Saturday, January 24, 2009

யூரோவே இல்லாமல் ஃப்ரான்க்போர்டில் ஒரு வலம்

சுவீடனில் இருந்து திரும்பி ஒரு மாதத்தில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுவதற்கு விசா கிடைத்தது. ஆனால் இந்த முறை கிடைத்தது ஜெர்மன் விசா. அதனால் ஒரு ஜெர்மனிய நகரத்தில் தரையிறங்கி பின் சுவீடன் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த காரணத்திற்காக ஃப்ரான்ங்போர்ட் வழியாக ஸ்டாக்ஹோம் செல்ல விமான சீட்டுகள் கொடுக்கப்பட்டன அலுவலகத்தில். அதுவும் ஃப்ரான்க்போர்டில் எட்டு மணி நேர இடைவெளி வேறு. அதனால் நானும் என்னுடன் வந்திருந்த நண்பரும் ஃப்ரான்ங்போர்ட் சுற்றி பார்க்க முடிவு செய்தோம். ஒரு நாள் முழுவதும் எந்த போக்குவரத்தில் வேண்டுமானாலும் செல்ல ஏதுவான பயணசீட்டு பதினாலே யூரோவிற்கு கிடைக்கின்றது ஃப்ரான்ங்போர்டில். அதில் அதிகபட்சம் ஐந்து நபர்கள் பயணிக்கலாம். கடனட்டையில் அந்த பயணசீட்டை வாங்கிக் கொண்டோம். விமானநிலைத்தில் இருந்து ஒரு நுழைவாயில் வழி வந்தால் மேட்ரோ ஏறும் வசதியுள்ளது ஜெர்மன் நாட்டு நகரில். ரயில் நிலையத்தில் சந்தித்த இந்திய நண்பர்களிடம் எங்கே செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு. ஃப்ரான்ங்போர்ட்டின் வரைபடத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினோம்.

விமான நிலையத்திலிருந்து சென்ரல்(சென்னை இல்லைங்க) நிலையல் அடைந்து அங்கிருந்து இன்னுமொரு மெட்ரோ ரயில் ஏறி டாம் ரூமர் என்ற நிலைத்தில் இறங்கி அங்கே ஒரு நதியும் நிறைய அருங்காட்சியகங்களும் இருப்பதாக அந்த இந்திய நண்பர்கள் சொன்னதால் அதை பார்க்க கிளம்பினோம். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தால், மெயின் நதி(பேரே மெயின் நதி தானுங்க) வருகின்றது. அதன் அக்கரையில் நிறைய அருட்காட்சியங்கள் இருந்தன. அதை பற்றிய விபரங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மிக புராதனமான அருங்காட்சியகத்தை தேர்தெடுத்து சென்றோம். நுழைவு கட்டணமாக பத்து யூரோ கேட்டார்கள். எங்களிடம் இருந்தது அமெரிக்க டாலர்களும் கடனட்டையும் தான். அங்கே கடனட்டை ஏற்று கொள்ளபடாத காரணத்தாலும் டாலர்களை மாற்ற வசதி அந்த இடத்தில் இல்லாததாலும் மேலே நடந்தோம். தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் அதே நிலையே.

ஃப்ரான்ங்போர்டில் என்னை மிக கவர்ந்தது அந்த நதிகரையோரமே. வசந்த கால மகழ்ச்சியில் மலர்ந்து பூத்திருந்தது அந்த நதிகரை. சற்று தொலைவில் இருந்து பார்த்தால் கிடைத்த இடமெங்கும் தன்னை நிறைத்து பூத்திருந்த மரங்கள் பார்க்க அதிசியமாக இருந்தன. இலைகளே இல்லாமல் வெறும் பூக்கள் மட்டுமிருந்தது அந்த மரங்களில். மஞ்சள்,உதா, இளம்சிவம்பென்று இலைகளற்ற அந்த மரங்கள் பார்க்க கொள்ளை அழகாக இருந்தது. அந்த மரங்களின் மிக அருகில் சென்று தேடினால் மட்டுமே சில இலைகளை காணமுடிந்தது. எனக்கு பிடித்த மஞ்சள் நிற பூ(ஏன் மஞ்சள் நிற பூக்கள் பிடிக்கும் என்று பின்னொரு பதிவில் :) ) ஒன்று இங்கே இரண்டு அடுக்காக இருந்தது.








லில்லி பூவிற்கும் அல்லி பூவிற்கும் இடைப்பட்ட வடிவாய் சந்தன கலந்த வெள்ளை நிறத்தில் அழகாய் பூத்திருந்தது மற்றொரு மரம். நம் ஊர் வெள்ளை செவ்வந்தி பூக்களுமிருந்தன ஆங்காங்கே. நுனி முழுதும் இளம் சிவப்பை பூசிய, செவ்வந்தி பூ போன்ற ஒரு மலரும் படர்ந்து மலர்ந்திருந்தது தரைகளெங்கும். பச்சை நிற மலர்கள் பார்க்கும் புண்ணியம் வாய்த்தது மெயின் நதிகரையில். இளம் பச்சை நிறத்தில் சிறு சிறு பூக்களை பூத்திருந்தது அந்த அதிசய மரம். பார்த்ததில் மனம் கொள்ளை கொண்ட நாயகி இளம்சிவப்பாய் பூத்திருந்த அந்த மரம் தான். மிக அழகாய் இருந்தது. நிறைய வண்டுகளை ஈர்த்து வைத்திருந்த அந்த மலர்களை கண்ட போது "பொறிவண்டு கண்படுப்ப" என்று திருப்பாவையில் கோதை பறைந்ததே நினைவில் ஆடியது.








இப்படியாக பலவித நிற மரங்களை, விதவிதமான மனிதர்களை, குழந்தைகளை மகழ்வித்தபடி நகிழ்ந்து கொண்டிருந்த அந்த நதிகரையில் ஓடும் தண்ணீர்க்கு மிக அருகில் அமர்ந்து, அதில் கால் நனைத்தபடி, அங்கே படக்கோட்டி தங்கள் நேரம் கழித்துக்கொண்டிருந்த ஆண்கள் பெண்களை பார்த்தபடி இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருந்த உணவுப்பொருள்களை உண்டுவிட்டு, நதி நிறைய தண்ணீர் இருந்தும், கையில் ஒரு யூரோ இல்லாத காரணத்தால் குடுக்க ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியாமல் தாகத்தோடு நடந்து, மீண்டும் ரயில் நிலையம் ஏறி, ஜூ என்ற நிலையத்தை அடைந்தோம்.

அங்கே இருக்கும் மிருககாட்சி சாலை இருப்பதால் அந்த ரயில் நிலையத்திற்கு பேரே ஜூ. வனவிலங்குகள் இருக்குமிடம் அதனால் பார்க்க வனம் போல் இருக்கும் என்று நினைத்து சென்றோம். ஆனால் வெளியே இருந்து பார்க்க ஒரு மாளிகை போல இருந்தது. உள்ளே ஒரு வேளை வனம் போல இருக்குமோ என்னவோ. இங்கே மட்டுமல்ல இன்னும் ஒரு இடத்தில் ஒரு பெருமை வாய்ந்த தோட்டம் இருப்பதாக சொன்னார்கள் அங்கேயும் நுழைவு கட்டணம் இருந்ததால் உள்ளே சென்று பார்க்கவில்லை. மிருகக்காட்சி சாலையின் வெளியே இருந்த நீருற்றை மேலும் பலவித மலர்கள் குழந்தைகளை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஃப்ரான்ங்போர்டின் சிறந்த கட்டங்கள் இருக்குமிடம் சென்றடைந்தோம்.







அங்கே நிறைய வர்த்தக மையங்கள் இருந்தன. யன்னல் வழி வாங்கல்(window shopping) செய்துவிட்டு அங்கிருந்த ஒரு சில கட்டிடங்களை கண்டு கழித்துவிட்டு, ஐந்து மணி நேரம் கழிந்திருந்தாலும் அங்கிருந்து விமான நிலையம் அடைய இன்னும் மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பாதாலும் ரயில் ஏறி சென்ரல் வந்து ரயில் மாறி விமான நிலையம் அடைந்து, அதே சுவீடன், அதே விடுதி, அதே நண்பர்கள் உண்டு உறங்கி மறுநாள் அலுவலகம் அடைந்தால் "Welcome back to sweden" என்ற இனிய மொழி கேட்டு அலுவல் தொடங்கி தொலைந்து போனேன்.

3 comments:

வேந்தன் அரசு said...

யூரோவே இல்லாமல் ஃப்ரான்க்போர்டில் ஒரு வலம்" வந்த கெட்டிக்கார பெண்

ரவி said...

பதிவில் நிறைய இம்ரூவ்மெண்ட்ஸ். சுவாரஸ்யமாகவும் பிழைகள் இல்லாமலும் அருமையாக இருக்கிறது.

அடுத்தமுறை ஜெர்மனிக்கு போகும் போது இந்த பதிவுதான் ரெபரன்ஸ்...!!!

உயிரோடை said...

வாங்க‌ ராஜு. வருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி. மீண்டும் வாங்க‌.

வாங்க‌ செந்த‌ழ‌ல் ர‌வி. ஏதோ நீங்க‌ சொன்னா ச‌ரி தான். ந‌ன்றி மீண்டும் வ‌ருக‌.