Showing posts with label புத்த‌க‌ விம‌ர்ச‌ன‌ம். Show all posts
Showing posts with label புத்த‌க‌ விம‌ர்ச‌ன‌ம். Show all posts

Friday, June 30, 2017

“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”


ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழியாக்க நூலுக்கு எனது மதிப்புரை கபாடபுரம் இதழ் நான்கில்

கட்டுரையிலிருந்து

//நமது பக்தி இலக்கியத்தில், ஆண்டாள், அக்கமகாதேவி, லல்லேஸ்வரி, மீரா, காரைக்கால் அம்மையார் ஆகியோர், கடவுள் மேல் கொண்ட பக்தியை காதலாய், தீவிரத் தேடலாய், சங்கமத்திற்கு இட்டு செல்லும் ஊடகமாய், தங்களது கவிதைகளைக் கையாண்டிருக்கின்றனர்.  மீரா, காரைக்கால் அம்மையார் தவிர, மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பெண்களும் தமது உடல், அதன் கூடல் ஆகியன, இறையன்பைப் பெற்று தரவல்லது என்று நம்பினார்கள், அவர்கள் அனைவர்க்கும் கடவுள் எதிர்பாலினன். அதையே தன் பாடல்களில் பதிவு செய்தார்கள். இவர்கள் அனைவரிலிருந்தும், ரூமி வேறுபடுவது, தன்னை ஆண் என்றோ, பெண் அன்றோ, ரூமி எங்கும் நிறுவிக் கொள்ளவில்லை என்பது தான். ரூமியின் சில கவிதைகளில், இறையை பெண்ணாகவும் தன்னை ஆணாகவும் (“கடல் உன்னிடம் / காதல் கொண்டு வரும்போது”), அதே கவிதையில் தன்னைப் பெண்ணாகவும் (“முழு நிறை ராஜாளி ஒன்று / எக்காரணமும் இன்றி / உனது தோளில் / வந்தமர்கிறது / உனதே உனதாக”) இறையை ஆணாவும், வேறு ஒரு கவிதையில் தாமிருவரும்  மானிட காதலர், எப்போதும் இறையன்பை நோக்கி பயணப்படுபவர் என்பது போலவும்  (“மீன்களை போல நம்மையும் / பெருங்கடல் அல்லவா சூழ்ந்திருக்க வேண்டும்”), இறையும் தானும் வெவ்வேறானவர் இல்லை என்றும், பல்வேறு விதமாகப் புனைந்திருக்கிறார். //

முழுக் கட்டுரையும் வாசிக்க

இங்கே சொடுக்கவும்




Saturday, April 8, 2017

சொற்களால் தீட்டப்பட்ட சித்திரம்

உரைநடை வடிவில் எழுதப்படும் நீளமான புனைகதையே நாவல்.
WiKipedia

நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது.உள்ளக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது.வடிவம் சார்ந்தும் வரையறை செய்ய இயலாது.வடிவங்கள் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்றன. இது தான் நாவலின் வடிவம் என்று சொல்லும் முன் அதை உடைத்த படி அடுத்த நாவல் வந்துவிடுகிறது.
நாவல் - ஒருசமையல்குறிப்பு (ஜெயமோகன்)



அப்படித்தான். விடம்பனம் உள்ளடக்கம் சார்ந்தோ வடிவம் சார்ந்தோ நாவல் என்று சொல்ல முடியாத ஆனால் நாவல் தான் என்று சொல்ல வைக்கும் ஒரு பிரதி. எங்கிருந்து வேண்டுமென்றாலும் தொடங்கி எந்த வரிசையிலும் படிக்கலாம் என்ற பெரிய வாசக சுந்திரத்தை இந்த நாவல் கொடுத்திருக்கிறது. சொல்லப்பட்ட கதையோட்டம் ஒரளவுக்கு தொடர்ச்சி கொண்டதாக இருந்தாலும் அப்படிப்பட்ட வாசிப்பைச் சாத்தியமாக்கி இருக்கிறது.   இதில் வரும் கதை தொடக்கமும் முடிவும் அற்றது. ஒருவேளை இதனை நாவலாசிரியரின் வாழ்வின் நான்கு வயதிலிருந்து தற்காலம் வரையிலான கண்ட, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளின் தொகுப்பு என்றும் சொல்லலாம்.  சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை" நாவலின் தொடக்க அத்தியாயங்களில் வரும் சிறுசிறுகதைகளின் தொகுப்பினைப் போலவும், ஜே.ஜே சில குறிப்புகளில் வருவவை போன்று கதையிடைக்  குறிப்புகளையும் கொண்டது. மேலும் சில கவிதைகளும், சினிமாப் பாடல்கள் இரண்டும், பக்தி இலக்கியப் பாடல்கள் பலவும் என்ற கலவையான கலைடாஸ்கோப் தன்மை கொண்டது. விதவிதமான வடிவங்களை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள இயன்ற கலைப்பிரதியாகவும் இதனைச் சொல்லலாம்.

கதையிடையே குறிக்கிடும் பல்வேறு குறிப்புகளுக்கு கதை ஓட்டத்தோடு தொடர்ப்பு அறவே இல்லை என்று சொல்ல முடியாது. இங்கே இது சொல்லப்பட்டிருக்கிறது அது எங்கே கதையோடு தொடர்ப்புடையதாகிறது என்று தேடிப்பார்க்கத் தூண்டும்படிக் குறிப்புகளை நாவலாசிரியர் திட்டமிட்டே நிர்மானீத்திருக்கலாம். அவ்வாறு தேடிப் பார்க்க்கும் ஆவலை வாசிப்பினிடையே உருவாக்கித் தந்திருப்பது மிக ஆச்சரியப்பட வேண்டிய விஷயமே. பாத்திரங்களின் உரையாடலில், பொத்தாம் பொதுவாகப் பகடியாகச் சொல்லப்பட்ட விஷயம் பின்னர் வரலாற்று நிகழ்வாக நாவலில் பதியப் பட்டிருப்பதற்கு முன்னோட்டமாக இதைக் காணலாம். உதாரணத்துக்கு தேசநேசன் குரலாகப் பதியப்படும் அரசியல்மாற்றம், பின்னர் காவேரியில் தண்ணீர் இன்றி போனத்தற்கு இந்த அரசியல் மாற்றமும் காரணம் என்று கதாபாத்திரத்தின் வழியாக மறுபதிவு செய்கிறது. அதன் மூலம் சமூகமடைந்த சீரழிவுகளை தீர்க்க தரிசனமாகக் குடிகாரன் சொல்வதாக்க் காணமுடிகிறது. இப்படி, பக்கம் 32க்கும் பக்கம் 291க்கும் இருக்கும் நுண்தொடர்பை நுட்பமான வாசிப்பில் கண்டறிய முடியும். சில குறிப்புகள் அடுத்த பக்கத்தில் வரும் அத்தியாத்திக்கு முன்னறிவிப்பாகவோ  கட்டியம் கூறுதல் போலவோ அமைந்திருக்கின்றன.  உதாரணமாக,   எல்லாம் ஏசுவே எனக்கெல்லாமே ஏசுவேஎன்ற பாடலோடு தொடங்கி கிருஸ்துமஸ் கொண்டாங்களை விளக்கும் அம்மாஞ்சியின் குறிப்பும், அதை தொடரும் அத்தியாயத்தில் கிருஸ்துவ பாதிரியார்கள் எளிய வெகுளியான மக்களை மதம் மாற்ற மேற்கொள்ளும் உத்தியும் விவரிக்கப்படுகின்றன.  நாவலாசியர் திட்டமிட்டே இதைச் செய்திருக்க வேண்டும்.

சில காட்சிகள்  நிலைத்த சித்திரமாகவும் சில காட்சிகளுடன்  பின்னணி இசை அல்லது ஒலியுடன்   சலனம் கொள்ளும் நிலக்காட்சிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. “ஒரே அலைவரிசையில் முறத்தை உயர்த்தி தூற்றும் நெல் அலைஅலையாய்க் களத்தில் விழும் அதே நேரத்தில் பதர்கள் தூசியாய்ப் போய்ப் படிவதைப் போல, வயல்களை கடக்கும் சிறுவர் கூட்டத்தின் இரைச்சல்கிராமத்தில் நான் அடிக்கடி காணும் காட்சி நெல் தூற்றுதலை      நினைவூட்டின.  இந்த வரிகள். அதே சமயம் பதர் பிரிவதுபோல  பனம்பழம் பொறுக்க ஓடும் சிறுவர் கூட்டத்தையும் அவர்களின் சத்தத்தையும் உணர அனுபவிக்க முடிந்தது. மௌன வாசிப்பு எப்படி ஒலியை, ஒளியை உணர்த்த முடியும்? ஆனால் முடிகிறது. அதே போன்றதொரு கலவை தான் அதிர்வேட்டை வர்ணிக்கும் கவித்துவ வரிகள். அதிர்வேட்டும் அதனால் அதிரும் கடற்கரையும் அப்போது அதிர்ச்சியில் பறக்கும் நூற்றுகணக்கான பறவைகளும் மனவெளியில் காட்சியாய் காதில் மோதும் ஓசையோடு பதியப்பட்டிருப்பது. இந்த வரிசையில் சிறவி தாங்குதலை பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கும் காட்சிகளும்,முதல் விதைப்பு கொண்டாங்களை சித்தரிக்கும் காட்சிகளும், பொங்கல் திருவிழாவிற்கு பண்ணை வேலையாட்களும் பண்ணையும் தயாராகும் காட்சிகளும், சிறுவர்கள் அய்யா வீட்டில் கண்ணாமூச்சியாடும் ஆடும் காட்சிகளும் எல்லாமே ஒலி/ஓளி சித்திரமாய் கணவொளியாய் விரிவது அழகு.மூச்சூறு ஆச்சியிடம் உணவு வாங்கி அதனை காட்டி எடுத்துச் சென்று கிணற்றடியில் உண்ணும் சித்திரமும் அப்படியே.

விடம்பனத்தில் சீனிவாசன் நடராஜனின் சித்தரித்ததிருக்கும் பெண் உலகம்  விசித்திரமானதுமுக்கிய கதாபாத்திரங்களாக வரும் அவள், இவள் (ராணி மார்க் அடுதன் ராணி), மணிமொழி போன்ற பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை கொண்டாடுபவர்களாக இருக்கின்றனர். இவர் நிர்மாணிக்கும் சமூகத்தில் பெண்களுக்குகான பாலியல் சுதந்திரம் கட்டற்றதாக இருக்கின்றது. திருமணம்,  சமூக ஒழுங்கு போன்ற ஆதார முடிச்சுகளை எதிர்ப்பவர்களாக உள்ளனர். ஒருத்தி அறிவின் கூர்மையோடு ஆயிரம் வேலி நிலத்தை நிர்வாகிக்கிறாள். பண்ணை நிர்வாகத்திற்கான எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறாள்.கிருஷ்ண பருந்தினை வளர்க்கிறாள். இன்னொருத்தி பெண்ணிக்குறிய அத்தனை அழகியல் அம்சங்களோடு பாவாடை நாடாவில் கொலுசைச் சிணுங்க விடுபவளாக, ஆடை அலங்கார ஸ்வரூபியாக, மலர்களை மிகவும் விரும்புவளாக, பார்த்தாலே பத்திக் கொள்ளும் அழகோடு அழகாய் வாசனையாய் மணக்க மணக்க வாழ்கிறாள். மனம் கவர்ந்த ஒருவனை எப்படியெல்லாம் பசியாற்ற வேண்டும் என்ற நினைவிலேயே திளைக்கிறாள். பண்ணையில் சேவகம் செய்யும் காலில் செருப்பும் சட்டையும் அணியும் வாய்ப்பில்லாத சமூகத்திலிருந்து வரும் மணிமொழி அழகும் அறிவும் கூடவே சாதியற்ற சமூகத்தை புரட்சிகரமாக நிர்மானிக்கும் கனவும் தெளிவும் கொண்டவளாகவும் சிற்றிலக்கியம், செவ்விலக்கியம் எல்லாம் தெரிந்தவளாகவும் இருக்கிறாள். இந்த பெண்கள் பொதுப்புத்தியோடு நிறுவப்படும் பெண்குணங்களை முற்றிலும் தலைகீழாக கவிழ்பவர்களாக இருக்கின்றார்கள். அதை குறீயீடாக காட்டவே அவள் தலைகீழாய் மரம் ஏறுபவளாகவும், கிருஷ்ணபருந்தை வளர்ப்பவளாகவும் நாவலில் பதிவுகள் இருக்கின்றன.வரலாற்று பரிமாண வளர்ச்சியில் பண்ணையை நிர்வகித்தவள் நிலத்தை கூறாக்கி விற்கும் நிறுவனத்தின் முதலாளியாகிறாள். அடுதன் ராணி சினிமா கதாநாயகியாகிறாள்.மணிமொழி மாவட்ட ஆட்சியாளர் ஆகிறாள். அதே போல எங்கோ ஒரு அத்தியாத்தில் வரும் முனியின் அம்மா சரோஜா பின்னர் வரும் அத்தியாத்தில் ஊர் பிரசிடெண்டாக உருமாறுகிறாள். ஆனால் அய்யாவீட்டு ஆச்சி மட்டும் மௌனமாய் மூச்சுறுக்கு உணவளிக்க மட்டும் வந்துவிட்டு அதே சடுக்கில் திரும்பிவிடுகிறாள்.

புனைகதையின் சிறப்பே, நிஜமும் புனைவும் பின்னிப்  பிணைந்து, நிஜமோ புனைவோ என்ற மயக்கத்தை தருவதே இன்னும் ஒரு படி உயர்ந்து இந்த நாவல் நிகழ்கால குறிப்பீடுகள், சம்பவங்கள், சகபடைப்பாளிகள், நிஜ வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகள் போன்ற வாழும் நிஜங்களை கொண்டொரு புனைகதை உருவாக்க உத்தியை கையாண்டிருக்கிறது. புனைகதை கதைக்குள் வரும் புனை கதையை நிகழ்காலத்துக்கு நகர்த்த, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன்னுள் இருக்கும் எழுத்தாளர் மரித்து போனதாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட சமூக அவலத்தை, மொத்த இலக்கிய உலக முழுதும் தலைகுனிய வேண்டிய சம்பவத்தை மிக திறமையாக பயன்படுத்தி இருக்கிறார் நாவலாசிரியர். கலைடாஸ்கோப் உருவாக்கும் பிரதியில்  மொத்த நாவலுமே பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்த கொடுமையைக்  கேள்வி கேட்க கட்டி எழுப்பப்பட்டதோ என்றே தோன்றுகிறது. இமையத்தின் எங்கதே நாவலாசிரியர் சொல்வது போல கசடை அழகாக்கி காட்டும் கதை. அதில் ஜாதியை தெளிவாக அறிய முடியாமல் போனதால் அதை சர்ச்சைக்கு உள்ளாகவில்லை என்பதை போன்ற வாசக பிம்பத்தை அம்மாஞ்சி குறிப்பின் வழி குறிப்புணர்த்துகிறார் குறிப்பிட்ட சில பக்கங்களை குறிப்பிட்டு ஒரு சமூகத்தை குறிப்பாக அச்சமூகத்தின் பெண்ணின் கற்பொழுக்கத்தை களங்கப்படுத்தியதாக நடத்தப்பட்ட அரசியல் - சமூகக் கொந்தளிப்பை ஏளனம் செய்யும் விதமாக இதில் வரும் முக்கிய பெண் கதாபாத்திரங்கள் கட்டற்ற பாலியல் சுதந்திரம் கொண்டவர்களாக வெளிப்படையாக காமத்தில் திளைப்பவர்களாக காமத்தை கலையாகக் கொண்டாடுபவர்களாக திகழ்கின்றனர். மீன் விற்கும் பெண்ணிலிருந்து, பண்ணை முதலாளி வரை காமத்தை எவ்வித ஒளிவும் மறைவுமின்றி அனுபவிக்கின்றனர்.முக்கிய கதா பாத்திரங்களான அவளும் இவளும் ஓயாது காமம் சார்ந்தே பேசுகின்றனர். அதை சித்தரிக்கும் எல்லாவித வெளிப்பாடுகளையும் நுகர்கின்றனர். ஒன்றரை பக்கம் கட்டற்ற காமம் பற்றி எழுதியதற்கு நாவலை எரித்தீர்களே சமூக காவலர்களே எம் பெண் பாத்திரங்கள், ஆண் பாத்திரங்கள் எல்லாம் நாவல் தொடக்கதிலிருந்து முடியும் வரை அதனை அப்பட்டமாக பேசுவார்கள் அதிலேயே ஊறிக் கிடப்பார்கள் என்ன செய்வீர்கள் என்பது எகத்தாளமாக கேட்கும் தொனியில் கட்டமைக்கப்படிருக்கிறது.

நாவலின் கதாபாத்திரம் தமிழ்வாணன் சொல்வது போல் படிப்பறிவில்லாத மக்களிடம் இந்த இலக்கியங்கள் எல்லாம் பயனற்ற குரோட்டன்ஸ் போலவே என்று பரிதவிக்க வைக்கிறது நாவல். படிப்பறிவில்லாத என்பதை கலையை கலையென பார்க்க தெரியாத என்றே என்னால் பார்க்க முடிகிறது..

ஆனால் அது மட்டுமே இல்லை இந்த நாவல் பல்வேறு நிலக்காட்சிகளை வரலாற்று துன்பியல் நிகழ்வுகளை, சமூக சீரழிவுகளை, சமூக மேம்பாடுகள் போன்று மயக்கம் தரும் பேரழிவுகளை தெளிவாக பதிவு செய்கிறது தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல், சமூக மாற்றங்களையும் பகடியாக பதிவு செய்கிறது. நாவலில்இவனுகளுக்கு பிரிட்டிஷ்காரங்களே தேவலஎன்று நாவலின் கதாபாத்திரம் சொல்வது போல, பஸ்ஸெல்லாம் அரசுடைமையாயிட்டா பஸ்ஸே விட வேண்டாம் ஆனா சம்பளம் வரும் என்று இன்னுமொரு கதாபாத்திரம் சொல்வது எப்படி தமிழக அரசியல் சமூக சூழலை மக்களின் சிந்தனையை மாற்றி இருக்கிறது. இதனை அரசியல் சமூக பரிமாண வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆயிரம் வேலி நிலம் அரசாங்கத்தால் ஊர் மக்கள் அனைவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுது, ஆனால் அவற்றை விலைநிலங்களாக காக்க முடிந்ததா இந்த அரசால் என்ற கேள்வியை பூடமாக எழுப்புகிறது .  நாவல். ஆயிரம் வேலி பசுமை, கட்டாத்தரையாய் மஞ்சள், சிவப்பு, வெள்ளை  பெயின்ட் அடிக்கப்பட்ட கற்கள் பிரிக்கும் வீட்டு மனைகளாக கண் முன்னே சோக காட்சியாய் விரிவதை பதை பதைப்போடே படிக்க முடிகிறது. சுடுகாட்டில் ஏதோ ஒரு இணையோடு கிறங்கி கிடந்தவள், தன்னுடைய நிறுவனத்தின் துணையோடு அதே சுடுகாட்டை விற்பனை செய்கிறாள், விமானத்தில் பறந்து ஜக்குவார் காரில் செகுசாய் பயணிக்கிறாள். சினிமா எடுக்க முயல்கிறாள். நாவலின்  தொடக்க அத்தியாங்களில் மாட்டை காதலிப்பவனாக வரும் முனியும், அவன் சமூகமும் முதல் முதலில் ட்ராக்டர் ஊருக்குள் இறங்கும் போது அதனை எதிர்த்து புரட்சி செய்கின்றனர். ஆனால் பிற்காலத்தில் ஊரில் இருக்கும் கடைசி மாட்டையும் விற்று விட்டு ட்ராக்கர் வாங்கும் முனி அந்த ட்ராக்டர் முகப்பில் மாடு பொறித்த செம்புப்பட்டையை வைக்கிறான். மாட்டுக்கே தீவனம் விளையாத பூமியில், ட்ராக்டரை வைத்துக் கொண்டு என்ன மாராடிக்க முடியும் என்ற கேள்வி சற்று அழுத்தமாகவே எழுகிறது. விலைநிலங்கள் குடியிருப்புகளாக மாறிப் போன அதே நேரம் வருடத்திற்கு லட்சகணக்கில் பொறியாளர்கள் உருவாக்கப்படுவதும், பெருநகரங்களில் தொழில் நிறுவனங்கள் பெருகி உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்தையும் சமூக மேம்பாட்டிற்குள் சேர்க்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது

இந்த காட்சிகள் எல்லாம் எனக்கு சாயாவனத்தை நினைவூட்டின. சாயவனத்தில் அழிக்கப்பட்ட சிறுவனம் சக்கரை ஆலையாக ஆகிறது. சாயாவனம் தந்த உளவியல் அதிர்ச்சியை, மேல் சொன்ன காட்சிகளும் தருகின்றன. கண்ணீரோடு கடக்கும் போது வாசக மனம் மரத்து போய் நிகழ்கால அவலங்களை ஏற்கவும் மறுக்கவும் முடியாமல் தவிக்கிறது. வீட்டுமனைகளை விற்கும் விளம்பரத்திற்காக நிறுவனம் அமைத்த செயற்கை நீருற்றை போல எங்களுக்கும் வேண்டுமென்று போராடும் அப்பாவிகள், தமிழகத்தில் வாழும் மக்களில் தொலைநோக்கின்மையும் அவர்களை எல்லாவிதத்திலும் ஏமாற்றும் அரசியல்வாதிகளையும்  குறிக்கும் குறீயிடுகளே அவர்களுக்கென அமைத்து தரப்பட்ட செயற்கை நீருற்றும் அதன் நடுவில் இருக்கும் இரண்டு கொக்கு சிலைகளும் மூன்றே மாதத்தில் தண்ணீரில்லாமல் காய்ந்து போனவதும் ஒரு குறியீடே. தங்களின் வாழ்வாதாரங்களை எல்லாம் விற்று விட்டு, செய்கை நீருற்றுக்கு தண்ணீர் வேண்டி ஒவ்வொரு குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு போடும் அவல நிலையிலே தமிழகம் இருக்கின்றது. சிறவி தாக்குதல் சில காலம் மட்டுமே பட்டினி போட்டது.இந்த அரசியல், சமூக சீரழிவுகள் இனி வரும் எந்தனை காலங்களுக்கு நம்மை பட்டினியில் கிடத்துமோ தெரியாது.


நாவலில் வாகசர்களின் வாசக கூர்மையை சந்தேகிக்கும் சில இடங்களும், மிக நீண்ட அம்மாஞ்சி அறிவு சார் குறிப்புகள் சிலதும் எரிச்சலை தருகின்றன.சமகால, சக படைப்பாளிகளையும், தன்னையும் பகடி செய்து கொள்ளும் விதம் சில இடங்களில் சலிப்பினை ஊட்டுகின்றன. எதற்காக இந்த குறிப்பு வந்தது என்பதை கண்டறிய பல முறை நாவலை வாசிக்க வேண்டிய இருப்பதும்,மேலும் சில குறிப்புகளின் மொழி மிக சிக்கலாக அமைக்கப்பட்டிருக்கிறதும் நாவலாசிரியரின் மேதமையை பறைசாற்றுகிறதோ என்ற அய்யமும் எழுகிறது. கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற போக்கினை  முதலிருந்து தெளிவாக பதிக்கும் இந்த நாவல் மணிமொழியும் தமிழ்வாணனும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்த வாழ முடிவெடுக்க  மிக நீண்ட விவாதங்களில் ஈடுபடுவதும் , இவர்களுடை  காதல் உரையாடல்கள் எல்லாமே போதனை செய்வது போல அமைந்திருப்பதும்  மிகவும் அலுப்புட்டுவதாக இருக்கின்றது. இவற்றை விடுத்து சிறப்பானதொரு அனுபவத்தை பல்வேறு தகவல்களை, நமது பாலிய வயது அனுபவங்களை நினைவுபடுத்தும் பதிவுகளை இந்த நாவலோடு நாமும் கடந்து போகலாம். நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம்.


Tuesday, December 1, 2015

நீளா


மிக சமீபத்தில் வாசித்ததில் என் கவனத்தை ஈர்த்த கவிதை தொகுப்பாக இருந்தது காலச்சுவடு வெளியீடான "நீளா". 

இந்த தொகுப்பின் ஆசிரியர் பா.வெங்கடேசன். மதுரையில் பிறந்து, ஒசூரில் வாழ்பவர் இவருக்கு ஒசூர் மற்றும் ஒசூரை ஒட்டியுள்ள கர்நாடகத்தின் பல நில காட்சிகள், வரலாற்று காட்சிகள் மீது அவர் கொண்ட ஆழ்காதல், அவற்றை எல்லாம் தன் கவிதைக்குள் கையாள செய்திருக்கிறது. கல்லுகொண்டபள்ளி மலையின் பொட்டத்தம்மன், அங்கே இருக்கும் ஒரு குன்று, கர்நாடக கொல்லூரின் நதி சௌபர்ணிகா, ஒசூரில் இருக்கும் சூடவாடிக் குன்று, ஒசூரில் திருவாளர் ப்ரெட் தன் மனைவிக்காக கருவூலத்தை கொள்ளையடித்து கட்டிய பங்களா, ஒசூரின் மிக அருகிலிருக்கும் ஆனேகலில் முத்துக்களின் பள்ளத்தாக்கு என்று பல இடங்கள், வரலாற்று, புராண சின்னங்கள் இவர் கவிதையின் பாடு பொருளாகின்றன.

பாப்லோ நெரூடா, ஓரான் பாமுக் போன்ற அயல் தேசத்து இலக்கிய ஆளுமைகள் இவர் மனிதில் நெருக்கமான இடம் பிடித்திருக்க வேண்டும். இந்திய மண்ணில் தனது காதலியுடனோட ஒரு அனுபவத்தை "போஸ்ட் மேன்" என்ற பாப்லோ நெரூடாவின் மழை நாள் வாழ்வை சித்தரிக்கும் ஒரு உலகப்படத்துடன் ஒப்பிட்டு எழுதி இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இந்த கவிதையில் மழையை காதல் அல்லது காதலின்மையின் ஏக்கமென்ற குறிப்பாக பார்க்க முடியும். கவிதையின் முன்பாதியையும் ( (மழை வரும் சூழல் இல்லாமல் மழை தூறுகிறது ), பின்பாதியையும் ( மழை பொழிந்து முடித்த தடயங்கள் இருக்கிறது ) இணைக்கும் ஒரு குறியீடு அனுமதி மறுக்கப்பட்ட/மூடிக்கிடக்கும் அரங்கம். அந்த அரக்கின் முன் நினைவுகளால் அலைக்கலிக்கப்பட்டு தத்தளிக்கும் காதல் மனம். இந்த தவிப்பை நிர்பந்தத்தை, கவிதையின் இடைப்பட்ட வரிகளாக வரும் “காதலிக்காக ஒரு கடிதம் எழுத முற்படும் தபால்காரனை / நிலவின் முழு வட்டத்தை மட்டுமே வரையச் சொல்லி / ஐன்னல் வழியே நிர்பந்திக்கும் இத்தாலியா வானம்” மிக அழகான கலவையாக்குகிறது. இந்த நிபந்தனை காதலை, வரண்ட சூழலின் மழையாக, மழை பொழிந்த பின்னும் சகதிகளாக தங்கிவிட்ட நினைவுகளை களைய முடியாது தவிக்கும் மனதை வரைந்து காட்டும் அழகான சித்திரமாக இருக்கிறது அந்த கவிதை.

இதே வர்ணகுழைவில் மற்றுமிரு கவிதைகள் பனி மற்றும் லோலிடா. பேட்ராயசுவாமி கோவில் சிதலமடைந்த தெப்பக்குள படிக்கட்டுகளில் அமர்ந்து தவளைகல்லை எரிந்த வண்ணம் ஒரான் பாமுகின் பனியை கவிதைக்குள் வனைகிறார் கவிஞர். தெப்பகுளம் கார்ஸ் நகரமாகிறது இவர் காதலி இப்பெக் வடிவம் கொள்கிறார். இவர் புதினத்தின் கதாநாயகனாக “கா” ஆகிறார். கார்ஸ் நகரின் பனி பொழிவையை கண்ணுற்றவாறே, பேட்ராயசுவாமியில் கோவில் தெப்பக்குளத்தில் அமர்ந்திருக்கிறார். “உன் கைகளில் புரளும் கார்ஸின் பனிக்கு வெளியே / உதிர்ந்து கொண்டிருக்கும் டென்கனிக் கோட்டையின் பனி / யாரிடமிருந்தும் / எந்த கேள்வியையும் எழுப்புவதில்லை” கார்ஸ் நகரத்து பனி, தென்கனி கோட்டையின் உதிர்கிறது, இவரது காதல் அத்தனை கற்பனைவளம் பொருந்தியது, ஆகவே இவரால் அதனை எந்த கதாபாத்திரத்தோடும் பொருத்தி பார்க்க முடிகிறது. இந்த கற்பனை செரிவே இவர் கவிதைகளை வேறொரு தளத்தில் உயர்த்தி வைக்கிறது என்று நினைக்கிறேன்.  நான் போஸ்ட் மேன் படம் பார்த்ததில்லை, பனி புதினத்தை படித்ததில்லை. இது கவிதை அணுக ஆரம்பகட்ட தடைகளை விதிக்காமல் இல்லை

  இலக்கிய ஆளுமை தன் புலத்து கவிதைக்குள் கொண்டு வந்திருக்கும் அதே தொழிற்நுட்பத்தினை சில புராண பாத்திரங்களோடும் கையாண்டிருக்கிறார் இவர். அகலிகையும், ரோணுகா தேவியும் இவர் கவிதைக்குள் குரலை நேசிக்கும் காதலிகளாக வந்து போகின்றனர். “உன்னை / உன் குரலைக் கொண்டு தனக்காய் / வனைந்து கொண்டிருப்பதாய்” என்று வரும் இவர் கவிதை வரிகள் சமகாலத்து காதலிகளில் பிம்பத்தை நமக்கு புலப்படுத்துகிறது, சமகால இலக்கியத்தில் செல்போன்களில், இணைய அரட்டையில் காதலிகள் இவ்வாறு குரலை காதலிப்பவர்களாகவும் அல்லது மௌன மொழியில் காதல் செய்யும் வல்லமை பெற்றவர்களாகவே இருக்கின்றார். ஜடாயு மோட்சத்தின் நடந்தாக புராணம் சொல்வதற்கும், வரலாறு சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதாக பா.வெங்கடேசனின் தரவு சொல்கிறது. இந்த அய்யம் கவிதை முழுக்க வளைய வருகிறது. தலபுராணம் ஜெபிக்கும் பிராமணர் மேல் நம்பிக்கையிழந்த கவிதை, புறாக்களின் முனுகல்களை மொழிபெயர்த்து புராணத்தில் நிஜமாக நடந்ததை அறிந்து கொள்ள துடிக்கிறது. பின்னும் கிட்டவில்லை அந்த ரகசியம். அதுவே “சேரியுறைப் பெண்ணின் வாயெங்கும் ததியோன்னம்/ உதட்டோரம் கழுகிறைச்சி” என்று கூறும் வரை தொடகிறது குழப்பமாய், மர்மமாக.

“பார்க்கப்படும் நிலவு போலில்லை /  சொல்லப்படும் நிலவு” இது எனக்கு ஒரு பிரபஞ்சத்தையே திறந்து வைக்கிறது. இந்த இருவரிகளுக்கு பின்னால் எண்ணற்ற சிந்தனை வந்து குவிகிறது, பார்ப்பதும் சொல்வதும் எப்போதும் ஒன்றாக இருக்க போவதில்லை. சொல்லும் போது அவரவர் அனுபவம் அவரவர் கற்பனை பார்க்கும் போதிருக்கும் சூழல் சொல்லும் போது இருக்கும் சூழல், இடைப்பட்ட கணங்களில்/நிமிடங்களில்/மணிகளில் நடந்துவிட்ட ஏதோ ஒன்று இதெல்லாம் கலந்ததே வர்ணிக்கப்படும் அந்நிலவு. மேலும் பார்க்கும் போது கிட்டும் அனுபவம் சொல்லும் போதோ சொல்லி கேட்கும் போதோ கிடைப்பதில்லை.  இங்கே நிலவென்பது வெறும் நிலவு மட்டும் குறிப்பதில்லை அது ஒரு குறியீடு பசி, துக்கம், காமம், அன்பு இன்னும் பல்வேறு உணர்வுதளத்திலும் பொருத்தி பார்க்கவல்லது. இருவருமே ஒரு ஒப்பீட்டு விசயத்தையே நினைத்து அந்த அனுபவத்தை பெற முடியும். அதெப்படி அசல் அனுபவமாக முடியும். இவ்விரு வரிகளே கவிதையாக போதுமானதாக எனக்கு தோன்றுகின்றது. அதன் பின்னர் வரும் வரிகள் எதுவும் என் மனதில் ஏறாமல் இவ்விரு வரிகளே கவிதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது

"எதிர்மேடையின் மனிதச் சித்திரங்களை / அழித்துக்கொண்டே நகர்ந்து செல்லும் / இந்த புகையூர்தி", எத்தனை எளிதாக இருக்கிறது இந்த விசயம், நமக்கு எதிரான விசயங்களை ஒரு சித்திரமாக்கி அதை தினமும் அழித்து அழித்து பார்ப்பது, இந்த கவிதை வரிகளில் அழகியலில் சொக்கி போனேன். நமக்கு எதிரான விசயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் நம்மை பற்றி பிறர் பேசிய அவதூராக இருக்கலாம், ஒரு நம்பிக்கை துரோகமாக இருக்கலாம், ஒரு தவறான புரிதலாக இருக்கலாம், ஏதேனும் ஒரு பலவீனமாக இருக்கலாம், நமக்குள்ளேயே உருவாகி வளர்ந்திருக்கும் தாழ்வுணர்ச்சியாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து ஆட்டிவைக்கும் கர்வ குணமாக எதுவானாலும் அதை நமக்கு எதிர் மேடையில் நிறுத்தி ஒரு ரயில் கடக்கும் கால அவகாசத்துக்குள் அழித்து எறிய முடிந்தால் நம் வாழ்வு எவ்வளவு சிறப்பானதாக மாறக்கூடும். இது மாபெரும் வாழ்க்கைத் தத்துவம். இத்தனை பெரிய விளக்கம் இந்த வரிகளின் அழகியலை சிதைத்து விடும் ஆயினும் இந்த தொகுப்பின் முதல் வாசிப்பில் என்னை கவர்ந்த இந்த வரிக்கு என் அளவிலான ஒரு ஆராதனை இது. இதை கடந்து ஒரு வாசகியாக வேறென்ன செய்து விட முடியும்?

பெண்களில் மேல் காட்ட வேண்டிய இறக்கத்தை, தன்னுடைய கழிவிரக்கமாக, ஒரு ஆணாக நின்று பேசி இருக்கும் சில கவிதைகள் இந்த தொகுப்பில் இருக்கின்றன. பெண்கள்கான கழிவிரக்கத்தை அவளை தேவதை என்று சொல்லாதிருந்தகலாம் என்றும் அவள் நகங்களும் குதிகால் வெடிப்புகளும் இல்லாத தேசத்திற்கு செல்ல விரும்புதாக சொல்வதிலிருந்தும், பீத்துணி அவள் இறக்கையாகிறது என்று சொல்வதிலிருந்தும் தன்னுடைய இல்லத்துப் பெண் எவ்வாறு இருக்க வேண்டும், ஆனால் இப்படித்தானே இருக்கின்றனர் என்று தனது உள்ளகிடங்கையே வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்தனியே ஒரு முத்தம் என்ற கவிதையும் இதே ரகத்தில் சேர்க்கலாம்.

சில கவிதை வடிவங்களை முயன்றதில் கவிதையின் ஓட்டம் தடைபடுகிறது என்று எனக்கு தோன்றுகிறது. சில கவிதைகளில் அடைப்புக் குறியிட்டு, சில விசயங்களை சொல்லி இருக்கிறார். அவை கவிதையின் ஓட்டத்திலிருந்து மாறுப்பட்டது, அதை விடுத்து படித்தால் கவிதை சீராக நகர்வது போலவும், சேர்த்து படிக்கும் போது கவிதையின் நகர்விற்கு அது  தடையாகவோ அல்லது சிறு குழப்பத்தை விளைப்பதாகவோ, கவிதையை வாசிக்கும் மனக்குரலை சற்று அயற்ச்சியடையவோ செய்கிறது. அதே போல் தொகுப்பு முழுதும் விரவி இருக்கும் நீண்ட கவிதைகளும் எல்லா வாசகர்களை ஈர்க்கவோ தன்னோடு கட்டி போடும் முயற்சியையோ செய்யுமா என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. நீள்கவிதைக்கு பழகி விட்ட வாசகர்கள் தொகுப்பில் வரும் மிக சொற்பமான சிறு கவிதைகளை பா.வெங்கடேசன் கவிதைகளாக என்ற சந்தேகம் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

இசக்கி பற்றிய கவிதை, சௌபர்னிகா, ப்ரேட் கவிதைகள் இவரது மொழியில் வரும் வரிகளின் சில வார்த்தைகளை மாற்றி போட்டால் அது ஒரு பெண் கவிஞர் எழுதிய கவிதை போலும் என்று எண்ண முடியாதபடி அப்பட்ட ஆண்மொழியாக இருக்கிறது இவரது மொழி. இயக்கி தன் முலைகளை தானே நக்கிக் கொள்கிறாள். அவள் அவளின் ஆணை முழுதாக விழுங்கும் ஆக்ரோசம் கொண்டவள். சௌபர்னிகா சுரோனியத்தை சிவனின் நெற்றியில் சூட்டுகிறாள். திருவாளர் ப்ரட்டில் காதலை காமத்தை ஒரு சேரி பெண் சித்தாளாக வேலை செய்பவளின் குடிசை எள்ளி நகையாடுகிறது. புராண, இதிகாக, இலக்கிய ஆளுமைகளில் தாக்கலோடு வந்திருக்கும் கவிதைகளும் அதே மொழியில் தான் படைப்பேறி இருக்கின்றன. இதனை ஒரு அடையாளப்படுத்தும் விசயமாக சொல்லவில்லை. இதுவே பா.வெங்கடேசனின் கவிதை மொழியாக இயக்குகிறது.

மிக சிறப்பான பல கவிதைகள் இந்த தொகுப்பில், தொகுப்பின் தலைப்புடைய "நீளா" என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்த கவிதையாகும். இந்த நீளா நிழலுருவம் கொண்டவள், அரூபமானவள். பகலில் மட்டும் வாழ்பவள். ஆனாலும் அவளுக்கும் இரு முலைகளும், ஒரு யோனியும் தேவைபடுகிறது. அன்றேல் அவளை பெண்ணாக ஏற்பது யார்? பெண் என்ற அடையாளங்களை துறக்க துணிந்த பெண்கள் ஏராளம். ஆயினும் அவர்கள் எவராலும் துறக்கவியலாத அடையாளங்கள் சில உண்டு. இந்த கவிதை என் அகங்காரத்தை ஆட்டிப் பார்க்கிறது. அரூபமான நீளா மேல் எனக்கிருக்கும் கழிவிரக்கம் யார் மேலானது என்ற கேள்விக்கு/அய்யத்துக்கு, என்னிடம் விடையில்லை சமகாலத்தில் வாழும் களவொழுக்க காதலிகள் யாவரும் "நீளா"க்களே. இந்த கவிதையிலிருந்து வெளிவருவது எனக்கு மிக சிரமமான காரணமாகவும், இந்த தொகுப்பிறகு ஒரு விமர்சனம் எழுதுவதற்கும் அதுவே காரணமானதும்  மறுக்கவியலாத உண்மை.

இந்த விமர்சனம் கொலுசு நவம்பர் இதழில் வெளிவந்திருக்கிறது.
 
 http://kolusu.in/kolusu/kolusu_nov_15/index.html#p=52