Sunday, January 24, 2010

நிசப்தத்தின் சப்தம்

கொஞ்ச நாளைக்கு முன் நண்பர் லஷ்மணராஜாவின் கவிதைகான பன்முனை விளக்கங்களை படித்த அனுஜன்யா நீங்கள் தேவதச்சன் கவிதைக்கு இந்த மாதிரி ஏன் முயற்சிக்க கூடாது என்றார். நான் அதிகம் தேவதச்சன் கவிதைகள் படித்ததில்லை. சில நாட்களுக்கு முன் வா.மணிகண்டனின் வலைப்பதிவில் ஒரு தேவதச்சன் கவிதை பார்த்தேன். படித்ததும் மணிகண்டன் சொன்னது போலவே பல படிக்கட்டுகளுடன் இந்த கவிதை என் மனதில் ஏறி அமர்ந்து கொண்டது.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.


மனித மனமென்பது ஒரு பெறாற்றல் பெற்ற ஒன்று. நிமிட நேரத்தில் அமெரிக்காவில் இருப்பவனை ஆண்டிப்பட்டி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே நண்பர்களோடு
அளவளவியதையோ, கண் காணாத காதலன் என்றோ கொடுத்த முத்தத்தில் இன்றும் திளைக்கவோ வைக்கும். பல விஞ்ஞான,அஞ்ஞான விசயங்களை நினைக்க, பின் நடத்தி காட்ட வைக்கும். இன்னும் பல பல கற்பனைகட்கு அடிதளமாக இருக்கும். இந்த கவிதையில் அவள்/அவன் துணி துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் காதில் விழும் சத்தத்தை மூளை இனம் பிரித்து குருவி சத்தம் என மனதுக்கு சொல்கின்றது. பின் குருவிகளின் நிசப்தத்தையும் நிசப்தத்தின் சப்தத்தையும் மனம் உணர்கின்றது. புறம் அமைதியானதும் அகம் சத்தமிட ஆரம்பிக்கின்றது. செயல் ஒன்று தான் ஆனால் புலன்களும் மனமும் மட்டும் என்னென்னவோ உணர்கின்றது.


நிசப்தத்தின் சப்தம் - 1
------------------------------

நாம் எப்போதும் எல்லாம் வழக்கம் போல் தான் எந்த மாற்றமுமில்லை காலை,மாலை வீடு, அலுவலகம், மனைவி, மக்கள், தொலைக்காட்சி என்று எல்லா நாளும் ஒரே மாதிரி தான் செல்கின்றது என்றே சலிப்போடு இருப்போம். ஆனால் ஆர்விசந்திரசேகரின் இந்த கவிதையையில்

மற்றுமொரு நாள்...

எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையின் கையசைப்பை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையின் கையசைப்பை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.

இப்படி ஏதாவது ஒரு அழகாக தான் இருக்கின்றது தினமும். நம்மை அறியாமலே அதை கவனித்தும் கவனிக்காமல் செல்லும் நாம் வழக்கம்போல் எல்லாம் என்று புலம்புவது புதிரான விசயமன்றோ. ஒவ்வொரு துணி துவைக்கையிலும் அவன்/அவள் காதில் விழுவது வித்தியாசமான சப்தங்கள். அது போல தான் எதுவுமே வழக்கம் போல என்ற வழக்கே கிடையாது. யோசித்து பார்த்தால் ஏதாவது வித்தியாசமாக இருக்க தான் செய்யும் அது நன்மையோ தீமையோ மனமொன்றி அனுபவிக்க பழகி கொண்டால் வாழ்கை சலிப்பின்றி சுவாரஸியமாக, சுவையாக இருக்கும்.

நிசப்தத்தின் சப்தம் - 2
------------------------------

ஒரு கல்லூரி செல்லும் பெண் அவள் தினமும் காலை செல்லும் பேருந்தில் சந்திக்கும் ஒருவன் தினமும் அவளை பார்க்கின்றான் என்றால், முதலில் சங்கடபடுவாள். சில நாள் சென்று அவன் பார்ப்பது அவளுக்கு பழகிவிடும். அவனை அவளுக்கு பிடிக்க வேண்டும் என்பது கூட இல்லை. வெறுமனே பார்பவனை போய் யாரிடம் சொல்லி என்ன செய்வது என்ற தயக்கமோ, அவன் பார்ப்பதெப்படி உனக்கு தெரியும் என்ற எதிர் கேள்விக்கு பயந்தோ அவள் அவனை பற்றி யாருக்கும் சொல்லி இருக்க மாட்டாள். எதேச்சையாக ஒரு நாள் அவன் வரவில்லை என்றாலோ வந்தும் அவளை பார்க்கவில்லை என்றாலோ அது அவளுக்கு மிக வித்தியாசமான உணர்வை தரும். வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என்று இருக்கும். வந்தும் பார்க்கவில்லை என்றால் ஏன் பார்க்கவில்லை என்றுமிருக்கும். தொடர்ந்து சில நாள்கள் வராமலோ, பார்க்கமலோ இருந்தால் என்ன ஆயிற்றோ என்று நிசப்பதமாக மனம் சத்தமிடும். புறமடங்க(அடக்கப்பட) அகமதிகம் சப்திக்கும். இது பெண்களுக்கே உரிய உணர்வு நிலையா அல்லது ஆண்களுக்கு அதே நிலை தானா ஒரு வேளை தேவதச்சன் இந்த சிந்தனையை அந்த கவிதையாக வடிக்க முயற்சி செய்தாரா?


நிசப்தத்தின் சத்தம் - 3
-------------------------------

சில சமயம் நம் உணர்வுகள் சிந்தனையை தாண்டியதாக இருக்கும். உதாரணத்துக்கு ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளர் தன் நண்பர்களுடன் சத்தமாக அரட்டை அடிக்கும்
சமயம் நாம் ஏதாவது சிக்கலான விசயத்திற்கு யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த சத்தம் அதிகம் தொந்தரவு செய்யும், ஒரு வேளை அவர்களே நீங்கள் மிக கவனமான வேலையில் இருப்பதாக நினைத்து அரட்டை சப்தத்தை குறைந்தாலோ அல்லது வேறு இடம் சென்று பேசினாலோ, பேச்சை நிறுத்தி கொண்டாலோ கூட உங்கள் காதுகள் அவர்களை பின்
தொடரும். அதே தொல்லை பெரும்பாலும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளோக்கோ, வேலைக்கு செல்லும் பெண்களுக்கோ அடிக்கடி நிகழும். அனைவரும் உறங்கி விளக்கு
அணைக்கப்பட்டாலும் அவர்கள் கண்ணுக்குள் மட்டும் விளக்கு எறியும். இது பெரும்பாலும் ஒவ்வாத இடத்தில் இருக்கும் அனைவர்க்கும் பொருந்தும்.

நிசப்தத்தின் சப்தம் - 4
------------------------------

பிரியமான உறவிடை ஒரு சிறு பிணக்கோ அல்லது சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்க வேண்டிய கட்டாயமோ ஏற்படுமாயின் வழக்கமாக அவர்கள் நமக்கு செய்த பணிவிடைகளையோ, சிறு உதவிகளையோ, பிடித்த, பிடிக்காத விசயங்களையோ மனம் எப்போதும் அலசி கொண்டிருக்கும். அடிக்கடி மனதருகே ஒரு மாயபிம்பம் வந்து வந்து மறையும். உணர மட்டுமே முடிந்த ஒரு உணர்வது. இதே உணர்வு மனதுக்கு நெருக்கமான நண்பர்களிடையே கூட வரலாம். எதிரிகள் கூட மனக்கண்ணில் எப்போதும் வந்தாடி நம்மை விசனபடுத்தலாம். கோபியரை விட கண்ணனை அதிகம் நினைத்திருந்தது கம்சனாக தான் இருக்க முடியும். பிரஹலாதனை விட நாரணயண நாமம் சொன்னது ஹிரண்யகஷ்புவாக தான் இருக்க முடியும். மனித மனமென்பது வித்தியாசமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பெற்ற பெரும் அதிர்வை தரும் ஒன்று.

நிசப்தத்தின் சப்தம் - 5
-----------------------------
எதார்தமான சில நம் விருப்பங்கள், வாழ்வின் கட்டாயங்களால் நம்மாலே நிராகரிக்கப்படுகிறது. அந்த வாய்ப்புகள் இழந்த பின்னும் அதன் நினைவுகளை நம்மை அலைக்கழிக்கிறது நிசப்தத்தின் சப்தமென்பதுங்கு வாழ்வின் விருப்பங்க்ளுக்கும் கட்டாய ஏதார்த்திற்குமான இடைவெளி அவ்ளோதான். இதற்கான உதாரணங்களாக ஒரு நிமிடத்தில் தவறா விடப்பட்ட பேருந்து எப்படி 12-B திரைபடத்தில் இரண்டு கதையாக அமைந்ததோ அதே போல தான். தவறவிடப்பட்ட பேருந்து, தவறவிடப்பட்ட வாய்ப்புகள்,தவறவிட்டப்பட்ட உறவுகள், தவறாக இழைத்த கறைகள் அவற்றின் சுவடுகள் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் நிசப்தத்தின் சப்தமாக பலவற்றை. இந்த எல்லாவற்றிலும் அலைகழிப்பது மனம் மனம் மனம் மற்றுமற்றி வேறெதுவும் இல்லை.

ஆதலினால் காதல் செய்வீர்

ஆண்டாள் சூடிக் கொடுத்தவள், நாச்சியார் திருமொழியில் காதலாகி கசிந்துருகி நூற்றி நாற்பத்தி மூன்று கவிதைகள் பாடியுள்ளார்.

நாச்சியார் திருமொழி ‘தையொரு திங்கள்‘ என்று தொடங்கும் முதல் பத்து பாடல்கள் மன்மதனுக்கு கோதை நோன்பிருந்து திருமாலை கேட்பது போல் வரும்.

‘நாமமாயிரம்‘ என்று தொடங்கும் இரண்டாம் பத்து பாடல்களில் மணல் வீடு கட்டி விளையாடும் சிறுமி போல திருமாலிடம் "எங்கள் சிற்றில்வந்து சிதையேலே" என்று உள்ளம் கொள்ளை கொள்ள பாடி இருப்பார். ஒரு ஐந்திணை ஐம்பதின் பாடலும் அதே விதமாக இருக்கின்றது.

கொடுந் தாள் அலவ ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ!

பார்க்கவே அச்சுறுத்தும் கால்களை உடைய வண்டே, உன்னை குறை கூறுவதாக கொள்ளாதே, வேண்டி இரங்கி கேட்கின்றோம், ஓயாமல் ஒடுங்காமல் ஒலிக்கும் கடலிருக்கும் நெய்தல் நிலத் தலைவனின் நீண்ட நெடுந்தேர் கடந்த வழியையானும் எங்கள் கண்கள் ஆர மனம் நிறைய காண வேண்டும். அதனால் அத்தேர் சுவடின் மேல் நடந்து சிதைக்காதே.

நண்டூரி எங்காவது தேர் சுவடு அழியுமா? அந்த தலைவியின் பிரிவுத்துயர் பாருங்கள்.

அவள் தலைவன் மேல் கொண்ட காதல் ஏக்கத்தை இதை விட நுணுக்கமாக மென்மையாக உணர்த்த முடியுமா ? அவன் சென்ற வழியை தன் மேல் விட்டு சென்ற சுவட்டை யாரும் சிறிதளவு கூட கலைத்திடக்கூடாது என்ற திண்ணம் பாருங்கள்.

ம்ம்ம்ம்ம்ம்..... என்ன சொல்ல.... சங்க காலத்தில் மிக சிறப்பாக காதலித்திருக்கின்றார்கள் ஆதலினால் காதல் செய்வீர்.

ஐந்திணை ஐம்பதில் ரசனையும், உவமையும்

ஐந்திணை ஐம்ப‌தில் ர‌ச‌னையும், நாட்டின் வ‌ள‌மையும், கூர்ந்த‌ உவ‌மைக‌ளும் நிர‌ம்பிக் கிட‌க்கின்ற‌ன‌.
அவ‌ற்றில் சில‌ இங்கே.
crown "கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு"
அழ‌கிய‌ சிறு நாரையின் (கொக்கின்) குத்துக்கு அஞ்சி, வாளை மீன்க‌ள் நீல‌ ம‌ல‌ர்க‌ளிட‌ம் ம‌றைந்து விளையாடும் வ‌ள‌மை மிக்க‌ ஊரில் வாழ்ப‌வ‌னுக்கு.... ர‌ச‌னை வ‌ள‌மை அறிவு....
000
lotus1

"அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்"
அவிழ்ந்து ம‌ல‌ர்ந்த‌ தாமரை பார்க்க‌ நெருப்பினை போல‌ இருக்கும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ மல‌ர்ந்த‌ தாம‌ரை நிறைந்த‌ வ‌ய‌ல்க‌ளை கொண்ட‌ ஊரில் வாழ்ப‌வ‌ன்.....
உவ‌மை அறிவு கூட‌வே நாட்டின் வ‌ள‌மை...

000
river sand "நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து"
ஆற்றின் நுண் ம‌ண‌ல் போல் நுட்பமாக‌ இணைந்திருந்த‌ ஐவ‌கைக் கூந்த‌ல், வெண் க‌ற்றாழை போல‌ நிற‌ம் மாறி போன‌து....
ஆஹா என்னே உவ‌மை என்னே ப‌ருவ‌ம‌ற்ற‌த்தை உண‌ர்த்தும் அறிவு...
000
tiger1 "உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப"
உதிர‌த்தைத் தோய்ந்த‌ வேங்கையின் ந‌க‌ம் போல‌ சிவ‌ந்து அரும்பி இருக்கும் முருங்கை ம‌ல‌ர்க‌ள்...
என்ன‌ நுணுக்க‌மான‌ நுட்ப‌மான‌ நோக்குத‌ல் வித்தியாச‌மான‌ உவ‌மை...
வீர‌த்தை உண‌ர்த்தும் உவ‌மை...
000
lizard1 "பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி"
சினைப்ப‌ல்லி பொரிந்த‌ முட்டைகளையொத்த புன்னை ம‌ல‌ர்க‌ள் இரைந்து கிட‌க்கும் ம‌ண‌ல்மேட்டில் மேலேறி...
இதுவும் மிக‌ வித்தியாச‌மான‌ ஒப்பீடு...
மேலும் நுட்ப‌மான‌ நோக்குத‌லுக்கு ம‌ற்றுமொரு எடுத்துக்காட்டு.
000
beach11 "எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப !"
அலை மோதி மோதி எழுந்த‌ ம‌ண‌ல் மேல், அவை கொண்டு வ‌ந்த‌ முத்துக‌ள் நின்று இமைப்ப‌து போல‌ ஒளிவீசும் உப்ப‌ங்க‌ளிக‌ளை கொண்ட‌வ‌னே...
இங்கே முத்தை உப்போடு ஒப்பீடு செய்த‌து போல் கொண்டாலும்,
முத்துக‌ள் உப்பு போல் கொட்டி கிட‌க்கும் என்று கொண்டாலும்
வ‌ள‌மை, உவ‌மை... அருமை.
000