பொதுவாக நான் ஹிந்தி படம் பார்ப்பதில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் போலவே பல படங்கள் வருவதும் அதுவும் ஒரே மாதிரியான மசாலா என்று, ஹிந்தி படத்திற்கென்று சில பார்முலாக்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சில தந்திரங்களும் அதனுடன் சில நல்ல தகவலும் (மேசேஜ்) அளித்துள்ளது இந்த திரி இடியட்ஸ் படம். படத்தின் தலைப்பே படம் பார்க்க தூண்டுகின்றது. புத்தாண்டு அன்று டில்லியில் வைகுண்டநாதரையும் காமாட்சியையும் சேவித்து விட்டு வரலாமென்று கடந்த வெள்ளி சாயுங்காலம் சென்று திரும்பும் போது இந்த படத்தில் தலைப்பை பார்த்துவிட்டு வழக்கமான இந்த மசாலா படமாகவே இருக்கும் என்று நினைத்தேன். அதன்பின் பலரும் இந்த படத்தை பற்றி ஓஹோ என்று சொல்ல நேற்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் அவசரமாக உப்புமாவை கிண்டி, உண்டு 7.30 காட்சிக்கு சென்றோம்.
எஸ் ஆர் எஸ் என்ற மாலில் இருக்கும் திரையரங்கில் 10 நிமிட தாமதத்தில் அடைந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். முட்டாள் தான் கதை சொல்லி. (நம் மேடி மாதவன்) அவன் தன் நண்பன் முட்டாள் - 2 இடம் தங்களின் மற்றொரு மிக நெருங்கிய நண்பனை பற்றிய தகவல் தெரிந்து விட்டதாக சொல்ல அவனும் பேண்ட் கூட போட மறந்து அவசர அவசரமாக தங்கள் படித்த கல்லூரிக்கு செல்கின்றான். அங்கே இன்னுமொருவன் (நல்லவேளை இவன் முட்டாளில்லை) அவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் இன்று நாள் நினைவிருக்கிறதா 10 வருடத்துக்கு முன்... என்று கதை ஆரம்பித்த உடன் நினைத்தேன், ஆஹா நல்லா மாட்டிகிட்டோம் என்று, ஆனால் அங்கிருந்து முட்டாள் - 3 தேடி சிம்லா புறப்பட்டதும்தான் தெரிந்தது படம் முடிந்த பின் தான் படம் முடிந்து விட்டது என்று நினைப்பே வந்தது அப்படி ஒரு தொய்வில்லாத கதையோட்டம், நல்ல திரைக்கதை அமைப்பு. கொஞ்சம் பிளாஷ் பேக் கொஞ்சம் நிகழ்காலம் என்று அழகாக கதையை நகர்த்தி இருக்கின்றார்கள்.
நிறைய நல்ல விசயங்களை சொல்லி இருக்கின்றார்கள் இந்த படத்தின் மூலம் நம் வெற்றி என்னும் தொடர் ஓட்டத்தில் ஓடிய படியே வாழ்க்கையை தொலைப்பதை விட பிடித்த விசயம் செய்தால் வெற்றி நம் பின் ஓடி வருமென்றும், படிப்பு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து வெள்ளை காகிதத்தில் வாந்தி எடுப்பது போலில்லாமல் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும்படி இருக்க வேண்டும். படிப்பு மன அழுத்தத்தை உருவாக்க கூடாது, பெற்றோர் தங்கள் பெருமைக்காக தமக்கு பிடித்த படிப்பை பிள்ளைகள் மேல் திணிக்க கூடாது. ராகிங் இருக்க கூடாது. இனொவேட்டிவ் படிப்பியல் படிப்பு எதையாவது புது விசயங்களை கண்டறியவோ புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். மில்லியன் டாலரில் வீடு அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனத்தின் வேலை இது தான் வெற்றியின் அளவல்ல. பிடித்த விசயத்தில் மனமென்றி குறைவாக சம்பாத்தித்து நிறைவாக வாழ்ந்தாலும் வெற்றியே இப்படி நல்ல பல விசயங்களை முன் வைத்துள்ளது.
இவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்கள் கொஞ்சம் மிகையாகவே காட்டப் பட்டிருக்கின்றன, நல்ல கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் நிறுவனர் மிகவும் கடினமானவர் இறக்கமற்றவர் படிக்கும் மாணவர் தற்கொலை புரிந்து கொள்ளமளவு மன அழுத்தம் தர கூடியவர், புத்தகத்தில் இருப்பதை மட்டுமே ஒப்பிக்க கூடிய மாணவர்களே ஆசிரியர்களை கவரும் வண்ணமிருக்கின்றனர் இப்படிப்பட்ட விசயங்களும் சில சினிமாத்தனமான இயல்பற்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த படத்தை மனமாற பாராட்டலாம். எது எப்படி இருந்தாலும் திரைக்கதை மற்றும் கச்சிதமான பாத்திர வடிவமைப்பிற்காக நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படமே இந்த மூன்று முட்டாள்கள்.
- லாவண்யா சுந்தரராஜன்
8 comments:
ஒரு முறையா போங்கங்க. நாங்க படம் பார்த்து வெளியே வரும் போதே இரண்டாவது முறை பார்ப்பதற்கான டிக்கெட்டும் புக் செய்து விட்டோம்.
தோழி லாவண்யா அவர்களுக்கு
நல்ல பதிவு ,
அகநாழிகை வெளியிட்டுள்ள புத்தகத்தின்
வாயிலாக உங்கள் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின
தொடரட்டும் உங்கள் கவி பயணம் ..
எனது வலைத்தளம் http://vittalankavithaigal.blogspot.com/
நடுநிலையான விமர்சனம்.. பார்த்துடுவோம்!!
படம் அவ்வளவு நல்லா இருக்க...கட்டாயம் பாத்துர வேண்டியதுதான்...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...
உங்கள் விமர்சனத்தை படித்த பின்பு இந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் வந்துள்ளது.
இந்தப்படத்தின் கதை chetan bhagat எழுதிய நாவல் ஒன்றின் கதை.
//நிறைய நல்ல விசயங்களை சொல்லி இருக்கின்றார்கள் இந்த படத்தின் மூலம் நம் வெற்றி என்னும் தொடர் ஓட்டத்தில் ஓடிய படியே வாழ்க்கையை தொலைப்பதை விட பிடித்த விசயம் செய்தால் வெற்றி நம் பின் ஓடி வருமென்றும், படிப்பு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து வெள்ளை காகிதத்தில் வாந்தி எடுப்பது போலில்லாமல் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும்படி இருக்க வேண்டும்.//
தலைப்பும், இந்தப்பாராவும் இன்னும் கூடுதல் அடர்த்தியைக் கொடுக்கிறது.
பார்த்தே தீரவேண்டிய படம். பார்க்கணும்.
வெளியான அன்றே பார்க்க நேர்ந்தது.முழு நீள நகைச்சுவை என்பது எப்படி இருக்க வேண்டுமென்று இப்படத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.சேத்தன் பகத்தின் புத்தகம் படித்திருந்ததால் ஆர்வமுடன் சென்றேன். அவரது நாவலை "அப்படியே" படமாக்கியிருக்கிறார்கள்(மெஷின் காட்சி உட்பட).
சேத்தன் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பி தள்ளியிருக்கிறார்.
நல்லதொரு விமர்சனம் லாவண்யா.
வாங்க விக்னேஷ்வரி, விட்டலன், கலையரசன், கமலேஷ், கிரகம், காமராஜ், நிலாரசிகன் கருத்துக்கு நன்றி.
Post a Comment