Monday, September 24, 2012

சுந்த‌ர‌ ராம‌சாமி க‌விதைக‌ள்

உறவு
-------

உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.

- சுந்தர ராமசாமி

இந்த வாழ்க்கை
---------------

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர
நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை

- சுந்தர ராமசாமி

4 comments:

யாத்ரா said...

சுந்தர ராமசாமி அவர்கள் கவிதைகளை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, உன் கவிதையை நீ எழுது என்ற அவரின் கவிதையை வாசித்திருக்கிறீர்களா

Unknown said...

உறவு என்பது நாமாக தேர்ந்தெடுத்து கொள்வதில்லை.தானாக அமைவது.விதி.அது நிச்சயிக்கப்பட்ட திருமணம் போல.நோ சாய்ஸ்.வீட்டோ உரிமை மட்டுமே உண்டு.

நட்பு என்பது நாமாக தேர்ந்தெடுத்துகொள்வது.அது காதல் மணம் போல.தேர்வு செய்யும் உரிமை நமக்கு மட்டுமே உண்டு

உயிரோடை said...

வாங்க யத்ரா கருத்துக்கு நன்றி. நீங்க சொன்ன கவிதை படிச்சது இல்லை. இருந்தா minnal_pesum@yahoo.com என்ற மடல் முகவரிக்கு அனுப்புங்க இல்லைன்ன பின்னூட்டத்திலேயே போட்ட நல்லா இருக்கும்

வாங்க செல்வன். உங்க கருத்தோடு முழுமையா ஒத்து போறேன்

யாத்ரா said...

\\உன் கவிதையை நீ எழுது
பசுவைய்யா (சுந்தர ராமசாமி)

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள
விரும்பும் புரட்சி பற்றி
எழுது
உன்னை ஏமாற்றும்
போலிப் புரட்சியாளர்கள் பற்றி
எழுது
சொல்லும் செயலும் முயங்கி
நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை
வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட
விரும்பும் அன்பைப் பற்றி
எழுது
எவரிடமும் அதைக் காட்ட
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ
எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை
என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன்
எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு. \\


கவிதைத்தளத்தில் இயங்கும் அனைவருக்கும் உற்சாகத்தையும், தெளிவையும், உள்ளொளியையும் பல திறப்புகளையும் தருவதோடு மட்டுமல்லாது இக்கவிதையை வாசிக்கையிலெல்லாம் ஒருவித புது உற்சாகம் ஊறும்.