Thursday, September 24, 2015

லாவண்யா சுந்தரராஜனின் "நீர்க்கோல வாழ்வை நச்சி" - பாவண்ணன்



ஊமத்தம்பூக்களும் தானியங்கிக்குழாய்களும்

பெருநகரத்தில் பெரிய நிறுவனமொன்றில் இணைந்து பணிபுரிந்து வாழும் வாய்ப்புப்பெற்றவராக உள்ளார் லாவண்யா. ஆனால் அவர் மனம் பள்ளிப் பருவத்துக்குச் சொந்தமான கிராமத்துடன் ஆழ்ந்த பிடிப்புடையதாக இன்னும் இருக்கிறது. மனத்தளவில் கிராமத்தையும் புறநிலையில் நகரத்தையும் சுமந்தபடி வாழ்கிற இரட்டை வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு தவிர்க்கமுடியாத ஒரு நெருக்கடி. எதையும் உதறமுடியாத, எதையும் உடனடியாகப் பற்றிக்கொள்ளமுடியாத அவர்கள் மனத்தவிப்புகள் இக்காலகட்ட இலக்கியத்தின் பாடுபொருளாக மாறியிருக்கிறது. லாவண்யாவின் படைப்புலகத்திலும் அது சுடர்விடுகிறது. ஊமத்தம்பூ அவருக்குப் பிடித்திருக்கிறது. தானியங்கிக்குழாய் அவருக்குப் பிடிக்கவில்லை. அவரையறியாமலேயே அவருடைய விருப்புவெறுப்புகள் கவிதைகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகின்றன.

"ஏரி போலும் ஏரி" இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. கவிதையில் சித்தரிக்கப்படும் ஏரி வறண்ட தோற்றத்துடன் உள்ளது. சற்று முன்பாக பெய்த மழையின் வரவால் எங்கோ ஒரு பள்ளத்தில் சின்னக் குட்டையாக தேங்கி நிற்கிறது நீர். ஒரு காலத்தில் நீர் தளும்பி நின்ற தோற்றம், இன்று ஒரு சின்னக்குட்டையையும் பெருமளவு கருவேல மரங்களையும் புல்வெளியையும் கொண்ட இடமாக உருமாறிவிட்டது. உயரமான தோற்றத்தோடு எழுந்து நிற்கும் கரைகள்மட்டுமே ஏரி என்கிற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் அடையாளமாக இன்னும் எஞ்சி நிற்கிறது. உருமாறி நிற்கிற ஏரியின் சித்தரிப்பதோடுமட்டுமே இக்கவிதை முற்றுப்பெற்றிருப்பின் அதை ஒரு காட்சிக்கவிதை என்ற அளவில் கடந்துபோய்விடமுடியும். ஆனால் கவிதை சற்றே நீண்டு, அந்த ஏரியைக் கடந்துபோகிற ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது. தன்னைப்போலவே அந்த ஏரி என அவள் மனம் எண்ணுவதையும் கண்டறிந்து சொல்கிறது. அக்கணம் ஏரி அழகான ஒரு படிமமாக விரிவாக்கம் பெற்றுவிடுகிறது. அவள் எப்படி ஏரியாக மாறமுடியும். நீர் தளும்பிநின்ற ஏரியைப்போல அவளும் ஒரு காலத்தில் இளமை ததும்ப நின்றவள். காலம் அவள் இளமையை விழுங்கிவிட்டது. வெவ்வேறு அடையாளங்களை அவள் உடலில் ஏற்றிவிட்டது. அவள் உருவம்மட்டுமே பெண்ணுக்குரிய தோற்றமாக எஞ்சி நிற்கிறது. அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கியபடி நகர்ந்துகொண்டே இருக்கிறது காலம். காலம்மட்டுமே, மாறாத உருவத்தோடு வலம்வர, அதன் கண்ணில்பட்ட எல்லாம் மாற்றமடைந்தபடியே இருக்கிறது.

"கண்ணாடிக்கோப்பைகளும் சில பிரியங்களும்" தொகுப்பில் உள்ள மற்றொரு நல்ல கவிதை. இரண்டு கண்ணாடிக்குவளைகளை முன்வைத்துப் பேசுகிறது கவிதை. அதன் தோற்ற ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இரட்டையர்போல இருப்பதாகவும் சொல்கிறது. தோற்றம்மட்டுமே ஒன்றாகவே இருந்தாலும் அது பயன்படும் விதத்தில் துல்லியமான வேறுபாடு உள்ளது. ஒன்றில் பிரியம் நிரப்பப்படுகிறது. இன்னொன்றில் தனிமை அகப்பட்டுத் தவிக்கிறது. இது ஒரு தருணத்தின் காட்சி. இன்னொரு தருணத்தில் இக்காட்சி மாற்றமடையலாம். பிரியத்தின் குவளையில் தனிமை அகப்பட்டுவிடுகிறது. தனிமையில் குவளையில் பிரியம் நிரம்பி வழிகிறது. தருணங்கள் இப்படி மாறிமாறி அமைந்தாலும், எல்லாத் தருணங்களிலும் ஏதோ ஒரு குவளைமட்டுமே நிரப்பப்படுகிறது, மற்றொரு குவளையில் தனிமையின் வெறுமை சூழ்ந்து நிற்கிறது. மேசைமீது வைக்கப்பட்ட கண்ணாடிக்குவளைகள் சமூகத்தளத்தில் படிமமாக மாற்றமடையும்போது கவிதையின் வலிமை அதிகரிக்கிறது. நிரப்பப்பட்ட குவளை, எப்போதும் வாய்ப்புகளைத் துய்க்கிற வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் வெற்றுக்குவளை, வாய்ப்புகளுக்கு வழியில்லாமல் புறக்கணிக்கப்பட்ட வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் உணரமுடியும். பெறுவதும் புறக்கணிக்கப்படுவதும் தருணத்துக்குத் தகுந்தபடி மாறலாம். ஆனால் புறக்கணிப்பென்ற ஒன்றே இல்லாதபடி சூழல் ஏன் மாறவில்லை என்பது முக்கியமான கேள்வி.

"எத்தனைமுறை பயந்தாலும் பயம்மட்டும் பழகுவதில்லை" என்பது லாவண்யாவின் ஒரு கவிதையில் இடம்பெற்றிருக்கும் வரி. மனம் அசைபோட நல்ல வரி. சிலருக்கு எதிர்பாராதவிதமான ஓசைகளைக் கேட்டதும் பயம் அரும்புகிறது. சிலருக்கு எதிர்பாராத மனிதர்களைச் சந்தித்தால் பயம் உருவாகிறது. சில காட்சிகளைக் கண்டால் சிலருக்கு பயம் தோன்றுகிறது. ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வாமையால் அல்லது அதிர்fச்சியால் உருவாகிற உணர்வுதான் பயம். அதிர்ச்சி அல்லது ஒவ்வாமை இருக்கிறவரைக்கும் பயமும் இருக்கத்தான் செய்யும். பயத்தை ஒருபோதும் நம்மால் பழகிக்கொள்ளமுடிவதில்லை. பிறவிக்குணம்போல அது நம்முடனேயே தங்கிவிடுகிறது.

"அமைதியை விளைவித்தல்" நவீன வாழ்வின் பதற்றத்தைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல கவிதை. வேலையிடங்கள் இப்போதெல்லாம் பெருநிறுவனத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன. எல்லா இடங்களிலும் அடையாள அட்டை. கைவிரல் ரேகைப் பதிவு. வரும் சமயம், வெளியேறும் சமயங்களின் பதிவு. நுழைந்ததற்குப் பிறகு தானே அடைத்துக்கொள்ளும் தானியங்கிக் கதவுகள். எங்காவது ஓரிடத்தில் இடறிவிடுமோ என்கிற பதற்றத்தை மனம் எப்பொழுதும் சுமந்தபடியே இருக்கும். தவறே செய்யாத இயந்திரங்கள் பிறழ்ந்து செயல்படும் சமயங்களில் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக கைகட்டி நிற்பதைப் பலமுறை பார்த்த அனுபவத்தால், உள்ளிருக்கும் வரை பதற்றமும் துணையாக இருக்கிறது. அமைதியான வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ளத்தான் வேலையைத் தேடுகிறோம். ஆனால் வேலைசெய்யப் போன இடத்தில் பதற்றத்தில் உழல்fகிறோம். எவ்வளவு பெரிய முரண்.

காட்சிகளையும் அனுபவங்களையும் எண்ணங்களையும் வகைப்படுத்தி கவிதைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளையதலைமுறைக் கவிஞர் லாவண்யா. அவருடைய ஆர்வத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பைச் சாட்சியாகச் சொல்லலாம். அவர் மேற்கொள்ளும் இடைவிடாத புதிய முயற்சிகள்மட்டுமே இனி அவரை அடுத்த கட்டத்தைநோக்கி நகர்த்திச் செல்ல உதவும்.

( நீர்க்கோல வாழ்வை நச்சி - கவிதைத்தொகுதி. லாவண்யா சுந்தரராஜன், அகநாழிகை பதிப்பகம். 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்- 603 306. விலை.ரூ40)

7 comments:

Anonymous said...

interesting...kandipa padikaren... online-la kidaikuma?... atha details-um blog-la update pandreengala?

Unknown said...

நல்லதொரு விமர்சனம் லாவண்யா. வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு விமர்சனம்... வாழ்த்துகள்.

Ganesan said...

அருமையான விமர்சனம், வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

வணக்கம்
நல்லதொரு தொகுப்பு படிக்கணும் போல இருக்கு ஆனா அரபுநாடுகளில் கிடைக்க வாய்ப்பில்லை முயற்சி செய்துபார்கிறேன் தோழி........
பதிவுக்கு வாழ்த்துக்கள்

உயிரோடை said...

பிரேம் ஆன்லைனிலும் கிடைக்கும்.

பின்வரும் சுட்டியில் விபரம் அறிக.

http://www.aganazhigai.com/p/blog-page.html

உயிரோடை said...

நன்றி பிரேம்.

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

நன்றி சே.குமார்.

நன்றி கவேரி கணேஷ்.

நன்றி தினேஷ்குமார்.