Thursday, December 24, 2009

பரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி

வெள்ளி கிழமை காலையிலேயே எதிர் அறை தமிழ் நண்பர் இன்று மாலை நாங்கள் வெளியே சொல்லும் திட்டத்தில் இருக்கின்றோம் நீங்கள் வர இயலுமா என்றார். சரி என்று சொல்லி வைத்திருந்தேன். அலுவலக எண்ணை வாங்கி கொண்டு அவரும் பக்கத்து அறை தோழி சென்று விட்டனர். வேலையில் மூழ்கியிருந்த நேரம் மாலை 5 மணிக்கு நண்பரின் அழைப்பு வந்தது. நாங்க இங்கே இருந்து கிளம்ப போறோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஹோட்டலில் இருப்போம். சித்தி விநாயகர் கோவில் செல்வதாக திட்டம் நீங்கள் சரியாக 6 மணிக்கு அறைக்கு வந்தால் எல்லோரும் போகலாம் என்றார். அவசர அவசரமாக மிச்சமிருந்த வேலையை முடித்துவிட்டு வேகமாக ஓடி வந்து அவர்களோடு சென்றேன். வழக்கம் போல் மெட்ரோ டி-சென்ரம் சென்று அங்கிருந்து இன்னும் ஒரு மெட்ரோ பிடித்து ஃபர்ஸ்ரா(Farstra) என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து ஒரு 5 நிமிடம் நடந்து சில படிக்கட்டுகள் ஏறினால் அருள் மிகு சுவீடன் சிறீ(ஸ்ரீ) சித்தி வினாயகர் ஆலயம் என்ற அன்பான பெயர் பலகை வரவேற்கும்.

அருள் மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் என்று தமிழ் எழுத்துகளை சுவீடனின் கண்டால் எப்படி இருக்கும். பரவசம் பொங்காது. அப்படிப்பட்ட பரவசத்தில் தான் இந்த
பதிவு. ஆம் சுவீடனில் சித்தி வினாயகர் ஆலயம் இருக்கின்றது. இலங்கை தமிழர்களால் நடத்த பெறும் இந்த ஆலயத்தை பற்றி என் பயண கட்டுரையில் மட்டும் அடக்கி விட முடியாத ஆவலால் தனி பதிவு. விநாயகர் தாள் சரணம்.

நாங்கள் உள்ளே நுழைந்த போது ஒரு 30 முதல் 35 பேருக்கு குறையாமல் கோவிலில் குழுமி இருந்தனர். நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை என்று தேன் மதுர குரலில் ஒரு அம்மையார் முருகன் மேல் பாடிக் கொண்டு இருந்தார். தொடர்ந்து இன்னும் ஒருவர் பிள்ளையார் கீத்தனம் கீச் குரலில் பாடி முடிக்க ஆரத்தி நடந்தது திவ்யமாக.

ஒரு சாம்பினாரி தூபக் கோல் போன்ற ஒன்றில் மூன்று வெற்றிலைக்கு நடுவில் ஒரு உடைத்த தேங்காய் மூடியும் அதன் மேல் ஒரு ஆரஞ்சு பழமும் வைத்திருந்தது பார்க்க மிக
நேர்த்தியாக அழகாக இருந்தது. சாப்பாடும் சாப்பரும் பரிமாறப்பட்ட இலையும், ஒரு தட்டில் நிறைய மோதங்களும் இருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பார்க்க
அருமையாக இருந்தார் வசந்த மண்டப்பத்தில்.

கோவில் மூலஸ்தானத்தில் பிள்ளையாரும், கொடி மரத்தை ஒட்டிய தூணோடு தும்ப விநாயகரும் நம்மை ஒரு சேர வரவேற்க்கின்றனர். கொடுமரத்திற்கு முன் பலிபீடம்முன் மூங்சூரும் கூட இருப்பது நம் ஊரில் இருப்பது போன்றே உணர்வை தருகின்றது. பிள்ளையார் கோவில் விட்டு வெளியே பார்வையை ஓட்டினால் பிரதானத்தின் வலப்பக்கம் ஒரு சிறு மண்டப்பத்தில் சிவனும் இடப்பக்கம் அம்பாளும், அப்படியே கோவிலை சுற்றினால் வலதுகோடியில் மஹாலஷ்மியும், இடது கோடியில் வள்ளி,தெய்வானை சமேத முருகனும், சற்றே முன்புறமாக நவகிரங்களும் வசந்தமண்டபத்தை தாண்டி பைரவரும் வீற்று இருக்கின்றனர்.

ஆரத்தி முடிந்து அனைவர்க்கு அளிக்கப்பட்ட விபூதியில் அப்படி ஒரு ஜவ்வாது வாசனை, வீடு வந்து சேரும் வரை கூட அதன் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கின்றது. பின் பாலும்,
பூக்களும்,சந்தனம் குங்குமமும் வழங்கப்பட்டன. கொஞ்சம்(ஒரு கரண்டி) எலிமிச்சை சாதம் தரப்பட்டது. சரி செல்லலாம் என்று எத்தனித்தால் பெரிய பாத்திரத்தில் சாம்பார் சாதம் சுடச்சுட கொண்டு வைத்தார்கள் அனைவர்க்கும் ஒரு தட்டில் சாம்பார் சாதமும், கொஞ்சம் பருப்பும், தயிரும் கூடவே அரை மோதகமும்(மிக அருமையாக இருந்தது உண்டு முடித்து சுவையாக இருக்கின்றது என்று மீண்டும் கேட்க சென்றேன் அதற்குள் தீர்ந்து விட்டது) கொடுத்தார்கள். இரவு உணவிற்கு வேறு எதுவும் தேவையில்லாத அளவிருந்தது அங்கே அருந்திய பிரசாதம்.

வயிரும், மனமும் நிறைந்ததொரு வார இறுதியின் தொடக்கத்தை என்னால் மறக்கவே முடியாது. சித்தியோடு புத்தியும் தரும் சீர் மிகு விநாயகர் அருள் பெருகட்டும் எங்கும்.

சுவிட் சுவீடன் - பகுதி 2

சுவீட் சுவீடன் மெட்ரோவும்,செல்ப் சர்வீஸ் சூப்பர் மார்கெட்களும் இந்தியாவிலேயே பார்க்க கிடைப்பதால் இது ஒன்றும் புதிய உணர்வை கொடுக்கவில்லை.(ஆனால் சில்லறை பெருவதற்கும் மீதி சில்லறை தருவதற்கும் மெசின் இருக்கு புதுமையா) ஆனாலும் பனி சூழ்ந்த சுவீடன், பசும் புல்வெளி ஆங்காங்க வெண்பனி இயற்கை போட்ட ரங்கோலி, சில சமயம் சோப்பு நுரை பரப்பியது போல, சில சமயம் இட்லி மாவை கொட்டி பரப்பியதை போல, கேக் மேல் பரப்பிய ஐசிங் போல இப்படி பலவிதங்களில் அழகாக இருக்கின்றது. பனி பொலியும் போது பஞ்சு மிட்டாய் வெள்ளை கலரில் பறப்பது போல ரசிக்கும் படி இருக்கின்றது அறைக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருக்கும் வரை. வெளியே நடக்கும் போது என்னதான் கனமான ஜாக்கெட் போட்டாலும்,க்ளவுஸ் போட்டாலும், சாக்ஸ்,சூ போட்டாலும் கையும் காலும் விரைத்து போவதும், தரையில் நடப்பதே பனிக்கட்டி மேல் நடப்பது போல வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது. சில நாட்கள் காலையில் அலுவலகம் வரும் போது நம் ஊர் போல இருக்கும் ரோடும், தரையும். ஆனால் மாலை திரும்பும் முன் பனி பொழிந்து எங்கும் வெள்ளை கம்பளத்தை விரித்தது(தூய வெள்ளை நிறம் பார்க்க கொள்ளை அழகு) போல ஆகிவிடும். மரம்,செடிகளில் ஆங்காங்கே தங்கியபடி இருக்கும் பனித்துகள் பார்க்க கொள்ளை அழகு. சில சமயம் மரங்கள் பூத்த வெள்ளை பூப்போல இருக்கும் அவை.

எண்களால் ஆனது சுவிடன் உலகம். ஹோட்டல் நுழைவாயிலில் ஒரு சந்கேத எண் அடித்தால் தான் கதவு திறக்க கதவோடு இணைக்கப்பட்ட பாதுகாப்பு கருவி அனுமதி தருகின்றது. அதன் பின் அறைகள் இருக்கும் வரண்டாவில் ஒரு 4 இலக்கத்தை அடிக்க வேண்டி இருக்கின்றது அதை தாண்டி கதவை திறக்க ஒரு எண், பூட்டிவிட்டு வெளியே வர இன்னொரு எண்(சாவியோடு உள்ள பூட்டும் உண்டு இந்தியர்களுக்காகவே இந்த ஏற்பாடு என்றாள் ஹோட்டலை நிர்வாகிக்கும் பெண். என்ன தான் இலக்க எண்கள் கொடுத்து படு பயங்கர பாதுக்காப்பென்றாலும் இந்தியர்கள் மட்டும் பூட்டு சாவி கேட்கின்றார்களாம், இருக்காதா பின்னே பூட்டை பூட்டி அதை ஒரு முறை தொங்கி திறக்கவில்லை என்று தெரிந்ததும் தானே மனதுக்கு நிம்மதி பிறக்கின்றது நமக்கு.) சரி இப்படி தங்கும் இடத்தில் தான் இத்தனை இலக்க எண்களை மனனம் செய்ய வேண்டுமென்றால், பணி இடமோ அதற்கு மேல், நுழைவாயில், வாரண்டா மட்டும் இல்லாது மின்தூக்கியில் ஏற ஒரு எண், இறங்க ஒரு எண்(அடகொன்னியா உங்க பாதுகாப்பு உணர்ச்சிக்கு அளவே இல்லையா?) ஒருவேளை இறங்கும் எண்ணை தப்பாக அழுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்து E மாடிக்கு(அதானுங்க நுழைவாயில், entrance floor) வரும் முன் அங்கே இருக்கும் காவலாளர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய் விடுவார்களாம்.(அவ்வளவு fast)

நான் பணி நிமித்தம் சென்ற அலுவலக்கதில் ஒரு மாலை சூடான விவாதத்தின் இடையில் உடன் இருந்த சூவிடன் அலுவலக பணியாளர் குடிக்க டீ வேண்டுமா என்றதும் சரி என்றேன். அவர் யாரிடமோ சொல்ல ஒரு மனிதர் கரும்காபி எடுத்து வந்தார், அவர் பார்க்க ஆபிஸ் பாய் மாதிரி இல்லை. பால் வேண்டும்,சர்க்கரை வேண்டும் என்று நான் படுத்தியதும் அந்த மனிதர் வெளியே சென்று வாங்கி வந்தார். அலுவத்தின் போன் ஆப்ரட்டேர், அட்மின்ஸ்ட்ரெசன் சம்மந்தப்பட்ட வேலை அனைத்து அவர் தான் பார்ப்பராம். அலுவலகத்தில் எப்போதும் பழவகைகள் இருக்கும் அதை வாங்கி வருபவரும் அவர் தானாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஆளுக்கு Rs.10000 என்று எங்கள் அலுவலத்தில் இருந்து பெறும் கம்பெனியின் முதலாளி அவர் என்றால் கொஞ்சம் வியப்பாக இல்லாமல் என்ன செய்யும்?

சுவிடனில் வந்து கொஞ்சம் சுவிடிஷ்(அது என்ன டிஷ் என்பவர்க்கு அது தான் சுவீடனின் மொழி) புரியும் வரை கொஞ்சம் கடினம் தான். சூப்பர் மார்கெட் சென்று ஒரு சோப்பு பவுடர் வாங்க வேண்டுமானாலும் அங்கே இருப்பவரிடம் இது சோப்பு பவுடர் தானே என்று கேட்க வேண்டி இருக்கின்றது. பால்,தயிர் என்று எதுவுமே ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை. எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் சுவிடனில் சுவிடிஷ் பேச தயங்குவதே இல்லை இந்த மக்கள். என்னோடு பணி புரியும் சக பணியாளி, தான் செய்த மென்பொருளை என்னிடம் காட்டும் போது அதில் எழுதப்பட்டுருந்த விளக்கங்கள்(comments) சுவிடிஷில் இருந்தது(விட்டா இவிங்க மென்பொருளை கூட சுவிடிஷில் எழுதி விடுவார்கள் போலும்) அவ்வளவு மொழிப்பற்று.

வார இறுதியில் சுவிடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சென்றோம் கிருஸ்துமஸ் இப்போது தான் முடிந்து இருக்கின்றது அதனால் எல்லா இடங்களிலும் பல விதமான வண்ண விளக்குகள் இருந்தன. ஸ்டாக்ஹோமில் பெரிய மார்கெட் இருக்கின்றது. அங்கே எல்லாம் கிடைக்குமாம். ஆனாலும் நமது திநகர் மார்கெட் போல் எல்லாம் இல்லை. சும்மா சுவீடன் வந்ததற்கு சென்று பார்க்கலாம். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒன்றொன்றும் ஒவ்வொரு அலங்காரத்தில்(interior decoration) ரசிக்கும் படியாக இருக்கின்றது. இங்கே இருக்கும் குழுந்தைகள் பெரும்பாலும் அழுவதோ, அதிகம் அங்கிங்கும் ஓடுவதோ கிடையாது, கன்ன சிவப்போடு அமைதியான பொம்மைகள் போலிருக்கின்றன.சுவிடன் சாப்பாட்டு விடுதிகளில் வெஜிடேரியன் என்றால் நான்கைந்து உருளை கிழங்கை அவித்தும் சில இழை தழைகளை அவிக்காமலும் தருகின்றார்கள்.

சுவீட் சுவீடன் - பகுதி 1

அலுவலகத்தில் நான் இணைந்த போதே கம்பெனியின் முதன்மை தொழிற்நுட்ப அதிகாரி(CTO) பணி நிமித்தமாக அடிக்கடி சுவீடன் செல்ல வேண்டி இருக்கும் உங்களுக்கு ஆட்சேணை எதுவும் இருக்கின்றதா என்று கேட்டு இருந்தார். நானும் இல்லை எனச் சொல்லி வைத்திருந்தேன். உடனே விசா பெற ஏற்பாடு செய்தார்கள். விசா வந்தது. கிட்டதட்ட விசா வந்து இரண்டு மாதம் பயணம் ஒன்றும் திட்டமிடப்படவில்லை. நானும் மறந்து போய் இருந்தேன். திடீரென ஒரு நாள் மடல் வந்தது: அடுத்த வாரம் உங்கள் பயணம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தயாராகுங்கள் என்று. மடமடவென எல்லாப் பொருட்களையும் வாங்கி கொண்டே இருந்தேன்... கிளம்பும் நாள் வந்துவிட்டது.

அங்கே குளிர் -15 டிக்கிரி என்றதும் அதற்காக வாங்கிய ஜாக்கெட் போட்டால் அத்தனை கனமாக இருந்தது. எனக்கு அப்போதிருந்தே டென்ஷன் ஆரம்பித்து விட்டது. இத்தனை கனமான ஆடையை அணிந்து ஒரு மாத கால கடும் குளிர் பிரதேசத்தில் எப்படி காலம் கடத்த போகிறேன்று.

பயணநாளில் வீட்டிலிருந்து விமானம் வரை எந்த தடங்கலும் இன்றி (என்னுடன் இன்னும் இருவர் வந்ததால் எந்த கவலையும் எனக்கிருக்கவில்லை) 7 மணி நேரம் பயணத்திற்குப் பின் ஹெல்சிங்கி (ஃபின்லாண்ட்) வந்தடைந்தோம். விமானம் ஆப்கானிஸ்தானை கடக்கும் போது, ஒரு மலைத் தொடரில் பனி மூடி(வெள்ளை சிமெண்ட் கொட்டும் போது ஒரு வித புகையோடு கொட்டும் இடத்தை மூடுமே அது போல) இருந்ததது. பார்க்க மிக அழகாக இருந்தது. ஆனால் அது இமய மலையா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை. (அது இந்துகுஷ் மலையாம்)

ஹெல்சிங்கியில் வந்து பார்த்ததும் தான் தெரிந்தது வந்த மூவரில் இருவருக்கு முதல் விமானத்திலும், எனக்கு மட்டும் அடுத்த(5 மணி நேரம் கழித்து) விமானத்திலும் இடம் ஒதுக்கபட்டிருந்தது. கேட்டால் முதல் விமானம் நிறைந்து விட்டது என்றும் என் பயணத்தை மாற்ற முடியாதென்றும், அந்த விமானத்தில் யாராவது ஒருவராவது செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் அனைவரின் சாமான்களும் அந்த விமானத்தில் செல்லவதாகவும் தெரிந்ததால் என்னை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். அங்கே போய் அந்த விமான நிலையத்தில் காத்திருக்கின்றோம் என்று சொல்லிக் கிளம்பினார்கள்.

நான் தனியாக 5 மணி நேரம் வேறு கடத்த வேண்டும்; அத்துடன் அங்கே போய் எப்படி அவர்களை கண்டு பிடிப்பது, எங்கே இருப்பார்கள் என்று பல கவலை வாட்ட, கூடவே கனமான ஜாக்கெட் வேற இன்னும் படுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நல்லவேளை ஹெல்சிங்கி விமான நிலையத்தில் ஒய்-பைய் இருந்ததால் என் மடிகணினி மூலம் இணையத்தில் ஒரு வலம் வந்தேன். மாதவிபந்தல், தமிழ் உலா பாவை பதிவுகளை பார்த்தேன். நர்சிம், பரிசல், நுனிப்புல், அனுஜன்யா (வழக்கம் போல் பழைய பதிவு), மொழி விளையாட்டு என்று வழக்கமாக வலம் வரும் அனைத்து வலைப்பூக்களைப் பார்த்தும் ஒரு மணி நேரம் தான் கழிந்திருந்தது. மேலும் வலைமேய முடியவில்லை. பயண அலுப்பு வேறு. அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்க முயற்சித்தேன் அதுவும் முடியவில்லை. அந்த 5 மணி நேரம் கழிப்பது பெரும் பாடாயிற்று.

ஒரு வழியாக அடுத்த விமானத்தை பிடித்து, ஸ்டாக்ஹம் விமான நிலையத்தை அடைந்தேன். (விமானத்தில் பக்கத்து இருக்கைகாரர் பொதுவாக பேச ஆரம்பித்து தொழில்நுட்பம் வரை பேசினார். என்னால் முடியவில்லை ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசினேன் ஏதோ.) அங்கே சொன்னபடி என்னோடு வேலைபார்க்கும் உடன் வந்த நண்பர்கள் காத்திருந்தார்கள். அங்கிருந்து அனைவரும் கிளம்பி என்னை அக்லாவில் எனக்காக ஒதுக்கப்பட்ட கெஸ்ட் ஹவுசில் இறக்கிவிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடம்(சீஸ்தா) சென்றார்கள்.

சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5

அடுத்த‌ வார‌ம் என்னுடைய‌ க‌டைசி வார‌ இறுதி அத‌னால் என் விருப்ப‌ப்ப‌டி மலை ப‌னிச‌ர‌க்கு போக‌ எல்லோரும் முடிவெடுத்தார்க‌ள். காலையில் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன். என் ப‌ய‌ண‌ச் சீட்டை ஒரு ச‌ட்டையுள் வைத்து சேர்த்து துவைத்து விட்டு இருந்தேன். அதில் நான்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ தேவையான‌ அள‌வு ப‌ய‌ண‌ சீட்டை அதில் இருந்த‌து. எப்ப‌டியோ அத‌ன் துண்டுக‌ளை சேக‌ரித்து ஏதோ ஒரு ந‌ம்பிக்கையோடு வெளியே கிள‌ம்பியாற்று. மெட்ரோவில் ஓத்துக் கொண்டார்க‌ள் ஆனால் பேருந்தில் அதை குப்பைத் தொட்டியில் போட‌ போனார் அத‌ன் ஓட்டுனர். கெஞ்சி குத்தாடி அவ‌ரிட‌ம் இருந்த‌ பய‌ண‌ச்சீட்டு துண்டுக‌ளை வாங்கிக் கொண்டு ஒரு ந‌ண்ப‌ரும் நானும் அடுத்த‌ பேருந்தில் வ‌ருவதாக‌ சொல்லிவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அனுப்பிவிட்டு, சேர‌ வேண்டிய இட‌ம் தெரியும் என்ப‌தால் அதே இட‌ம் போகும் வேறு பேருந்துக்கு சென்றோம். அங்கே ஒரு ஆத்தா அங்காள ப‌ர‌மேஸ்வ‌ரி என் ப‌ய‌ண‌ச்சீட்டை ஒரு புன்ன‌கையோடு ஏற்று கொண்டு நாக்கா ஸ்ர‌ண்டு அழைத்துச் சென்றாள்.

ஆனால் இற‌ங்கிய‌ உட‌னேயே தெரிந்து விட்ட‌து அந்த‌ இட‌ம் இத‌ற்கு முன் வ‌ந்த‌ இட‌மில்லை. கூட‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர் சுவீட‌னுக்கு புதிது. என்னிட‌ம் கைபேசி இல்லை. உட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர் தான் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் பேசினார். அவ‌ர்க‌ள் சொன்ன‌தாக‌ சொல்லி என்னை நீண்ட‌ தூர‌ம் அழைத்து சென்றார் அவ‌ர் ந‌ம்பிக்கையாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருந்தார். ச‌ரி அவ‌ரிட‌ம் அவ‌ர்க‌ள் ச‌ரியாக‌ சொல்லி இருப்பார்க‌ள் என்று நினைத்தேன். ஆனால் நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்த‌ பின் தான் தெரிந்த‌து ஒரு வேளை த‌வ‌றான‌ இட‌த்திற்கு வ‌ந்து விட்டோமோ என்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாகிவிட்ட‌து. ஒரு குழுவாக‌ வ‌ந்தோம் ந‌ம்மை காணாம‌ல் அவ‌ர்க‌ள் த‌வித்து போவார்க‌ள். அவ‌ர்க‌ள் நேர‌மும் ந‌ம்மால் விர‌ய‌மாகும் என்று நினைவே என்னை வாட்டிய‌து.

அந்த‌ இட‌ம் மிக‌ அழ‌காக‌ இருந்த‌து. ஒரு ஏரி இருந்த‌து. அதில் நீருற்று இருந்த‌து. அழ‌கான‌ சிலைக‌ள் இருந்த‌ன‌. ப‌னி போர்த்த‌ சிறு குன்றுக‌ள் என்று எல்லா இட‌மும் ந‌ன்றாக‌ இருந்த‌து. ஆனால் நான் தான் க‌வ‌லையில் எதையும் ர‌சிக்க‌வில்லை. உட‌னிருந்த‌ நண்ப‌ர் ஏன் ப‌ய‌ம் நானிருக்கேனில்லை என்றார். என‌க்கு பய‌மில்லை ஆனாலும் இப்ப‌டி ஆகிவிட்ட‌தே ஒரு ப‌ய‌ண‌ச்சீட்டு எடுத்து இருக்க‌லாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் பேருந்திலிருந்து இற‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து அங்கே ஒரு க‌டைகாரிட‌ம் விசாரித்தால் போக‌ வேண்டிய‌து நாக்கா ஃபோர‌ம் என்று தெரிந்த‌து. ஒரு ப‌ய‌ண‌சீட்டு த‌ரும் இய‌ந்திர‌த்தில் ஒரு 30 கோனாரை போட்டு ஒரு பய‌ண‌ச்சீட்டை எடுத்து ஒரு ம‌ணி க‌ழித்து ஒரு பேருந்தில் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்குமிட‌ம் சேர்ந்தோம். மீண்டும் ப‌னிம‌லை ச‌றுக்காம‌ல் கிள‌ம்பினோம் அன்றும்.

சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4

ம‌றுநாள் சென்னை ந‌ண்ப‌ர் கிள‌ம்புவ‌தாக‌ இருந்த‌து. அனைவ‌ரும் அவ‌ர் அறையில் கூடினோம் ஒன்றாக‌ உண‌வ‌ருந்தி, உங்க‌ள் இந்தியா அலைபேசி எண் என்ன‌? ம‌ட‌ல் முக‌வ‌ரி என்று வின‌வ‌ல்க‌ள், இனிய‌ ப‌ய‌ண‌ வாழ்த்துக‌ள் இத்தியாதி இத்தியாசி எல்லா ச‌ம்பாஷ‌ணையும் ந‌ட‌ந்தேறிய‌து. அவ‌ரை பிரிந்த‌து மிக‌ வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. நாங்க‌ள் ஐவ‌ர் நால்வ‌ரானோம். அவ‌ர் அறையை க‌ட‌க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வித்தியாச‌மான‌ உண‌ர்வு.

அத‌ன் அடுத்த‌ வார‌ இறுதிக்குள் எங்க‌ள் குழுவில் மேலும் நால்வ‌ர் வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அதில் மூவ‌ர் த‌மிழ‌ர். என் உல‌க‌ம் மாறிய‌து. த‌மிழ் பேச்சு, பாட்டு என்று சுவீட‌னுள் ஒரு புது உல‌க‌த்தில் இருந்தேன். கிட்ட‌த்த‌ட்ட‌ இந்தியாவை விட்டு வெகு தூர‌த்தில் இருக்கின்றோம் என்ற‌ உண‌ர்வே இல்லை என‌க்கு. நால்வ‌ர் எண்வ‌ரானோம். வாழ்க்கையின் மினி த‌த்துவ‌த்தை உண‌ர்ந்தேன் ஒருவ‌ர் போவார் இன்னும் ப‌ல‌ர் வ‌ருவார் இது தானே வாழ்க்கை.

அந்த‌ வார‌ இறுதியில் ப‌னி பொலிவு மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌து. கணுக்கால் வ‌ரை கால் புதையும் வ‌ரை ப‌னியின் அட‌ர்த்தி இருந்த‌து. மிக‌ வித்தியாச‌மான‌ சாலையில் கூட‌ ப‌னி மூடி இருந்த‌து. தொட‌ர்ந்து ப‌னி பொழிந்து கொண்டு இருந்த‌து. வெளியில் கிள‌ம்பினோம். ப‌னித்துளிக‌ள் த‌லையில் வ‌ந்து த‌ங்க‌ த‌ங்க‌ அதை வில‌க்கிய‌வாறு ந‌ட‌ந்தோம். முக‌த்தில் வ‌ந்து போதும் மென்மையான‌ ப‌னி ர‌ம்ய‌மாக‌ இருந்த‌து. ம‌ழை போலில்லை ப‌னிப் பொலிவு. ஆடை ந‌னையும் என்ற‌ அய்ய‌மில்லை. ப‌னியில் ந‌னைந்தாலும் குளிர்வ‌தில்லை. அது ஒரு ஆன‌ந்த‌ நிலை. வெளியே கிள‌ம்பி வ‌ந்த‌தும் எங்க‌ள் விடுதிக்கு முன் இருக்கும் மேட்டில் வழ‌க்க‌ம் போல் சிறுவ‌ர் சிறுமிய‌ர் ச‌ர‌க்கி விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு ப‌ட‌கை நானும் வாங்கி ச‌ர‌க்கினேன். அங்கே ஒரு ப‌னி பொம்மை செய்து வைத்திருந்தார்க‌ள். ந‌ம் ஊர் சோலைக்கொலை பொம்மை போல‌. அழ‌க்காக‌ இருந்த‌து அந்த‌ பொம்மை.

புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை வெளியே அழைத்து செல்ல‌ வேண்டும் என்று நினைத்து டி‍சென்ர‌ல் சென்று ப‌னிச‌ர‌க்கு இட‌ம் செல்ல‌ முடிவாயிற்று. புதிய‌வ‌ர் யாரும் ப‌ய‌மின்றி உட‌னே ச‌ரி என்று சொன்ன‌து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நானும் ச‌ர‌க்கு கால‌ணி அணிய‌ வேண்டியாற்று, இந்த‌ முறை போன‌ முறை போல‌ அல்லாது கொஞ்ச‌ம் எளிதாக‌ இருந்த‌து. ஆனால் ப‌னி பொலிவின் கார‌ண‌மாக‌ பாதையே கூட‌ ச‌ருக்க‌க்கிய ப‌டி இருந்த‌து. க‌ள‌த்தில் இருங்க‌வே ஒரு ம‌ணி நேர‌ம் ஆகிய‌து.

நான்கு முறையாவ‌து சுற்றி வ‌ர‌ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மூன்ற‌ரை சுற்று தான் சுற்ற‌ முடிந்த‌து. அத‌ற்க்குள் த‌ய‌வு செய்து உங்க‌ள் கால‌ணிக‌ளை திருப்பி த‌ர‌வும் என்று சுவிடிஷில் அறிவிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். அதுவ‌ரை ஒழுங்காக‌ ந‌ட‌ந்த‌ நான் ச‌ற்று வேக‌மாக‌ ந‌ட‌க்க‌ முய‌ன்று, முடிக்கும் நேர‌த்தில் விழுந்தேன். விழுத்தால் தான் எழுவ‌து சிர‌மாயிற்றே. திரும்பி பார்த்தால் எங்க‌ள் குழுவில் ஒரு ந‌ண்ப‌ர் ஓடி வ‌ந்து கொண்டு இருந்தார் என‌க்கு கைக்கொடுக்க‌, நெகிழ்த்தேன். ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளும் வ‌ந்து என்னை வேக‌மாக‌ இழுத்து செல்வ‌தாக‌ விளையாட்டிக்கு இழுத்து விழ‌ வைத்தார்க‌ள் மீண்டும். :(

சுவீட் சுவீடன் - பகுதி 3

அடுத்த இரண்டு வாரங்களும் அலுவலகம் அறை மைக்ரோவேவ்(அடுப்படி) வேலை வேலை மற்றும் வேலை என்றவாறு கழிந்தது. ஒவ்வொரு வார இறுதியிலும் அலுவலக நண்பர்களை எங்காவது செல்லலாமா என்று கேட்பேன் அவர்களும் சொல்கின்றோம் என்று சொல்லி ஒன்றும் சொல்லாமல் விட சமையல் தூக்கம் இணையம் வேறு வழியே இல்லாமல் அலுவலையாவது முடிப்போம் என்று கழிந்தது. ஆனால் வித்தியாசமாக நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வார இறுதியில், வெள்ளி இரவில் விடுதி வரண்டாவில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி புரிய வந்திருந்த நான் தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்த ஒரு குழுவை(group) சந்தித்தேன். இந்த குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் வேறு. நாளை நாங்கள் வெளியே செல்கின்றோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களோடு வரலாம் என்றார் சென்னையை சேர்ந்த அந்த நண்பர்.

மறுநாள் நானும் தயாராகி வெளியே செல்ல கிளம்பினோம். அந்த குழுவில் ஒரு நண்பர் பனி துகள்களை கை நிறைய வாரி அடுத்தவர் மீது எறிந்து விளையாடுவது போல என்னை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அவர்கள் நால்வரும் பனிதுகள்களை ஒருவர் மீது ஒருவர் எறிய ஆரம்பித்தனர். பின் நடக்க ஆரம்பித்தோம். எங்கள் விடுதிக்கு எதிரே பெரிய மேடான இடம் இருக்கும். ஒரு 50 படிகட்டுகள் ஏறிதான் மெட்ரோ ஸ்டேசன், மார்கெட் எல்லாம் போக வேண்டும். அங்கிருந்து பார்த்தால் எங்கள் விடுதி மற்றும் சில கட்டிடங்கள் எல்லாம் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கும். மிக பரந்தவெளி முற்றிலும் பனியால் சுழப்பட்ட வெள்ளி பள்ளத்தாக்கு போல பார்க்க பிரம்பிப்பாக இருக்கும்.அந்த பள்ளத்தாக்கில் மேட்டிலிருந்து கீழ் வரை சில சிறுவர்கள் ஒரு ப்ளாடிக்காலான படகு போன்ற ஒரு வஸ்துவில் அமர்ந்து நாம் சரக்கு மரத்தில் சறுக்குவோமே அதை போல சறுக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். பார்த்தால் நமக்கும் கூட ஆசை வரும்.

மெட்ரோ நிலையம் அடைந்தபின் அவர்கள் ஒருவருக்குள் ஒருவராக தங்களை கேட்டு கொண்டனர் எங்கே செல்ல வேண்டும் என்று(அடப்பாவிகளா எங்க போகணும் தீர்மானம் பண்ணாமலேவா கிளம்புவீக) ஒரு வழியாக பனிசறுக்கு விளையாடுமிடம் செல்லலாம் என்று முடிவாயிற்று. அங்கே போய் அனைவரும் விளையாட வேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் ஆயிற்று. அங்கே சென்றதும் தான் தெரிந்தது. மீண்டும் ஸ்டாக்ஹோமே கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் பார்த்த அதே இடங்கள். ஒரு இடத்தில் நிறைய பேர் பனி சறுக்கு விளையாடி கொண்டு இருந்தார்கள். உடன் வந்த நண்பர்கள் வாங்க நீங்களும் கட்டாயம் பனி சறுக்கியே ஆக வேண்டும் என்று கட்டயமாக அந்த சறுக்கு காலணிகளை வாங்கி தந்தார்கள். வாங்கி போட்டு கொண்டு வைத்த முதல் அடியே விழுந்தேன். மீண்டும் எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து(விழுவதில் பிரச்சனை இல்லை பின் எழுந்து நிற்பது மிக சிரமாக இருக்கின்றது) குழந்தை போல சிறிய அடி வைத்து ஒரு மணி நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து அந்த காலணிகளை கழட்டிவிட்டு நம் காலணிகளை அணிந்தால் ஏதோ வித்தியாசமா(எஸ்டிரா பிட்டிங்க் இல்லாத)ஒன்றை போட்டிருப்பதை போல ஒரு உணர்வு. பத்தடி நடந்த பின் தான் விழமாட்டோம் வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கிறோம் என்ற நம்பிக்கை வருகின்றது.

அடுத்த வாரம் வெள்ளி மாலை அருள்மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் சென்று வந்தது மிக திருப்தியாக இருந்தது. சனியன்று பனிமலை இருக்கும் ஒரு இடம் செல்ல வேண்டும் என்று நண்பர்கள் பணித்தனர். அங்கு சென்று மலை பனிசரக்கு(ஸ்கியிங்) செல்வதாக திட்டம். மிக பயத்தோடு சென்றேன். முற்றிலும் வெள்ளை தோல் போர்த்த பனிமலை எவ்வளவு அழகு, எவ்வளவு குளுமை. கால் நரம்பின் வழியாக தலை வரை ஒரு சில்லிட்ட உணர்வு பரவும். சொல்ல மிக பரவசமாக இருந்தாலும் ஊஊகுகு ரொம்ப குளிர். அந்த மலையின் சரிவுகளை கண்டதும் ஒருவரை தவிர அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட தப்பித்தேன். ஞாயிறு அன்று ட்ரோட்டின்கோம் மாளிகை சென்றோம். மாளிகை என்று பெரிய எதிர்பார்ப்போடு சென்றால் சற்று ஏமாற்றமே தரும். சில ஓவியங்களை தவிர வேறு எதுவும் சொல்லும் படி இல்லை.

சுவீட் சுவீட‌ன் - இறுதி ப‌குதி

ஒருவ‌ழியாக‌ சுவீட‌னில் இருந்து கிள‌ம்பும் நாள் நெருங்கிய‌து. முத‌ல் நாள் சாயுங்கால‌ம் ஒரு டெனிக்க‌ல் முஸிய‌ம் சென்றோம். அங்கே ஒரு 4டி சோ பார்த்தோம். ப‌ம்பாயில் பார்த்ததை போல‌ தான் க‌ன்செப் ம‌ட்டும் தான் வேறு. ஆனால் ந‌ன்றாக‌ இருந்த‌து. அதே போல் முதுகில் அடிக்கும் சேர்க‌ள், முக‌த்தில் ப‌னி அடிக்கும் ஏதோ. ஒன்றே ஒன்று ம‌ட்டும் வித்தியாச‌ம் திரையில் எலி க‌டிக்கும் போது இறுக்கையை க‌டிப்ப‌து போல‌ இருந்த‌து. ஏனோ சிரிப்பு வ‌ந்த‌து. என்னை போல‌வே எல்லோரும் சிரித்த‌ன‌ர். ஒரு வினாடி வினா ந‌ட‌ந்த‌து. எங்க‌ள் குழும‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் முத‌ல் ம‌திப்பெண் பெற்றார்.அந்த‌ முஸிய‌த்தில் எல்லா வித‌மான‌ கார்க‌ள், ர‌யில்க‌ள், க‌ப்ப‌ல், விமான‌ம், தொலைபேசிக‌ள் இன்னும் ப‌ல‌வென்று நிறைய‌ இருந்த‌து. இந்திய‌ இசையாக‌ த‌மிழ் பாட‌ல்க‌ள் ஒலித்த‌து. நான் கேட்ட‌ போது ராசா கைய‌ வைச்சா ஒலித்துக் கொண்டு இருந்த‌து. அத‌ற்கு முத‌ல் பாட‌லும் த‌மிழ் தானாம். கேட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.

ம‌றுநாள் கிள‌ம்ப‌ வேண்டும். என் அறையில் இருந்த‌ ச‌மைய‌ல் பொருட்க‌ளை எல்லாம் எதிர் அறைக்கு மாற்றிவிட்டு, என் இந்திய‌ அலைபேசியையும், ம‌ட‌ல் முக‌வ‌ரியையும் கொடுத்து, ம‌ன‌ம் தொடும் வார்த்தைக‌ள் பேசி பிரிய‌ ஆய‌த்த‌ம் ஆனேன். ம‌றுநாள் ஒரு ந‌ண்ப‌ர் வ‌ந்து வ‌ழி அனுப்பினார். விழியில் துளிர்ந்த‌ ஒரு துளி க‌ண்ணீர் ப‌ரிசாக்கினேன் அவ‌ர்க‌ள் பாச‌த்திற்கு. செல்லும் வ‌ழி எங்கும் வெள்ளை ப‌னியையும், அதே ப‌னி போல‌ தூய‌ ந‌ட்பையும் பாச‌த்தையும் பொழிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் இனி எப்போது பார்ப்பேன் என்று நினைத்த‌ப‌டி ஸ்டாக்ஹோமிலிருந்து ஹெல்சிங்கி வ‌ந்து அங்கிருந்து டில்லி அடைந்தேன்.

ப்ரிபெய்ட் டாக்ஸியை கேட்டேன் 700 மேல் ஆகும் என்றார்க‌ள் வீடு வ‌ரை விட‌, கையில் முன்னூறு இந்திய‌ ரூபாய்க‌ளும், சில‌ அமெரிக்க‌ டால‌ர்க‌ளுமே இருந்த‌து. ப்ரிபெய்ட் டாக்ஸி மேனேச‌ரிட‌ம் காக்கா பிரியாணி சாப்பிட்டு அக்வோ பீனா கேட்கும் ர‌ன் விவேக் போல‌ டால‌ர் வாங்கிபீங்க‌ளா, கார்ட் அக்செப்ட் ப‌ண்ணுவீங்க‌ளா என்றேன். அவ‌ர் பார்த்த‌ பார்வை பார்த்து ந‌ன்றி சார் என்று சொல்லி 20 டால‌ரை மாற்றினேன் ஸ்சேன்ஞ் சார்ஞ் 100 ரூபாய் வாங்கி விட்டார்க‌ள். ஒரு வ‌ழியாக‌ வீடு வ‌ந்து. த‌ண்ணி இல்லை, க‌ர‌ண்ட் இல்லை, இன்ட‌ர்நெட் இல்லை என்று எல்லா இல்லைக்கும் அவ‌ரை திட்டி தீர்த்து, த‌மிழ் இசை அலைவ‌ரிசைக‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்த‌தும் தான் நான் இந்தியாவில் இருப்ப‌து போல‌ எண்ண‌ம் வ‌ந்த‌து. வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளையும் ரோஜாவையும் க‌ண்ட‌தும் உள்ள‌ம் நிறைந்த‌து. வீட்டு வேலைக்காரி தீதீ ஆகேயே கேயா. ஆப் ந‌கித்தே ஹ‌ம் ப‌ரிசான் கோஹையேன் என்ற‌ பாச‌த்தில் நெகிழ்ந்து போனேன். எப்ப‌டியோ இர‌ண்டு மாத‌மாக‌ கைபேசி இல்லாம‌ல், தொலைக்காட்சி இல்லாம‌ல், க‌ன‌மான‌ ஜாக்கெட் இப்ப‌டி இருந்த‌து மிக‌ வித்தியாச‌மாக‌ இருந்த‌து.

நாடோடியின் கிச்சன்

ஒரு வழியாக சுவீடன்(ஸ்டாக்ஹோம்) வந்து சேர்ந்தாயிற்று. அந்த அன்று நண்பர்கள் விடு்தியில் விட்டு விட்டு தங்கள் இடம் சென்றனர். அது ஒரு ஞாயிற்று கிழமை என்பதாலும் பயணகளைப்பாய் இருந்ததாலும் இந்திய நேரப்படி நடு இரவை தாண்டி இருந்தாலும் சூட்கேஸ் மற்றும் பைகளில் இருந்த எதையும் எடுத்து வைக்க முடியாத காரணத்தால் அப்படியே உறங்கி போனேன். காலையில் எழுந்ததும் விடுதியின் வரவேற்பறையில் கேட்டு அருகில்(ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்) ஒரு சூப்பர் மார்கெட்க்கு(நம் நீல்கிரீஸ் போல இருந்தது)சென்றேன். கடையில் இருந்தவர்களை பால் எது தயிர் எது என்று கேட்டு வாங்கினேன்(எல்லாம் கெரகம் சுவீடிஷ்ல இல்ல எழுதி இருக்கு, முதல் முறை கேட்டு சரியாக வாங்கி வந்தேன் அடுத்த முறை தெனவெட்டாக நானாக எடுத்து வந்த பால் மிக கெட்டியாக பால் போலவும் அல்லாது தயிர் போலவும் அல்லாது ஏதோ ஒன்றாக இருந்தது). ஒரு பிரட் பாக்கெட் போல இருந்த ஒன்றை எடுத்து பில் போடுபவரிடம் இஸ் திஸ் வெஜ் என்றேன். இட் இஸ் பிரெட் வாட் டி யு மீன் பை இஸ் திஸ் வெஜ் ஆர் நான்வெஜ் என்றார் நக்கலாக. சரி தான் என்று வாங்கி வந்தேன்.

அன்று காலை ஏதோ உண்டு விட்டு, சமைக்க நேரம் இல்லாததால் அலுவலகம் சென்று விட்டேன். மதியமும் சாப்பிடவில்லை, சாயுங்காலம் வந்ததும் அகோர பசி, கொடுமைக்கு அடுப்பு வேறு இல்லை, மைக்ரோவேவ் மட்டும் தான்.(வீட்டில் எதற்கு மைக்ரோவேவ் இடத்துக்கும் காசுக்கும் கேடா இதில் என்ன செய்ய முடியும் எதை எடுத்தாலும் வாங்கி வைக்க வேண்டியது தானா என்று அவரை தீட்டிய படி மைக்ரோவேவில் சமைக்க பழகாதது இப்படி ஒரு பின்விளைவாக வரும் என்று யாருக்கு தெரியும்) அதில் நான் செய்த உப்புமாவை பற்றி ஒரு கதை தான் எழுத வேண்டும். பத்திரம் வைத்து தளிக்க 6 நிமிடம் எண்ணை சூடக்க வேண்டும். பின் எடுத்து கடுகு போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வைத்து உளுந்து போட்டு, பின் எடுத்து வெங்காயம் போட்டு அதை வதக்குவதக்குள் நான் வதங்கிவிட்டேன். அப்புறம் ஒரு வழியாக தண்ணீர் ஊற்றி சூடாக்கி உப்புமாவை கிண்டி உண்டால் ஆஹா எவ்வளவு சுவையாக இருந்தது தெரியுமா? நான் அவ்வளவு அருமையான உப்புமாவை இதற்கு முன் உண்டதில்லை அவ்வளவு அதிகமான அளவு உப்புமாவையும் உண்டதில்லை. எல்லாம் பசி செய்யும் அற்புதம். சுவீடன் வந்ததில் இருந்து அதிகம் பசிக்கின்றது.

எங்காவது கசக்கும் ஜாம் சாப்பிட்டு இருக்கின்றீர்களா? சுவீடனில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஜாம் தேடி தேடி,கிடைத்ததும் ஆஹா கண்டேன் சீதை என்றவாறு ஒரு ஆரஞ்சு பழம் படம் போட்ட ஜாம் பாட்டிலை எடுத்தேன். அதில் உள்ளே சிறிய துகள்கள் போன்ற ஏதோ இருந்தது. நானும் அது என்ன என்று கடை(டன்)கரனிடம் கேட்டேன் இட் இஸ் ஆரஞ்ச் என்றான். சரி என்று நம்பி எடுத்து வந்து அதை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு திறந்து சாப்பிட்டால் ஒரே கசப்பு ஏன்னா அது தெரிந்த துகள்கள் எல்லாம் ஆரஞ்சு பழ தோலாம். :( அதே போல ஒரு முறை மாதுளை ஜீஸ் வாங்கி வந்து ஒரு கோப்பையில் ஓத்தி குடித்தால் தொண்டையில் ஒரே அறிப்பு. அந்த ஒரு கோப்பையை குடித்து முடிக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அலுவலகம் எடுத்து போய் ஒரு நண்பரிடம் கொஞ்சம் கொடுத்தேன் அவர் இது ஒயின் போல் இருக்கின்றது என்றார். அட பாவிகளா இப்படித் தான் ஒயின் இருக்கும் என்றால் அந்த கெரகத்தை எப்படி குடுக்கிறீங்க என்றேன். அந்த ஒரு லிட்டர் பாட்டலை அவரிடமே கொடுத்து விட்டேன். ஆனால் சுவீடனில் ஜீஸ் மிக விலை கம்மியாக கிடைக்கின்றது(ஒரு லிட்டர் பழரசம் 9 கோரோனா தான்) ஆரஞ்சு மற்றும் மிக்ஸ் பழரசங்கள் நன்றாக இருக்கின்றன.

சுவீடனில் கிச்சன் பற்றி எழுத்தும் போது நாராயணி அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர்களை நான் மெட்ரோ ரயிலில் தற்செயலாக சந்தித்தேன். நான் சுவீடன் வந்த வாரம் அலுவலக நண்பர்களிடம் எங்காவது செல்லலாமா என்று கேட்டதற்கு போகலாம் என்று கூறி அழைத்துச் செல்லும் போது டிக்கெட் வாங்க சொன்னார்கள் சரி என்று போனால் 180 கோரோனா வாங்கிக் கொண்டு 16 முறை பயணிக்க ஏதுவான ஒரு பயண அட்டையை வாங்கி தந்தார்கள். அதை உபயோக்கித்து ஒரு முறை தான் சென்று வந்திருந்தேன் அதனால் சும்மா சென்று வரலாமே சென்று மெட்ரோ நிலையம் சென்று ஒரு ரயிலில் ஏறி சோல்னா சென்ரமில் இறங்கி சும்மா கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்தேன். அடுத்த நிலையத்தில் ஒரு பெண் தன் அலைபேசியில் தமிழில் பேசியபடி நான் பயணித்த அதே பெட்டியில் ஏறி அமர்ந்தார். நான் போய் நீங்கள் தமிழா நானும் தமிழ் என்றதும் அறிமுக உரையாடல்கள் முடிந்ததும் நான் சீஸ்தா செல்கின்றேன் அங்கே தான் பச்சை மிளகாய் கிடைக்கும் என்றார். சரி என்று நானும் அவரோடு சென்றேன். அவர் அழைத்து சென்றது சீஸ்தா கோரோசன் என்ற இந்தியர் நடத்தும் கடை அங்கே எல்லா இந்திய காய்கறிகளும் கிடைக்கின்றன. இங்கே தயிர் நன்றாக கிடைக்கும் வாங்கி உண்ணுங்கள் என்று ஒரு பிரண்ட் தயிரை காட்டினார்.(ஒரு பெயிண்ட் டப்பா சாயலில் இருந்த அந்த டப்பாவை வாங்கிக் கொண்டேன் அதில் ஒரு மீசைக்காரன் படம் போட்டு இருந்தது) மேலும் சில டிப்ஸ் தந்தார். மக்காச்சோளம் மற்றும் பச்சை பட்டாணி அடைத்த டப்பாவை காட்டி வாங்கோங்க மாலை நேரம் உண்ண அருமையாக இருக்கும் என்றார். வாங்கிக் கொண்டேன். மேலும் பேன் பீஸாவை காட்டி இது கூட நன்றாக இருக்கும் வாங்கிக்கோங்க என்றார்.

நாராயணி கூறியது போல தயிர் மிக அருமையாக இருந்தது. அது சாப்பிட தயிர் போல இருந்தாலும் பார்க்க வெண்ணை அல்லது வெண்ணிலா ஐஸ்கீரிம் போல இருந்தது. மக்காச்சோளம் டின் திறக்க சாவியோடு(பெப்ஸி டின்னில் இருக்குமே அது போல) இருந்தது அதனால் எளிதாக திறந்து சாப்பிட்டு விட்டேன். ஆனால் அந்த பச்சைபட்டாணி டின் மிக படுத்தி விட்டது. திறக்க மிக கடினமாக இருந்தது. கத்தி(விடுதியில் ஆடு வெட்டும் அளவிற்கு பெரிய கத்தி கூட இருந்தது), முள் கரண்டி, ஸ்பூன் என்று எல்லா ஆயுதம் மற்றும் மெக்ஸிமம் எனர்ஜி கொஞ்சம் மூளை இதை பயன்படுத்தி திறந்து உண்டால் சிறிது இனிப்பான சுவையோடு நன்றாக தான் இருந்தது. பேன் பீஸா பசிக்கு நல்ல விருந்தாக இருந்தது. ஒரு நாள் நல்லிரவு திடிரென பசியால் விழிப்பு வர அந்த பீஸா தான் உதவிற்று. முன்னமே சொன்னது போல சுவீடன் வந்ததிருலிருந்து அதிகம் பசிக்கின்றது.

இப்படியாக இரண்டு மூன்று வாரம் கழித்ததும், ஒரு வெள்ளி மாலை அசதியாக என்ன சமைப்பது என்று யோசித்தவாறு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த சமயம் பின்னாலிருந்து ஒரு குரல் நீங்க தமிழா என்று ஆமாம் என்றதும் ஆஹா என்று திரும்பி பார்த்தேன் மூன்று பேர் அதில் ஒருவர் தமிழ் மற்றவர்கள் கன்னடர்கள் ஆனால் அவர்களுக்கும் தமிழ் புரியுமாம் அவ்வளவு தான் வரண்டாவில் நின்று பெரிய அரட்டை ஆயிற்று. மறுநாள் ஒன்றாக உண்ணலாம் என்றும் முடிவாயிற்று. நான் இரண்டு காயும் அந்த சென்னை நண்பர் சாம்பார் மற்றும் சுண்டலும் செய்தார். சாம்பார்க்கு வைத்த பருப்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரசமும் செய்தேன். மற்றவர்கள் சிக்கன் மற்றும் ஆம்லேட் செய்து வந்திருந்தனர். மற்றுமொரு தோழி கேரட் அல்வா செய்து கொண்டு வந்தார். 5 பேரும் சேர்ந்து உண்டது ஏதோ ஒரு கல்யாணத்திருக்கும் போய் வந்தது போல் இருந்தது. இதுவரை தனிமையே துணையாக இருந்தவளுக்கு இது மிக வித்தியாசமான உணர்வாக இருந்தது. அன்று மட்டும் அல்லாமல் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஒன்றாகவே உண்டோம். கொஞ்ச நாளில் அந்த சென்னை நண்பர் கிளம்ப வேண்டி இருந்தது. அவர் அறையில் இருந்த எல்லாம் மசாலா ஐட்டங்களையும் எண்ணெய் பால் கன்ப்ளாஸ் ப்ரட் எல்லாம் என் அறைக்கு கொண்டு கொடுத்தார். அவர் சென்றதும் ஏதோ பெரிய இடைவெளி வந்தது போல இருந்தாலும் மீதி இருந்தா நால்வரும் ஒன்றாக உண்பது வார இறுதியில் வெளியே செல்வது என்றபடி கழித்தோம். மேலும் இரு வாரம் கழித்து நான்கு நண்பர்கள் வந்து இணைந்து எங்கள் குழு 8 பேர் ஆனா குழுவானது. அவர்கள் கொண்டு வந்த அடையார் ஆனந்தபவன் புளிக்காய்ச்சல், காரக்குழம்பு, வத்தகுழும்பு, கருகப்பிள்ளை தொக்கு என்ற ஐயிட்டங்கள் என் அறையை நிறைத்தன. பொதுவாக என் அறையில் தான் குழுமி உண்போம் அதனால் அனைவரின் பாத்திரிங்கள் மற்றும் கரண்டிகள் எல்லாம் என் அறையில் நிறைந்திருக்கும் பின் என் இரண்டு ஸ்பூன் இங்கே இருக்கு, என் அந்த பாத்திரம் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற எல்லோரும் தேடுவார்கள்.

ஆரம்ப நாள்களில் கடுகு,உளுத்தம் பருப்பு, மஞ்சள் இத்தியாதி இத்தியாதிகளை அப்படியே அதன் பேக்கிங் பேகிலேயே சேமித்து வந்திருந்தேன். பின் ஒரு நாள் மொபின் வாங்கி வந்த போது அது தீர்ந்த பின் ஆபத்பவனாக அஞ்சரை பெட்டி போல உபயோகமாயிற்று. மேலும் சேர்ந்த பல டப்பாக்கள் மற்றும் பாட்டில்களால் அது ஒரு சீரான கிச்சனாக மாறி இருந்தது. நான் கிளம்பும் முதல் நாள் எல்லா மசாலா ஐயிட்டம், எண்ணெய், பால் கன்ப்ளாக் எல்லாம் எதிர் அறையில் அடைத்துவிட்டு, இருந்த பழரசமெல்லாம் குடித்து தீர்த்து ஒரு வழியாக கிளம்பி இந்தியா வந்தடைந்தேன். பல அனுபவங்களையும் தன்னம்பிக்கையும் தந்தது இந்த நாடோடி கிச்சன். இந்தியா வந்து கேஸில் சமைப்பது என்னவோ ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது. :)