாதபடிக்கு

பெருவெளியின் பனித்துளியாய்
அலைகடலின் நுரைமுதலாய்
இழை அவிழும் முதல் துளியாய்
ஆகிவிடும் என் கனவு
தேங்கிக் கிடக்கிறது
இமைகடவாதொரு துளியாய்

நிரந்தமின்மையின்
அந்தரத்துள் மூழ்கிப்
புதுப்புதுப் பாத்திரங்கள்
ஆனாலும்
நான் வடிவங்கள்
அற்றதொரு சோதி

-அகிலன்

======================================

அன்பெனும் பிடிக்குள்
அக‌ப்ப‌ட்ட‌ ம‌லைய‌து
எவ்வ‌ள‌வு பெரிதோ
அவ்வ‌ள‌விற்கு க‌ன‌மில்லை
என்றாலும்
சிறுபொழுதும் தாம‌திக்க‌வோ
உட‌ன் சும‌ந்து ஏக‌வோ இய‌லாத‌
வ‌ழிந‌டைப் ப‌ய‌ணி
நான்
இற‌க்கி வைத்துப் போகிறேன்
ப‌த்திர‌மா ய‌தை
பாதையின் ம‌றுங்கே
திசைக‌ளோடி பிரிந்த‌ வ‌ழிக‌ள்
இருண்ட‌ பிற‌கு
என் பிராதுக‌ளையும், பிரார்த்த‌னைக‌ளையும்
காலத்தின் ப‌லிமுற்றத்தில்
கிட‌த்திவிட்டு
வெறும‌ கையோடு நான்
திரும்பும் காலில்
அடைக்க‌ல‌ம் த‌ரும்
அசையாத‌ அம்ம‌லையின்
அடிவ‌யிற்றுக் குகை
நிழ‌ல்.

Monday, April 27, 2009

தொலைந்து போதல்

தொலைந்து போவதும் மீண்டு வருவதும் வாழ்கைத் தத்துவம் பூமாவின் கவிதை போல.

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

-- பூமா ஈஸ்வரமூர்த்தி

ஆனால் என் அனுபவம் ஒரு வித்தியாசமான தொலைந்து போதல்.

அன்னியதேசத்தில் தனிமையோடு இருத்தல் மிக கொடியது. அதனால் கிடைத்தவர்களை எல்லாம் தோழமையாக்கி கொண்டு ஒன்றாய் உண்பதும் வார இறுதியில் கூட்டமாய் வெளியே செல்வதும் வித்தியாசமான அனுபவங்களே. அதுவும் ஒரே மொழி பேசும் நண்பர்கள் வாய்த்துவிட்டால் மிக சீக்கிரம் தோழமையும் உரிமையும் பாராட்ட ஆரம்பிப்பது மிக இயற்கை. அதுவும் ஒரு தாய்க்கு உண்டான பரிவோடு அனைவர்க்கும் உணவை சமைப்பதிலும், பரிமாரி விடுவதிலும், கூட்டத்தை கூட்டுவதிலும் பிரசித்தி பெற்றவள். எல்லோர்க்கும் என் மேல் பிரியம் என்றே நினைத்திருந்தேன். ஒரு சுபயோக சுப வார இறுதியில் மதிய உணவிற்கு பிறகு வெளியே எங்கும் போவதற்கான ஆயத்தம் எதுவும் தெரியாத காரணத்தால் அறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் சென்று தமிழ் பேசும் அந்த நண்பரின் அறை எண்ணை அழைத்தேன் பதில் இல்லை. இன்னும் ஒரு தோழியின் அறையையும் அழைத்தேன் அங்கும் பதில் இல்லை. அவளுடைய செல்லிடைபேசியில் அழைத்தேன் எல்லோரும் வெளியில் கிளம்பி நீண்ட நடை சென்றிருப்பதாக சொன்னாள். சட்டென மனதை மேகம் திரையிட்டது. தனிமை போன்ற வெறுமையொன்று கூட வந்தமர்ந்தது. ஏதுவும் செய்ய தோன்றவில்லை.

வெளியே கிளம்பி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ளும் கிளிகளும், அழகிய மலர்களும், பூனை போலிருந்த சுவீடன் தேசத்து முயல்களும் என் வெறுமையை போக்கி கொண்டிருந்தன. தனிமை கூடக்கூட நடக்க ஆரம்பித்தது. நிறைய தெருக்களை கடந்து, சில பூங்காக்களை கடந்து ஒரு ஏரியை கடந்து ஒரு பாலமேறி நீண்ட தொலைவு சென்று பின் திசை புரியவில்லை. வளைந்து வளைந்து நடக்கின்றேன் வந்த வழி புரியவில்லை. எந்த வளைவில் திரும்பி நடந்தால் வந்த இடம் போகலாம் என்பது தெரியவில்லை. அருகே நடந்து வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பேசிய பாஷை புரியவில்லை. சட்டென தெரிந்தது தொலைந்து போய்விட்டேன் என்று. கையில் காசு கூட எடுக்கவில்லை. செல்பேசியும் இல்லை. வசிக்கும் தெருவின் பெயர் மட்டும் தோரயமாக தெரியும். சற்றே பயத்தோடு நடந்தேன். எப்படி எப்படியோ அலைந்து ஒரு பிராதான சாலையை அடைந்தேன். எங்கள் விடுதி வழி செல்லும் பேருந்து அவ்வழியில் செல்வதை கண்டேன். சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆயினும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ரங்கனை நொடி நேரம் மனதில் நினைத்து ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய வழி எனக்கு புலப்பட்டது. விடுதி சென்றதும் எதிர்பட்டாள் தோழி எங்கே சென்றிருந்தாய் உன்னை மிக தேடினோம் உன் கைப்பேசியை கூட அழைத்தேன் என்றாள். எந்த சமாதானத்துக்கும் இடம் தராத கலகக்காரியின் வேடமணிந்து அறையை தாளிட்டு கொண்டேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். மனித்தில் இருந்த வெறுமை குழப்பம் மறைய இந்த தொலைதல் உதவி இருந்தது.

Friday, April 24, 2009

பொம்மலாட்டம்

வாழ்க்கை என்பதே ஒரு பொம்மலாட்டம் தான். இங்கு பிரச்சனை நூல் யார் கையில் என்பதே. பல சமயங்களில் நம் ஆட்டத்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தான் தீர்மானிக்கின்றார்கள். ஆனால் இது ஆடுகின்ற பொம்மையை ஆட்டி வைத்ததவர் யார் என்ற ஆராய்ச்சியைப் பற்றிய நீள்பதிவு.

பொம்மைகள்

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்கேள்வி கூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

- ஹரன் பிரசன்னா.

பொம்மை ஆடிக்கொண்டு இருக்கின்றது. பார்ப்பவருக்கு இதை ஆட்டி வைத்தவர் யாராக இருக்கும் என்ற சந்தேகம். இந்த சாதாரண விசயத்தை இவ்வளவு அலச வேண்டிய காரணம் என்ன என்று நாம் ஆச்சரிய படலாம். ஆனால் இங்கே ஆடும் பொம்மை ஒரு இறுதி விளைவு.(End result) அந்த இறுதி விளைவின் தாக்கம், எப்படி நடத்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியம் அல்லது ஆர்வம் எதுவேண்டுமானாலும் காரணிகளை ஆராய காரணமாக இருக்கலாம்.

குற்றம் அறிதல்
-----------------------------

அலுவ‌ல‌க‌த்திலிருந்து த‌லைவ‌லியோடு வீட்டுக்கு வ‌ரும் பெண்ணிட‌ம், உணவின் சுவை சரியில்லை என்று கணவன் குறை கூறினால், பெரும் சண்டை தான் விளையும். அவள் எரிச்ச‌லுக்கு காலையில் இரண்டு நிமிடம் தாமதத்தில் தொட‌ங்கி அதை தொட‌ந்த‌ அலுவலக பேருந்தை தவறவிட‌ல், நெரிசல் மிகுந்த நகர பேருந்தில் பய‌ணித்தல் அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாம‌ல் த‌லைவ‌லியில் முடித‌ல், ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ளின் அல‌ட்சிய‌ம், உய‌ர் அதிகாரியின் தேவையில்லாத‌ கோப‌ம் இதில் எது வேண்டுமானாலும் கார‌ண‌மாக‌லாம்.

பிறிதொரு நோக்கில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற‌டைய‌ வேண்டிய‌ மிக முக்கியமான ஒரு கோப்பு சென்ற‌டைய‌வில்லையாயின், மேலாள‌ர் க‌ண‌க்க‌ரையும், க‌ண‌க்க‌ர் ப‌ணி பைய‌னையும், ப‌ணி பைய‌ன் அலுவ‌ல‌க‌ விதிமுறைக‌ளையும் ம‌ற்றும் சில‌ர் வேறு சில‌ரையும் கை நீட்டுவ‌ர். எவரின் த‌வ‌றாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். கோப்பு சென்ற‌டைய‌ வேண்டிய‌ இட‌ம் செல்ல‌வில்லை.

சரி இங்கே காரணிகளை பட்டியலிட்டாற்று. அதனால் ஆட்டம் நிற்கவா போகின்றது. எந்த பிரச்சனைக்கும் தீர்வை தேட வேண்டும். பிரச்சனை வந்ததன் காரணம் தேடுவதால் ஒரு பலனும் இல்லை. காரணிகள்(குற்றம்) அறிவதால் பொம்மையின் ஆட்டம் நிற்க போவதில்லை.

மாற்றங்களை மறுதலித்தல்
--------------------------------------------------

ஒரு பெண் குழந்தையின் தாய் த‌ன் தோற்ற‌ம் கார‌ண‌மாக‌ அவள் க‌ண‌வ‌னுக்கு த‌ன்னை பிடிக்க‌வில்லை என்று தெரிந்து தாய் வீடு வ‌ந்தும் விவாக‌ர‌த்து பெற‌ த‌ய‌ங்குகின்றாள். மாற்று வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றாள். இதன் காரணம் சமூகத்தின் மேல் இருக்கும் பயமா, மனத்தின் தெளிவின்மையா அல்லது பெண் என்பதால் சார்புடைமை அதிகம் என்பதாலா?

க‌ணினி துறையில் ப‌ணி புரியும் மிக‌ க‌டுமையான‌ உழைப்பாளி ஒருவ‌ர், வேலைக்கு தகுந்த சன்மானமுமில்லாத‌ போதும், பணி எப்போது வேண்டுமானாலும் போய்விடுமோ என்ற பயமிருந்த‌ போதும் வேறு வேலைக்கு முயற்சிக்கவில்லை. இதற்கு காரணம் தன்னம்பிக்கை இன்மையா? வாய்ப்பு வசதிகள் பற்றிய கவலையா? இங்கே இருக்கும் அளவு நண்பர் கூட்டம் திரட்ட முடியுமா, என்ன தான் கஷ்டம் என்றாலும் பழகிய இடமாகிவிட்டது என்பதா?

பணி இடம் குடி இருப்பிருலிருந்து மிக தொலைவில் இருந்தும் ஒருத்தி வீடு மாற்றிக் கொள்ள யோசிக்கின்றாள். அங்கே இதை போன்ற வசதியா வீடு கிடைக்குமா? வேலையாட்கள் கிடைப்பார்களா? குழந்தைக்கு பள்ளி சரியாக அமையுமா? மருத்துவம் பிற வசதிகள் எல்லாம் இங்கே ஓரளவு கைப்பட்டு விட்டது அங்கு அப்படி வாய்க்குமா?

எல்லோரிடத்திலும் எத்தனை கேள்விகள்? எத்தனை தயக்கங்கள்? மாற்றங்களை முயற்சிக்கும் வரை தான் துயரமெல்லாம். மாற்றத்திலும் அதற்குண்டான நன்மைகள் விளையத் தான் செய்யும் என்பதை அனுபவம் கொண்டு தெளியவேண்டும். மாற்ற‌ங்க‌ளை ம‌றுக்கும் வ‌ரை பொம்மைக‌ளின்(பிர‌ச்ச‌னைக‌ள்) ஆட்ட‌ம் நிற்க‌வா போகின்ற‌து

மடமை போற்றுதல்
-----------------------------------

மாத‌வி எப்பேர்ப‌ட்ட‌ பெண். இவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள். கோவ‌ல‌ன் பல ஆண்டுகள் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள்.

சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் மாதவி கூறுவதாவது

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

கோவ‌லன் மாத‌வியோடு கொண்டிருந்த‌து வெறும் உட‌ல் இச்சை. மாத‌வியின் மேல் இருந்த‌ ஈர்ப்பு குறைந்த‌தும், மாத‌வி அந்நாட்டு ம‌ன்னனை புக‌ழ்ந்து பாடினாள் என்ற‌ சிறு காரணத்திற்காக த‌ன்னை விட்டக‌ன்ற‌ கோவலனை, தான் தன் மனை என்று போனவன் போனானடி என்று விடாமல் "நம்மை மறந்தாரை நாம் மறக்கலாமா?" என்று வினவும் மாதவிக்கு கோவலன் மேல் இருந்தது காதலா, காமமா, இதை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றா? இப்படிப்பட்ட மாதவிகளின் மடமை போற்றுத‌லால் கோவலன் போன்ற பொம்மைகள் இன்றும் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.


கோதை ஒரு அற்புத‌ பிற‌வி. அவ‌ள் தோன்றிய‌தே ஒரு துள‌சி செடி அருகில் தான். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளையும் அவர் மூலமாய் கேட்டு, அந்தக் கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. க‌ண்ண‌ன் மேல் அவ‌ளுக்கு எத்த‌னை பிரிய‌ம். திருமாலுக்கு சார்த்த‌ வேண்டிய‌ மாலையை தான் அணிந்து கொடுத்து "சூடிக் கொடுத்த‌ சுட‌ர்கொடி" பெய‌ர் பெற்று கோதை ஆண்டாள் ஆனாள்.

நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

திரும‌ண‌ வ‌ய‌தில் திருமாலை ம‌ண‌க்க‌ வேண்டும் என்று வ‌ட்ட‌மிட்டு பார்த்த‌ல், கூட‌ல் கூடிய‌தா என்று பார்த்த‌ல், ம‌ன்ம‌த‌னை வேண்டுத‌ல், பாவை நோன்பிருத்த‌ல்,க‌ன‌வு காணல் என்ற‌ ப‌ல‌ ம‌ட‌மைக‌ளை ஆண்டாள் போன்றினாலும் அவை எல்லாவ‌ற்றிர்க்கும் முத்தாய்ப்பாக‌ "என் மார்பகங்கள் திருமாலுக்கேய‌ன்றி மனிதர்களுக்கு அல்ல‌" என்று கூறும் ஆண்டாள் தன்னிலை மறந்தவளா? கடவுளை கண்டவளா? அல்லது தானே கடவுள் என்ற அக‌ங்காரம் பிடித்தவளா? காரணம் எதுவாயினும் ஆண்டாள் மடமை போற்றியதால் திருப்பாவை, திருமொழி என்ற பொம்மைகள் ஆடி எழுந்தன.

Tuesday, March 24, 2009

ஒல்லென‌ ஒலிக்கும் புன‌லென‌ புல‌ம்பும் தலைவியும்

ச‌ங்க‌ கால‌த்தில் பெண்க‌ள் ம‌டைமை போற்றிய‌த‌ற்க்கு ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. இங்கே நாம் பார்க்க‌ இருக்கும் ஐந்திணை ஐம்ப‌து பாட‌ல்க‌ளில் ம‌ருத‌த் திணை பாட‌ல்க‌ள் அனைத்திலும் த‌லைவ‌ன் த‌லைவிகிடையேயான‌ உய‌ர்ந்த‌ப‌ட்ச‌ ஊட‌லும், த‌லைவியின் வேத‌னையும் புல‌ப்ப‌டுகின்ற‌ன‌.

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! 24

கோலம் - அழகு
குருகு - நாரை
"பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி கூறினாள்.


இப்படி த‌லைவ‌னுக்கு தன் வெறுப்பிருக்குமோ என்ற‌ அய்ய‌த்துக்கும் அத‌ற்கு முன் பின்வ‌ரும் பாட‌ல்க‌ளில் ஆதார‌ம் இருக்கின்ற‌ன‌ த‌லைவ‌ன் ப‌ர‌த்தை வீட்டுக்கு செல்கின்றான் அவ‌னை த‌ட்டி கேட்க‌ கூடாதா என்று அவ‌ன் ந‌ண்ப‌ரான‌ பாண‌றிட‌ம் கேட்கின்றாள்.


பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு! 26

வதுவை - திருமணம்
"வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.


இந்த‌ நிலையில் வெளிப்ப‌டும் சிரிப்பு விர‌த்தியாலா அல்ல‌து அப்ப‌டியாவ‌து அந்த‌ திரும‌ண‌ம் நின்ற‌து என்ற‌ ச‌ந்தோச‌மா? இந்த‌ த‌லைவியின் நிலை எவ்வ‌ள‌வு வேத‌னை இல்லையா?
இப்ப‌டி இருந்தாலும் இந்த‌ த‌லைவியின் ம‌டைமையை பாருங்க‌ள்.

'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? 29

வியல் - அகன்ற
இழை - அணிகலன்
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல்(அருவி) சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.


:) என்னென்று சொல்வ‌து இந்த‌ த‌லைவியை. இது தான் காத‌ல் என்ப‌தா? இப்ப‌டிப்ப‌ட்ட‌ காத‌ல் அவ‌ளுக்கு தேவை தானா? ஒல்லென் ஒலிக்கும் புன‌ல் எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காட்சிப‌டுத்துத‌ல் இந்த‌ பாட‌லில் இருக்கின்ற‌து.

பாட‌ல்க‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் சென்னை லைப்ர‌ரியில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து.

Saturday, January 24, 2009

யூரோவே இல்லாமல் ஃப்ரான்க்போர்டில் ஒரு வலம்

சுவீடனில் இருந்து திரும்பி ஒரு மாதத்தில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுவதற்கு விசா கிடைத்தது. ஆனால் இந்த முறை கிடைத்தது ஜெர்மன் விசா. அதனால் ஒரு ஜெர்மனிய நகரத்தில் தரையிறங்கி பின் சுவீடன் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த காரணத்திற்காக ஃப்ரான்ங்போர்ட் வழியாக ஸ்டாக்ஹோம் செல்ல விமான சீட்டுகள் கொடுக்கப்பட்டன அலுவலகத்தில். அதுவும் ஃப்ரான்க்போர்டில் எட்டு மணி நேர இடைவெளி வேறு. அதனால் நானும் என்னுடன் வந்திருந்த நண்பரும் ஃப்ரான்ங்போர்ட் சுற்றி பார்க்க முடிவு செய்தோம். ஒரு நாள் முழுவதும் எந்த போக்குவரத்தில் வேண்டுமானாலும் செல்ல ஏதுவான பயணசீட்டு பதினாலே யூரோவிற்கு கிடைக்கின்றது ஃப்ரான்ங்போர்டில். அதில் அதிகபட்சம் ஐந்து நபர்கள் பயணிக்கலாம். கடனட்டையில் அந்த பயணசீட்டை வாங்கிக் கொண்டோம். விமானநிலைத்தில் இருந்து ஒரு நுழைவாயில் வழி வந்தால் மேட்ரோ ஏறும் வசதியுள்ளது ஜெர்மன் நாட்டு நகரில். ரயில் நிலையத்தில் சந்தித்த இந்திய நண்பர்களிடம் எங்கே செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு. ஃப்ரான்ங்போர்ட்டின் வரைபடத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினோம்.

விமான நிலையத்திலிருந்து சென்ரல்(சென்னை இல்லைங்க) நிலையல் அடைந்து அங்கிருந்து இன்னுமொரு மெட்ரோ ரயில் ஏறி டாம் ரூமர் என்ற நிலைத்தில் இறங்கி அங்கே ஒரு நதியும் நிறைய அருங்காட்சியகங்களும் இருப்பதாக அந்த இந்திய நண்பர்கள் சொன்னதால் அதை பார்க்க கிளம்பினோம். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தால், மெயின் நதி(பேரே மெயின் நதி தானுங்க) வருகின்றது. அதன் அக்கரையில் நிறைய அருட்காட்சியங்கள் இருந்தன. அதை பற்றிய விபரங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மிக புராதனமான அருங்காட்சியகத்தை தேர்தெடுத்து சென்றோம். நுழைவு கட்டணமாக பத்து யூரோ கேட்டார்கள். எங்களிடம் இருந்தது அமெரிக்க டாலர்களும் கடனட்டையும் தான். அங்கே கடனட்டை ஏற்று கொள்ளபடாத காரணத்தாலும் டாலர்களை மாற்ற வசதி அந்த இடத்தில் இல்லாததாலும் மேலே நடந்தோம். தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் அதே நிலையே.

ஃப்ரான்ங்போர்டில் என்னை மிக கவர்ந்தது அந்த நதிகரையோரமே. வசந்த கால மகழ்ச்சியில் மலர்ந்து பூத்திருந்தது அந்த நதிகரை. சற்று தொலைவில் இருந்து பார்த்தால் கிடைத்த இடமெங்கும் தன்னை நிறைத்து பூத்திருந்த மரங்கள் பார்க்க அதிசியமாக இருந்தன. இலைகளே இல்லாமல் வெறும் பூக்கள் மட்டுமிருந்தது அந்த மரங்களில். மஞ்சள்,உதா, இளம்சிவம்பென்று இலைகளற்ற அந்த மரங்கள் பார்க்க கொள்ளை அழகாக இருந்தது. அந்த மரங்களின் மிக அருகில் சென்று தேடினால் மட்டுமே சில இலைகளை காணமுடிந்தது. எனக்கு பிடித்த மஞ்சள் நிற பூ(ஏன் மஞ்சள் நிற பூக்கள் பிடிக்கும் என்று பின்னொரு பதிவில் :) ) ஒன்று இங்கே இரண்டு அடுக்காக இருந்தது.








லில்லி பூவிற்கும் அல்லி பூவிற்கும் இடைப்பட்ட வடிவாய் சந்தன கலந்த வெள்ளை நிறத்தில் அழகாய் பூத்திருந்தது மற்றொரு மரம். நம் ஊர் வெள்ளை செவ்வந்தி பூக்களுமிருந்தன ஆங்காங்கே. நுனி முழுதும் இளம் சிவப்பை பூசிய, செவ்வந்தி பூ போன்ற ஒரு மலரும் படர்ந்து மலர்ந்திருந்தது தரைகளெங்கும். பச்சை நிற மலர்கள் பார்க்கும் புண்ணியம் வாய்த்தது மெயின் நதிகரையில். இளம் பச்சை நிறத்தில் சிறு சிறு பூக்களை பூத்திருந்தது அந்த அதிசய மரம். பார்த்ததில் மனம் கொள்ளை கொண்ட நாயகி இளம்சிவப்பாய் பூத்திருந்த அந்த மரம் தான். மிக அழகாய் இருந்தது. நிறைய வண்டுகளை ஈர்த்து வைத்திருந்த அந்த மலர்களை கண்ட போது "பொறிவண்டு கண்படுப்ப" என்று திருப்பாவையில் கோதை பறைந்ததே நினைவில் ஆடியது.








இப்படியாக பலவித நிற மரங்களை, விதவிதமான மனிதர்களை, குழந்தைகளை மகழ்வித்தபடி நகிழ்ந்து கொண்டிருந்த அந்த நதிகரையில் ஓடும் தண்ணீர்க்கு மிக அருகில் அமர்ந்து, அதில் கால் நனைத்தபடி, அங்கே படக்கோட்டி தங்கள் நேரம் கழித்துக்கொண்டிருந்த ஆண்கள் பெண்களை பார்த்தபடி இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருந்த உணவுப்பொருள்களை உண்டுவிட்டு, நதி நிறைய தண்ணீர் இருந்தும், கையில் ஒரு யூரோ இல்லாத காரணத்தால் குடுக்க ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியாமல் தாகத்தோடு நடந்து, மீண்டும் ரயில் நிலையம் ஏறி, ஜூ என்ற நிலையத்தை அடைந்தோம்.

அங்கே இருக்கும் மிருககாட்சி சாலை இருப்பதால் அந்த ரயில் நிலையத்திற்கு பேரே ஜூ. வனவிலங்குகள் இருக்குமிடம் அதனால் பார்க்க வனம் போல் இருக்கும் என்று நினைத்து சென்றோம். ஆனால் வெளியே இருந்து பார்க்க ஒரு மாளிகை போல இருந்தது. உள்ளே ஒரு வேளை வனம் போல இருக்குமோ என்னவோ. இங்கே மட்டுமல்ல இன்னும் ஒரு இடத்தில் ஒரு பெருமை வாய்ந்த தோட்டம் இருப்பதாக சொன்னார்கள் அங்கேயும் நுழைவு கட்டணம் இருந்ததால் உள்ளே சென்று பார்க்கவில்லை. மிருகக்காட்சி சாலையின் வெளியே இருந்த நீருற்றை மேலும் பலவித மலர்கள் குழந்தைகளை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஃப்ரான்ங்போர்டின் சிறந்த கட்டங்கள் இருக்குமிடம் சென்றடைந்தோம்.







அங்கே நிறைய வர்த்தக மையங்கள் இருந்தன. யன்னல் வழி வாங்கல்(window shopping) செய்துவிட்டு அங்கிருந்த ஒரு சில கட்டிடங்களை கண்டு கழித்துவிட்டு, ஐந்து மணி நேரம் கழிந்திருந்தாலும் அங்கிருந்து விமான நிலையம் அடைய இன்னும் மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பாதாலும் ரயில் ஏறி சென்ரல் வந்து ரயில் மாறி விமான நிலையம் அடைந்து, அதே சுவீடன், அதே விடுதி, அதே நண்பர்கள் உண்டு உறங்கி மறுநாள் அலுவலகம் அடைந்தால் "Welcome back to sweden" என்ற இனிய மொழி கேட்டு அலுவல் தொடங்கி தொலைந்து போனேன்.