Saturday, May 7, 2022

சொல்லில் மலரும் தீ

  

 



கடந்த இருபதாண்டுகளாகக் கவிதைகள், புனைவு, அபுனைவு எனத் தொடர்ந்து எழுதி வரும் நந்தாகுமாரன், பெங்களூரில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இவரது முதல் தொகுப்பு ‘-1’ வெளியாகிய பிறகு எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்தப் ‘பாழ் வட்டம்’. காலச்சுவடு வெளியீடான இந்தத் தொகுப்பில் 69 கவிதைகள் இருக்கின்றன. சில கவிதைகளுக்கு நந்தாவின் மகன் படம் வரைந்திருக்கிறார்.  நந்தாகுமாரனின் கவிதைகள் பிரம்மாண்டமானவை. இவர் தேடித் தேடித் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் காட்டும் காட்சிகள் வித்தியாசமானவை. மிக இயல்பானவை என்று நாம் நினைக்கும் அனுபவங்களுக்கு இவர் காட்டும் கோணங்கள் விசித்திரமானவை. அவ்வாறாக இவர் கவிதைகள் புரியும் ரசவாதம் அது தரும் கவிதானுபவம் சார்ந்து சில வார்த்தைகளை வாசகர்களுக்குக் கடத்த முடியுமென்றால் இந்தக் கட்டுரை அந்த கவிதைகளுக்க்ச் செய்யும் நியாயம் அதுவே.

 

நந்தாவின் கவிதைகள் மாயம் நிகழ்ந்துபவை. பெரும்பாலான கவிதைகளில் அந்த மாயாஜாலம் இருளில் நடக்கிறது. அந்த இருட்டு பிரகாசமான இருள். அது நிசியின் மசியாகி கையெங்கும் வழியும் போது அதனை சிறுபிள்ளை போலத் தன் தலையில் தடவுகிறது கவிதை. அப்போது அதன் கருமையால் மேலும் இருட்டின் அடர்ந்தி கூடுகிறது. அப்போது அந்த இருளைப் பிடித்துப் பிள்ளையார் செய்கிறது கவிதை. இங்கே நடந்த மாயத்தின் மீதியில் கவிதை அந்தகாரமாய் மலர்கிறது. “பட்டுத் தெரிக்கும் பிரகாச இருள்” என்பது மேல் சொன்ன கவிதையின் தலைப்பு.

 

நந்தாவின் கவிதைகள் தலைப்பிலிருந்தே தொடங்கி வாசகரோடு உரையாடத் தொடங்கிவிடுகின்றன. ‘எதிர்மழை’ என்ற கவிதையில்,

// தூக்கி எறிந்த துண்டு பீடி எரித்த பாதி இருளில்

சிலையாகும் சிகரெட் புகை // என்கிறார்.

 

சிகரெட் புகை சிலையைப் பார்த்துச் சொக்கி நிற்கும் போது மீதமுள்ள கவித் தருணம் தானாகவே நிகழ்கிறது. இந்த மாயத் தருணம் சில கவிதைகளில் பிரகாச வெளிச்சத்திலும் நிகழ்கிறது. தாத்தாவின் கைத்தடியை கொண்டு கூடு கட்டும் மஞ்சள் மூக்கு நாரை (‘மந்திர கோல்’), கைத்தடியை கொண்டு கூடு கட்ட முடியுமா என்ற தர்கத்தைத் தகர்க்கிறது. கூட்டில் பக்கவாட்டில் நிற்கும் கவிதை, தாத்தா வானில் நடப்பது போன்ற சித்திரத் தீட்டலில், அவர் வான்லோகம் செல்கிறார் என்பதை அவ்வளவு எளிமையாக உணர்த்துகிறது.

 

நந்தாவின் கவிதைகளில் அலட்டலே இல்லாமல் அறிவியல் எட்டிப்பார்க்கிறது. இருள் என்பது குறைவான வெளிச்சம் என்ற தத்துவத்தை திருப்பிப் போட்டு தர்க்கம் செய்கிறது.

// இருளின் வேகம்

ஒளியின் வேகத்திற்கு

நிகரானது //

 

என்று சொல்லும் வரிகளில், லைட் இயர் தியரி மட்டுமல்லாமல், இருளும் ஒளியே என்றப் புது புரிதலும் அடங்கியிருக்கிறது. பல கவிதைகளில் அறிவியல் தொழிற்நுட்பத்தின் தடங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஓரிரு கவிதைகள் அணு அறிவியலை ஆராய்ச்சி செய்கின்றன.

 

மின்விசிறி படிமமாய் பல கவிதைகளில் வருகிறது. அது உறக்கமற்ற இரவின் நீட்சியாக இருக்கிறது. அறிவியல் கோணங்களைக் காட்டும் சாத்தியமும் அதிலிருக்கிறது. காலத்தின் சாட்சியாகவும், காலசக்கரமாகவும் அந்த மின்விசிறி சுழல்கிறது. ஒரு கவிதையில் ‘மின்விசிறி வானத்தில் பறக்கிறது’ என்ற மயக்கம் வரையப்பட்டிருக்கிறது. செயற்கை வானமும் நட்சத்திரமும் வரையப்பட்ட மின்விசிறி வானில் பறக்க வாய்ப்புகள் அதிகம் தான். இவரது மின்விசிறி சித்திரங்கள் சிலதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

// இரவின் தூரத்தைக் கடக்க

மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன

பறந்து கொண்டேயிருக்கின்றன //

(உரையாட வரும் எந்திர இரவு)

 

// மின்விசிறியின் குரல்வளையிலிருந்து

அதன் முதல் 360 டிகிரித் திகிரியில்

காலத்தின் நட்டாற்றில்

பிறக்கிறது அதன் முதல் சொல் //

(மொழி அழுத்தம்)

 

// மின்விசிறி

விடியலைத் துரத்திப் பிடிக்கும்

காலச் சக்கரமாகிறது //

(புதைக்குழியில் விளைந்த அசந்தர்பத்தின் மொழி விருட்சம்)

 

நந்தாவின் சில கவிதைகள் கோர்க்கும் வார்த்தைகள் முதலடிக்குத் தன்னையளந்து, இரண்டாம் அடிக்கு நம்மை அளந்து மூன்றடிக்கு உலகளந்து, நான்காம் அடியில் பிரபஞ்சத்தையே அளக்கத் தவிக்கும் வித்தையை செய்கின்றன. சில உதாரணங்களாக ‘இம்மை’, ‘புதைக்குழியில் விளைந்த அசந்தர்பத்தின் மொழி விருட்சம்’, ‘விளையாட வரும் எந்திர இரவு’ போன்ற கவிதைகளைச் சொல்லலாம். ‘இம்மை’ என்ற கவிதை ‘இச்சைக்கும் இயல்புக்கும் இருக்கும் இடைவெளியில்’ தொடங்கி, வாழ்வியல் அபத்த தருணங்களை சுட்டிக்காட்டியபடியே திடீரென ‘சித்தனுக்கும் சிவனுக்கும் இடையே நடக்கும் மாபெரும் மாய எதார்த்தமாய்’ தன்னை விரித்துக் கொள்கிறது.

‘புதைகுழியில் விளைந்த அசந்தர்பத்தின் மொழி விருட்சம்’ கவிதையில் வரும் இந்த வரிகள்

// பஞ்சு மெத்தை

நீச்சல் தெரியாமல் மூழ்குபவனின்

கடலாகிறது //

 

உறக்கம் தொலைதலின் வலியை விதமாய் சொல்லிக் கொண்டு போகும் போதே, இடையே  ‘சிவம் வந்து தன் மூன்றாவது கண்ணிலும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது’ என்ற கையறு நிலையை அசாதாரணமாய் சொல்லிச் செல்கிறது.

அதே போல் ‘விளையாட வரும் எந்திர இரவு’ கவிதையிலும் உறக்கமற்ற ஒரு இரவில்

//வௌவால்கள் திட்டமிடும் பாதையில் தான்

இப்போது பூமி சுழல்கிறது

சுழன்று கொண்டேயிருக்கிறது//

என்று புவி ஈர்ப்புத் தத்துவத்தையே மாற்றி அமைக்கிறது கவிதை வரிகள்.

 

இந்த தொகுப்பில் விதவிதமாய் வடிவப் பரிசோதனை செய்யும் கவிதைகள் ஏராளமாய் இருக்கின்றன.  ‘ஏனெனில்’, என்ற கவிதை நட்போ இணையோ அல்லது வேறோர் உறவோ என்று இருவருக்கிடையில் நிகழும் பல உணர்வுக் கலவைகளை பட்டியிலிடுகிறது. மீண்டும் வாசிக்கையில் தலைப்பு வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் பிறக்கிறது, போலவே அது தலைப்பையும் இறுதி வார்த்தையையும் மாலை போலக் கட்டிப் பார்க்க ஏதுவாயிருக்கிறது. ‘ரூப மோட்சம்’ என்ற கவிதையில் ஒரு எழுத்து வார்த்தை, ஈரெழுத்து வார்த்தை இரண்டு, மூவெழுத்து வார்த்தை, ‘ஃபிப்போனாக்கி சீரிஸ்’ (Fibonacci Series) போல முதல் வார்த்தையின் எழுத்துகளின் எண்ணிக்கையையும் அடுத்த வார்த்தை எழுத்துகளின் எண்ணிக்கையையும் சேர்த்த மூன்றாம் வார்த்தை என்று பல்வேறு வடிவ வார்த்தைகளை அடுக்கிக் கவிதையின் வடிவத்தில் புது மாதிரியைப் புகுத்துகிறது.  ‘எனக்கு எதிர் கவிதை முகம்’ என்ற கவிதையில் எதிர்கவிதை வடிவத்தையும், ‘தன்னெதிர்ப்பு கவிதை - பயமே பேரின்பம் / அச்சமே ஆனந்தம்’ என்ற கவிதையில் ‘(Autoimmune Poetry): தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு கவிதை வகைமை’ என்ற புதிய கவிதை வகைமையையும் பரிசோதிக்கிறது.

 

நந்தாவின் கவிதைகளில் கவித்தருணம் ஒரு வித மயக்கத்தை ஏற்படும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. நிஜமோ, மாயமோ இரண்டும் கலந்த வேறொன்றோ என்ற வெளியில் நிகழ்கின்றன அவை. ‘மாயப்புள்’ என்ற கவிதையில் ஒரு பறவை கவிதையின் ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு பறப்பது. அதை மாய எதார்த்தம் போல நினைத்து வாசிக்கும் இறுதி வரிகளில் நிஜ பறவை புகைப்படம் எடுக்கும் தருணத்தில் பறந்து மாயமாக கவிதைக்குள் வந்துவிடுவது என்பதில் இங்கே கவிதையை சொல்கிறாரா, புகைப்படத்தில் கவிதையாய் தெரியும் பறவையை சொல்கிறாரா என்பது வாசிக்கும் போது நமக்கும் நிகழும் கவித்தருணம்.  இந்த கவிதைக்கு எதிர்பதமாய் அமைகிறது ‘கவிதையில் நிகழும் கிரகணம்’. நிகழ் தருணத்தில் கவிதை சொல்லியின் சலிப்பானதொரு நாளை குறிக்கும் படிமமாக உயிரியல் பூங்கா மலைப்பாம்பு வருகிறது. அது அதற்கு பரிமாறப்பட்ட சுண்டெலியை உண்டுக் கொண்டிருக்கும் அபத்தம் அடுத்த வரியில் மாயத் தருணமாகிப் படீரென வெடிக்கிறது. கவிதையில் இது ஒரு புதுவித உத்தியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ரயில் ஒரு கொலை செய்தது’ கவிதையில் இரவும் உறக்கமும் இயல்பாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாய நொடியில்

// தண்டவாள தூக்கம் தெளிய

தடுக்கி விழும் ரயில்

மீண்டும் எழுந்து

என் மீது ஓடுகிறது

ஓடிக் கொண்டே இருக்கிறது //

என்று எழுதும் போது நமது கவிதானுபவம் திடுக்கிடுகிறது. இவரது சில கவிதைகளில் வரிகளை வெவ்வேறு விதமாய் சேர்க்கும் போது வேவ்வேறு திறப்புகளை காண முடியும். உதாரணத்துக்கு பின்வரும் வரிகளில் இருளில் சொற்ப வெளித்தத்தில் தெரியும் ஓவியம் ஒன்று துலங்குகிறது.

// சுரங்கப்பாதை இருள் எரித்து

தீக்குச்சி தீபம்

காட்டும் ஓவியத்தில்

ஆதி மனிதன் வரைந்திருந்தான்

மீதி மனிதனை //

அதே கவிதையில் இந்த வரிகளுக்கு முன் இருக்கும் இன்னும் ஒரே ஒரு வரியை இந்த வரிகளோடு சேர்த்து வாசிக்கும் போது அது கொடுக்கும் வாசிப்பனுபவம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது -

// வார்த்தையின் உள்ளே

சுரங்கப்பாதை இருள் எரித்து

தீக்குச்சி தீபம்

காட்டும் ஓவியத்தில்

ஆதி மனிதன் வரைந்திருந்தான்

மீதி மனிதனை //

வார்த்தையைப் பிளந்து அதன் அடிஆழத்தின் இருளை எரித்து உண்டான ஒளியில் வரைப்பட்ட ஓவியமாக இந்த கவிதை விரிகிறது. அதை வரைந்தது ஆதி மனிதன். இது மொழியின் தொடர்ச்சியை அது அடையும் பரிமாண வளர்ச்சியை குறிக்கும் படிமமாக மாறிப்போகிறது. இதைப் போன்று கவிதையில் பிற அடுக்குகளை திறக்கவல்ல கவிதை அமைப்பைக் கொண்டிருக்கிறது நந்தாவின் பல கவிதைகள்.

 

தற்கால சமூக வலைத்தள தாக்குதலில் தப்பிக்க முடியாத உலகம் பற்றியும் அதில் நிகழும் அரசியல் பற்றியும் இவரது கவிதைகள் பகடி செய்கின்றன. முந்தைய காலத்தின் டீக்கடையில் நிகழும் சமூக கூத்துக்களின் புதிய கூடாரமே சமூக வலைத்தளங்கள். அதைவிடவும் பயங்கரமானதும் குழுமனப்பான்மை கொண்டதும் என்றும் முகநூலில் எழுதவதைக் கூட கவிதைத் திரட்டுகளாக்கிவிடும் பகடியையும் மறக்காமல் பதிவு செய்கிறது. முகநூல் கவிதைகள் அல்லது கவிதைகளை எழுதித் தள்ளும் சமகாலத்தில் கவிதையின் தொகுதியா பணம் தரும் தகுதியா எது கவிதையாகிறது யார் கவிஞர் ஆகின்றனர் என்பதை அப்பட்டமா கோடிட்டு காட்டுகிறது ‘கவிதை தேறும் கணம்’.

 

// நினைவுகளை இப்பொழுது யாரும்/ மூளையில் சேமிப்பதில்லை // என்று சமகாலச் சமூகம் கருவிகளில் அடிமையான நிதர்சனத்தை சொல்லவும் இவர் கவிதை வரிகள் கூசவில்லை. // உரையாடக் கிடைத்த சாட்பாட் // இந்த வரியில் மனிதர்களுக்கு உரையாடல் கூட செய்யப்பட்ட மென்பொருளுடன் தான் நிகழ்கிறது என்ற வரிகள் தனிமைத் துயரை, சகிப்பின்மையைச் சுட்டும் தற்கால படிமம்.

 

ஸ்தலபுராணம்  கவிதைகளும் ரயில் கவிதைகளும் இவர் முந்தைய கவிதைத் தொகுப்பிலிருந்து தொடர்பவை. பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கான புராணங்கள் பல பெருமையோடு உலவும் போது நந்தாவின் கவிதைகளில் அதுவேறு பல காட்சிகளை, பகடிகளை உள்ளடங்கியது. வழக்கமாய் ஆன்மீக நோக்கங்களுக்காக விஜயம் செய்யப்படும் புராதான புனித இடங்களில் லௌகீக அபுனிதங்களை மர்மமாய் தொடும் அசாத்தியாமனவை அவை. சற்றே சறுக்கினாலும் பழமைவாதிகள் அடித்து துவைக்க ஏதுவான வாய்ப்புகளை உள்ளடக்கிய கவிதைகள் அவை.

ரயில் கவிதைகளின் ஜன்னலோர படிமம் இவருக்கு பல அனுபவங்களைத் தருகிறது. ஜன்னலோர இருக்கை கிட்டியவன் கைபேசிக்குள் தஞ்சம் புகுகிறான். ஜன்னலிருக்கை கிடைக்காதவன் அது கிடைக்கப் பெற்றவன் செய்யும் அபத்தங்களில் மௌன சாட்சியாகிறான். இது வாழ்க்கைத் தத்துவத்தின் பல அடுக்குகளைத் திறக்கவல்ல கவிதை. இன்னொரு ரயில் கவிதையின் ஜன்னலோரம் என்ற படிமம் திரைகாட்சிகளாகிக் கவிதைக்குள் புகுகிறது. ரயில் அந்தத் திரைப் பிம்பத்தில் ஒரு கதாபத்திரமாகிறது. கவிதை சொல்லி மனிதப் பறவையாகிறான். அது ரயில் பயணம் பண்ணும் எல்லா காட்சிகளையும் பறந்து பறந்து காண்கிறது பின் கண்ட காட்சியெல்லாமே // கனவா என்கிறது வாழ்க்கை // என்ற சித்திரத்தோடு முடிக்கிறது.  

 

நந்தாவின் பெரும்பாலான கவிதைகள் செய்வது சொற்கள் மீதான ஆராதனை. அந்தச் சொற்கள் சிந்தையிலிருந்து நழுவி விழுந்து கவிதையாகிறது.  சொற்களைச் சீட்டுகட்டுகளாக்கி கலைத்துப் போட்டு விளையாடுகிறது.  கையிலிருந்த சொற்களை மாற்றி மாற்றி வைத்து புனைவின் பல வடிவங்களை துணைக்கழைத்துக் கொள்கிறது.  அதுவே உயிரணுவாகக் கவிதையில் ஒரு மந்திர உயிரை நீந்தச் செய்கிறது. சொற்கள் சிட்டுகளாகி ஏதோ ஒரு மரக்கிளையில் கண்ணுறுமாறு அமர்கிறது.  அது ஒரு மஹா வார்த்தையாகி மொத்த சொற்களையும் சிருஷ்டிக்கும் ஜீவ சக்தியாகிறது. இவர் எழுதும் கவிதைகளில் அவை ‘சொல்லில் மலரும் தீயாகி’ ஒளிர்கிறது.  இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வைத்து தின்னும் உணவாகிறது. மேலும் சில சொற்கள் நீதிக்கதை எழுதுகின்றன. சொற்களை இவர் எல்லாவிதமான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார். சொற்களின் மீதே காமுறுகிறார். வாழ்க்கையின் தத்துவத்துவங்கள், அறிவியல் பாடங்கள் எல்லாமே சொற்களின் சித்திரமாக விரிகிறது. காமலீலைகளை விதவிதமாய் சொற்களை பூஜிக்கும் மொழியில் சொல்கிறார். உதாரணத்துக்கு சொல்வதென்றால் ‘வீதியில் கிடந்த சொல்’ என்ற கவிதையை சொல்லலாம். மேலும் பல கவிதைகளில் சொல்லையும் காமத்தையும் இணைத்து ஒரு வர்ணக் கலவை ஓவியம் போல வரைகிறார் நந்தா. //சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்// என்ற சொற்றொடர் அதைப் போன்றது. அதுவே ‘கிருமி தொற்றிய சொல்லாகி’, ‘360 டிகிரிக்கும் தன் தலையைச் சுழற்றி’ சமகாலப் பிரச்சனையையும் பேசுகிறது. இவர் கவிதைகள் அவரே சொல்வது போல, ‘சொற்களின் உடற்பயிற்சிக் கூடம்’.

 

// விஸ்வரூப கணத்தில் சிலையானது அலை // என்ற வரியின் சொற் கோர்வையில் இருக்கும் வசீகரம் அற்புதமான ஒரு சிலையை எப்படி ரசிப்போமோ அதே அளவுக்கான பரவசத்தைக் கொடுக்கிறது. // வாகனச் சிறையில் நூற்று நாற்பது நிமிடங்கள் // என்ற வரி போக்குவரத்து நெரிசலை இப்படியும் சொல்லமுடியுமோ என்ற ஆச்சரியம் மேலோங்க நிற்கிறது.

// கிளம்பும் முன் கார் சக்கரம் மிதித்து

வழிந்த எலுமிச்சை சாறு

கவிழ்ந்த கமண்டல நீராகத்

திரும்பி வருகிறது

உன் அதிகாலை லெமன் டீயில் //

இந்த வரிகள் கிளர்த்தும் கலவை உணர்வு, எலுமிச்சை காவு கொடுக்கும் குற்றவுணர்ச்சி, அதன் உயிர்தெழுதல் போன்றோ பழி வாங்குதல் போன்றோ ஒருவிதத்தில் நம் வாழ்வுடன் இணையும் அதன் சாறு, ருசி ஆயினும் மறுபடி நம் வயிற்றில் மரித்து தானே போகிறது என்றொரு தத்துவம். இடையே ‘கவிழ்ந்த கமண்டல நீர்’ என்றொரு சித்திரம். இத்தனையையும் அடக்கி எழுதப்பட்ட ஐந்து வரிகள் ஒரு கவிதையின் பகுதி.

 

நந்தாவின் கவிதைகளில் தாள லயம் கொண்டு முடியும் வரிகள், அடுத்தத்தடுத்த வார்த்தைகளில் சந்தம் அமைப்பவை போன்ற வரிகள் , ஏராளமானவை. கவிதையின் தொடக்க காலத்திலும், மரபு கவிதைகளிலும், காணப்பட்ட விதிமுறைகளை மீறும் புதுக்கவிதைகளின் அடுத்த வடிவமான நவீன கவிதைகளில் சந்தம், தாள லயம் சேர்க்கும் மீறலை நந்தா செய்கிறார். // ஆதி மனிதன் வரைந்தான்/மீதி மனிதனை //, // உச்சிக் கிளை/பச்சைக் கிளி //, // அண்டத்தின் குண்டம் மீது //, // பரஸ்பரம் அபஸ்வரம் // போன்ற பல உதாரணங்களை இந்த தொகுப்பிலிருந்து காட்டலாம். பெரும்பாலான கவிதைகளில் இந்த வார்த்தை விளையாட்டு இருக்கிறது. அது சில இடங்களில் சலிப்பையும் கொடுக்கிறது. வார்த்தைகளில் இசையின் சாயலில் அமைத்த கவிதைகள் பல இருந்தாலும் ‘இசைக்கப்படும் சொற்கள்’ என்ற கவிதையில் சொற்களை இசைக்கருவியின் மீது இசைக்கச் செய்து கவிதையிலிருந்து ஒரு இசையை எழுப்புகிறார் நந்தா. ‘ஸ்வரபூதம்’ என்ற கவிதையில் // ஆலாபனைக் குமிழ் உடைந்து ஒழுகும்/மொழியற்ற இன்ப வாதையில் // என்ற வரிகளில் இசையை அது தரும் சொற்களால் விளக்க முடியாத பரவச நிலையை மிக அற்புதமாகப் பதிவு செய்கிறார்.

 

பத்திகள் எதுவும் பிரிக்கப்பட்டாமல் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் எங்கே நிறுத்த வேண்டும் எந்த வாக்கியத்தை எந்த வாக்கியத்தோடு சேர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று பலமான வாசக கவனத்தைக் கோரி நிற்கிறன. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் இவர் அடுக்கும் காட்சிகள் மிக அதிகமானவை. மிக கனமானவை. அவை வாகசர் மேல் ஏற்றும் பாரம் மிகப் பெரியது. கவிதைக்குள் சிதறிக்கிடக்கும் சொற்கள் அதிகமோ என்று சோர்வைத் தரவல்லவை. அவற்றைப் புரிந்து கவிதை சொல்லும் அனுபவத்தை எட்ட மறுபடி மறுபடி வாசிக்க வேண்டிய கட்டாயத்தைக் கேட்பவை. இந்தக் கட்டமைம்பே அக்கவிதைகள் மீதான ஆர்வத்தையும் தூண்டுபவை. இன்னும் சற்றே இலகுவான மொழியில் சொன்னால் இந்த கவிதைகள் பெரும் வாகசப்பரப்பை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த பரிசோதனையை யாரும் செய்து தானே பார்க்க வேண்டும். அந்த விதத்தில் நந்தாவின் கவிதைகள் பாராட்டபட வேண்டியவை.

Monday, April 25, 2022

கசகசா பழம் உண்ணும் பறவைகளைத் தேடி

பெங்களூர் மைத்திரி லே அவுட் உள்ளே வீடு தேடிப் பிடித்ததற்கு முக்கியமான  காரணம் லே அவுட் முழுக்க நிறைய மரங்களும், அவை பூக்கும் விதவிதமான மலர்களும் ஆகும். போக்குவரத்து நெரிசலில் மூச்சுத் திணறும் நாட்களிலும் லே அவுட் நுழைவாயிலில் நுழைந்த உடனேயே மிகப்பெரிய ஆசுவாசம் கிடைக்கும். சில நூறு தனிமனைகளில் பல நூறு வீடுகளைக் கட்டி பெங்களூர் நெருக்கடியை இந்த லே அவுட் உள்ளேயே கொண்டு வர, லே அவுட் குடிமக்கள் எவ்வளவோ முயன்றாலும் சில நூறு மரங்களாவது இன்னும் இதனுள் எஞ்சியிருப்பது நிம்மதியளிக்கும் விஷயம்.


சில வருடங்களுக்கு முன்பு, நானும் எனது நண்பர் நந்தாகுமாரனும் யஷஸ்வினி என்ற எங்கள் தோழிக்கு அவரது சித்தாப்பாவின் கவிதைகளைப் புரிந்துகொள்ள உதவி செய்தோம். எங்கள் தோழி யஷஸ்வினி கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவர் ஆவணப் படங்களை எடுக்கும் இலக்கிய ஆளுமை. பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். பல தளங்களில் விரிவும் ஆழுமும் கொண்ட அவரது அறிவும், எந்த ஒரு விஷயத்தையும் அதன் அடி ஆழம் வரை சென்று தேடும் பிடிவாதமான உறுதியும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் என்னை பரவசப்படுத்தும்.  பெண் ஆளுமை ஒருத்தி எவ்வாறு இருக்க வேண்டுமென்று நான் கனவு கண்டேனோ அவ்வாறு இருக்கும் பெண். 


யஷஸ்வினியின் சித்தப்பா தமிழ் கவிஞர். சில சிறப்பான கவிதைகளைத் தமிழுக்கு வழங்கியவர். யஷஸ்வினி பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதன் பொருட்டு  பெங்களூர் நகரவாசிகள் இழந்த விஷயங்கள் மீது தீராத கோபம் கொண்டு அதை "கோஸ்ட்" என்ற ஆவணப்படத்தின் வழியாக வெளிப்படுத்திருத்தியிருந்தார். பெங்களூரை வேறுப்பட்ட கோணத்தில் படமெடுத்திருந்தார். பெங்களூரின் பரிமாணம் அந்த ஆவணத் திரைப்படத்தின் வழியாக சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அவரது உறவினர் "நீ ஏன் நம்ம ... பற்றி ஒரு ஆவணப் படமெடுக்கக் கூடாது?" என்ற கேட்டது யஷஸ்வினி மனதில் ஆழமான தேடல் ஒன்றை உருவாக்கியது. தமிழில் கவிதைகளை எழுதிய தன் சித்தப்பாவைப் பற்றி ஏதேனும் பதிவு செய்ய வேண்டுமென்றால் அவரையும் அவர் படைப்புகளையும் முழுதாக அறிய வேண்டுமென்று நினைத்தார். யஷஸ்வினி தனது ஒவ்வொரு திரையாக்கத்துக்கும் கொடுக்கும் உழைப்பு அபரீதமானது. அவர் எப்போதுமே எங்கள் வியப்புக்குரியவர்.


யஷஸ்வினிக்கு தமிழ் தெரியாது. (ஆனால் இந்த பதிவை நான் தட்டச்சிக் கொண்டிருக்கும் 2022 ஏப்ரல் 25 ஆம் தேதி அவருக்கு சில தமிழ் வார்த்தைகளைத் தட்டச்சும் அளவுக்குத் தமிழ் தெரியும்.) அதனால் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளைப் பற்றி முழுமையாக அறியும் முயற்சியில் தேடித் தேடி என்னையும் என் வழி நந்தாவையும் கண்டடைந்தார். நந்தா யஷஸ்வினியின் சித்தப்பா எழுதிய தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். யஷஸ்வினியின் அப்பாவும் யஷஸ்வினிக்காக அதே கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளையும் மூலத் தமிழ்க்கவிதையையும் நாங்கள் கூடி விவாதித்து வந்தோம். சில சமயம் என் வீட்டிலும், சில முறை நந்தாவின் வீட்டிலும், பல முறை யஷஸ்வினியின் ஸ்டியோவிலும் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேல் இந்த பணியில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த உரையாடல்கள் எனக்குப் பல அனுபவங்களையும் பல புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது. பெரும்பாலும் இந்த உரையாடல்கள் அரை நாளிலிருந்து சில சமயம் முழுநாள் வரை தொடர்ந்தது உண்டு.


அப்படி யஷஸ்வினியும், நந்தாவும் எங்கள் வீட்டுக்கு வரும் போது உரையாட வரும்போது, இரண்டு மணி நேரம் உரையாடல் நடக்கும். பின்னர் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டு எங்கள் லே அவுட்டில் சிறு நடைப்பயணம் மேற்கொள்வோம். இது போன்ற இடைவெளியை நாங்கள் நந்தா வீட்டிலோ, யஷஸ்வினி வீட்டிலோ எடுத்துக் கொண்ட நினைவில்லை. பெரும்பாலும் என் வீட்டுக்கு வரும் போது அதைச் செய்திருக்கிறோம். காரணம் நந்தா, யஷஸ்வினி இருவருக்குமே எங்கள் வீடு அமைந்திருக்கும் அந்த பசுங்சூழல் பிடித்தது காரணமாக இருக்கலாம். அப்படி நடைபயணம் செய்யும் போது அங்கிருக்கும் மரங்கள், பறவைகள், இன்னும் பலபலவற்றைப் பற்றி யஷஸ்வினி சொல்லிக் கொண்டே வருவார். நந்தாவும் ஏதாவது அதற்கு இணையாகச் சொல்வார். நான் இருவரையும் வாய்பிளந்து பார்த்துக் கொண்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டும் வருவேன். 



எங்கள் லே அவுட்டில் கசகசா பழமரங்கள் அதிகமுண்டு. மிக அடர்த்தியாக வளரும் கசகசா பழ மரத்தில் மிகச்சிறிய அளவில் சிவந்த பழங்கள் காய்த்திருக்கும். சிங்கபூர் செர்ரி பழங்கள் என்றும் இதைச் சொல்கின்றார்கள். பவள தொங்கட்டான் போல இருக்கும் அந்த பழங்கள் மிக இனிப்பாக இருக்கும். கசகசா மரம் பூக்கும் தருணம் இன்னும் அழகானது. பச்சை வானத்தில் வெள்ளை நட்சத்திரங்களைப் பொதித்தது போல மலர்கள் அடர்ந்து பூக்கும். 

நாங்கள் நடக்கும் போது கசகசா மரம் தெரிந்தால் உடனடியாக அதனருகில் சென்று அதிலிருக்கும் பழங்களைப் பறித்து எனக்குக் கொடுத்துவிட்டு தானும் உண்பார் யஷஸ்வினி. அப்போதெல்லாம் கிளைக்கு எங்கோ ஒன்றோ இரண்டோ காணக் கிடைக்கும் பழமாய் அந்த கசகசா பழமிருந்தது. நந்தா "அது சிறு பறவைகளின் உணவு. நாம் அவற்றைச் சாப்பிட்டால் அவை என்ன செய்யும் பாவம்" என்பார். "அதற்கு ஏகப்பட்ட மரம் இருக்கும், பிற பழங்களுமிருக்கும்" என்று சொல்லி யஷஸ்வினி மறுபடி பழத்தைப் பறித்து உண்பார் என்னிடமும் கொடுப்பார். அவருக்கு அந்த பழங்கள் மிகப்பிடிக்கும் என்றும் சொல்வார். எனக்கும் பிடிக்கும். ஆனால் நந்தா "பறவைகளுக்கானது" என்று சொல்வதை நினைத்துக் கொஞ்சம் குற்றவுணர்வோடு அதை உண்பேன்.


இப்போதும் கசகசா மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் உரையாடல் நினைவுக்கு வரும். இன்று வெளியில் காய்கறி வாங்கி வர போன போது பல கசகசா மரங்கள் அதன் கிளைகள் முழுவதும் தன் பவள பழங்களைத் தொங்க விட்டிருந்தது. ஒவ்வொரு கிளையிலும் அவ்வளவு பழங்கள். கைநிறைய கசகசா பழங்களைக் கொண்டு வந்தேன். 
கூடவே பழைய நினைவுகளையும். நந்தா நீங்கள் சொன்னது போல அவை சிறு பறவைகளுக்கானவை. ஆனால் பெங்களூரில் பறவைகள் எல்லாமே தொற்று காலத்து மனிதர்கள் போல நகர் நீங்கி எங்கோ போய்விட்டன என்று நினைக்கிறேன். கசகசா மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களும், அதன் நிழலில் உதிர்ந்து கிடக்கும் பழங்களும் பறவைகள் வரவுக்காக ஏங்கிக் கிடக்கின்றன. பறவைகள் ஒலியே எங்கள் முழு நிலப்பரப்பில் கேட்கவில்லை. எனக்குப் பிடித்த இந்த கசகசா பழங்களை நான் உண்ணாமல் இருக்க விழைகிறேன். பெங்களூருக்குப் பறவைகளை வரச்சொல்லுங்களேன். 


இனி நந்தா, லாவண்யா, யஷஸ்வினி சந்திப்பு எப்படி ஒரு வசந்தகாலத்தில் நடந்த நினைவு நாடகமாக இருக்குமோ போலவே கசகசா மரத்தில் கனி காய்க்கக் காய்க்க உண்டு செல்லும் பறவைகள் வாழும் நகரமாய் பெங்களூர் மாறுவதும் இனி கனவாகவே இருக்கும்.

Saturday, March 12, 2022

Feb 2022 - சில கதைகள்

 கதை: அடிகுச்சி

ஆசிரியர்; சு சரவணன்
இதழ்: யாவரும்.காம்

கலையும் சாதி அமைப்பும் இணையும் நுட்பமான முடிச்சை தொட்டிருக்கிறது. ஆசிரியரின் இரண்டாவது கதை என்ற குறிப்பும் இருக்கிறது. மௌனமாய் உணர்த்தப்பட வேண்டியவை வார்த்தைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது என்பது மட்டும் சிறு குறை

*

கதை: இடுக்கண்
ஆசிரியர்: அசோக்ராஜ்
இதழ்: யாவரும்.காம்

கதை ஆரம்பித்த முதல்வரியிலேயே உள் இழுத்துக்கொள்ளும் கதை நண்பரிடம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த கதை. மிக இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது. கதையில் புதுமை என்று எதுவுமில்லை ஆனால் மிக எதார்த்தமான நிஜம் போலிருப்பது இந்த கதையின் பலம்.

*

கதை: சூலி
ஆசிரியர்: வைரவன்
இதழ்: வனம்

பிரசவத்துக்கு மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு வீட்டின் தனிமை கொடுக்கும் ஆசுவாசுவசத்தையும் பயத்தையும் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். பெங்களூரில் புறாக்கள் அதிகம் ஆனால் அவை ஏப்ரல் மே மாதங்களில் தான் இனப்பெருக்கம் செய்யும். இந்த கதையில் பெங்களூர் குளிர் வீட்டு பால்கனியின் புறாக்கூடு அதன் முட்டை என்பது புனைவுக்காக சரி என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் வீட்டில் குளவி கூடு கட்டும் சகுனத்தை வாரிசை எதிர்பார்த்திருக்கும் வீட்டுக்கு நல்ல செய்தியை தரும் என்ற நம்பிக்கையுண்டு அதை புறாக்கூடு அதன் முட்டையோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். வாசிக்க சிக்கல் இல்லாத கதை. ஆனால் கரு மிகவும் பழையது. சொல்லிய விதமும் பல புறாக்கதைகளில் வந்திருப்பது தான்.

*

கதை: ஈய உயிரியின் பாடல்
ஆசிரியர்: செந்தூரன் ஈஸ்வரநாதன்
இதழ்: அகழ்

அதிகாரத்துக்கு எதிர்க்கும் குரல் எவ்வளவு ஒடுக்கப்படுகிறதோ அதே விட வேகமாக ஒலிக்கிறது. அதை மௌன சாட்சியாக பார்க்கும் கோணத்தின் கதையின் காட்சி வரைவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கதையின் முக்கிய அம்சம் இதன் வடிவம். சில காட்சிகளையும் ஓசைகளையும் நாடகபாணியில் அல்லது திரைகதை வடிவில் சொல்லியிருப்பது. முழுகதையை சொல்லாமல் சில புள்ளிகளை ஆங்காங்கே வைத்து நீங்களே கதையை புனைந்து கொள்ளுங்கள் என்ற வாசகர் மேல் பெரும் நம்பிக்கை வைத்து எழுதியிருக்கும் கதை. ஓரிரு வரிகளில் வரும் கதாபாத்திரங்கள் கூட மனிதில் நிற்கும் படி எழுதிருப்பது கதையின் பலம். ஆனால் இதன் மொழியிருக்கும் இதனுள்ளே பகடிக்காக சொன்ன விஷயத்தை கூட மிக சீரியஸான விஷயம் போல வாசகர்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.

*

Sunday, February 13, 2022

பிரம்மாண்டத்தை சொல்லின் அடக்கும் வித்தை


கவிஞர் எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவர் சந்திரா. இவரை பற்றி நான் அறிமுகம் செய்வது மிளகு காட்டில் மிளகை பேனாவால் வரைந்து இது தான் மிளகு என்று சொல்வதற்கு ஒப்பானது. இவரது மிளகு தொகுப்பு கோட்டை தமிழ் முற்றம் விருது பெற்றது. வேலூர் கோட்டைக்கும் எனக்கு சில சில நினைவுகள் உண்டு. ஓரிருமுறை சென்றிருக்கிறேன். இப்போது கோட்டை தமிழ் முற்றம் விருது நிகழ்வுக்காக பேச முடியுமா என்று கயல்  என்னைக் கேட்டுக் கொண்ட போது தயக்கமேயின்றி ஒப்புக்கொண்டேன். காரணம் வேலூர் கோட்டை தமிழ் முற்றத்தின் நிறுவனர் ஒரு பெண். கயல்விழி என்ற என் அன்புதொழி. அதன் முதல் விருதை பெற்றது சந்திரா என்ற பெண் கவிஞர். இவ்விரு காரணங்களாலேயே எந்த ஒரு மறுபேச்சுமில்லாது சந்திராவின் மிளகு தொகுப்பு பற்றி நான் பேச ஒப்புக்கொண்டேன்.

 

சந்திரா இந்த தொகுப்பில் ஒரு கவிதையில் மூங்கில் மலர்கள் என்ற ஒரு பதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். திருச்சிப் போன்ற கந்தக பூமியில் பிறந்தவளுக்கு பசுமை என்பது நெற்பயிறிலும் வாழையிலும் மட்டுமே பரிச்சயம். மூங்கில்களை பார்ப்பதே அறிது. அது பூக்கவும் செய்யும் என்பது அதிசயமல்லமல் வெறென்னவாக இருக்கும்? பின்னர் இணையத்தில் தேடி மூங்கில் மலர் எப்படியிருக்குமென்று பார்த்தேன். அது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்த நடன மங்கை மயில் தோகை விரிந்தாடுவது போல  தனது நடன ஆடையின் மடிப்புகள் விரிந்து நிற்கும் ஒரு நொடி நேரத்தை உறைய வைத்து புகைப்படம் எடுத்தது போல இருந்தது. அப்படிப்பட்ட மூங்கில் மலரை அழகை தரிசிக்க காரணமான கவிதைக்கு இந்த உரையை சமர்ப்பித்து இந்த உரையை தொடங்குகிறேன்.

 

மூங்கில் மலர் மட்டுமல்ல இவரது கவிதைகள் வழியாக புதுப்புது பறவைகள், மலர்கள், செடிகள், புல்வகை, மரங்கள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளது என்ற விதத்தில் இந்த கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இந்த தொகுப்பில் 100 கவிதைகள் இருக்கின்றன. இது "மலை என்பது ஒரு நீளமான மரம்", "புறக்கணிப்பின் புற்றில் வாழ்கிறேன்", "நானொரு வெட்டப்பட்ட மரம்" என்ற மூன்று கவிதை தொகுப்புகளை உள்ளடக்கிய கவிதை தொகுப்பு. இந்த தொகுப்பில் நான்கே வரிகளோடும் கவிதைகள் இருக்கின்றன. நான்கு பக்கத்துக்கு விரியும் கவிதையும் இருக்கிறது. கவிதைகள் எந்த வடிவம் கட்டுபாடும் இல்லாத free format ல் இருக்கின்றது. சில கவிதைகள் பத்திகளாக பிரியும் சாத்தியங்கள் இருந்தாலும் ஒரே பத்தியாக எழுதப்பட்டு இருக்கிறது.

 

இந்த கவிதைகளில் கவிதையை சொல்வது சிறு பெண், பதின்பருவ பெண், விடலை காதல் கொள்ளும் பெண், நடுவயது குடும்பப் பெண், கட்டுபாடுகளை துறந்த நாடோடிப் பெண், திரைத்துறையில் இயங்கும் பெண், மலையத்தி, ஒரு சில இடங்களில் கவிதை சொல்லியின் பாட்டி, அம்மா என்று எல்லா வயது பெண்களும் அவர்களோடு சில ஆண்களும் இருக்கின்றனர்.

 

சந்திராவின் கவிதையில் மலை மிளகின் வாசனை, கோடி ரோஜாக்களின் நறுமணம், ஆரெஸ்வதி தைல வாசம், தாழம்பூ நாற்றம், பவளமல்லியின் மென்மணம் என்று பலவித மணம் கவிதையிலிருந்து என்று பிரித்தறிய முடியாத அளவு வீசுகிறது. பசிய பசிய வாழும் மலை திடிரென துரத்துப்பட்ட நகரத்துக்கு வந்த திரும்ப விளைந்தும் திரும்பப் போகமுடியாமலும் வெறுப்பின் துர்நாற்றத்தையும் வீசுகிறது

 

பிரம்மாண்டத்தை சொற்றொடரில் அடக்கும் மாயவித்தையை சந்திராவின் சில கவிதைகள் செய்கின்றன. அதில் ஒன்று மலையை “பேழைக்குள் ததும்பும் நீராய்” அசைக்கிறது.  இந்த கவிதை ஒரு இன்பமான மனநிலையை குறிக்கும் சொற்களால் எழுதப்பட்ட கவிதை. அந்த கவிதையில் எழுதப்பட்ட வரிகளாலே சொல்வதென்றால் “சாய்மானம் இல்லாமல் நிலம் மேலும்புகிறது/ செம்மறி ஆடுகள் பறக்கின்றன” என்பது பரவச மனநிலையை குறிக்கிறதென்றாலும், மலையை நிலத்தை கண்ணீர் ததும்பும் விழிகளோடு பார்த்து எழுதப்பட்ட வரிகள் போலவும் தோன்றுகிறது, மன நிறையும் போதும் சில சமயம் கண்கள் நிறையும் அல்லவா அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

 

 அதே போல “என்னோடு வாழ்வது” என்ற கவிதையில் “அத்தனை எளிதல்ல/ஒரு மலையை பிடிங்கி/உன் வீட்டுக்குள் வைத்துகொள்வது” இவ்வரிகள் ஒரு பெண்மையின் பிரமாண்டத்தை, அவள் சக்தியை, அரூபமாய் அவளை சூழ்திருக்கும் பேருலகை பெருங்கனவை மூன்றே வரிகளில் அடக்கி அவ்வளவு கூர்மையாக சொல்லிவிடுக்கிறது.

 

“மலையை காலணியாக அணிதல்” என்ற தலைப்பிட்ட கவிதையும் உண்டு. அதன் முதல் வரி “சதா மலை மீது நடந்து கொண்டிருக்கிறேன்” என்பது ஒரு பிரம்மாண்டமான காட்சியை கண்முன் நிகழ்த்துகிறது. மலையில் நடப்பது அதாவது மலையே காலோடு எடுத்துக் கொண்டு நடப்பதும் என்பதே அந்த காட்சி. இன்னொரு கவிதையில் சிறுமியின் விளையாட்டு பொருளாகிறது மலை, அவள் விரல்களாய் அதை அசைக்கும் போது குறுமிளகாய் எம்பி குதிக்கிறது. அது ஒரு மாய எதார்த்த விளையாட்டு.

 

இந்த ஒரு கவிதையில் மட்டுமில்லாமல் பல கவிதைகளில் மாய எதார்த்தம் மிக அசாதாரணமாய் வந்து போகிறது. “மாய இழை” என்ற கவிதையில் வரும் எல்லாப் பெண்களின் ஆடைகளிலிருக்கும் பூக்கள் பறப்பது போல காட்சி இருக்கிறது. ஆனால் அந்த கவிதையில் தொடக்கம் பதின்வயதை நெருக்கும் ஒரு பெண்ணின் சோகத்தை அவமானத்தை சொல்லத் தவிக்கிறது. ரத்தக்கறையை கழுவும் பெண் ஒரு படிமம். அந்த படிமத்தை வளர்த்தெடுத்திருந்தால் கவிதை வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கும்.

 

மலையடிவாரமும் அடிவானமும் கலக்கும் மாய இடம் இன்னொரு கவிதையில் கவிதை சொல்லி ஏறிபார்க்க விரும்பும் மாயநிலமாகவும் அங்கிருந்து அவர் திரும்பி வர விரும்பாத மனமும் பதிவாகியிருக்கிறது. நமக்கும் அங்கிருந்து திரும்ப பிடிக்கவில்லை…

 

சந்திராவின் இன்னொரு கவிதையில் “மலையை சேர்ந்தவளின் பாதத்திலிருந்து உயர்திருக்கிறது மலை. கடல் சார்ந்தவனின் பாதங்களில் கடல் பெருகிறது.” ஒவ்வொரு பிரதேச மனிதர்களின் உடல்மொழி அவர்கள் ஊரை காட்டிக் கொடுக்கும் அந்த மாயத்தை எழுதிச் செல்லும் கவிதை “அறை காலியில்லை”

 

மலைகுடிகளை மலையின் ஆதி மைந்தர்களை அதிகாரம் அழித்தது போல வரும் கவிதைகளில் சந்திராவின் அரசியல் பார்வையும் கூடவே “மலை விழுங்குதல்” என்ற கவிதையில் கவிதைசொல்லி தன்னை தன் நிலத்திலிருந்து அப்புறபடுத்தும் அதிகாரியின் கண் முன்னே அவளுக்கு தூரத்தில் தெரியும் மலையை விழுங்குகிறாள் அன்றிலிருந்து அவள் கண்களில் மலைநதி பாய்கிறது. துயரமான தருணத்தையும் மாய எதார்த்த மொழியில் செய்து பார்க்கும் வித்தை சந்திராவுக்கு மிக அழகாக கைகூடியிருக்கிறது.

 

 சொந்த நிலத்திலிருந்து துரத்தப்படும் மக்களின் பாடுகளை பல கவிதைகளில் பதிவு செய்கிறார் சந்திரா. அவை கண்ணீர் பிழியும் கவிதைகளாக, மனதை துளைக்கும் கவிதைகளாக மட்டுமல்லாது கவிதைக்கான அழகியலோடு இருக்கின்றது. அரசியல், சோசியலிசம் சார்ந்த கவிதைகள் எழுதுவது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினால் அவை புரட்சி கூச்சல்களாய் மாறிவிடும் அபாயம் உண்டு. அப்படியில்லாம் ஆதிகுடிகளின் நிலம் அபகரிக்கப்பட்ட அரசியல், நிறம் அரசியல் இவற்றையெல்லாம் பல பரிமாணங்களில் கவிதையாக்கியிருக்கிறார் சந்திரா.

 

வான்கோவின் ஓவியம் என்ற கவிதையில் புரட்சிக்காரர்களுக்கு அதிகாரிகளுக்கும் இடையில் ஓவியம் எல்லைகோடுகளாகி புரட்சிக்காரர்களை ஓவியத்துக்குள்ளும் கவசதொப்பிக்காரர்களை ஓவியத்துக்கு வெளியிலும் நிறுத்துகிறது. மிகமிக வித்தியாசமான கற்பனை மிக அழகான கவிதையும் கூட.. மலை நில அபகரிப்பு மட்டுமல்ல தற்கால அரசியலையும் பகடி செய்யும் கவிதைகள் சிலதும் உண்டும் “உங்கள் ரெஃப்ரி காவி உடை அணிந்திருக்கிறார்” கவிதை மாட்டிறைச்சி அரசியல், ராமஜென்ம பூமியின் அரசியல் தத்துவங்களை சார்ந்து கேள்வியெழுப்புகிறது. சந்திராவின் காதல் கவிதைகளில் கூட அரசியல் எட்டிப்பார்க்கிறது சில பெண்ணியமும் பேசுகிறது.

 

பெண்ணியம் பேசும் கவிதைகளில் இரண்டு பெண்கள் கவிதை மிக சிறப்பானது.  “ காலம் வந்தால் இலவம் காய்க்குள் அடங்குமா/அது பறந்து பறந்து எங்கு செல்லும்/எப்படியும் ஒரு மெத்தைக்குள் மூச்சு முட்டி சாகும்” வளரிளம் பெண் கன்னிமை கனவுகளோடு குடும்ப வாழ்வில் நுழைந்துவதும். நிசர்தனம் சில சமயம் அவள் கண்ட கனவுக்கு வெளியே பெரு அதிர்ச்சி தரும் வண்ணமிருக்கக்கூடும் என்பதை இவ்வளவு எளிதான வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது சந்திராவால்.

 

“என் அறை ஜன்னல் / எனக்கு எட்டாத உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது” என்ற மற்றொரு கவிதையின் வரிகளில் தனக்கான கட்டுபாடுகள் கொடுக்கும் அதீத திணறலை வெளிப்படுத்தியிருக்கும் கவிதை சொல்லி “கதவைத் திறந்து வெளியேறி செல்ல/ எனக்கு எல்லா நியாயங்களும் இருக்கிறது” என்று மற்றொரு கவிதையில் குடும்ப அமைப்பிலிருக்கும் கோளாறுகளை பதிவு செய்கிறார்.  அதோடு அந்த அமைப்பை விட்டு வெளியேற முடியாத அவலத்தையும் சேர்த்தே பதிவிடுகிறார். திரைத்தொழிலில் பொருட்டு பெண் உடலை அவமானம் செய்யும் குரூரத்துக்கு மௌன சாட்சியாய் இருக்க வேண்டிய குற்ற உணர்வு பொங்கும் கவிதையையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

 

சிறுவயத்தில் பெண்கள் இயல்பாகவே நிறத்தையும் வடிவத்தை முன்னிட்ட செய்யப்படும் கேலிகளால் அடையும் தாழ்வு மனப்பான்மையை மிக அழகாக சில கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் சந்திரா. சிறுவயதில் கறுப்பாக இருக்கிறேன் என்ற நினைக்கும் பெண் மாதளிரின் மினுமினு நிறம் அவ்வளவு அழகானதென்று உணர்வதற்கு பல வருடங்கள் எடுக்கும்.

 

 

சிறுவயதின் புறக்கணிப்புகள் என்றைக்கும் ஆராத வடுவாகிவிடுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் குழந்தையின் வளர்ச்சியை பார்த்தே வயது முடிவாகியது. பள்ளிக்கு சேர்க்கும் போது வலது கை தலையை சுற்றி இடது காதை தொடவில்லை என்றால் பள்ளியில் சேர்க்கமாட்டார்கள். அந்த புறக்கணிப்பு குழந்தைக்கு எந்த மனநிலையை ஏற்படுத்தும் என்பதை தனது கவிதையில் அற்புதமாக கொண்டு வந்திருப்பார் சந்திரா. ஒவ்வொரு புறக்கணிப்பும் கவிதைசொல்லியை நாய் போல் குரைக்கச் செய்தது என்பது ஒரு குறிப்பு. புறக்கணிப்பை தாங்கிக் கொள்ள கவிதை சொல்லி கவன ஈர்ப்புக்காக ஏதேனும் செய்யும் விசித்திரத்தை குறிப்பிடுகிறது. என்னருமை சிறு குருமிளகே என்று அன்று இந்த கவிதைசொல்லியை யாராவது வாரி அணைந்து ஆற்றுபடுத்தியிருந்தால் இந்த கவிதைகளை ஒருவேளை நாம் இழந்திருக்கக் கூடும். இன்னொரு கவிதையில் நீ பிறந்த போது கறுத்த எலிக்குஞ்சு போலிருந்தாய் என்று எழுதியிருக்கிறார். இந்த நிற அரசியல் காலம் காலமாய் இன்னும் தொடரும் பிரச்சனை.

 

சந்திராவின் பல கவிதைகளில், பால்யத்தை நோக்கி திரும்ப விழையும் பேரிச்சையையும் தொடர்ந்து பதிவாகிறது “தன்னை ஆளுயர கண்ணாடி நிறைத்து வைத்திருப்பதை பார்த்தவள் அதை அள்ளி அள்ளி வெளியே உற்றினாள். சிதறிய துண்டுகளிலெல்லாம் அவள் பட்டுத்துணியணிந்த அவளது பொம்மைகள் சிரித்தன.” இப்படிச் சொல்லும் வரிகளில் கவிதைச் சொல்லி பொம்மை வைத்து விளையாடும் சிறுமிக்கு திரும்ப ஏங்குவது புரிகிறது.

 

இன்னும் பல கவிதைகளில் இந்த ஏக்கம் பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது “கடந்தகாலத்தை நத்தையின் முதுகில் ஏற்றிவிட்டாய் அது தார்ச்சாலையில் பொசுங்கியபடி வந்து கொண்டிருக்கிறது” என்ற வரிகளில் கடந்தகாலத்தில் இழந்தவற்றை ஒரு காலஇயந்திரம் போல ஆரஞ்சு விற்கும் சிறுமியின் கூடைக்குள் ஏறி சென்று சரிசெய்ய விழைகிறது.

 

மலைக்காட்டின் வசந்தகால சிறுமியோ சந்திராவின் கவிதையில் தான் ஊதித்தள்ளிய வசந்த கால காற்று வளையத்தை பற்றிக் கொண்டு நகரத்தின் அங்காடித் தெருவில் வந்து இறங்குகிறாள் அதன் பகட்டில் மயங்கி நகரிலிலே தொலைந்து போகிறாள். அவள் வசந்தகாலம் அவளை தேடுகிறது.

 

இன்னும் பல கவிதைகளில் தொலைந்த பால்யத்தை, வேலைக்காக விட்டு பெயர்ந்த பசும் மலையை, பால்ய நினைவுகளை பதியனிடுகிறது. மிளகு தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் நிலம் மலையும் மலைக்காடும் அங்கேயிருக்கும் பலவித வாசனைகளும் வண்ணங்களும். சில கவிதைகள் கடலும் கடல் சார் நிலப்பரப்பின் கவிதைகள்.

 

ஆகவே தன்னிச்சையாக சில கவிதைகள்  சங்ககவிதையின் நீட்சியாக பரிமளிக்கின்றன. மரையா என்ற கவிதையில் பின்குறிப்பாக  திணை குறிஞ்சி என்றும் பொழுதுகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அந்த கவிதையில் திணையில் கருபொருளான கூடலும் கூடல் நிமித்தமும் என்று தொடங்கி இடையிலேயே திணை மயக்கமாய் ஊடலும் ஊடல் நிமித்தமாய் மாறுகிறது.

 

கானவா என்று இன்னொரு கவிதையில் வேங்கை மலர் உதிரும் தருணம் கவிதை சொல்லியின் உடல் சிறுக்கிறது. இன்னொரு கவிதையில் ஜன்னலிலிருந்து பார்க்கும் துண்டு நிலம் போன்ற மலையும் அதன் உச்சியில் பூக்களை உதிர்க்கும் மஞ்சக்கடம்பமரம் அதை உணரும் மனக்கண். இவ்விரண்டு கவிதையுமே கொன் ஊர் துஞ்சுதும் யாம் துஞ்சலமே சங்க கவிதையின் தொடர்ச்சி போலவே எனக்குத் தோன்றியது. நொஞ்சி மலர் உதிரும் ஓசையை கேட்கும் தலைவியை ஒத்தவளே வேங்கை மலர் உதிர்தலை, கடம்ப மலர் உதிர்தலை உணரும் கவிதை சொல்லி.

 

மேலும் ஐந்திணையிலும் சொல்லப்படாத நம் வாழ்வு கவிதையும் சங்கத்தின் நறுமணத்தை கொஞ்சம் பூசிக் கொண்ட வருகிறது. போதை புல் மீது முல்லைப் பூவாய் மினுக்குகின்றன பனித்துளிகள் என்ற இடமும் சங்க கவிதையின் உவமை நயத்தை நினைவுக்குள் கொண்டு வருகிறது

 

வட்டார வழக்குகள், புதிய வார்த்தைகள் (காடோடி), இதுவரை நாள் கேள்விப்படாத பூக்கள் மரங்கள் பறவைகள் என்ற பல சொற்களை தேடியறிந்து கொள்ள இந்த தொகுப்பு எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. பருப்பலகை என்பது தேனீ வட்டார வழக்காக இருக்கலாம். போதை புல் என்பது திருச்சிவாழ் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

அது மட்டுமல்ல அடைக்கலாங்குருவி, காரிகை நோன்பு, வேங்கை பூ, பீனிக்குருவி, அக்காக்கா குருவி(குயில்?), இருவாட்சி பறவை, தடிசம்பழம், இச்சிப் பழம் என்ற பலவற்றையும் இந்த தொகுப்பில் முதல் அறிமுகம் கொள்கிறேன். அதெற்கென சந்திராவுக்கு ஒரு பிரத்தியோக நன்றி.

 

சந்திராவின் கவிதைகளில் எனது தொழில்நுட்பத்தின் ஒரு கோட்பாட்டை காணும் வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் தொழில்நுட்பத்தில் எல்லாமே தகவல்கள் தான். சுழியமும் ஒன்றும் மட்டுமே. இந்த தகவல்களை சேமித்து வைக்க பல கட்டமைப்புகள்(data structures) உண்டு. அதில் ஒன்று stack. அந்த கட்டமைப்பை நமது டிரங்க் பெட்டிகள் போல நினைத்துக் கொள்ளலாம். அதில் நிறைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது கடைசியாக வைத்த புத்தகத்தையே முதலில் எடுக்க முடியும் முதலில் வைத்த புத்தகத்தை கடைசியாக தான் எடுக்க முடியும். Last in first out technique.

 

அப்படிப்பட்ட கட்டமைப்பில் ஒரு கவிதை “செம்பரிதியை நிறுத்துவது எளிது” கவிதையில் சூரியன் மறையவில்லை -> காட்டெருமை மரிக்கிறது -> அது கோடி ரோஜாக்களின் அழகில் மயங்கி நிற்கிறது -> அவை மழை பொழிவதால் மலர்கின்றன -> மழை மயில் ஆடுவதால் பொழிகிறது -> மழை பொழிய மயில் ஆடுகிறது -> மழை பொழிவதால் ரோஜா பூக்கிறது -> காட்டெருமை ரோஜை பார்த்தபடி சூரியனை மறைக்கிறது -> சூரியன் மறைய மருக்கிறது.

 

இத்தனை அழகான மலைக்காட்டில் கோடி ரோஜாக்களை பார்த்தபடி சூரியன் மறைய மறுப்பது நியாயம் தான். கவிதையில் எந்த பிரம்மாண்டமும் சாத்தியமே. ஒரு காட்டெருமை கொண்டு சூரியன் மறைவதை நிறுத்திவிடமுடியும்.

 

சந்திராவின் மொத்த கவிதைகளையும் இரண்டு உணர்வுதளத்தில் பிரித்துவிடலாம். innocent love, tailer made eliteness. அறியாமையும் குழந்தைமையும் நிறைந்த அன்பு. சொல்லிக்கொடுக்கப்பட்ட செய்யப்பட்ட நாகரிகம் என்ற செயற்கைத்தனம். சந்திராவின் கவிதைகள் வாழ்வது இரண்டு உலகத்தில் மலைக் காட்டாலும், உப்பங்காற்று வீசும் கடல் அருகேயும். ஆகவே பசுமையும் பனியும் நிறைந்த மலைக்காட்டிலும் அலையும் வெம்மையாலும், உப்பும் கசப்பும் நிறைந்த கடல் காற்றாலும் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த முரண்பட்ட உணர்வுகளும் நிலமும் அவரது கவிதைகளுக்கு பல்வேற வரைவுகளை தருகிறது.

 

கவிதைகளில் களமும் உணர்வும் எவ்வளவு முரணானதோ போலவே அவர் கவிதைகளில் வாழ்வதும் இருவேறு பெண்கள் ஒருத்தி பொருப்பான குடும்பத்தலைவி. இன்னொருத்தி கட்டற்ற சுதந்திரம் கொண்ட நாடோடிப் பெண். அவர் காணும் உலகில் ஆண் கடல். பெண் மலை. 

 

சந்திராவின் கவிதைகள் சமைக்கும் வாழ்க்கை இரண்டு துருவமுனைகளில் இருக்கிறது.  ஒன்று மலை வாழ் சிறுமியாக அது பன்னீர் கொய்யாகளை பந்து போல உருட்டி விளையாடுகிறது, பெட்டிகடைகளை பலூன் வாங்கி விளையாடுகிறது, மிட்டாய் கடிகாரங்களை கட்டிக் கொள்கிறது. அதே சமயம் இரன்டாவது நகரத்தில் படப்பிடிப்பில் நடிகையின் கிளிவேஜ் இன்னும் நன்றாக தெரியட்டுமென்று தனது உதவியாளரிடம் சொல்லும் மிகவும் பிராக்டிக்கலான பெண்ணாக பரிமளிக்கிறது. டார்க்கெட் முடிந்ததும் உயர்தர பப்பில் ஆட்டம் போடுகிறது. அந்த நகரத்து பெண் தனது கையில் மிளகின் மணம் மிதக்கும் கட்டங்காபியை ஏந்தியபடி  நகர வாழ்க்கையோடு பொருந்தாமல் மலையையும் காட்டையும் தேடி ஏங்குகிறது. கடலில் உப்பை கசகசப்பை பொருக்க முடியாமல் கடந்த காலமே என் அமைதி அமைதி என்று ஏங்குகிறது. இப்படியாக இருதுருவங்களின் இடையே மிகப்பெரிய கடிகார பெண்டுடல்மாகி மாறி மாறி ஊஞ்சலாடுகிறது.

 

சந்திராவின் கவிதைகள் தூது புறாப் போல எப்போதும் கடலிருந்து மலையை நோக்கியே திரும்புகிறது. மரணிக்கும் நேரத்தில் கூட மலைகாட்டின் அற்புதங்களை கண்டு அதன்பின் உலகை வெளியேற ஆசைபடுகிறது. அதன் கவிதை சொல்லும் உள் விழைவு சாகும் வரை அங்கேயே வாழ வேண்டும் அதாவது எப்போதும் அங்கேயே வாழ வேண்டும் இதற்கு காரணம் அவர் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் “சொர்கத்திலிருந்து” வந்தவர்களுக்கு அங்கே திரும்பி செல்ல நினைப்பது நியாயமான ஆசை தானே?

 

கவிதைகளில் அவர் கொண்டு வந்திருக்கு பசுமையான மலைக்காடும் பனிக்காற்றும் வாசிப்பவர்களுக்கே அங்கிருக்க வேண்டுமென்ற ஆசைவரும் போது அவர் பெரும்பாலான கவிதைகள் மலையே மையம் கொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.

 

இந்த தொகுப்பில் எதுவுமே குறைகளே இல்லையா, இருக்கிறது கவிதைகளில் திரும்ப திரும்ப சில உணர்வுகளும், ஒரே நிலப்பரப்பும் வருகிறது.

எவ்வளவு தான் அழகுடை நிலமாயினும் 100 கவிதைகளில் 95% கவிதைகளில் மலையும், கடலும் மட்டுமே நிறைந்திருப்பது பிற நிலங்கள் போறாமை கொள்ளும் விஷயம்.

 

சில கவிதை முடிந்த பின்னரும் தொடர்கின்றன அவை கவிதையின் அழுத்ததை கொஞ்சம் நீர்த்து போக செய்கின்றன. அதற்கு ஒரு உதாரணம் “என்னுடன் வாழ்வதென்பது” இந்த கவிதையை முதல் மூன்று வரிகளோடு முடித்திருந்தால் அதன் வீச்சு மிகப்பெரிதாகியிருக்கும். பின்வரும் மூன்று வரி கவிதையின் செறிவை முற்றிலும் குலைக்கிறது.

அதே போல மேலும் சில கவிதைகளை என்னால் இந்த தொகுப்பிலிருந்து சுட்ட முடியும். கொஞ்சமே கொஞ்சம் எடிட் செய்திருந்தால் மிக சிறப்பானதாகியிருக்கும்.

 

சிலகவிதைகள் நிகழ்வுகள் திடீர் திடீரென தொனி மாறுகிறது. பத்திகள் சரியாக பிரிக்கபட்டிருநதால் இந்த குழப்பம் கொஞ்சம் குறைந்திருக்கும். வருகின்றன. உதாரணத்துக்கு நன்னிலக் கடவுள் என்ற கவிதையில் அப்பா இறந்த தூக்கத்தை பேசும் கவிதைசொல்லி அவள் அம்மாவையும் அவர்கள் வீட்டு ஏழ்மையையும் பேசிக் கொண்டிருக்கும் போது கவிதை திடிரென “டார்கெட் முடிந்தவுடன் இருட்டில் அந்நியனோடு உயர்தர பப்பில் ஓரு ஆட்டம் போடலாம் என்று முற்றிலும் உணர்வுத்தளத்தில் மாறுகிறது. மேலும் சில கவிதையில் அடுத்தடுத்த வரிகளில் உவமை ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத விஷயம் வருகிறது. கவிதையில் எல்லாமே சாத்தியம் என்றாலும் வாசிக்கும் கவிமனம் லயத்தோடு மேல் செல்ல இது ஒரு தடையாக வருகிறது. அதைத் தவிர வேறு பெரிய குறைகள் எதுவுமில்லை.

 

 முன்னரே சொல்லியது போல மூங்கில் மலர்களுக்கும், தடிச்சம் பழங்களுக்கும், கோடி ரோஜாப்பூக்களுக்காக சூரியனை மறைவதை ஒத்தி வைக்கும் காட்டெருமைக்கும் இந்த உரை சமர்பணம்.

Saturday, February 5, 2022

ஜனவரி 2022 சில கதைகள் பரிந்துரை

 கதை: விளிம்பு
ஆசிரியர்: வைரவன் லெ ரா
இதழ்: ஓலைச்சுவடி
பரிந்துரை:லாவண்யா

மாய எதார்த்த கதை போல மொழியும் வடிவமும் மிக அருமையாய் குலைந்திருக்கிறது சிரஞ்சீவி மலைகள் இந்தியாவின் பலபகுதிகளில் இருப்பது போல குமரிமுனையிலும் ஒன்று அந்த மலையையும் இமயமலையையும் இணைக்கும் ஒரு சிறுபுள்ளி. நல்ல கதை.

*

கதை: யாருக்காகவும் பூக்காத பூ
ஆசிரியர்: அரவின் குமார்
இதழ்: வல்லினம்
பரிந்துரை:லாவண்யா

கதைசொல்லி ஒரு பள்ளி மாணவன் பத்துவயதுக்கு குறைவான வயதுடைய பையன் சொல்வது போன்ற கதை அதற்கே உரிய(குழப்பமான) போக்கில் இருக்கிறது. கதை சொல்லியும் அவன் நண்பர்கள் எல்லோருமே ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோரின் பிள்ளைகள். சிறுபிள்ளைகளிலுக்கிடையே நிகழும் சின்ன சின்ன போட்டி பொறாமைகள் மிகத்தெளிவாக பதிவாகியிருக்கிறது. அன்னையற்ற குழந்தைக்கு தராத சலுகையை அவர் கதைசொல்லிக்கு தருகிறார். இந்த இடத்தில் கதாரியர் நமக்கு ஏதோ ஒரு ஏற்றதாழ்வை உணர்த்த விரும்புகிறார் ஆனால் அது தெளிவாக உணர தேவையாக உரிபொருள் இல்லையோ என்று தோன்றுகிறது. பால்ய வயதில் நிகழும் கதைகளுக்குண்டான innocence இன்னும் கொஞ்சம் புனைப்பட்டிருந்தால் இந்த கதை எங்கோ சென்றிருக்கும். வாசிக்கலாம்.

*

ஆசிரியர்; எம்.கோபாலகிருஷ்ணன்
கதை: திரும்புதலற்ற பாதை
இதழ்: வல்லினம் இணைய இதழ
பரிந்துரை: மு. குலசேகரன்

நேர்த்தி மிகுந்த நெடுங்கதை. இதில் இந்த தனித்த வடிவத்துக்கேயுரியதான, வெவ்வேறான, ஆனால் வரையறுக்கப்பட்ட ஒரு விதத்தில், கதைமாந்தர், காலம், இடம், சிறப்பாக அமைந்துள்ளன. இந்தியாவின் இரு வேறு மூலைகளை பிணைக்கிற சாதிய சிக்கல் பின்னணியில், மிகவும் கலையமைதியுடன், சொல்லப்படாத பலவற்றை உணர வைக்கும் மொழியில் இக் கதை எழுதப்பட்டுள்ளது. நிலவுடமை முறை சரிந்து, முதலாளித்துவம் வளர்ந்த சூழலிலும் வேரோடிப்போயுள்ள, மேல்/கீழ் பிரச்சினை மாறாமலிருக்கிறது. உற்பத்தி உறவுகள் மாறினால் சாதியம், மத சிக்கல்கள் தேயும் என்பது இன்னும் கனவாகவே நின்றிருக்கிறது. குறிப்பிட்ட இருவரும் ஒத்த பொருளாதார நிலையிருந்தாலும், அந்நியமான பிரதேச அவலத்திலிருந்தாலும், ஒருவன் உயர்சாதிய மனோபாவம் கொண்டிருக்கிறான். அதுவே அவன் உடல், நடத்தை பாவனைகளாக வெளிப்படுகின்றன. அது போலவே, களமும் மாறுபட்டிருப்பதால், ஒடுக்குதலுக்குள்ளானவன் இம்முறை எதிர்த்து நிற்கிறான், காகம் வலிமையான கழுகிடம் போரிடுவது போல். இதில் ஊழ் போல் சிக்கி மரணமடைகிறான் மற்றொருவன். அவனுக்கு சாதியப் பிரச்சனைகள் இல்லை போலிருந்தாலும், குடும்ப அமைப்பை மீறிய காதல் மணம் புரிந்தவன். இறுதியில் ஆதரவற்று நிற்கும் மனம் வெதும்ப செய்யும் மனைவிகள், உற்றார்கள். சாதியம், மீறல் என்ற வெற்று உணர்வுகள் ஒரு தற்செயலான அபத்தப் புள்ளியில் வைத்து, பல நுட்பங்கள் கொண்டு விவரிக்கப்படுகின்றன.

*

கதை: பிரதி ஜெராக்ஸ்
ஆசிரியர்: சேவியர் ராஜதுரை
இதழ்: சொல்வனம்
பரிந்துரை:லாவண்யா

பிரதி எடுக்கும் கடையில் மறுபடி மறுபடி பிரதி எடுக்க எடுக்க வருவதற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று நினைக்கும் படியான கதை. கதையின் முடிவை இன்னும் இறுக்கமான, உனக்காகத் தான் வருகிறேன் என்றெல்லாம் சொல்லாமல் விட்டிருந்தால் இந்த கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும். எழுதுவது ஒருவிதத்தில் பிரதி எடுப்பது போன்றதே என்ற இடத்தை இந்த கதை தொட முயற்சி செய்திருக்கிறது. அந்த கோணத்தை இன்னும் வலுபடுத்தியிருந்தால் இந்த கதை இன்னும் வேறு தளத்தைத் தொட்டிருக்கும்.

*

ஆசிரியர்:கனகராஜ் பாலசுப்பிரமணியம்
கதை: நிலவுண்ணும் மண்
இதழ்: காலச்சுவடு
பரிந்துரை: அனோஜன் பாலகிருஷ்ணன்

சமீபத்தில் உரையாடல் ஒன்றில் நண்பர் சொன்னார், “அடிப்படைவாத இஸ்லாமியர்களிடம் இருந்து, முற்போக்கு இஸ்லாமியர்கள் தம்மைப் பாதுகாக்க இனிவரும் காலங்களில் அதிகம் கடினப்பட வேண்டியிருக்கும்…” என்று. ஏறக்குறைய அதை உணர்த்திச் செல்லும் கதை. துனேசியா நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அரசியல் புரட்சியை, குடும்ப உறவுச்சிக்கலுடன் இணைத்துக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. பிரான்ஸில் அரேபிய பின்புலத்தில் எழுதப்பட்ட வாழ்க்கைச்சூழல், பழகிப்போன கதைக்களங்களில் இருந்து நம்பகமான வேறுப்பாட்டைத் தருகிறது; காரணம் கனகராஜின் நுண்தகவல்களும் அவதானங்களும். காலனிய காலத்தின் பின்னர் ஏற்பட்டிருக்கக்கூடிய இடம்பெயர்வுகள், குடியேற்றங்கள், அதன் அரசியல் முரண்கள் போன்றவை தமிழ் இலக்கியத்திலும் வருவது நல்ல விஷயம். சுருக்கத்திலிருந்து இன்னும் இன்னும் விரிவுக்குள் செல்ல அது உதவும். அரசியல் கதைகளில் இருக்கும் பிரச்சார நெடி அது கொண்டுசெல்லும் தீர்வில் மட்டுமல்ல; கதையைப் பிரஸ்தாபிக்கும் விதத்திலும் உண்டு. கனகராஜால் பக்குவமாக எழுதிச்செல்ல முடிகிறது. ஜனவரி காலச்சுவட்டில் இக்கதையை வாசிக்கலாம்.

*

நீண்ட நாட்களுக்கு பின்னர்

இனி எனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதலாம் என்ற நினைக்கிறேன். எழுதத் தொடங்கியது இங்கே தான். ஆகவே இந்த இடத்தை மறக்கக் கூடாது. இடைப்பட்ட இந்த காலத்தில் நான்காவது கவிதைத் தொகுப்பும், முதல் நாவல் காயாம்பூ என இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன.






ஆகவே இன்னும் எழுத நிறைய இடமிருக்கிறது என்று மீண்டும் வந்திருக்கேன். என் படைப்புகளை வாசிக்கும் நண்பர்களும் தோழிகளுக்கும் நன்றி.



Friday, September 6, 2019

பின்னல் சித்திரங்கள்


                         






 காலச்சுவடு பதிப்பகத்தின் வெளீயிடாக தற்சமயம் நடைபெறும் மதுரை புத்தக காட்சிக்கு வெளியான எனது முதல் சிறுகதை நூல் "புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை". அதற்கு எழுத்தாளர் அசதா அவர்கள் எழுதியுள்ள முன்னுரை.   
புனைகதை என்பது தொடர்ச்சியாகப் பொய்களை நெய்து ஒரு மகத்தான உண்மையைக் கண்டடைவது. ஆப்கானிய எழுத்தாளர் கலீத் ஹொசைனியின் புனைவெழுத்துக் குறித்த இந்தப் பார்வை ஒரு செவ்வியல் வரையறை. புனைவெழுத்தாளரது நெய்யும் பாங்கில் பின்னப்படும் கற்பனைகள் ஒரு வெளிச்சத்தை வந்து சேருகின்றன. அந்த வெளிச்சம் அல்லது உண்மை ஒரு அகதரிசனமாகவோ, மனப்புரட்டலாகவோ அல்லது அதன் பின்னால் இன்னும் கூடுதல் வெளிச்சமிருக்கும் ஓர் இருண்ட வாயிலுக்கான திறப்பாகவோகூட இருக்கலாம். இறுதிச் சித்திரம் பின்னலில்தான் இருக்கிறது எனும்போது கதைகள் பின்னப்படும் விதமே பிரதானமாகிறது.

லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கியபுறாக்களை எனக்குப் பிடிப்பதில்லைஎன்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது அகவுலகை நமக்குக் காட்டுபவை. பூ விற்கும் பெண்ணும் கிராமத்து விவசாயக் குடும்பத்துப் பெண்ணும் மையப்பாத்திரங்களாக அமைந்த கதைகளும் உண்டு என்றபோதும் மேற்சொன்ன அடையாளமே தொகுப்புக்குப் அதிகம் பொருந்தி வருகிறது. இக்கதைகளை வாசிக்கையில்  சம்பவங்கள்  ஊற்றுப்போல பெருகியபடியிருக்க அதனிடையே கதைமாந்தர்கள் உலாவியபடியும் இடைவிடாது பேசியபடியும் இருப்பதுபோன்ற ஒரு சித்திரம் மேலெழுந்து வருகிறது. தம்போக்கிலான இம்மனிதர்களையும் சம்பவங்களையும் கதையாசிரியர் பின்னியிருக்கும் விதத்தில் இவை சமகாலத்தின் முக்கியமான சிறுகதைகளாகியிருக்கின்றன.

சப்தபர்னி மலர்கள்நுட்பமான சிறுகதை. அறிமுகமில்லாப் பெருநகரில் ஒரு பெண் சுற்றியிருக்கும் ஆண்கள் மட்டில் தன்னை மெதுவாக இயல்பாக நெகிழ்த்திக் கொள்வதை ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் இக்கதை ஆண் -பெண் உறவின் சூக்குமப் பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது. தான் ஏமாற்றப்பட்டதற்கு நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடும் சூழலில் இருந்தபடி ஒரு பெண் தன்னை சமூகம் உறவுகள் அரசு அமைப்புகள் ஆகியனவற்றுக்குள் பொருத்திப் பார்த்துக்கொள்வதாக  சில்லறைகதை அமைந்திருக்கிறது.

இளம் கைம்பெண்ணான தனது அண்ணிக்கும் திருமணமாகாத தனது தம்பிக்குமிடையேயான உறவின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் குழம்பி சதா குமைச்சலுறும் ஒரு பெண்ணைமுற்றத்து அணில்கதையில் திறம்படப் படைத்திருக்கிறார் லாவண்யா சுந்தரராஜன். இன்னொரு தளத்திலிருந்து பெண்ணின் அகச்சிக்கலைப் பேசும் கதையானபூமரம்”, கதையாசிரியரின் லாகவமான கூறுமுறையில் குறிப்பிடத்தக்க கதையாகிறது. எல்லாவகையிலும் வெற்றிபெற்றுவிட்ட ஒரு பெண்ணின் அகந்தை தாய்மைப்பேறின்மை என்னும் விஷயத்தின்முன் சலனமுறுவதாகச் சொல்லுமிடம் சற்று நெருடலானது என்றபோதும் இதுபோன்ற இடங்களில் சமூக வழக்கின் தாக்கம் குறைத்து மதிப்பிட இயலாதது.

தனது எளிய கனவுகளுக்குள்கூட பொருந்திடாத, எப்போதும் தன்னிலிருந்து விலகியே நிற்கும், பொதுவாழ்வின் சாமர்த்தியங்கள் ஏதுமற்ற அப்பாவை அவரது மரணத்தின்போது நினைவுகூரும் ஒரு மகளின் நினைவேக்கங்களின் தொகுப்பாய் அமைந்திருப்பதுஅப்பாசிறுகதை. தந்தைமகள் உறவின் அதிகம் அறியப்படாத ஒரு பரிமாணம் இக்கதையில் காணக்கிடைக்கிறது. வண்ணப்படத்தின் நடுவே நகரும் கறுப்பு-வெள்ளை துண்டுக்காட்சியைப்போல காலத்தாலும் பேசுபொருளாலும் தனித்து அமைந்த கதைகள்சின்ன லட்சுமிமற்றும்யூனிபார்ம்”. “விடுபூக்கள்நேரடியாகச் சொல்லப்பட்ட கதையேயானாலும் அதில் பெண்ணின் பாடுகள் அசலாகப் பதிவாகியிருக்கின்றன. “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை”, “செண்பா சித்திஆகியன பெண் மனதின்  அக அடுக்குகளை பூடகமாகச் காட்டிச் செல்லும் கதைகள்.  துண்டுதுண்டான சம்பவங்களைத் தொகுத்தபயணங்கள்கதையும் முக்கியமானது.

தொன்மங்கள், வரலாறு, சமகால நிர்ணயங்கள் இவற்றையொட்டி சமூகத்தில் பெண்களின் வகிபாகம் தொடர்ச்சியாக ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் உள்ளாகும் நிலையில் அவர்களை அவர்களது அன்றாடத்தின் வெளிச்சத்திலும் இறுக்கத்திலும் பார்க்க விழைவனவாக லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் இருக்கின்றன. இக்கதைகளின் பெண்கள் - சப்தபர்னி மலர்கள் கதையின் நாயகியோ, செண்பா சித்தியோ, விஜயாவின் அண்ணியோ- தமது தேவைகளை அறிந்தவர்கள், குடும்பத்துள் எளிய புகார்களுடன் அல்லது புகார்களேயற்று உழல்பவர்கள்; அதேநேரம் தம்மைச் சுற்றியுள்ள தடுப்புக்களை உடைக்கிறோம் என்ற பிரக்ஞையின்றியே அவற்றை மெல்ல உடைத்து முன்னேறுபவர்கள். இந்த அன்றாடங்களின் வழியாக லாவண்யா சுந்தரராஜன் படைத்துக்காட்டும், உறவுச் சிக்கல்களும் உணர்ச்சிப் மோதல்களும் நிறைந்த பெண்கள் உலகை ஒருவர் நேசிக்காமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக சம்பவங்களைப் பின்னிச் செல்வதினூடே தன் கதைகளைப் படைத்திருக்கும் லாவண்யா பெண்களின் மீறல்களை இயல்பாகக் கதைகளுள் பொதிந்திருக்கிறார். பின்னல்கள்வழி முடிச்சுக்களையல்லாமல் யதார்த்த சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார். சொல்லலில் முனைப்போ மொழிமீதான அதீத கவனமோ இன்றி எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் யதார்த்தமாக அமைந்திருக்கும் அதேநேரம் வலுவான புனைவாக்கங்களாகவும் திரண்டு வந்திருக்கின்றன. இத்தொகுப்பு வழியாக கவிஞரான தன்னை ஒரு சிறுகதையாசிரியாக முன்வைக்கும் லாவண்யா சுந்தரராஜனின் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அசதா
20-08-19