Showing posts with label அனுப‌வ‌ம். Show all posts
Showing posts with label அனுப‌வ‌ம். Show all posts

Saturday, March 8, 2014

மகளிர் தினம்




இன்று மகளிர் தினம். எனக்கு இந்த தினத்தை கொண்டாடுவதில் அத்தனை உடன்பாடில்லை. என்றாலும் ஊரோடு ஒட்டி வாழ் என்று இன்று எனக்கு வரும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறேன். வாழ்த்துகிறேன். நேற்று மகளிர் தினவிழாவில் அலுவலத்தில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த மகளிர் தின கருத்தாக்கத்தில் உடன்பாடில்லை.

நான் இப்படி சொல்வதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. எனக்கு பெண் என்ற தடை என்றைக்குமே இருந்ததில்லை. எதை செய்ய நினைக்கிறேனே அதை செய்ய என்னால் இயலும். இடைவிடா முயற்சி மட்டுமே இதற்கு துணை புரிந்ததே அன்றி, நான் பெண் என்ற அடையாளம் இல்லை.

எனக்கு என் பார்வைக்குள் நடக்கும் அநியாயங்களை பொருத்து கொள்ள இயலாது. நான் BSF Polytechnique, Batharpur Delhi யில் பணி புரிந்த காலம் அது ஒரு இருபாலினர் கல்லூரி. ஒரு முறை சில ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். நான் அப்போது தான் அங்கே பணி புரிய ஆரம்பித்திருந்தேன். என்னுடன் இருந்த ஆசிரியை "கண்டுக்காம வாங்க லாவண்யா, இவங்க எல்லாம் ரௌடிங்க, மேலும் பெரிய ஆபிசர்ஸ் மகன் நாம் பிரிஸ்பாலிடம் புகார் அளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே ஒரு பையன் கொத்தாக பிடித்து ஒரு அறை விட்டேன், ஒருவன் மட்டுமே சிக்கினான் மற்றவர் எல்லோரும் ஓடி போயினர். பின்னர் அது பெரும் பிரச்சனை ஆகி எல்லாம் சரியானாலும் அந்த நிறுவனத்தை விட்டு வரும் வரை அனைவரும் சிலேகிக்கும் புலான் தேவியானேன். 

என்னால் சில விசயங்களை சகித்து கொள்ளவோ பொருமையாக போகவோ இயலாது. உதாரணத்துக்கு வேண்டுமென்றே சாலை விதிகளை மீறி, போக்குவரத்து நெரிசல் உருவாகும் சில இடங்களில் அலுவலக கேப் ஆகட்டும், எங்கள் சொந்த வண்டியாகட்டும் தயங்காமல் இறங்கி போய் சமதானமோ சத்தமோ போட்டு ஓரளவுக்கு பிரச்சனையை சரி செய்ய பார்பேன், சில முறை அது பெரிதாகவும் போய்விடும். ஒரு முறை அவ்வாறு பிரச்சனை செய்த வண்டி ஹரியான மாநில அமைச்சருடையதாம், உள்ளே ஏகே47 வைத்துக் கொண்டு இருந்தார்கள். நன்றாக சண்டை போட்டுவிட்டு வண்டிய நகர்த்தி விட்டு, வந்து அமர்ந்த உடன், வண்டி ஓட்டும் பையன் சொன்னான் "என்ன அக்கா பயமில்லாமல் இப்படி போய் சண்டை போடுங்க, கையில் வைச்சி இருக்கறதுல பொட்டு போட்ட என்ன பண்ணுவீங்க" என்றான். கொஞ்சம் பயம் அப்போது தான் வந்தது. இருந்தாலும் நான் செய்தது என்ன தவறு என்று சொன்னேன். கூட பயணிக்கும் தோழர், தோழியர் "லாவண்யா இப்படி எல்லாம் செய்ய கூடாது. கொஞ்சம் பொருமையா இருக்கனும்" என்றார்கள். என் கணவரும் அதையே தான் சொல்வார். இருந்தாலும் நான் இப்படி இருப்பதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை.

மற்றுமொரு சம்பவத்தில் நாங்கள் குளித்தலையிலிருந்து சென்னை செல்லும் மங்களூர் விரைவு வண்டியில் ஏறினோம். இரவு மணி 9. அடுத்த இருக்கைக்காரன் குடித்திருந்தான், ஒரிரு கெட்ட வார்த்தைகள் பேசினேன். பின்னர் நானும் என் கணவரும் அங்கே இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். திருச்சி வர சற்று நேரம் இருந்தது. மணி 9.30 தான் இருக்கும்,  அந்த குடிகாரன் "என்ன ஒரே சவுண்டா இருக்கு சலசலன்னு பேசிட்டு, மனுசன் தூக்க வேண்டாமா" என்று ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்ட போக, வேகமா எழுந்து போய் "ஏய் என்ன குடிச்சிட்டு வந்து கலட்டா பண்றீயா போலீஸ் ல சொல்லவா" என்றதும் "ஒரு பொம்பள போலவா பேசற, ரௌடி கணக்கா" என்றான். உடனே "நான் பொம்பளன்னு உனக்கு யார் சொன்னா" என்றேன். அது அசாதரணமாக வந்த வார்த்தையில்லை. எனக்குள் ஆணித்தரமாக கிடக்கும் எண்ணம். நான் பெண் என்பதில் பெரும் பெருமை கொண்டவள். நான் பெண் மட்டுமில்லை,  கருணை ஊற்றானவள், அனைவர்க்கும் உதவுபவள், அநியாயத்திற்கு பொங்கி எழும் ஆயிரம் கரம் கொண்டவள், பெரும் சக்தி. எனக்கு எழும் அவமானம், மரியாதையின்மை, துவேசம் அனைத்தையும் ஆயுதமாக அணிந்தவள். 

இத்தனை பேறாற்றல் ஒவ்வொரு பெண்ணிலும் உண்டு. ஆகவே அந்த பெரும் சக்தியின் அதிரூபத்தை கொண்டாட, ஒரு நாள் போதுமா? ஜனிக்கும் ஒவ்வொரு நொடியும், யுகமும் அவர்களுடையதல்லவா?

Thursday, January 23, 2014

Coffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்


நான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அம்மாயி தான் காப்பி குடிக்கும் போது நான் ஏங்கி பார்க்கிறேன் என்று ஒரு வாய் குடிக்க கொடுத்து பழக்கிவிட்டதாக அம்மா சொல்வார்கள். அம்மா தடுத்தாலும் பிள்ளை ஏக்கமா பாக்கறா குடுத்த சப்பு கொட்டி குடிக்கிறா ஏன் தடுக்கிறே என்று அடக்கி விடுவார்களாம். அப்படி என்னை தேவியாக்கும் காப்பி பாணம் எனக்கு தொட்டில் பழக்கம். அதற்காக எல்லா காப்பியையும் குடித்து விட மாட்டேன், நல்ல A ரக பிபேரி காப்பி கொட்டைகளை 50% விதமும் B ரக காப்பி கொட்டைகளை 50% சரிபட வறுத்து, 100 கிராமுக்கு 10 கிராம் சிக்கரி கலந்து அரைத்து வைத்த திருச்சி புகழ் பத்மா காபியை அல்லது கிராமத்தில் காப்பி ராமு அண்ணா கொண்டு வந்து தரும் ரமா காபி இவை மட்டுமே பிரியமானது. அதுவும் காப்பிக்கு பாலில் , தண்ணீர் அளவு அதை காய்ச்சும் முறையும் மிக முக்கியம், டிக்காசன் அதிகமா சக்கரை குறைவாக சேர்த்து ஒரு சிப் அருந்தும் போது நாவில் பரவுமே ஒரு சுவை, ஆஹா காப்பி மனிதரை தேவராக்கும் பாணம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.

திருமணமாகி ப்ரிதாபாத் போய் சேர்ந்த புதிதில் காப்பித் தூள் சரியாக கிடைக்காத காரணத்தாலும் மேலும் அங்கே கிடைக்கும் பாலில் கலந்த காப்பி சுவை நாவிற்கு ஒவ்வாத காரணத்தாலும் தேனீரில் இஞ்சி எலக்காய் இன்னபிற விசயங்களை சேர்த்து ஒருவாறு நாவினை ஒப்பேத்தி கொண்டிருந்தேன். கிட்டதட்ட ஒராண்டுக்கு காப்பி அருந்துவது அறவே இல்லாது போனது. பின்னர் டெல்லி முனீர்கா ரமா ஸ்டோர் அருகே ஒரு காப்பித் தூள் கடை மிக சிறப்பாக காப்பித் தூளை அரைத்து தருவார்கள் என்று அறிந்து அங்கே போய் வாங்கி வந்து காப்பி அருந்தும் போது திருச்சி பத்மா காபியின் அதே சுவையை மீட்டெடுக்க முடிந்தது. இந்த சுவைக்காக வேறும் காப்பிப் பொடி வாங்குவதற்காகவும் அந்த சாக்கில் சரவணபவனில் சாப்பிடுவதற்காகவும் ப்ரிதாபாத்திலிருந்து வார இறுதியானால் டெல்லி செல்வோம். அப்படிப்பட்ட ஒரு பொற்காலமது.

பெங்களூர் வந்து தனியளாக இருந்த ஒரு ஆறு மாத காலத்தில் என்னிடம் மிக குறைவான பாத்திரங்களே இருந்தது, அதில் காப்பி பில்டர் இல்லை. அதனால் மீண்டும் இஞ்சி ஏலக்காய் டீக்கு என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். அதன் பின்னர் அம்மா கூட வந்து இருக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் எப்படி தான் காப்பியை விட்டாயோ அதிசயமா இருக்கு என்றார்கள். அவர்கள் அப்படி ஆச்சரியப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஒரு படி உயர டம்பளிரில் முக்கால்பாகம் காப்பி கொடுத்தால் கூட முகம் சுண்டிக் கொள்வேன் என்று முழு டம்ளராக அல்லவா காபிக் கொடுத்து வளர்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் போய் அம்மா "வயிறு காப்பிக்கு பசிக்குது" என்று கூட சொல்வேனாம். அது எனக்கு நினைவில்லை ஆனால் அம்மா இதை அடிக்கடி சொல்வார்கள். அவ்வளவு பிரியம் எனக்கும் காப்பி மீது.

இத்தனை காப்பி ப்ரியம் கொண்ட நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே என் அலுவலத்தில் காப்பி வாசனை, அலுவலத்தில் மட்டுமல்ல ஸ்டார் பக்ஸ் காபே, லாவாசா இட்டாலியன் காபே, இத்தாயி என்று எல்லா இடத்திலும் ஏகபோகமாய் காப்பி மணம் மனதை மணக்குமளவுக்கு ததும்பி வழியும். நாவை அடக்கவே முடியாதபடி அந்த காபியின் மணம் நம்மை எங்கிருந்தாலும் ஈர்க்கும். அத்தனை ஆர்வமாய் போய் அவர்கள் தரும் சின்ன வாளி அளவில் இருக்கும் பெரிய குவளையில் காப்பியை நுரை பொங்க எடுத்து வந்து ஒரே ஒரு சிப் வைத்தால் போதும் காறி துப்பும் அளவிற்கு காப்பியின் மீது வெறுப்பாகி விடும். அமெரிக்கா சென்ற முதல் வாரத்தில் அலுவகத்தில் தினம் காப்பியை எடுப்பேன் பின்னர் அப்படியே வாஷ்பேசனில் கவிழ்த்து விடுவேன். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் வரை முழுமையாக காப்பியை வெறுக்க ஆரம்பித்தேன். அங்கே தேனீரும் நாம் நினைக்கும் சுவையில் கிடைக்காது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நல்ல காப்பி கிடைக்கவில்லையே என்று நா ஏங்கி போகும் தமிழ்நாட்டு காப்பி ப்ரியர்களுக்கு காப்பி ப்ரியர்களுக்கு சன்னிவேலில்(Sunnyvale) இருக்கும் கோமள விலாஸ் (திருச்சிக்காரர் இயக்கி வருவது) http://www.komalavilas.com/ மற்றும் http://www.madrascafe.us/ மெட்ராஸ் காப்பேயும் நல்ல வடிகால். சாப்பாடு, டிபன் முக்கியமாக காப்பி எல்லாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையுடன் கிடைக்கும். ஆகா அமெரிக்கா சென்று வந்த முதல் ஆறு மாதம் நான் காப்பியை அறவே தொடவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள் அங்கிருக்கும் காப்பி என்னை எந்த அளவு வெறுப்பேத்தி விரட்டி இருக்குமென்று.

தற்சமயம் அக்குபிரஸ்ஸர் என்று ஒரு உடலையே மருத்துவர் ஆக்கும் மருத்துவ முறையொன்றின் பொருட்டு பால், தயிர் இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்று, காப்பி டீ குடித்தே ஆக வேண்டுமென்றால் ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காப்பி குடியுங்கள் என்றும் அறிவுத்தப்பட்டு, பால் சேர்த்து காப்பி குடிப்பது முற்றாக நின்று போனது. கடந்த முறை திருச்சி சென்ற போது நவகிரக கோவில்கள் சென்றதில் எனக்கு பிடித்த விசயம் நாங்கள் அருந்திய கும்பகோணம் டிகிரி காப்பியே, மேலும் திருச்சியில் இருந்து பெங்களூர் வரும் நெடுங்சாலையில் தீபாவளிக்கு சென்று வரும் போது தான் கிருஷ்ணகிரி டோல்(toll) தாண்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் டிகிரி காப்பி கடையொன்றை கண்டோம். அங்கே காபி அருந்துவதற்கென்றே அடுத்த முறையும் காரில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன் அவரிடம், ஹூம்ம்ம்ம் இனி என்று பால் ஊத்தி நல்ல காப்பித் தூளால் தயாரிக்கப்பட்ட டிக்காசன் காப்பியை எப்போது குடிப்பேனோ தெரியவில்லை. I miss you coffee.

இப்போது பரிபூர்ணமாய் உணர்கிறேன் காப்பி மனிதரை தேவனாக்கும் பாணமென்று நன்றி சுகுமாரன் சார்.  பிரபஞ்சன் எழுதி இருப்பதாக அவர் தான் சொன்னார்.

Tuesday, September 24, 2013

பேராண்மையும் ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ம‌ற்றும் திரைய‌ர‌ங்க‌ அர‌சிய‌ல்க‌ளும்

த‌மிழ் திருநாள் பொங்க‌லை முன்னிட்டு நீண்ட‌ விடுப்பெடுத்து த‌மிழ‌க‌ம் சென்று திரும்பியாயிற்று. தில்லியில் வ‌சிப்பு என்று விதிக்க‌ப்ப‌ட்ட‌ பின் த‌மிழ‌க‌ம் செல்லும் போதெல்லாம் முடிந்த‌ ம‌ட்டும் சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையாவ‌து பார்த்து விடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அந்த‌ வ‌கையில் இந்த‌ முறை நான்கு திரைப்ப‌ட‌ங்க‌ளையும் க‌ண்டு வ‌ந்த‌தில் ம‌க‌ழ்ச்சி சில‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ள்.

த‌மிழ‌க‌ம் அடைந்து இந்த‌ முறை நான் பார்த்த‌ முத‌ல் திரைப்ப‌ட‌ம் பேராண்மை. அடுத்த‌து ஆயிர‌த்தில் ஒருவ‌ன். நான்கு ச‌ண்டைக்காட்சி, ஐந்து பாட‌ல்க‌ள், கொஞ்ச‌ம் சென்டிமென்ட் என்று க‌ட்ட‌ம் கட்டி த‌வித்து வ‌ந்த‌ தமிழ் திரையுல‌கிற்கு ச‌மீப‌மாக‌ வ‌ந்திருக்கும் மாறுத‌ல்க‌ள் வ‌ர‌வேற்கத்த‌க்க‌வை. அந்த‌ வித‌த்தில் பேராண்மையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ச‌லாம் போட‌ வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ள்.


பேராண்மை மிகவும்‌ க‌வ‌ர்ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. எடுத்துக் கொண்ட‌ க‌தைக்க‌ள‌ம், திரைக்க‌தை அமைத்திருந்த‌ வித‌ம் எல்லாம் அருமை. சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் உறுத்த‌லாக‌ இருந்த‌து. ஆர‌ம்ப‌ காட்சிக‌ளில் அந்த‌ பெண்க‌ளின் அட்டகாச‌ம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அருவெறு‌க்க‌த்த‌க்க‌தாக‌ இருந்த‌து. என்ன‌தான் பெண்க‌ள் மாடர்‌ன் ஆகிவிட்டாலும் இந்த‌ அள‌விற்கு ஒருவ‌ரை ப‌ழிவாங்க‌ என்ன‌ வேண்டுமானாலும் செய்வோம் என்ப‌து திரைப்ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும். மேலும் ம‌லை வாழ் ம‌க்க‌ளை அதிகாரிக‌ள் கேவ‌ல‌மாக‌ ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டியிருப்ப‌தும் மிகையான‌து. மேலும் காம்யுனிச‌ம் ப‌ற்றிய‌ வசனங்கள் திணிக்க‌ப்ப‌ட்ட‌து போல் கதையோடு ஒட்டாமல் இருந்த‌து. எது எப்ப‌டி ஆனாலும் பெண்க‌ளை மிக‌ உய‌ர்வாக‌ காட்டி இருப்ப‌தும், காட்டில் சில‌ பெண்க‌ளும் ஒரு ஆணும் ப‌ய‌ங்க‌ர‌ எதிரிக‌ளை முறிய‌டிப்ப‌தும் அருமை. அதில் இர‌ண்டு பெண்க‌ள் பலியாவ‌து உண்மையாக‌ க‌ண்ணீரை வ‌ர‌வ‌ழைத்தது. அதுவும் சுசீலாவை புதைக்கும் போது அவ‌ள் எப்போதும் கேட்கும் க‌ந்த‌ச‌ஷ்டி ஒலிப்ப‌து க‌வித்துவ‌மாக‌ இருந்த‌து. என்ன‌தான் பேராண்மை கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ராக்கெட் ச‌ம்ம‌ந்த‌மாக‌ கூட‌ தெரிந்திருப்ப‌து மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. மொத்த‌த்தில் மிக‌வும் அருமையான‌ ப‌ட‌ம். வ‌ள்ளுவ‌ன் சொன்ன‌ பிற‌ன்ம‌னை நோக்கா இருப்ப‌து பேராண்மை என்ப‌திலும் நாட்டை நேச‌ப்ப‌தும் பெண்க‌ளை ம‌திப்ப‌தும் பேராண்மை என்று சொல்லி இருக்கும் அழ‌கு மிக‌ நேர்த்தி.


அடுத்த‌ப‌டி க‌வ‌ர்ந்த‌து... ஆயிர‌த்தில் ஒருவ‌ன். முத‌ல் பாதியில் சோழ‌ இள‌வ‌ர‌ச‌ன் தமிழ‌க‌த்திலிருந்து விய‌ட்நாம் அருகில் இருந்த‌ ஒரு தீவில் சென்று வாழ்ந்த‌தாக‌வும் அவ‌ன் விட்டு சென்ற‌ த‌ட‌ங்க‌ளை தேடி சென்ற‌வ‌ரை தேடும் பொருட்டு ஒரு ப‌டை கிள‌ம்புகின்ற‌து. ஏதோ ம‌ந்திர‌ த‌ந்திர‌ க‌தைக‌ளில் வ‌ருவ‌து போல‌ இருக்கின்ற‌து முத‌ல் பாதி. க‌ட‌ல், புதை ம‌ண‌ல், நாக‌ம், காட்டுவாசிக‌ள், ப‌சி, தாக‌ம் என்று சோழ‌ர்க‌ள் ஏற்ப‌டுத்திய‌ ஏழு த‌டைக‌ளை (இர‌ண்டு த‌டைக‌ள் சரியாக‌ விள‌ங்க‌வில்லை) தாண்டி செல்கின்ற‌தாம் அந்த‌ ப‌ய‌ண‌ம். இறுதியாக‌ ப‌ல‌ இழ‌ப்புக்குபின் அந்த‌ ந‌க‌ரை அடைகின்ற‌னர் சில‌ர். அங்கே நிஜ‌மாக‌வே சோழ‌ர்க‌ள் 800 ஆண்டையும் தாண்டி வாழ்வ‌தாக‌வும் பாண்டிய‌ வ‌ம்ச‌த்து எஞ்சிய‌ சில‌ர் த‌ங்க‌ள் ப‌ர‌ம்ப‌ரை தெய்வ‌ சிலையை மீட்க‌வே இந்த‌ ப‌ய‌ண‌த்தை மேற்கொள்வ‌தாக‌ சொல்லி க‌தை ந‌க‌ர்த்தி இருப்ப‌து இர‌ண்டாம் ப‌குதி. இதில் சில‌ குழ‌ப்ப‌ங்க‌ளை த‌விர்த்திருந்தால் இந்த‌ ப‌ட‌த்தை க‌ண்டிப்பாக‌ ஒரு உல‌க‌ த‌ர‌மிக்க‌ ப‌ட‌மென்று சொல்லி இருக்க‌லாம். த‌டைக‌ள் சில‌ ச‌ரியாக‌ புரிய‌வில்லை. க‌ட‌லில் என்ன‌ த‌டை என்றே தெரிய‌வில்லை. எப்ப‌டி ச‌ட‌ச‌ட‌வென்று ம‌க்க‌ள் இற‌க்க‌கின்ற‌ன‌ர் என்று தெரிய‌வில்லை. மேலும் சோழ‌ ந‌க‌ர‌த்தை அடைந்த‌வ‌ர்க‌ளுக்கு ஏன் பைத்திய‌ம் பிடித்த‌து போல‌ ஆகிற‌து. சோழ‌ ம‌க்க‌ள் உண‌வை நோக்கி வ‌ரும் போது ம‌ன்ன‌ன் ஏன் அடித்து விர‌ட்டுகிறான். பாண்டிய‌ இள‌வ‌ர‌சி சோழ‌ ம‌ன்ன‌னை கூட‌ ஏன் விழைகிறாள். ஏன் மாயாஜால‌ காட்சிக‌ள் போல‌ பல‌ காட்சிக‌ள் வ‌ருகின்ற‌து. க‌டைசியில் ஏன் அந்த‌ ப‌டை வீர‌ர்க‌ள் சோழ‌ பெண்டிரிட‌ம் அத்த‌னை வ‌க்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ன‌ர். இதெல்லாம் விள‌க்காம‌லேயே ப‌ட‌ம் முடிந்து விடுகின்ற‌து. ஆயினும் மிக‌ வித்தியாச‌மான‌ முய‌ற்சி. க‌ண்டிப்பாக‌ செல்வ‌ராக‌வ‌னை ந‌ம்பி படம் பார்க்கச் செல்வோரின் எதிர்பார்ப்பு வீணாக‌வில்லை.


மூன்றாவ‌தாக‌ ரேணிகுண்டா, க‌தைக்க‌ள‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ எல்லாமே மிக‌வும் பிடித்திருந்த‌து. சுப்‌ர‌ம‌ணிய‌புர‌ம் போன்றே வ‌ன்முறையை சாதார‌ண‌மாக்கிவிட்டு போய் இருக்கின்ற‌து இந்த‌ப‌ட‌ம். மனைவியை த‌ன் ப‌ண‌க‌ஷ்ட‌த்திற்காக‌ பாலியல் தொழில் செய்ய‌ சொல்லும் க‌ண‌வ‌னிட‌ம் இருக்கும் குற்ற உண‌ர்விலிருந்து, அப்ப‌டியிருக்கும் பெண்ணும் மேலும் ப‌ண‌த்திற்காக‌ கொல்லும் கூலிப்ப‌டையாக‌ இருப்ப‌வ‌ரிட‌ம் கூட‌ இருக்கும் இர‌க்க‌மும் நேர்மையும் வ‌ரை ப‌ட‌ம் பிடித்து காட்டி இருப்ப‌து அருமை. மிக‌ எளிய‌ சினிமாத‌ன‌ம‌ற்ற‌ க‌தாபாத்திர‌ அமைப்புக‌ள். த‌ன‌து ந‌ண்ப‌னை கொல்லும் வ‌ரை வ‌ன்முறையில் ஈடுப‌டாத‌ நாய‌க‌ன் அத‌ன் பின் இர‌ண்டு கொலை செய்வ‌தும் மிக‌ இய‌ல்பாக காட்ட‌ப்ப‌டிப்ப‌த‌ற்கு ஒரு ச‌பாஷ். ஆனால் க‌தாநாய‌கி மேல் இறுதி க‌ட்ட‌த்தில் கூட‌ ஒரு ப‌ரிதாப‌ம் வ‌ராம‌ல் போன‌து இந்த‌ ப‌ட‌த்தின் தோல்வி. பல‌ காட்சிக‌ள் க‌வித்துவ‌மாக‌ இருந்தது. ப‌ல‌ர் ந‌டிப்பு பாராட்டும் வ‌ண்ண‌மிருந்த‌து.

க‌டைசியாக‌ ‘குட்டி‘. இந்த‌ ப‌ட‌ம் மிக‌வும் அபாரமாக‌ இருந்த‌து. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் பார்த்துவிட்டு வ‌ந்த‌தும் என் க‌ண‌வ‌ர் அருகில் இருந்த‌ திரைய‌ர‌ங்கில் ஓடிக்கொண்டிருந்த‌ குட்டி ப‌ட‌த்தை பார்த்திருக்க‌லாம் என்றார். ஆனால் குட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது பேசாம‌ல் க‌ட‌ற்க‌ரை போய் வ‌ந்திருக்க‌லாம் என்றார். மொத்த‌த்தில் குட்டி ஒரு வெட்டி.

ஆகா... பார்த்த‌ நான்கு ப‌ட‌ங்க‌ளில் ச‌மீப‌கால‌த்தில் திரைய‌ர‌ங்குக‌ளில் ந‌ட‌க்கும் சில‌ விச‌ய‌ங்க‌ள் எனை மிக‌வும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்ற‌து. நான் பேராண்மையை என் சொந்த‌ ஊர் முசிறியில் பார்த்தேன். அங்கே நாங்க‌ள் திரைப்ப‌ட‌ம் பார்த்த‌ அன்று முத‌ல் வ‌குப்பில் எங்க‌ளையும் சேர்த்து ஆறு பேரும் மேலும் மொத்த‌ திரைய‌ர‌ங்கில் ப‌தினைந்து பேர்தான் ப‌ட‌ம் பார்த்தோம். முசிறியில் இருக்கும் ஒரே அர‌ங்க‌ம் அதுதான். இன்னொன்று திரும‌ண‌ ம‌ண்ட‌பமாக‌ மாறிவிட்ட‌து. ஆனால் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் வெளிவ‌ந்த‌ ம‌றுநாள் திருச்சியில் ர‌ம்பாவில் பார்த்தோம் முத‌ல் வ‌குப்பு டிக்கெட் விலை 120 ரூபாய் இதன் ச‌ரியான‌ விலை 50 ரூபாய் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இப்ப‌டி அதிக‌ப்ப‌டியாக‌ வ‌சூலிக்க‌ப்ப‌டும் பணம் யாருக்கு செல்கிறது...? திரையரங்குகள் இப்படி அதிக‌ கட்டணம் வ‌சூலிப்ப‌தால் தான் திருட்டு விசிடிக‌ள் ம‌லிகின்ற‌ன‌. என்ன‌ சொல்ல‌... விரைவில் திரைப்ப‌ட‌ங்க‌ளை விசிடிக‌ளிலும் அல்ல‌து தொலைக்காட்சிக‌ளிலும் ரிலிஸ் செய்தால் ஆச்ச‌ரிய‌மில்லை.

Saturday, September 24, 2011

ஜே ஜே சில (பின்) குறிப்புகள்

இப்போதுதான் பூத்த மலர்
பறிக்கப்பட்டுவிடும் என்று
சற்றேனும் நினைக்கவில்லை“

"நல்ல சிந்தனை. யார் எழுதினது?"

"நான்தான்"

"அட அம்மிணி சரின்னு சொல்லிட்டாங்களா ?"

"இல்லைங்க.. அந்த வரிகள் வலி வேதனை"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று எனக்கு தோன்றியது.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க.. நான் செடியின் வலியை சொன்னேன்"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று
எனக்கு தோன்றியது - இது Hope.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க நான் செடியின் வலியை சொன்னேன்." -  இது Reality.

Hope and Reality is not always same.

--X--

நான் சுவீடனில் இருந்த போது வார இறுதியில் ஊர் சுற்றித்தானே ஆறு பயணக்கட்டுரைகள் அளித்திருந்தேன். சுவீடனில் பார்க்க அதிகம் இடமில்லாத காரணத்தால் ஊர் வெளியே கிளம்பும் போது வரைபடத்தில் இங்கி பிங்கி பாக்ங்கி போட்டு பார்த்து ஒரு இடம் செல்வோம். அப்படி போய்  ஒரு நிலையத்தில் இறங்கியதும் அங்கே பார்த்த ஒரு ட்ராமில் "சிக்கில ஹுட்டே" என்று எழுதப்பட்டு இருந்தது.

சிக்கில ஹூட்டே என்ற அந்த பெயர் கவர்ந்திருந்தாலும், அது வரை மெட்ரோவிலும் பஸ்ஸிலுமே அதுவரை பயணம் மேற்கொண்டிருந்தால் ட்ராமில் செல்ல எப்படி இருக்கும் என்று நினைத்து, வேறு ஒரு வார இறுதியில் அந்த ஊருக்கே செல்ல திட்டமிட்டு வரைபடத்தில் தேடி கிளம்பினோம்.

அங்கே சென்றதும்தான் தெரிந்தது அங்கே ஒரு தில்லி தாபா இருப்பது. (எங்கே போனாலும் துரத்தும் தில்லி). மேலும் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மாலும், ஒரு பனி மலைப்பிரதேசமும் இருந்தது. (ஸ்கியிங் என்ற மலை மேலிருந்து பனி சறுக்குமிடம்).

தில்லி தாபாவில் சாப்பிட்டோம், அன்னாசி லஸ்ஸி நன்றாக இருந்தது என்பதையும், அந்த ஷாப்பிங் மாலில் எல்லா பொருட்களும் மிக குறைந்த விலையில் இருந்தன என்பதையும், பனி சறுக்குமிடம் வரை வீராவேசமாக சென்று, பின் பயந்து போனாதால், என்னால் என் கூட வந்த யாருமே பனி சறுக்காமல் திரும்பியதுதான் எனது ஸ்வீட் சுவிடன் கட்டுரையிலேயே சொல்லி விட்டேனே.

சரி... ஏன் இந்த மலரும் நினைவுகள் ?

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்றாக பேசப்படும் சுந்தரராமசாமியின் ஜே, ஜே. சில குறிப்புகள்  புத்தகத்தை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிக்க, வாசிக்க நம்மையும் கதைக்குள் ஈர்த்து, நாமே நாவலின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டதான உணர்வேற்படுகிறது.

நாவலின் போக்கில் சாதாரணமாக வரும் வாக்கியங்களின் ஆளுமை மிகவும் அதிகம்.

உதாரணத்திற்கு…

"நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்" (பக்.20)

"பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போது தான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன்." (பக்.26)

"ஜேஜே சில குறிப்புகள் ஒரு நாவல் போல் இல்லாமல் ஒரு டைரி குறிப்பு போல இருக்கும் என்றும் அது தான் தமிழில் வந்த முதல் பின்நவீனத்துவ நாவல், போஸ்ட்மார்டனிசம் ஸ்டைல்..." என்றெல்லாம் கூறக்கேட்டு வாசித்துவிட்டு எடுத்த ஓட்டம் தான் மூச்சு வாங்க மேல எழுதி...

அதான் ஜே.ஜே. பின்குறிப்புகள்.


Wednesday, June 24, 2009

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

Monday, April 27, 2009

தொலைந்து போதல்

தொலைந்து போவதும் மீண்டு வருவதும் வாழ்கைத் தத்துவம் பூமாவின் கவிதை போல.

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

-- பூமா ஈஸ்வரமூர்த்தி

ஆனால் என் அனுபவம் ஒரு வித்தியாசமான தொலைந்து போதல்.

அன்னியதேசத்தில் தனிமையோடு இருத்தல் மிக கொடியது. அதனால் கிடைத்தவர்களை எல்லாம் தோழமையாக்கி கொண்டு ஒன்றாய் உண்பதும் வார இறுதியில் கூட்டமாய் வெளியே செல்வதும் வித்தியாசமான அனுபவங்களே. அதுவும் ஒரே மொழி பேசும் நண்பர்கள் வாய்த்துவிட்டால் மிக சீக்கிரம் தோழமையும் உரிமையும் பாராட்ட ஆரம்பிப்பது மிக இயற்கை. அதுவும் ஒரு தாய்க்கு உண்டான பரிவோடு அனைவர்க்கும் உணவை சமைப்பதிலும், பரிமாரி விடுவதிலும், கூட்டத்தை கூட்டுவதிலும் பிரசித்தி பெற்றவள். எல்லோர்க்கும் என் மேல் பிரியம் என்றே நினைத்திருந்தேன். ஒரு சுபயோக சுப வார இறுதியில் மதிய உணவிற்கு பிறகு வெளியே எங்கும் போவதற்கான ஆயத்தம் எதுவும் தெரியாத காரணத்தால் அறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் சென்று தமிழ் பேசும் அந்த நண்பரின் அறை எண்ணை அழைத்தேன் பதில் இல்லை. இன்னும் ஒரு தோழியின் அறையையும் அழைத்தேன் அங்கும் பதில் இல்லை. அவளுடைய செல்லிடைபேசியில் அழைத்தேன் எல்லோரும் வெளியில் கிளம்பி நீண்ட நடை சென்றிருப்பதாக சொன்னாள். சட்டென மனதை மேகம் திரையிட்டது. தனிமை போன்ற வெறுமையொன்று கூட வந்தமர்ந்தது. ஏதுவும் செய்ய தோன்றவில்லை.

வெளியே கிளம்பி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ளும் கிளிகளும், அழகிய மலர்களும், பூனை போலிருந்த சுவீடன் தேசத்து முயல்களும் என் வெறுமையை போக்கி கொண்டிருந்தன. தனிமை கூடக்கூட நடக்க ஆரம்பித்தது. நிறைய தெருக்களை கடந்து, சில பூங்காக்களை கடந்து ஒரு ஏரியை கடந்து ஒரு பாலமேறி நீண்ட தொலைவு சென்று பின் திசை புரியவில்லை. வளைந்து வளைந்து நடக்கின்றேன் வந்த வழி புரியவில்லை. எந்த வளைவில் திரும்பி நடந்தால் வந்த இடம் போகலாம் என்பது தெரியவில்லை. அருகே நடந்து வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பேசிய பாஷை புரியவில்லை. சட்டென தெரிந்தது தொலைந்து போய்விட்டேன் என்று. கையில் காசு கூட எடுக்கவில்லை. செல்பேசியும் இல்லை. வசிக்கும் தெருவின் பெயர் மட்டும் தோரயமாக தெரியும். சற்றே பயத்தோடு நடந்தேன். எப்படி எப்படியோ அலைந்து ஒரு பிராதான சாலையை அடைந்தேன். எங்கள் விடுதி வழி செல்லும் பேருந்து அவ்வழியில் செல்வதை கண்டேன். சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆயினும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ரங்கனை நொடி நேரம் மனதில் நினைத்து ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய வழி எனக்கு புலப்பட்டது. விடுதி சென்றதும் எதிர்பட்டாள் தோழி எங்கே சென்றிருந்தாய் உன்னை மிக தேடினோம் உன் கைப்பேசியை கூட அழைத்தேன் என்றாள். எந்த சமாதானத்துக்கும் இடம் தராத கலகக்காரியின் வேடமணிந்து அறையை தாளிட்டு கொண்டேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். மனித்தில் இருந்த வெறுமை குழப்பம் மறைய இந்த தொலைதல் உதவி இருந்தது.

Friday, January 24, 2003

எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள்



இன்றிலிருந்து "மின்ன‌ல் ப‌க்க‌ம்" "உயிரோடை" ஆக உருமாறுகின்ற‌து. மின்ன‌ல் என்ற‌ பெய‌ர் எனக்குப் பிடிக்கும் என்றாலும், பொதுப்புத்தி சார்ந்த பலருக்கும் அது முதலில் கேலிக்குரிய ஒரு சொல்லாக கையாளத் தோன்றியது. இதை நீண்ட‌ நாட்க‌ளாக‌வே என்னை அறிந்தோர் தெரிந்தோர் அனைவ‌ரும் கூறிக்கொண்டிருந்தார்க‌ள். அதுவும் சில இடங்களில் சென்றதும் "வாம்மா மின்ன‌ல்" என்ற‌ வ‌ச‌ன‌ம் கூற‌ப்பெற்ற‌து. அது என‌க்கு க‌வ‌லைய‌ளிக்க‌வில்லை என்றாலும் இல‌க்கிய‌த்துவ‌மும் ஒரு அழ‌கிய‌லும் இல்லாத‌ பெய‌ர் போன்றிருப்பதாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ முடிவு. இன்றிலிருந்து மின்ன‌ல் ப‌க்க‌ம் உயிரோடையாக‌ வ‌ல‌ம் வ‌ரும். என்னை தொட‌ரும் அன்ப‌ர்க‌ளுக்கு உயிரோடை என்ற‌ சுட்டி தானாக‌வே இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

••••••

இந்த முறை சென்னை வந்த போது திருவ‌ர‌ங்க‌மும் சென்றிருந்தேன். எப்போதும் இரு முறை சேவிக்கும் வ‌ழ‌க்க‌ம் என‌க்கு. மேலும் 50 ரூபாய்க்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தி தேவ‌ஸ்தான‌த்தில் தெரிந்த‌ ஒருவ‌ர் பெய‌ர் சொல்லிவிட்டு ர‌ங்க‌னை 5 நிமிட‌த்தில் சேவிக்கும் பாக்கிய‌ம் என‌க்கு அவ‌ன் த‌ந்திருக்கும் வ‌ர‌ம். ஆயினும் இந்த‌ முறை இர‌ண்டாம் நாள் மூல‌ஸ்தான‌ம் ர‌ங்க‌னை 5 நிமிட‌த்திலும், தாயாரை 10 நிமிட‌த்திலும், வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப்ப‌த்தில் உல்லாச‌மாக‌ வீற்றிருந்த‌ உற்ச‌வ‌ ர‌ங்க‌னை நீண்ட‌ வ‌ரிசைக‌ளுக்கும் இடிபாடுக‌ளுக்கும் பின் சேவித்தேன். கோவில் நிர்வாகிக‌ள் வ‌ச‌ந்த‌ உற்ச‌வ‌த்தின் போது வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப‌ வ‌ரிசைக‌ளை வ‌கைப‌டுத்தி க‌ட்டுப்ப‌டுத்தினால் என்னை போன்றோர் அதிக‌ம் பாடுப‌டாம‌ல் நிம்ம‌தியாக‌ சேவிக்க‌லாம். இல்லையென்றால் சேவிக்கும் புண்ணிய‌ம் அங்கே விய‌ர்த்துக் கொட்டும் எரிச்ச‌லிலேயே ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும். ந‌ல்ல அனுப‌வ‌ம். அதிலும் இந்த முறை என்னுடைய ரங்கனை கண்டு கொண்ட பரவசத்தில் எதுவுமே குறையாகத் தோன்றவில்லை.

••••••

கடந்த ஞாயிறு (31.05.2009) சென்னையிலிருந்து நான் செல்ல‌ வேண்டிய‌ விமான‌ம் அரைம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ கிள‌ம்பி டெல்லியை அடைந்தும் த‌ரையிர‌ங்க‌ அரை ம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ ந‌ள்ளிர‌வு தாண்டி டெல்லியை அடைந்திருந்தேன். விமான‌த்திலிருந்து இற‌ங்கும் போதே புய‌ல் முன்னும் பின்னும் நெட்டி த‌ள்ளி தீர்த்த‌து. விமான‌ நிலைய‌ம் விட்டு வெளியே வ‌ந்து சீருந்தை அடையும் முன்னேயே பேய் ம‌ழை கொட்ட‌ ஆர‌ம்பித்த‌து. இர‌ண்டு நாட்க‌ளாக‌ டெல்லியில் புய‌லும் ம‌ழையும் பெய்து க‌டுமையான‌ வெப்ப‌ம் த‌ணிந்து ர‌ம்மிய‌மான‌ சூழ‌லாக‌ இருந்தது சந்தோஷமாக இருந்தது.

••••••


க‌ட‌ந்த‌ வார‌ம் சென்னை சென்று வ‌ந்த‌தில் மிக‌ புதிய‌ அனுப‌வ‌ங்க‌ள். உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ள். என் மான‌சீக‌ குரு ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ச‌ந்தித்தோம். க‌ட்ட‌ற்ற‌ காட்டாறு போன்றிருந்த‌து அவ‌ர் பேச்சை. எந்த‌ எடுத்து த‌ந்தாலும் அதில் இருந்து பேசினார். சுந்த‌ர‌ராம‌சாமி முத‌ல் சுஜாதா வ‌ரை. உட‌ன் இருந்த‌ 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா மூவ‌ரும் அவ‌ருட‌ன் நிறைய‌ நேரம் பேசினார்க‌ள். நான் படிப்ப‌தும் எழுதுவ‌தும் மிக‌ குறைவென்ப‌தால் அதிக‌ம் பேச‌வில்லை. நிறைய‌ உரையாட‌ல்,ஒரு கப் காபி, ஒரு வேளை மதிய உண‌வென்று அவருடனான மிக‌ நீண்ட‌ ப‌கிர்த‌லுக்கு பின் ம‌ன‌ம் நிறைந்திருந்த‌து. பின் க‌ட‌ற்க‌ரையில் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா, 'நெய்த‌ல்' ச‌ந்திர‌சேக‌ர் ம‌ற்றும் 'சுய‌ம்' இராவ‌ண‌ன் இவ‌ர்க‌ளோடு மனுஷ்யபுத்திரனின் 'நீராலானது' தொகுப்பை முழுவதுமாக வாசித்து கருத்துப் பகிர்ந்தோம். பிறகு க‌விதை திரைப்பாட‌ல்க‌ள் என்று இல‌க்க‌ற்ற‌ எண்ண‌ற்ற‌ பேச்சு... பேச்சு... மேலும் பேச்சு மட்டுமின்றி எழுத்தில் சொல்லிவிட தீராத‌ உன்ன‌த‌ங்க‌ள்.

••••••

இங்கே எழுத‌ப‌ட்டிருப்ப‌வை ஒரு ப‌ய‌ண‌க் க‌ட்டுரையோ, க‌ட்டுரையோ, குறிப்புக‌ளோ அல்ல‌து வேறு சிலவோ கிடையாது. என் ம‌ன‌தில் நான் பூசிக் கொண்ட‌ எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள். எண்ண‌ங்க‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும் உயிரோடையில் தொட‌ரும். தொட‌ர்ந்து வாசியுங்க‌ள்.

••••••

எனக்குப் பிடித்த கவிதையொன்று :

மனமொளிர் தருணங்கள்
தளர்ந்து இறுகும்
சிறகுகள் அசைத்து
கால் புதைய காற்றில்
நடக்கிறது ஒரு பறவை
என்னை நானே
அருந்தி இரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்த
பறவைச் சிறகின் கதகதப்பை
கைப்பற்றி
கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது
பறவை
உதிர்ந்த சிறகு குறித்த
கவலையேதுமற்று.
- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்