Monday, November 16, 2015

கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் எழுதிய “இரவைப் பருகும் பறவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து.....

நம் எல்லோரிடமும் இருக்கும், கவிதை ஒரு பயணம்; இங்கே ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வாகனம். ஆம், தனித்தனி உத்திகள். சிலர் சாரல் மழையாய் வார்த்தைகளால் சில்லிடுகிறார்கள். சிலர் சிலுவை உதிர்க்கும் முள்முடி வார்த்தைகள் கொண்டு வார்த்தைகளாக்குகிறார்கள். சிலர் கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு, சாளரக் கதவுகளையும் சிலுவைக்குத் தப்பிய ஆணிகளால் அறைந்து விட்டு, உள்ளுறைந்த அடர்ந்த இருட்டுக்குள் நிர்வாணத்தைக் கிடத்துகிறார்கள்.

“இரவைப் பருகும் பறவை” எனும் இத்தொகுப்பில் நான் பார்த்ததெல்லாம் நகர்காட்சிகள்; தருணங்கள்; சம்பவங்கள்; ஒளிப்படக் கலைஞனின் நேர்த்தியோடு பதிவு செய்யப்பட்ட பிரியத்தின் கண்ணீத்துளிகள். ஒவ்வொரு நகர்காட்சிகளும் குறியீடுகளாகவும்; படிகங்களாகவுமே காட்சி தருகின்றன. ஒவ்வொரு குறியீட்டையும் திறக்கும் சாவித் துவாரங்களைத் தேடிப் பிடிப்பதுதான் வாசகன் முன்னிருக்கும் ஒரே சவால். அதையும் அத்தனை சவலாக்கி இருட்காட்டிற்குள் நம்மை விட்டுவிடவில்லை கவிஞர். அதற்காக சாவிகளுக்கான வாசகத்தேடலை மறுதலித்துக் கதவுகளை யெல்லாம் கழற்றி எறிந்து விடவுமில்லை.

கவிதைகள் அடுத்தக் கட்டப் பயணங்களுக்கானத் திறப்புகளுடன் மிளிர்கின்றன. என் பார்வையில் அணுகியிருக்கிறேன் இக்கவிதைகளை. ஆராய்ச்சியாளனின் பூதக்கண்ணாடியோ; இசங்களின் பொருத்துப் பட்டியலோ என்னிடமில்லை; என்னிடமிருப்பவை யெல்லாம் கவிதைகளைக் கவிதைகளாகவே அணுகும் வாசக மனநிலை மட்டுமே, ரோஜாவை ரோஜாவாகவே ரசிப்பது மாதிரி.

ஒவ்வோரு தொகுப்பிலும் முதற்கவிதையை மிகமிக முக்கியமானதாகக் கருதுவேன் நான். அப்படித்தான் வாசித்தேன் “ஒரு துளி துயரம்” கவிதையினை. அதில் அஞ்சலில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.

   “ எப்போதும் போல்
    பால்ய நறுமணத்தைக்
   கிளறி விடுகிறது புதுப்புத்தகம்” என்கிறார். இதில் “எப்போதும் போல்” எனும் வரி பலரைப் போல், அவருக்கும் இருக்கும் குழந்தைமை கலந்த படைப்பாளத் தனமையைக் காட்டுகிறது. புதிய புத்தகத்தை நுகர்வதும் ஒருவகையில் எழுத்துக்களை வாசனை பிடிப்பது போலன்றி வேறில்லை. புதுப்புத்தகம் கீழே விழுந்து அதன் அட்டைப்படம் மடங்கி விடுகிறது. மடங்கிய அட்டையை....

    “வறண்ட நதியின் மண்பிளவுகளாகவும்,
    இற்றுத் தொங்கும் ஆலவிழுதுகளாகவும்
    அட்டைப் பெண்ணின் நெற்றிச் சுருக்கமெனவும்” வர்ணிக்கிறார்.

நிறைவாக...
    “ மறக்க இயலாத நிகழ்வென
    மீண்டும் பழைய அட்டையை
    மீட்க முடியாத கனவென
 இந்த ஒரு துளி துயரம்” எனத் தன் ஏக்கங்களைப் பதிவு செய்கிறார். இக்கவிதையில் மடங்கிய அட்டையானது நம்வாழ்வில் நிகழ்ந்தவொரு மறக்கத் துடிக்கும் ஆனால் மறக்க வியலாத காயங்களின் குறியீடாகத்தான் காண வேண்டியிருக்கிறது. இந்த மனநிலையில் இக்கவிதையை மீண்டும் வாசித்துப் பார்க்கும் போது புது வண்ணம் பெறுகிறது.


மேலும்


http://www.nanthalaalaa.com/2015/11/blog-post_75.html