Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Friday, September 24, 2010

மல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாராக‌)
















எங்க‌ வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகைக‌ள் ச‌ற்றே பெரிய‌ குண்டு ம‌ல்லிகைக‌ள். பார்க்க‌ வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல‌ இருக்கும். என‌க்கு சிறு வ‌ய‌திலிருந்தே ம‌ல்லிகைப் பூ மேலே தீராத‌ காத‌ல். திருவ‌ர‌ங்க‌த்தில் இருந்த‌ நாட்க‌ளில் மென‌க்கெட்டு பூ மார்கெட் போய் ம‌ல்லிகைப் பூவை உதிரியாக‌ வாங்கி நெருக்க‌மாக‌ தொடுத்து, த‌லை நிறைய‌ வைத்துக் கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

என‌க்கு ம‌ல்லிகைப் பூ நிற‌ம்ப‌ பிடிக்கும் என்ற கார‌ண‌த்தால் ம‌ல்லிகை ப‌திய‌னிட்டு மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் வ‌ள‌ர்க்க‌‍ப்ப‌டுகின்ற‌ன‌ என் வீட்டில். தினம் காலையில் கிள‌ம்பும் போது தோட்ட‌த்தை வாஞ்சையோடு பார்ப்ப‌தை த‌விர‌ நான் வேறு எதுவும் செய்வ‌தில்லை அந்த‌ ம‌ல்லிகைச் செடிக‌ளுக்காக‌. தோட்ட‌த்தில் ம‌ல்லிகை ம‌ட்டும் அல்லாது நிறைய‌ ரோஜா செடிக‌ளும் ஒரு வேப்ப‌ ம‌ர‌மும், ஒரு சில‌ வாழை ம‌ர‌ங்க‌ளும், ஒரு ந‌ந்தியாவ‌ட்டை செடியும் இருக்கின்ற‌து. இருந்தாலும் ம‌ல்லிகையின் ப‌சுமையும் அடுத்த‌ப‌டியாக‌ வாழையுமே என்னை எப்போதும் க‌வ‌ரும்.

மார்ச் முடிந்து ஏப்ர‌ல் மாத‌ம் ஆர‌ம்பிக்கும் த‌ருண‌ம் என‌க்கு மிக‌ பிடித்த‌ கால‌ம். எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ளலும் ஒரு சில‌ ம‌ல்லிகை மொக்குக‌ளை த‌ர‌ ஆர‌ம்பிக்கும். முத‌லில் ஒன்று இர‌ண்டாக‌ ஆர‌ம்பித்து, மே மாத‌த்தில் த‌லை நிறைய‌ வைத்துக் கொள்ளும் அள‌வு பூக்கும். அதை சாயுங்கால‌ம் ப‌றித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வ‌து என் தின‌ப்ப‌டி செய‌ல்.(இங்கே ம‌க‌ளிர் த‌லையில் பூக்க‌ளை பெரும்பாலும் அணிவ‌தில்லை)

"ஏங்க‌ ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க‌ போச்சு?"

"இரு வ‌ரேன்"

வ‌ந்து விள‌க்கை போட்டார். அத‌ற்குள் என‌க்கு பூக்குத்தி கிடைத்து விட்ட‌து.

"பாரு ஒரு ஏர்பின் தேட‌ கூட‌ நான் தான் வ‌ர‌ வேண்டி இருக்கு"

"என்ன‌வோ ஒரு ஏரோபிளேனேயே தேடி த‌ந்த‌ மாதிரி சொல்லீங்க‌ ம்ம்ம்"

"ச‌ரி வெட்டியா பேச்சு தான் டிப‌ன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் ப‌ண்ண‌ முடியும்"

"அதுக்கு தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே வெட்டியா அப்ப‌ற‌ம் இன்னோரு ஆளை வேற‌ அப்பாயிண்ட் ப‌ண்ண‌னுமா?"

கிள‌ம்பி சீருந்தில் கொஞ்ச‌ தூர‌ம் சென்ற‌ இருப்போம். நான் எங்கே என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌த்தை பிடிப்பேனோ அதே இட‌த்தில் த‌ன் அலுவ‌ல‌க‌த்து வாக‌ன‌தை பிடிக்க‌ வேண்டி செல்லும் எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிப்ப‌வ‌ரை தின‌ம் ஏற்றி செல்வ‌து போல் இன்னும் ஏற்றி சென்றோம்.

"குட் மார்னிங் ஜி"

"குட் மார்னிங் கத‌வு சரியாக‌ மூட‌வில்லை மூடி விடுங்க‌ள்"

"எங்க‌ வீட்டு பைய‌ன் க‌ல்யாண‌ ரிசப்ச‌னில் உங்க‌ போட்டோ அழ‌கா வ‌ந்திருக்கு"

"ஓ அப்ப‌டியா?"

"ஆம் அப்ப‌ மேட‌ம் இங்கே இல்லையா என்ன‌?"

"ஆமா அவ‌ங்க‌ அப்ப‌ வெளிநாடு போயிருந்தாங்க‌."

"ஓ அப்ப‌டியா எங்கே..."

அவ‌ர்க‌ள் உரையாட‌ல் நீண்ட‌து. நான் கிடைத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தினேன்.

ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர் இற‌ங்கிய‌தும்

"பாரு அவ‌ர் சொல்றாரு நான் போட்டோல‌ அழ‌கா இருக்கேனாம்"

"சும்மா தின‌ம் வ‌ண்டில‌ வ‌ரோமே ஏதாவ‌து புக‌ழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்க‌ற‌து தானே வ‌ரும் போட்டோல‌"

"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழ‌கு அதான் அவ‌ரும் சொல்றாரு"

"அவ‌ருக்கு என்ன‌ அவ‌ரா உங்க‌ளை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி இருக்காரு அந்த‌ கொடுமைய‌ நான் இல்லை ப‌ண்ணி இருக்கேன்"

"ப‌க்க‌த்துல‌ இருக்க‌ பொருள் எப்போதுமே தெரியாது."

"அதுக்கு பேரு தூர‌ப் பார்வை என் பார்வை ச‌ரியா இருக்குன்னு டாக்ட‌ரே ச‌ர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க‌ தான் இந்த‌ ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்க‌ல் செக்க‌ப் கூட்டிட்டு போனீங்க‌"

அத‌ற்கும் என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌ம் வ‌ந்து விட்ட‌து.

*******















சில‌ நாட்க‌ளுக்கு முன் ஒருவார‌ இறுதியில் வெளியே கிள‌ம்ப‌ த‌யாரா இருந்தோம்...

"இன்னிக்கி வெளில‌ சாப்பிட்டு அப்ப‌டியே சூப்ப‌ர் மார்க்கெட் போய் உங்க‌ ஆபிஸ்ல‌ கொடுத்த‌ சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து ம‌ளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வ‌ர‌லாம்"

"சாப்பிட‌ போக‌லாம் ஆனா சூப்ப‌ர் மார்கெட் எல்லாம் வ‌ர‌ முடியாது"

"அதுக்காக‌ த‌னியாவா போக‌ முடியும் அப்ப‌டியே போயிட்டு வ‌ந்திருலாம்"

"நான் வ‌ர‌லை. சாப்பிட‌ ம‌ட்டும்ன்னா வேணும்ன்னா வ‌ரேன்"

"எங்கேயும் போக‌ வேண்டாம் என‌க்கு உன் கூட‌ சாப்பிட‌ போக‌ பிடிக்க‌லை"

இத‌ற்கு மேல் அங்கே அம‌ர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாத‌ம் தான் வ‌ள‌ரும் என்று கோப‌த்தோடு வெளியே வ‌ந்தேன். தோட்ட‌த்தில் இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ முத‌ல் ம‌ல்லிகை ம‌ல‌ர்ந்திருந்த‌து. ப‌றித்துக் கொண்டு உள்ளே வ‌ந்தேன். ம‌ண‌ம் அதில் ம‌ன‌ம் லயிக்க‌...

"ஹ‌லோ சொல்லுங்க‌ மோக‌ன்"

"இன்னிக்கா... கொஞ்ச‌ம் டைய‌ர்டா இருக்கு"

"எங்க‌ போக‌ணும்"

"ச‌ரி இருங்க‌ கேட்டு சொல்றேன்"

"மோக‌ன்ட‌ இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போக‌ணுமாம் அவ‌ருக்கு. அப்ப‌டியே சாப்பிட்டு வ‌ந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிள‌ம்பி தானே இருக்க‌. போயிட்டு வ‌ந்திருலாம்"

தோட்ட‌த்து முத‌ல் ம‌ல்லிகை என்னை பார்த்து புன்ன‌கைத்த‌து.

Wednesday, June 24, 2009

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

Sunday, June 7, 2009

யாதுமான‌வ‌னுக்கு

ரோஜாப் பூக்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் சோலையில் அல‌ர்ந்த‌ தென்ற‌ல் விழி த‌ட‌வ‌ விழித்தெழுந்தேன் ஒரு புது காலை பொழுதினில். பொன் வ‌ண்ண‌ம் பூசிய‌ க‌திர‌வ‌ன் சிரித்த‌ப்ப‌டி என்னை பார்த்திருந்த‌து என் வாழ்வின் புது வ‌ர‌வை என‌க்கு அறிவித்த‌ப‌டி. இட‌துக‌ண், இட‌து புஜ‌ம், இட‌து தொடை துடித்து எனக்கான எல்லா சிற‌ந்த‌ ச‌குன‌ங்க‌ளையும் உண‌ர்த்தி சென்ற‌து நீ என்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம். தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.

க‌ண்ட‌தும் தோன்ற‌வில்லை நீ என‌க்கென‌ இருக்க‌ பிற‌ந்த‌வ‌ன் என்று. இத‌மான‌ புன்ன‌கை எனை ஈர்த்திருந்த‌து ஆயினும் ம‌ற்ற‌வ‌ரில் ஒருவ‌னாய் தான் தெரிந்தாய் நீ என‌க்கு. விடிய‌லில் தொட‌ங்கி உன்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம் வ‌ரை உண‌ர‌வில்லை வாழ்வின் உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ளை உன்னோடு க‌ழிப்பேன் என்று.

ஒன்றாக‌ உண்ட‌ பொழுதுக‌ள், கூடி பய‌ண‌த்த த‌ருண‌ங்க‌ள், நீ என்னை தூர‌த்திருந்து ர‌சித்திருந்த‌ ச‌மய‌ங்க‌ள் அத்த‌னையும் அழ‌கான‌ நிக‌ழ்வுக‌ள். ஒரு முறை என்னை சீண்டிய‌ சில‌ரை உன் கோப‌ க‌ணையால் சுட்டெரித்தாயே மென்மையான‌ உன‌க்குள்ளா இத்த‌னை கோப‌ம்? என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌. ஞயாப‌க‌ம் இருக்கின்றதா நாம் சென்று வ‌ந்த‌ கோவிலில் என‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கொத்து மரிக்கொழுந்து உன்னை போல‌ அழ‌கானதாக‌வும் வ‌ச‌னையோடுமிருந்த‌து. நீ அளித்த‌ நெற்றி குங்கும‌ம் இன்றும் நின்று சிரிக்கின்ற‌து.

என்ன‌ பார்க்கின்றாய் என்றால் உன்னை தான், உன் ஒவ்வொரு அசைவையும் ம‌ற்ற‌வ‌ரிட‌த்து நீ செலுத்தும் அக்க‌ரையும், உன் அணுகு முறையையும், தாயென‌ நீ பொழியும் அன்பையும் அணுஅணுவாக‌ ர‌சிக்கின்றேன் என்பாய். உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய் அப்புற‌ம் என்ன‌டா உற‌ங்கும் போது பார்க்க‌ என்றால் அது உன‌க்கு தெரியாத‌டி எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌ உண‌ர்வென்று, வார்த்தைக‌ளால் விள‌க்க‌ முடியாதென்பாய். ஆனால் ஒரு நாளும் நான் உற‌ங்குவ‌தை பார்த்த‌தில்லை என்ப‌து தானே உன் புல‌ம்ப‌ல் இன்று வ‌ரை. என‌க்கு உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ற‌தும் நீ ப‌த‌றிய‌தும் அளித்த‌ அர‌வ‌ணைப்பில் நான் க‌ண்டேன் இன்னுமொரு தாயாய் நீ என‌க்கு.

உன்னை க‌ட்டிக் கொள்ள‌வா ஒரு க‌ண‌ம் என்ற‌ போது உன்னை விட‌ இறுக்க‌ க‌‌ட்டிக் கொண்ட‌து நான‌ல்ல‌வா? நெற்றியோட‌ நீ இட்ட‌ முத்த‌த்தில் ஆர‌ம்பித்து இன்று வ‌ரை நீ த‌ந்த‌ முத்த‌ங்க‌ள் எண்ணிக்கையில் அட‌ங்க‌வில்லை. உன‌க்கு என்னை பிடிக்குமா என்றால் ம்ம்ம்ம் என்ற‌ப‌டி இத‌ழ் நிறைய‌ முத்த‌ம் த‌ருவாய். இறுக‌ அணைத்திடுவாய். என் எழுத்தை நீ எழுதிய‌து போல‌ ஏந்தி கொள்வாய். இணுக்க‌ம் இணுக்கமாய் விம‌ர்சிப்பாய். தாங்கி கொள்வாய் எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.

Monday, September 24, 2007

ஓயாத அலைகள் (புனைவு)




ம‌ணி காலை 6.52 இன்று இர‌ண்டு நிமிட‌ம் நேர‌மாகிவிட்ட‌து வீட்டிலிருந்து கிள‌ம்ப‌. சீருந்து ஓட்டுன‌ரிட‌ம் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌ ஓட்ட‌ச் சொன்னேன்.

அக‌நாழிகை பத்திரிகையில் "பாலை நில‌ காத‌ல்" எஸ்.செந்தில் குமார்.சிறுகதையை வாசிக்க‌ ஆர‌ம்பித்தேன்.

'பெருமாள் சாக்கை விரித்து போட்டு வாச‌லுக்கு அருகில் ப‌டுத்திருந்தான்.'

சீருந்து ஒரு ப‌ள்ள‌த்தில் ஏறி இற‌ங்கிய‌து. நேர‌ம் கார‌ண‌மாக‌ கொஞ்ச‌ம் வேக‌மெடுக்க‌ குறுக்கே வ‌ந்த‌ ஒரு சிறுமிக்காக‌ ச‌ட்டென‌ பிரேக்கை அழுத்தினார் ஓட்டுன‌ர். திடுக்கிட்டு க‌வ‌ன‌ம் சித‌றினேன்.

'வீட்டினுள் ப‌டுத்திருந்த‌ குழ‌ந்தைக‌ள் மேல் வெளிச்ச‌ம் உடையை போல் ப‌ட‌ர்ந்து நின்ற‌து'

அட‌ என்ன‌ ந‌ல்ல‌ உவ‌மான‌ம் இது எஸ்.செந்தில் குமார் ஒரு க‌விஞ‌ரும் கூட‌ அல்ல‌வா? அது வ‌றுமையை காட்டும் ப‌டிமாக‌ கூட‌ எடுத்துக் கொள்ள‌லாம் அல்லவா? எஸ்.செந்தில் குமாருக்கு சுந்த‌ர‌ராம‌சாமி விருது கிடைத்திருக்காமே இந்த‌ வ‌ருட‌ம்... அவ‌ர் க‌விதைக‌ள் சில‌ ம‌ண்குதிரையின் வ‌லையிலும் ப‌டித்தோம‌ல்ல‌வா, இந்த‌ முறை சென்னை செல்லும்போது அவ‌ர் க‌விதைத்தொகுப்பு வாங்க‌ வேண்டும்.


'பெருமாள் எதிரேயிருந்த‌ பொன்ராஜின் வீட்டைப் பார்த்தான்'

ம‌ணி 7.00 அடுத்த‌ இல‌க்கை அடைந்திருந்த‌து எங்க‌ள் சீருந்து. நித்தீஷ் ஏறிய‌தும் “ச‌ந்தீபிற்கு என்ன‌ ஆயிற்று இர‌ண்டு நாட்க‌ளாக‌ காண‌வில்லையே“ என்றேன். காலில் அடிப்ப‌டிருப்ப‌தாக‌ நித்தீஷ் சொன்னான். மீண்டும் வாசிப்பை தொட‌ர்ந்தேன்.

'தான் இற‌ந்த‌ பிற‌கு பிள்ளைக‌ளும் ம‌னைவியும் என்ன‌ செய்ய‌ போகிறார்க‌ள்'

எங்க‌ள் சீருந்தை க‌ட‌ந்த‌ ஒரு ப‌ள்ளிப் பேருந்தில் ஒரு குழ‌ந்தை அழ‌காக‌ சிரித்தாள் க‌ன்ன‌த்தில் குழி விழுந்த‌து. அவ‌ள் பார்க்க‌ விஜ‌ய் தொலைக்காட்சியில் வ‌ந்த‌ க‌னாக்காணும் கால‌ங்க‌ள் ஹேமாவை போல் இருந்தாள். ஹேமாவை என‌க்கு பிடிக்கும் அவ‌ள் ந‌ல்ல‌ ந‌ட‌ன‌க்காரி என்ப‌து ம‌ட்டுமில்லை அவ‌ளுக்கு க‌ர்வ‌மில்லை. பிரிய‌த‌ர்ஷினி கூட‌ அப்ப‌டித் தான். ந‌ல்ல‌ ப‌ல‌ திற‌மைக‌ள் இருந்தும் அவ‌ளிட‌ம் க‌ர்வ‌ம் என்ப‌து துளியும் இல்லை. இத்த‌னைக்கும் எல்லா தொலைக்காட்சி அலைவ‌ரிசையிலும் இருக்கின்றாள் அவ‌ள். திவ்யத‌ர்ஷினி திற‌மை இருந்தாலும் கொஞ்ச‌ம் அல‌ட்ட‌ல் அதிக‌ம் போல் தோணுது. இருந்தாலும் இது என் எண்ண‌ம் ம‌ட்டுமே.

'பெருமாள் ஒன்றும் பேச‌வில்லை. பேசினால் தான் ஏதாவ‌து உள‌ரிவிடுவோமோ என்று நினைத்தான்'
க‌தையின் ஓட்ட‌ம் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து.

நாமும் எழுத‌னும். காலையில் நினைத்தோமே. அது என்ன‌ இட‌ம் ம‌ங்க‌லாக‌ தான் நினைவிருக்கிற‌து. நான் சூட்கேஸை எத‌ற்கு திற‌ந்தேன் என்று தெரிய‌வில்லை. ஆனால் அதில் நிறைய‌ பெருட்க‌ளை திண‌றிக் கொண்டிருந்த‌து வெளியே விழுந்து விட்ட‌து. ச‌ரி அக்கா எங்கே அவ‌ச‌ர‌மாக‌ சென்று விட்டாள். மாமா வ‌ந்திருந்தாரா கூட‌? அவ‌ர்க‌ள் விமான‌த்திற்குள் சென்றிருக்க‌ வேண்டும் இந்த‌ நேர‌ம்.

என‌க்கு ம‌ட்டும் ஏன் இந்த‌ சோத‌னை? இந்த‌ அக்கா கொஞ்ச நேர‌ம் கூட‌ இருந்திருக்க‌ கூடாதா? போர்டிங் பாஸ் வாங்கியாற்று. ச‌ரி எங்கே செல்ல‌ வேண்டும் இந்த‌ விமான‌ம் அடைய‌. அதோ அனுராதா வ‌ந்திருக்கிறாள் அவ‌ளும் சென்னை தானே செல்ல‌ இருந்தாள்.

விமான‌த்திற்கு எப்ப‌டி செல்வ‌து? "நேரே சென்றால் க‌டைசி ஸ்க‌லேட்ட‌ர்." அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ஓடினேன். ‘இந்த‌ விமான‌ம் சென்னை செல்லுமா?‘ என்று ஆங்கில‌த்தில் கேட்டேன்.

அவ‌னும் அப்ப‌டி தான் நினைக்கிறேன் என்றான். அப்ப‌டித்தான் என்றால் ‘அட‌ங்கொங்யா‘. ச‌டுக்கில் பார்த்தேன் என் கைப்பை கீழே விழுந்து விட்ட‌து. யாராவ‌து எடுத்து தாங்க‌ளேன். ஏன் யாருமே எடுக்க‌ வில்லை.

நானே கீழே சென்றேன். ச‌ரி ஸ்க‌லேட்ட‌ர் ஏன் நின்று விட்ட‌து. அய்யகோ ஏன் க‌த‌வ‌டைத்து விட்டார். செக்யூரிட்டி போர்டிங் முடிவிட்ட‌தாக‌ சொல்கிறானே.

என்னிட‌ம் போர்டிங் பாஸ் இருக்கிற‌து என்று சொன்னாலும் அவ‌னுக்கு விள‌ங்க‌வில்லையே. என்ன‌ செய்வேன்? என்னைக் காண‌வில்லை என்று அக்கா என்ன நினைப்பாள்.

ச‌ட்டென‌ விழிப்பு த‌ட்டிய‌து. காலை 3.20. அட‌ச்சே க‌ன‌வு. ச‌ரி இதை ஒரு க‌தையாக்க‌ வேண்டும். அக்கா என்று எழுத‌ கூடாது அக்கா கோபித்துக் கொள்வாள்.



'அரைக்கீரையை தோட்ட‌த்திலிருந்து அறுத்துக் கொண்டு வ‌ந்து க‌டைந்து' காலை 6.00. சே.. அந்த‌ க‌ன‌வு வ‌ந்து விழிப்பு த‌ட்டிய‌தா?

மீண்டும் ச‌ரியா தூங்க‌ முடிய‌லை அப்ப‌தான் க‌ண்ண‌ய‌ர்ந்த‌து போல‌ இருந்த‌து அலார‌ம் அடித்துவிட்ட‌து. கொஞ்ச‌ம் சோம்பி குளிச்சிட்டு வ‌ந்தா ஆறாச்சு. சாப்பாடு வைச்சி க‌த்த‌ரிக்காயை க‌டைந்து ர‌ச‌த்துக்கு புளி க‌ரைக்கும் போது ம‌ணி 6.30. இந்த‌ நேர‌ம் நாம் அவ‌ச‌ர‌மாக‌ இருக்கும் போது ஏன் இப்ப‌டி ப‌ற‌க்கிற‌து. நேற்று த‌லைவ‌லி என்று வேலை ஓடாத‌ போது மாலை நான்கிலிருந்து ஐந்தாக‌ அதிக‌ நேர‌மான‌த‌ல்ல‌வா? பூசை முடித்து அவ‌ர‌ச‌மாக‌ காபி குடித்து 6.49.

வீடு பூட்டி வெளியே வ‌ந்தால் “த‌ண்ணீர் தாங்க‌ தங்கச்சி“ என்ற‌ ஓட்டுன‌ருக்கு தண்ணீர் நிரப்பி காலை 6.52 கிள‌ம்பியாச்சு அக‌நாழிகையில் படித்து முடிக்க வேண்டிய க‌டைசி க‌தையை இன்றைக்குள்ளாவது ப‌டிக்க‌ வேண்டும்.


'பாக்கிய‌ம் அவ‌னுட‌ம் "மாமா அப்புகுயெத்தானும் எதினும் தீசீயினி ராஒத்தோ" என்றாள்'

காலை 3.20 சே.. என்ன‌ இந்த‌ க‌ன‌வு தூங்க‌ணும் இல்லாட்டி அலுவ‌ல‌க‌த்தில் தூக்க‌ம் வ‌ரும். ச‌ரி அந்த‌ க‌ன‌வுக்கு கார‌ண‌ம் என்ன‌வா இருக்கும்

ப்ரான்க்போர்டில் இணைப்பு விமான‌ம் பிடிக்கும் போது அலுவ‌ல‌க‌த்தில் விமான‌சீட்டை மாற்றி த‌ர‌ தேவையான‌ ப‌ண‌ம் க‌ட்ட‌தால் க‌டைசி நேர‌ம் வ‌ரை போராடி விமான‌த்தை பிடித்த‌தும் அந்த‌ விமான‌ நிலைய‌ம் மிக‌ பெரிய‌தாக‌வும் அங்கே பாஷையும் திசையும் விள‌ங்காம‌ல் அலைந்து ப‌த‌ட்ட‌மாக‌ விமான‌ம் பிடித்த‌தும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாமோ...


இதை எப்ப‌டி எழுத‌லாம், அட‌ இப்போதான் தூங்கின‌து போல‌ இருக்கு அல‌ராம் அடிச்சிடுச்சே. த‌ண்ணீர் சுட‌ வைச்சிட்டு மீண்டும் கொஞ்ச‌ நேர‌ம் ப‌டுத்திருப்போம். அய்யோ ம‌ணி ஆறாச்சு.

'இர‌ண்டு மூன்று தின‌ங்க‌ளுக்கு முன் பெருமாளுக்கு க‌ட‌னுக்கும் ப‌ண‌ம் த‌ந்த‌வ‌ன் கூடுத‌லாக‌ நாலு வார்த்தை பேசி'

அலுவ‌ல‌க‌த்தில் போனா அதே வேலை. நான் சொல்லும் கார‌ண‌ங்க‌ளை ஏற்ப‌தில்லை மேலாள‌ர். அதை நான் சொல்லி அவ‌ன் சொன்னால் ஏற்கிறார். என‌க்கு எதுவும் தெரியாது என்று ஏன் எல்லோரும் முன் கூட்டியே தீர்மானிக்கிறார்க‌ள். வேலை விச‌ய‌த்திலும் ச‌ரி எழுதும் விச‌ய‌த்திலும் முத‌ல் முறை ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அதே நிலையில் தான் அவ‌ர்க‌ள் அறிவு என்றும் இருக்கும் என ஏன் மேதாவிக‌ள் எல்லோரும் நினைக்கிறார்க‌ள். எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டேயா வ‌ருகின்றார்க‌ள். எல்லாம் க‌ற்றால் தானே வ‌ரும் அல்ல‌வா?

எனக்கு ஏன் இந்த‌ அவ‌மான‌ம்.

'பாக்கிய‌ம் எல்லோருக்கும் பொதுவாக‌ க‌ஞ்சி காச்சினாள்.'

இர‌ண்டு லாரிக‌ளும் ஒரு சுவிப்டும் க‌ட‌ந்து போன‌து எங்க‌ள் சீருந்தை. ஒரு இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் ம‌ண் த‌ரையில் புழுதியை கிள‌ம்பியப‌டி சென்ற‌து. சாலையோர‌ம் தின‌ம் பார்க்கிறேன் ரங்க‌னுக்கு வீச‌ப்ப‌டும் வெண்சாம‌த்தை ஒத்திருக்கும் இந்த‌ க‌திர்க‌ளை. பார்க்க‌ மிக‌ அழ‌காக‌ இருக்கின்ற‌து.

ஒரு க‌விதை எழுத‌வேண்டும் இதை ப‌ற்றி. சோளத்த‌ட்டை போல் இருக்கும் த‌ட்டை குறைந்த‌ப்ப‌ட்ச‌ம் ஆற‌டி இருக்கும். அத‌ன் மேல் ம‌ல‌ர்ந்து விரிந்திருக்கும் இந்த‌ க‌திர்க‌ள் மென்மையாக‌ இருக்குமோ?

ஒரு விடுமுறை நாள் அவ‌ரோடு இந்த‌ புற‌ம் வ‌ந்து இவ‌ற்றை உண‌ர‌ வேண்டும். இத‌ன் பெய‌ர் என்ன‌வாக‌ இருக்கும்.நான் அந்த‌ அள‌வு அறிவாளியில்லை சுவார‌ஸியமான‌ பெய‌ர்க‌ளை உருவாக்க‌.

அய்யனார் பெய‌ர் தெரியாத‌ ப‌ற‌வைக்கு அட‌ர்தீற‌ல் கொண்ட‌ நீல‌ப்ப‌ற‌வை என்றும், பெய‌ர் சொல்லாம‌ல் அர‌ட்டையில் வ‌ரும் ஒரு பெண்ணுக்கு உரையாட‌லினி என்றும் பெய‌ர் வைத்தார்.


'பெருமாள் பிள்ளைக‌ளோடு இற‌ந்து கிட‌ந்தான்'

காலை 7.43 அட‌ இர‌ண்டு நிமிட‌ம் தாம‌தத்திலும் ச‌ரியாக‌ அலுவ‌க‌ல‌ம் அடைந்துவிடுவோம் போல‌ இருக்கே. வெளியில் ஒரு கூடையில் ம‌ஞ்ச‌ள் ரோஜா ம‌ற்றும் சிவ‌ப்பு ரோஜாக்க‌ள் கொண்ட‌ ஒரு சைக்கிள் க‌ட‌ந்து சென்ற‌து. அவை எல்லாம் பெங்களூர் ரோஜாக்க‌ள். ஆனால் விளையும் இட‌ம் குர்க‌வுனாக‌ தான் இருக்கும். பின் ஏன் அத‌ற்கு பெங்க‌ளூர் ரோஜா என்று பெய‌ர் வ‌ந்த‌து.


'அன்ன‌லெட்சுமியை பார்க்கும் போதெல்லாம் ம‌ன‌தில் அழுகை கூடுவிடும். பொன்ராஜிக்கும் அன்ன‌லெட்சுமிக்கும் தான் முத‌லில் க‌ல்யாண‌ம் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌து'

காலை 7.45 அலுவ‌ல‌க‌ம் வ‌ந்துவிட்ட‌து. சீருந்தை விட்டு இற‌க்கும் போது க‌வ‌னித்தேன். கதையின் ஒரு பக்கத்தை கூட வாசித்து முடிக்கவில்லை. பாதிதான் முடிந்திருந்த‌து.

'பொன்ராஜிக்கு டிவிக் டிவிக் ம‌ஞ்ச‌ள் மூக்கு மைனாவின் ச‌ப்த‌த்தை கேட்கிற‌ போது அழுகை வ‌ந்துவிடும்'

ஏன் என்று மாலை ப‌டிக்கும் போது தான் தெரியும்.

ச‌ரி இந்த‌ புனைவை முற்ற‌ம் என்ப‌தா தொட‌ரும் என்ப‌தா?

000

Friday, September 24, 2004

உயிரில் கலந்தவனுக்கு…


um5 முதன் முதலாக கொஞ்சம் தூரத்திலிருந்து உன்னை நான் கண்ட போது எனக்குள் ஒரு ரோஜா பூத்திருந்தது. உனக்கும் அப்படித்தான் என்று பின்னொரு தினம் நீ சொல்லி நான் அறிந்து கொண்டேன்.
உன் நண்பனோடு வந்திருந்த என்னை வரவேற்கவும் மறுநாளே நான் வேறிடம் செல்ல இருந்த போது என்னை வழியனுப்பவும் நீ வந்திருந்தாய். உன்னை அறியாமல் என் மேல் உனக்கும் என்னை அறியாமல் உன் மேல் எனக்கும் ஈர்ப்பு வந்திருந்தது என்னவோ உண்மை.
அதன் பின் நாம் மீண்டும் சந்தித்தது கிட்டதட்ட ஆறு மாதத்திற்கு பிறகுதான். அதற்குள் உனக்கு நான் நூறு மடலாவது இட்டிருப்பேன். அதில் ஒன்றுக்கு கூட நீ பதிலிட்டதே இல்லை.
நீ எப்போதும் பேசுவது மிக குறைவு. அத்தனை மடல்களுக்கும் நீ சொன்ன ஒரே பதில் என் மேல் இவ்வளவு ஈடுபாடும் அன்புமா.. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே.. என்றதுதான். அதில் உண்மையான ஒரு ஏக்கமும் பாசமும் இருந்தது.
um1 அந்த இரண்டாம் சந்திப்பின் போது நான் மிக முக்கியமான கட்டத்தில் இருந்தேன். என் வாழ்வை தீர்மானிக்கும் தருணமது. உன்னோடு சென்றதாலே என்னவோ அன்று நடந்த நேர்முக தேர்வில் நான் தேர்ந்திருந்தேன்.
அன்று கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் நீ எனக்காக காத்திருந்தாய். மிகவும் மகிழ்வுடனும் நெகிழ்வுடனும் நாம் நடந்த கடந்த பாலத்தை இன்றும் கடக்கும் போது உன் நினைவால் நெகிழ்கிறேன்.
எனக்கு கிடைத்த மூன்று வேலைகளில் உன் இருப்பிடத்துக்கு அருகான ஒரு வேலையில் தேர்ந்தெடுத்து அங்கே வந்திருந்தேன். எனக்காக வீடு தேடினாய். என் வீட்டிற்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி தந்தாய்.
உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்த பத்து நாட்கள் நீ சம்பளமில்லாத விடுப்பெடுத்தாய். இன்னும் என்னென்னவோ செய்திருந்தாய் எனக்காக. உன் மீது எப்போது எனக்கு காதல் வந்தது என்று இன்னும் என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.
um2 உனக்கும் என் மீது காதல் என்று எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே நீ தெளிவாகத் தான் இருந்தாய் உன் குடும்பம் என்னை என் சாதியை ஏற்காதென்று. எனக்கும் அம்மா மேல் பயம் எப்போதும். அவர்களுக்கும் உன் சாதி ஆகாதென்று தெரியும். ஆயினும் காதலித்தோம் அதுவும் உயிர் உருக.
அதற்கு முந்தைய காதலால் நான் கேவலப்பட்டு, வலியால் துடித்திருந்த என்னை எப்படியெல்லாம் தேற்றினாய். "கசங்கினாலும் நூறு ரூபாயின் மதிப்பு நூறு ரூபாயே" என்றாய். நான் அசிங்கமானவள் என்னை உனக்கு பிடிக்குமா என்ற போது நீ என் உள்ளங்கையில் முத்தமிட்டாய். You are lovable dear என்றாய். அப்போது முன்னொரு நாள் உன்னோடு மகிழ்வாக கடந்த அதே பாலத்தை நாம் மீண்டும் கடந்து கொண்டிருந்தோம்.
நினைவிருக்கிறதா... ஒரு நாள் மஞ்சள் நிற சட்டை ஒன்றணிந்து நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு, வழக்கம் போல் என்னை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து வந்து நான் உன்னிடம் காட்டிய கோபத்திற்கு கன்னம் கிள்ளி "நீ எவ்வளவு செல்லம் தெரியுமா?" என்றதும் கோபம் எல்லாம் தீர்ந்து சிரித்திருந்தேன்.
um3 எப்போதும் இப்படித்தான் உனக்கான காத்திருத்தலின் உன் மீது கடல் அளவு கோபம் இருந்தாலும் உன் புன்னகை கண்ட நிமிடம் அது காணாமல் போய்விடும். அதன் பின் எந்த மஞ்சள் பூக்களை பார்த்தாலும் அன்று நீ சொன்ன "நீ எவ்வளவு செல்லம் தெரியுமா" என்ற வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றது.
பின்னொரு நாள் ஒரு நவம்பர் மாதம் கடற்கரை சென்ற போது சட்டென பிடித்த மழைக்கு நான் நனைய கூடாதென்று உன் தலைக்கவசத்தை தந்திருந்தாய். இருந்தும் பெரும் மழை நம் காதலை இன்னும் மகிழ்விக்க கொட்டியதில் நனைந்திருந்தேன்.
நீ நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நாம் நின்றிருந்த புன்னை மரம் தன் மஞ்சள் மலர்களை நம் தலை மீது கொட்டி ஆசிர்வதித்தது. உன் தலையிருந்த மலரை நான் மகிழ்வோடு கண்டு கொண்டிருந்தேன். என் தோள் தங்கிய மலரை நீ கொண்டாடினாய்.
மிக உற்சாகமாக பிடித்த பாடலை விசிலடித்து கொண்டும் சில கவிதைகளை சொல்லியபடியும் வந்து கொண்டிருந்தாய்.
um4 "என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கே இன்னிக்கு" என்றதற்கு "மழையில் நனைந்த ரோஜாப் பூவை பார்த்து இருக்கியா ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கி பார்த்தேன்" என்றாய்.
"என்னையா சொல்றே?" என்றதற்கு, "ஹும்ம்ம் இல்லையே" என்ற உன் எள்ளலோடு கலந்த துள்ளலான பதிலில் உணர்த்தி இருந்தாய் அது எனக்காக நீ சொன்னதென்று.
கொஞ்ச நாள் அலுவல் காரணமாக உன்னை பிரிந்து வேறிடம் செல்ல வேண்டி இருந்தது. அன்றும் மழை பெய்து கொண்டிருந்தது. என்னை வழியனுப்ப வந்த நீ கிளம்பும் போது என்னிடம் இருந்த குடையை கேட்டாய் என்று தந்தேன்.
சென்று சேர்ந்த பின் தொலைபேசிய போது "குடையை என்னிடம் கொடுத்து விட்டு மழையை உன்னோடு கொண்டு போய்விட்டாய்" என்று கவிதை பேசினாய்.
11 அழுக்கேறிய ஒரு கம்பி உடைந்த அந்த குடை பிறந்த பயன் அடைந்தது. இப்படி நான் நெகிழ்ந்தது பல முறையடா... என் உயிர் தின்ற பிரியமானவனே..
அதன் பின் ஒரு நாள் திடிரென நீ சொன்னாய், ரயிலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று. அது நம் தேன்நிலவு பயணமென்றாய்.
திட்டமிட்டபடி உன்னோடு பைக்கில் சென்று கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை சென்று அங்கே ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு திரும்பும் போது ரயில் யன்னலோரம் அழகாக காய்ந்த பௌர்ணமி நிலவைக் காட்டி அதோ பார் தேன்நிலவென்றாய்.
உன்னருகே நான் இருந்த போது இந்த உலகமே அழகானதாக இருந்தது மட்டும் தான் உண்மை. உன்னை மணக்காமல் போனது என் வாழ்வின் மிக பெரும் துயரம்.
"உன்னை காதலித்தேன் நாம் இணைய முடியவில்லை. நான் ஒரு பெண்ணை மணந்து மிக நன்றாக வாழ்வேன் அது தான் நம் காதலுக்கு நான் செய்யும் மரியாதை" என்றாய்.
இன்று நீ நன்றாக இருப்பாய் என்ற நம்பிக்கையோடு நானும் உன் காத‌லோடு.