Sunday, April 7, 2013

குடைக்கம்பி உடைத்த மௌனம்
















மௌனத்தின் ஆழ்கடல்
நிறைந்திருந்தது மனவெளியெங்கும்
நிறை நிம்மதி ஆழ் அமைதி
விளைவாய்
வறண்ட கவி மௌனத்தை
பூண்டதென் எழுதுகோல்

ஏங்கி கலைத்த
விழிகள் மீதும்
இரக்கம் கொள்ளவில்லை
என் எழுதும் பேனா

இடி மின்னலோடு கூடிய
ஒரு தேவதினத்தில்
மிகுமழைக்கு பின்னால்
குடைக் கம்பியொன்று
மழலை வாய்விடுத்த
முலைக் காம்பாய்
உதிர்த்துக் கொண்டிருந்த
நீர்ச்சொட்டுகள்
கலைத்தெறிந்தது
கொடும் அமைதியை

பூரித்த கவிதைகளை
எழுதும் கவிக்கோலை
நான்
கை பற்ற கூடும்
வெகு விரைவில்

Monday, March 18, 2013

இத்தாலிக்கு ரெட்ப்ஸ்தா இலங்கைக்கு இட்லி

இத்தாலிய கடற்படை வீரர்கள் கேரள மீனவர்களை சுட்டு கொன்ற சம்பவத்திற்கு பின்னர் பரோலின் போனவரை திறுப்பி அனுப்ப மாட்டோம் என்ற இத்தாலிய அரசுக்கு இந்திய பிரதமரும், உச்ச நீதி மன்றம் எல்லோரும் சரியான எதிர்ப்பினை கண்டனத்தை பதிவு செய்து இருக்கின்றார்கள் மிகவும் வரவேற்க்கத்தக்கது.

இரு உயிர் போய் இருக்கின்றது. மிகவும் கண்டிக்க தக்கது. முறையான விசாரணையும், சரியான தண்டனையும், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடும் மிகவும் அவசியம். எல்லாம் சரி,  இத்தாலியா அடிதளம் கொண்ட காங்கிரஸ் தலைவர் இந்தியர் அதுவும் தென்னிந்தியர் மீது இவ்வளவு அக்கரையையும், தான் வாழும் நாட்டிற்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்ற நிலைபாடும் மிகவும் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.

இந்த எதிர்ப்பை ஆத்திரத்தை இலங்கை கடற்படை வீரர்கள் மீது காட்டாதது ஏனோ? தமிழக மீனவர் இன்று வரை எத்தனை பேர் நடுக்கடலில் மாண்டிருப்பர், எத்தனை முறை கைது செய்யப்பட்டு சித்தரவதைகளுக்கு ஆளாகி இருப்பர், எத்தனை மீன் பிடி படகுகள் நாசப்பட்டிருக்கும்? தமிழக மீனவர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லையா?

இத்தாலி மீது இந்த கெடுபிடிக்கு  ஹெலிகாப்டர் ஊழல் ஒரு உள்குத்தாக இருக்கக் கூடுமோ என்ற நினைவின் நீட்சி இந்த இடத்தில் தலைத்தூக்காமல் இல்லை. இந்திய அரசு இலங்கைக்கு பஞ்சு இட்லியும் இத்தாலிக்கு ப்ஸ்தாவுடன் கொஞ்சம் காரத்தை சேர்த்து செய்ய எப்போதிருந்து ஆரம்பித்தது.

காவேரியில் தண்ணீர் திறந்து விடாமலிருக்க வன்முறைகள் வெடிக்கும் போது வாய் முடி வெடிக்கை பார்க்கும் அல்லது அந்த நேரத்தில் மட்டும் தமிழ் பேசுவதை தவிர்க்கும் பெங்களூர் வாழும் தமினிழம் இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. அனைவர் உயிரும் சமம் தானே. இந்த மனித நேயம் ஏன் இந்திய அரசிற்கு இல்லை?

Sunday, September 16, 2012

பேனாக்களும் கவிதைகளும்
















எந்தப் பேனா எனது
இன்றைய கவிதையை
எழுதும் பாக்கியம் பெறுமென
என்றுமே தெரிவதில்லை

ஒரு பேனாவிருக்க
இன்னும் பலதை
வாங்கி சேர்க்கும் போது
இந்த நினைவு வருவதில்லை

எப்போதும்
ஏதோ ஒரு பேனா
எழுதிப் போகிறது
உயிர் நிரப்பும் கவிதைகளை
அச்சமயத்தில்
அப்பேனா மட்டுமே
எழுதவியலும் 
அவ்வுயிர் கவிதையை

ஆனால்
என் எல்லா கவிதைகளையும்
அதே பேனா எழுதி
முடிப்பதில்லை
இன்னுமோர் பேனாவிற்கு
இட‌மிருக்கிற‌து
என் உல‌கில்




Saturday, August 4, 2012

மதுபானகடையும் குடி அரசியலும்




அறிமுக இயக்குனர் நண்பர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மதுபான(க்)கடை குடி குடியை கெடுக்குமென்று வழக்கமான புலம்பலை முன் வைக்காமல் குடிக்கு பின்னிருக்கும் அரசியலை பேசவும், இத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தும் குடியை வெளிப்படையாக நாங்கள் குடிகாரர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் இருப்பவர்கள், நாம் குடித்துவிட்டு தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வு உள்ளவர்கள் அதிகமிருப்பினும், குடிக்காரர்கள் ஏன் அதிகரிக்கின்றார்கள்  என்பதை விவாத்திக்க ஒரு களமமைத்து தந்திந்திருக்கின்றது. குடிக்கும் சமூகம் எப்படி அரசின் முக்கிய வருமானத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஒரு புட்டி மது தயாரிக்கும் விலைக்கும் விற்கப்படும் விலைக்கும் இருக்கும் வித்தியாசம் மேலும் போலி சரக்கின் மதுபுட்டியின் தரம் கூட குறைவாக இருக்கின்றது என்ற மிக நுணுக்கமான விசயங்களை யோசிக்க போகிற போக்கில் கொடுத்திருக்கிறார் கமலக்கண்ணன்.

நாஞ்சில் நாடனின் "உண்ணற்க கள்ளை" என்ற கட்டுரையின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் மதுபானகடை. மேலும் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் என்.டி.ராஜ்குமார் பாடல் எழுதி, பாடி மற்றும் படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்திலும் நடித்துள்ளார். அவருடைய பாடல்கள் எல்லாம் பல கவிதைகள் உள்ளடக்கிய நவீனவரிகளாக இருக்கின்றது. "மஞ்சள் நிற போதை", "வட்ட வட்ட தத்துவம்" போன்ற வரிகள் மது போதையின் சுழற்சியாக கற்பனை செய்து கொள்ள முடிகிறது. "பொல்லாத குதிரை ஏறி" காமத்தின் படிமமாக விளங்குகிறது. அவ்வையாரும், அதியமானும் ஒன்றாய் குடித்த கதை தெரியுமா என்று படத்தில் அவரே வினவுகிறார். என்.டி.ராஜ்குமாரின் நவீன கவிதைகள் போலவே பாடல் வரிகள் எல்லாம் வித்தியாசமாக படிமம் மற்றும் குறியீட்டு வரிகளாக விளங்குன்றது. மேலும் முன்பு லஷ்ம‌ண‌ராஜா என்ற‌ பெய‌ரில் சுய‌ம் என்ற‌ வ‌லைப்பூ எழுதிய‌ த‌ற்போதைய‌ இராவ‌ண‌ன் இந்த‌ ப‌ட‌த்தில் நிழ‌ல் புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ராக‌ ப‌ணியாற்றியுள்ளார். மேலும் 5000 புகைப்ப‌ட‌ங்க‌ளை ஆல்பமாக‌ தொகுத்து ஒரு டிரைல‌ராக‌ செய்த‌ புது முய‌ற்சியினையும் இவ‌ர் இந்த‌ ப‌டத்தில் செய்துள்ளார்.

குடியினை மட்டுமல்லாது மிக ஆழமாக யோசிக்க வேண்டிய பல விசயங்களை இந்த படம் மெல்ல தெளித்திருக்கிறது. "பள்ளிக்கு போக வேண்டிய குழந்தையை, முதியவர் இல்லத்தில் சேர்க்க வேண்டிய வயதானவர்களை இங்கே ஏன் வேலைக்கு வைச்சி இருக்கே" என்று ஏழ்மையை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்றும், "நீங்க குடிச்சிட்டு பாடம் நடத்தலாம், ஆனா அவங்க குடிச்சிட்டு படிக்க கூடாதா?" என்ற கேள்வியின் எள்ளல் பெற்றோர்களே, ஆசிரியர்களே இளைய தலைமுறைக்கு கெட்ட எடுத்துக்காட்டாகி அவர்களை நல்வழிபடுத்த முயற்சி செய்யாதீர்கள் என்றும் கருத்தை பதிவித்திருக்கிறார் இயக்குனர். "என் மண்ணு விஷமா போச்சு" என்று பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கும் மனநிலை சரியில்லாதவரை பார்க்கும் போது மனநிலை சரியில்லாதது அவருக்கா நமக்கா என்று நினைக்க வைக்கிறது. அரவாணிகளிக்கான மனவலியை ஒரு காட்சியில் ஒரு பாடல் வரியில் உணர்த்தி இருக்கிறார். "கள்ளும் சாரயமும் எங்க குலதெய்வம்டா நாங்க ஒன்னும் உற்சாகமாக இருக்க குடிக்கல, எங்க வேதனையை தொழில் வலியை மறக்க குடிக்கிறோம்" என்று சொல்லும் துப்புரவு தொழிலாளியின் வார்த்தைகள் .... பதிவிக்க வார்த்தைகளில்லை எனக்கு.

வித்தியாசமாக கதை சொல்லுதலும், வித்தியாசமாக கதைக்களமும் என்பது மட்டுமின்றி முடிவே இல்லாத கதையை நாளை மற்றுமொரு நாளே என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆரம்பகாட்சிகளில் சில நிமிடம் இந்த குடிகாரர்கள் ஏன் இத்தனை அலும்பு செய்கிறார்கள் என்று ஒரு சலிப்பையும், மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை"மாட்டினான் மணி", "தமிழ்நாட்டுலையே பார்ல சரக்கு குடுக்க முடியாது சொல்லவைச்ச பெருமை உனக்கு தான்","கட்டிங் கரெட்க் செய்யவும் தான்" என்று சில கதாபத்திரங்கள் மூலம் சொல்ல வைத்திருப்பது  மக்களுக்கு சொல்ல வந்தது புரியாமல் போய்விடுமோ என்ற பயம் இயக்குனர்க்கு இருப்பது போல தோன்றுகிறது.

குடித்து விட்டு யார் காலிலும் கவலையின்றி விழும் ஒருவர், ஓசி குடிக்காக பாடுவதும் அல்லது பிறரை ஏமாற்றி காசு தேற்றுவதுமான மற்றுமிருவர், குட்டிக்குமிடத்திலும் ஜாதி வெறியை காட்டும், ஏழைகளில் இரத்ததை உறுஞ்சும் முதலாளிகள்,பணக்காரர்கள்,  ஏதேனும் விழாவை கொண்டாட வரும் கூட்டம்,அரவாணிகள். துப்புறவு தொழிலாளிகள், பள்ளி மாணவர்கள், வயிரெறிச்சல்காரர்கள் என்று பலர் வந்து போகும் மதுபானகடை மட்டும் மூதேவி குடியிருக்கும் இடம் போல இருப்பது ஏன்? குடிகாரர்கள் நல்லவர்களா இல்லை கொஞ்சம் கெட்டவார்களா என்று பொதுவில் கேள்வி கேட்டு போகிறது மதுபானகடை.

இந்த திரைப்படம் குடிகாரர்களுக்கு எதிரான படமேயன்று. ஒத்தை மரத்து பனைக்கள் உடம்புக்கு நல்லது என்று சொல்வழக்கு உண்டு. அதன்படி குடிக்கும் மதுவின் அளவும் விளைவும் தெரிந்து அதை செய்பவர்களை தவறானவர்கள், குற்றவாளிகள், மதுபானகடை என்பது அ-புனிதமான இடம் என்ற எந்த பிரச்சாரங்களை செய்யவில்லை இந்த படம். "அண்ணா, காய் எல்லாம் அழுகி போய் இருக்கு" என்று தொழிலாளி சொல்வதற்கு, "குடிகார நாய்களுக்கெல்லாம் இது போதும்" என்று தெனாவெட்டாக ஒரு பார் முதலாளி சொல்லுமளவுக்கு ஆக்கி வைத்திருக்கும் விசயம் எது? படத்தின் முக்கியமான கதாபத்திரமாக வரும் மதுபானகடை குப்பையும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாட்டில்கள் இறைந்து கிடப்பதும், சமையலிடம், சீறுநீர் கழி(ளி)ப்பிடம் எல்லாம் அருகருகே இருப்பது பார்ப்பதற்கு அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது. இத்தனை மட்டமான சுகாதாரமற்ற இடத்திலா இத்தனை பெரிய வருமானம் ஈட்டி தரும் வியாபாரம் நடைபெறுகிறது? இந்த மதுபானகடைகளில் நுகர்வோர்க்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதியோ பாதுகாப்போ இல்லாத இடத்தில் ஏன் அய்யா குடிக்கீர்கள் என்ற கேள்வியே மிஞ்சுகிறது. இயக்குனர் மற்றும் படக்குழுவினரிடம் "என்ன படத்தில் காட்டப்படும் பார் இவ்வளவு கேவலமாக இருக்கின்றதே? என்று கேட்டால்" தமிழ்நாட்டில் இருக்கும் மிக சிறந்த பார்கள் கூட இதைவிட கேவலமாக இருக்கின்றது என்று கூறுக்கின்றனர். இதை எல்லாம் காணும் போது நாஞ்சில் நாடன் தன் கட்டுரையில் சொல்லி இருப்பது போல "குற்ற உணர்வோடு இப்படிப்பட்ட இடத்தில் குடிப்பதற்கு குடிக்காமல் இருங்கள்" என்ற விசயத்தை இந்த படம் மிகத்தெளிவாக பதிவு செய்து இருக்கிறது.

Monday, June 11, 2012

வாசிப்ப‌து


சிதறிய‌ பின்ன‌ர்
ப‌ட்ட‌ இட‌மெங்கும்
சுவ‌டுக‌ளை
விட்டுச் செல்லும்
உப்புநீரென‌
ஒவ்வொரு வாசிப்பும் வெவ்வேறு
ம‌ன‌ச்சாயையை ஏற்ப‌டுத்தும்

அட‌ர் இசையை கூட‌த்து வெளியே
நிறுத்தி க‌த‌வை தாளிட்ட‌
பின்ன‌ரும்
முணுமுணுக்கும் அமைதி போலில்லை
வாசித்த‌ பின்ன‌ர்
வாழும் எண்ண‌ இரைச்ச‌ல்க‌ள்

புதுக்காத‌லென‌
சுவார‌ஸியமான‌தும்
கோடை தென்ற‌லென‌
சுக‌ம் த‌ருவ‌தாக‌வுமிருக்கும்
தேர்ந்தெடுத்த‌ வாசிப்பு

Tuesday, May 15, 2012

க‌விஞ‌ர் ஞான‌க்கூத்த‌ன் அவ‌ர்க‌ளுக்கு எம் ந‌ன்றி

வ‌ணக்க‌ம்.

ஞான‌க்கூத்த‌ன் இற‌வைப் பருகும் ப‌ற‌வை க‌விதை நூல் சார்ந்து எழுதிய‌து.

http://www.gnanakoothan.com/2012/04/07/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/


Sunday, May 13, 2012

சிலந்திக் கூடு

சிலந்திக் கூடு : லாவண்யாவின் இரவைப் பருகும் பறவையை முன்
வைத்து:-

“நான் மிகச் சாதாரணமானவள்
என்னால் குறைந்தபட்சம்
உங்களைப் பற்றிய அவதூறுகளை
உங்களிடம் மட்டும்தான் பரப்ப முடியும்”

கவிதை வாசிப்பிற்கான மனநிலையை சமீபமாய் தொலைத்து விட்டிருப்பதால் சற்று அசிரத்தையான மனநிலையுடன் தான் லாவண்யா அனுப்பித் தந்த அவர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். நான்கைந்து கவிதைகளுக்குப் பிறகு லாவண்யாவின் உலகிற்குள் எளிதாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள முடிந்தது. சன்னமான பெண் மனதை சின்ன சின்ன நுண் உணர்வுகளாய், அழகியல் மென் தூவலாய், சற்றே மிதக்கும் கற்பனை நினைவுக் குவியலாய் மாற்றியிருப்பது புன்னகையை வரவழைத்தது. எல்லாக் கவிதைகளும் வாசிக்கும்போது மனதை லேசாக்குகின்றன. இலகுவான மனம் கொண்டு எழுதப்பட்ட இலகுவான கவிதைகள் வாசிப்ப வரை இலகுவாக்குவதில் வியப்பில்லைதானே! தொகுப்பை வாசித்து முடித்த பின்பு ஏனோ சிலந்திக் கூடு மெல்ல நினைவில் அசைந்தது. ஒருவேளை ஒட்டு மொத்தக் கவிதைகளும் மென் சொற்கள் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் சன்னமாய் பின்னப்பட்ட இழைக்கூடு நினைவில் வந்ததோ என்னவோ. தெரியவில்லை.

இயற்கையின் அழகை சிலாகித்தல், இயற்கையோடு தன்னைப் பொருத்திக் கொண்டாடுதல் அல்லது வருந்துதல், இம்மூன்றும் பல கவிதைகளில் பதிவாகி இருக்கின்றன. பெண் அடையாளம் கொண்ட தனித்தன்மையான இருப்பு நிலைக் கவிதைகளாக சிலவற்றை வாசித்துப் பார்க்கலாம் தான் என்றாலும் பால் நிலை கடந்த பொதுவான உணர்வுகளே பெரும்பாலான கவிதைகளில் இடம்பெறுகின்றன. உடல் குறித்துப் பேசவேண்டிய இடங்களில் கூட சற்று உள்ளடங்கி உடலின் பின்னான மனதை மட்டுமே இக்கவிதைகள் பேசுகின்றன. சில கவிதைகளில் உடலைப் பதிவு செய்ய பயம் கொள்வதாகக் கூட எனக்குத் தோன்றியது (இக்கருத்தை படைப்பாளியை நன்கு அறிந்திருப்பதால் தோன்றும் விமர்சகனின் குழப்பங்களாகக் கூட வாசிக்கலாம்) மற்றபடி மூளைக்கு அதிக அழுத்தத்தைத் தரவிரும்பாத இம்மென் கவிதைகளை வாசிப்பதில் உருவாகும் மனநிலையை நெகிழ்வு என வரையறுக்கலாம்.

தொகுப்பிலிருக்கும் மொத்தக் கவிதைகளிலேயுமே இந்த நெகிழ்வு பதிவாகியிருக்கிறது. எதிர்ப்பை/கோபத்தைக் கூட மென்மையாக பதிவு செய்யும் பெண் மனம் மீதான கற்பனை வாசிப்பவர்களை ‘ரொமாண்டிச’ மன நிலைக்குத் தள்ளுகிறது. கவிதைகளில் பதிவாகி இருக்கும் பெரும்பாலான காட்சிகள் ரசனை மிகுந்ததவையாக உள்ளன. யாரையும் பழித்துப் பேசாது, எதனையும் குறை சொல்லாது வெறும் பார்வையாய் காட்சியாய் மட்டுமே கவிதைகள் நிகழ்ந்துள்ளன.

“பெருமழை தீர்ந்த பின்பொழுதில்
கண்ணாடியில்
சிறிதும் பெரியதுமாகப்
பூத்திருந்தன மழைத்துளிகள்

சென்ற பின்னும்
மனசோடு தங்கியிருக்கிறது
அசைந்தசைந்து மெல்லக் கடந்த
யானையின் மணியோசை”

ஒரு கறாரான விமர்சகனாய் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஆரம்ப
நிலை நவீனக் கவிதைகள் என வரையறுத்துவிட முடியும். ஆனாலும்
இக் கவிதைகளில் பதிவாகி இருப்பவை அந்த அளவில் நேர்மையானவை
என்பது ஆசுவாசமாக இருக்கிறது. போலச் செய்தலையோ, மிகையையோ, பாசாங்கையோ இக்கவிதைகளில் உணரமுடியாது. வேறு யாரையும் போல இருக்க விரும்பாத, பிடிவாதமில்லாத குழந்தையின் புன்முறுவலான சிறு நடை தான் இத்தொகுப்பு. மற்றபடி ப்ரியம், வாஞ்சை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல், ஏக்கம், கரைவு, தண்மை, மன்னித்தல், இயலாமை என மனதின் மேல் நிலையில் நின்று, பார்த்து எழுதப்பட்ட பல நிலைகள் வாசிப்போருக்கு இணக்கத்தையும் நிம்மதியையும் தருகின்றன.

கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ப்ரியம் என்ற சொல் நாவில் ஒட்டிக் கொண்டது. ப்ரியங்கள் சொற்களாய் மட்டுமே நின்றுபோன என்னுலகில் இந்தப் ப்ரியம் என்ற சொல் ஏற்கனவே தன் நிறத்தை
இழந்துவிட்டிருக்கிறது. தவறான முகவரி எனச் சொல்லி அப் ப்ரியத்தை
லாவண்யாவிடமே கொடுத்துவிடுகிறேன். இத்தொகுப்பிற்கு என்னைப்
போய் விமர்சனம் எழுதக் கேட்டுக் கொண்டதற்கான தண்டனையாய்
அவருக்கு ஒரு இலவச அறிவுரையையும் தராமல் முடிப்பது இச்சிறு
பகிர்வுக்கு அழகில்லைதானே? அது இப்படியாகிறது

“ப்ரியங்களால் நிறைந்த ப்ரியமுள்ள லாவண்யா உங்களின் அடுத்த கவிதைத் தொகுப்பில் இந்தப் ப்ரியம் என்ற சொல்லைப் பார்க்க நான் விரும்பவில்லை”

அய்யனார் விஸ்வநாத்