Monday, April 27, 2009

தொலைந்து போதல்

தொலைந்து போவதும் மீண்டு வருவதும் வாழ்கைத் தத்துவம் பூமாவின் கவிதை போல.

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

-- பூமா ஈஸ்வரமூர்த்தி

ஆனால் என் அனுபவம் ஒரு வித்தியாசமான தொலைந்து போதல்.

அன்னியதேசத்தில் தனிமையோடு இருத்தல் மிக கொடியது. அதனால் கிடைத்தவர்களை எல்லாம் தோழமையாக்கி கொண்டு ஒன்றாய் உண்பதும் வார இறுதியில் கூட்டமாய் வெளியே செல்வதும் வித்தியாசமான அனுபவங்களே. அதுவும் ஒரே மொழி பேசும் நண்பர்கள் வாய்த்துவிட்டால் மிக சீக்கிரம் தோழமையும் உரிமையும் பாராட்ட ஆரம்பிப்பது மிக இயற்கை. அதுவும் ஒரு தாய்க்கு உண்டான பரிவோடு அனைவர்க்கும் உணவை சமைப்பதிலும், பரிமாரி விடுவதிலும், கூட்டத்தை கூட்டுவதிலும் பிரசித்தி பெற்றவள். எல்லோர்க்கும் என் மேல் பிரியம் என்றே நினைத்திருந்தேன். ஒரு சுபயோக சுப வார இறுதியில் மதிய உணவிற்கு பிறகு வெளியே எங்கும் போவதற்கான ஆயத்தம் எதுவும் தெரியாத காரணத்தால் அறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் சென்று தமிழ் பேசும் அந்த நண்பரின் அறை எண்ணை அழைத்தேன் பதில் இல்லை. இன்னும் ஒரு தோழியின் அறையையும் அழைத்தேன் அங்கும் பதில் இல்லை. அவளுடைய செல்லிடைபேசியில் அழைத்தேன் எல்லோரும் வெளியில் கிளம்பி நீண்ட நடை சென்றிருப்பதாக சொன்னாள். சட்டென மனதை மேகம் திரையிட்டது. தனிமை போன்ற வெறுமையொன்று கூட வந்தமர்ந்தது. ஏதுவும் செய்ய தோன்றவில்லை.

வெளியே கிளம்பி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ளும் கிளிகளும், அழகிய மலர்களும், பூனை போலிருந்த சுவீடன் தேசத்து முயல்களும் என் வெறுமையை போக்கி கொண்டிருந்தன. தனிமை கூடக்கூட நடக்க ஆரம்பித்தது. நிறைய தெருக்களை கடந்து, சில பூங்காக்களை கடந்து ஒரு ஏரியை கடந்து ஒரு பாலமேறி நீண்ட தொலைவு சென்று பின் திசை புரியவில்லை. வளைந்து வளைந்து நடக்கின்றேன் வந்த வழி புரியவில்லை. எந்த வளைவில் திரும்பி நடந்தால் வந்த இடம் போகலாம் என்பது தெரியவில்லை. அருகே நடந்து வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பேசிய பாஷை புரியவில்லை. சட்டென தெரிந்தது தொலைந்து போய்விட்டேன் என்று. கையில் காசு கூட எடுக்கவில்லை. செல்பேசியும் இல்லை. வசிக்கும் தெருவின் பெயர் மட்டும் தோரயமாக தெரியும். சற்றே பயத்தோடு நடந்தேன். எப்படி எப்படியோ அலைந்து ஒரு பிராதான சாலையை அடைந்தேன். எங்கள் விடுதி வழி செல்லும் பேருந்து அவ்வழியில் செல்வதை கண்டேன். சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆயினும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ரங்கனை நொடி நேரம் மனதில் நினைத்து ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய வழி எனக்கு புலப்பட்டது. விடுதி சென்றதும் எதிர்பட்டாள் தோழி எங்கே சென்றிருந்தாய் உன்னை மிக தேடினோம் உன் கைப்பேசியை கூட அழைத்தேன் என்றாள். எந்த சமாதானத்துக்கும் இடம் தராத கலகக்காரியின் வேடமணிந்து அறையை தாளிட்டு கொண்டேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். மனித்தில் இருந்த வெறுமை குழப்பம் மறைய இந்த தொலைதல் உதவி இருந்தது.

6 comments:

உயிரோடை said...

இந்த‌ ப‌திவிற்கு வித்திட்ட‌ சென்ஷிக்கு ந‌ன்றி

Anonymous said...

So u say that in haisty dont take a decision where you might tend to loose yourself. hmm Good one...

அன்புடன் அருணா said...

உண்ர்ந்து எழுதுபவை எப்போதுமே மனதைத் தொட்டு விடும்....தொட்டது..
அன்புடன் அருணா

சென்ஷி said...

:-)) !!!

உயிரோடை said...

வாங்க அன்புடன் அருணா. கருத்துக்கு நன்றி. மீண்டும் வாங்க.

வாங்க சென்ஷி.

உயிரோடை said...

வாங்க அனானி அது அவசரத்தில் எடுத்த முடிவல்ல. அது ஒரு மாற்றத்திற்காக வெறுமை போக்குவதற்காக எடுத்த முடிவு. அவ்வளவே