அறிமுக இயக்குனர் நண்பர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மதுபான(க்)கடை குடி குடியை கெடுக்குமென்று வழக்கமான புலம்பலை முன் வைக்காமல் குடிக்கு பின்னிருக்கும் அரசியலை பேசவும், இத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தும் குடியை வெளிப்படையாக நாங்கள் குடிகாரர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் இருப்பவர்கள், நாம் குடித்துவிட்டு தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வு உள்ளவர்கள் அதிகமிருப்பினும், குடிக்காரர்கள் ஏன் அதிகரிக்கின்றார்கள் என்பதை விவாத்திக்க ஒரு களமமைத்து தந்திந்திருக்கின்றது. குடிக்கும் சமூகம் எப்படி அரசின் முக்கிய வருமானத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஒரு புட்டி மது தயாரிக்கும் விலைக்கும் விற்கப்படும் விலைக்கும் இருக்கும் வித்தியாசம் மேலும் போலி சரக்கின் மதுபுட்டியின் தரம் கூட குறைவாக இருக்கின்றது என்ற மிக நுணுக்கமான விசயங்களை யோசிக்க போகிற போக்கில் கொடுத்திருக்கிறார் கமலக்கண்ணன்.
நாஞ்சில் நாடனின் "உண்ணற்க கள்ளை" என்ற கட்டுரையின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் மதுபானகடை. மேலும் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் என்.டி.ராஜ்குமார் பாடல் எழுதி, பாடி மற்றும் படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்திலும் நடித்துள்ளார். அவருடைய பாடல்கள் எல்லாம் பல கவிதைகள் உள்ளடக்கிய நவீனவரிகளாக இருக்கின்றது. "மஞ்சள் நிற போதை", "வட்ட வட்ட தத்துவம்" போன்ற வரிகள் மது போதையின் சுழற்சியாக கற்பனை செய்து கொள்ள முடிகிறது. "பொல்லாத குதிரை ஏறி" காமத்தின் படிமமாக விளங்குகிறது. அவ்வையாரும், அதியமானும் ஒன்றாய் குடித்த கதை தெரியுமா என்று படத்தில் அவரே வினவுகிறார். என்.டி.ராஜ்குமாரின் நவீன கவிதைகள் போலவே பாடல் வரிகள் எல்லாம் வித்தியாசமாக படிமம் மற்றும் குறியீட்டு வரிகளாக விளங்குன்றது. மேலும் முன்பு லஷ்மணராஜா என்ற பெயரில் சுயம் என்ற வலைப்பூ எழுதிய தற்போதைய இராவணன் இந்த படத்தில் நிழல் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். மேலும் 5000 புகைப்படங்களை ஆல்பமாக தொகுத்து ஒரு டிரைலராக செய்த புது முயற்சியினையும் இவர் இந்த படத்தில் செய்துள்ளார்.
குடியினை மட்டுமல்லாது மிக ஆழமாக யோசிக்க வேண்டிய பல விசயங்களை இந்த படம் மெல்ல தெளித்திருக்கிறது. "பள்ளிக்கு போக வேண்டிய குழந்தையை, முதியவர் இல்லத்தில் சேர்க்க வேண்டிய வயதானவர்களை இங்கே ஏன் வேலைக்கு வைச்சி இருக்கே" என்று ஏழ்மையை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்றும், "நீங்க குடிச்சிட்டு பாடம் நடத்தலாம், ஆனா அவங்க குடிச்சிட்டு படிக்க கூடாதா?" என்ற கேள்வியின் எள்ளல் பெற்றோர்களே, ஆசிரியர்களே இளைய தலைமுறைக்கு கெட்ட எடுத்துக்காட்டாகி அவர்களை நல்வழிபடுத்த முயற்சி செய்யாதீர்கள் என்றும் கருத்தை பதிவித்திருக்கிறார் இயக்குனர். "என் மண்ணு விஷமா போச்சு" என்று பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கும் மனநிலை சரியில்லாதவரை பார்க்கும் போது மனநிலை சரியில்லாதது அவருக்கா நமக்கா என்று நினைக்க வைக்கிறது. அரவாணிகளிக்கான மனவலியை ஒரு காட்சியில் ஒரு பாடல் வரியில் உணர்த்தி இருக்கிறார். "கள்ளும் சாரயமும் எங்க குலதெய்வம்டா நாங்க ஒன்னும் உற்சாகமாக இருக்க குடிக்கல, எங்க வேதனையை தொழில் வலியை மறக்க குடிக்கிறோம்" என்று சொல்லும் துப்புரவு தொழிலாளியின் வார்த்தைகள் .... பதிவிக்க வார்த்தைகளில்லை எனக்கு.
வித்தியாசமாக கதை சொல்லுதலும், வித்தியாசமாக கதைக்களமும் என்பது மட்டுமின்றி முடிவே இல்லாத கதையை நாளை மற்றுமொரு நாளே என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆரம்பகாட்சிகளில் சில நிமிடம் இந்த குடிகாரர்கள் ஏன் இத்தனை அலும்பு செய்கிறார்கள் என்று ஒரு சலிப்பையும், மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை"மாட்டினான் மணி", "தமிழ்நாட்டுலையே பார்ல சரக்கு குடுக்க முடியாது சொல்லவைச்ச பெருமை உனக்கு தான்","கட்டிங் கரெட்க் செய்யவும் தான்" என்று சில கதாபத்திரங்கள் மூலம் சொல்ல வைத்திருப்பது மக்களுக்கு சொல்ல வந்தது புரியாமல் போய்விடுமோ என்ற பயம் இயக்குனர்க்கு இருப்பது போல தோன்றுகிறது.
குடித்து விட்டு யார் காலிலும் கவலையின்றி விழும் ஒருவர், ஓசி குடிக்காக பாடுவதும் அல்லது பிறரை ஏமாற்றி காசு தேற்றுவதுமான மற்றுமிருவர், குட்டிக்குமிடத்திலும் ஜாதி வெறியை காட்டும், ஏழைகளில் இரத்ததை உறுஞ்சும் முதலாளிகள்,பணக்காரர்கள், ஏதேனும் விழாவை கொண்டாட வரும் கூட்டம்,அரவாணிகள். துப்புறவு தொழிலாளிகள், பள்ளி மாணவர்கள், வயிரெறிச்சல்காரர்கள் என்று பலர் வந்து போகும் மதுபானகடை மட்டும் மூதேவி குடியிருக்கும் இடம் போல இருப்பது ஏன்? குடிகாரர்கள் நல்லவர்களா இல்லை கொஞ்சம் கெட்டவார்களா என்று பொதுவில் கேள்வி கேட்டு போகிறது மதுபானகடை.
இந்த திரைப்படம் குடிகாரர்களுக்கு எதிரான படமேயன்று. ஒத்தை மரத்து பனைக்கள் உடம்புக்கு நல்லது என்று சொல்வழக்கு உண்டு. அதன்படி குடிக்கும் மதுவின் அளவும் விளைவும் தெரிந்து அதை செய்பவர்களை தவறானவர்கள், குற்றவாளிகள், மதுபானகடை என்பது அ-புனிதமான இடம் என்ற எந்த பிரச்சாரங்களை செய்யவில்லை இந்த படம். "அண்ணா, காய் எல்லாம் அழுகி போய் இருக்கு" என்று தொழிலாளி சொல்வதற்கு, "குடிகார நாய்களுக்கெல்லாம் இது போதும்" என்று தெனாவெட்டாக ஒரு பார் முதலாளி சொல்லுமளவுக்கு ஆக்கி வைத்திருக்கும் விசயம் எது? படத்தின் முக்கியமான கதாபத்திரமாக வரும் மதுபானகடை குப்பையும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாட்டில்கள் இறைந்து கிடப்பதும், சமையலிடம், சீறுநீர் கழி(ளி)ப்பிடம் எல்லாம் அருகருகே இருப்பது பார்ப்பதற்கு அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது. இத்தனை மட்டமான சுகாதாரமற்ற இடத்திலா இத்தனை பெரிய வருமானம் ஈட்டி தரும் வியாபாரம் நடைபெறுகிறது? இந்த மதுபானகடைகளில் நுகர்வோர்க்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதியோ பாதுகாப்போ இல்லாத இடத்தில் ஏன் அய்யா குடிக்கீர்கள் என்ற கேள்வியே மிஞ்சுகிறது. இயக்குனர் மற்றும் படக்குழுவினரிடம் "என்ன படத்தில் காட்டப்படும் பார் இவ்வளவு கேவலமாக இருக்கின்றதே? என்று கேட்டால்" தமிழ்நாட்டில் இருக்கும் மிக சிறந்த பார்கள் கூட இதைவிட கேவலமாக இருக்கின்றது என்று கூறுக்கின்றனர். இதை எல்லாம் காணும் போது நாஞ்சில் நாடன் தன் கட்டுரையில் சொல்லி இருப்பது போல "குற்ற உணர்வோடு இப்படிப்பட்ட இடத்தில் குடிப்பதற்கு குடிக்காமல் இருங்கள்" என்ற விசயத்தை இந்த படம் மிகத்தெளிவாக பதிவு செய்து இருக்கிறது.