Showing posts with label உறவுகள் தொடர்கதை. Show all posts
Showing posts with label உறவுகள் தொடர்கதை. Show all posts

Friday, September 24, 2010

மல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாராக‌)
















எங்க‌ வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகைக‌ள் ச‌ற்றே பெரிய‌ குண்டு ம‌ல்லிகைக‌ள். பார்க்க‌ வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல‌ இருக்கும். என‌க்கு சிறு வ‌ய‌திலிருந்தே ம‌ல்லிகைப் பூ மேலே தீராத‌ காத‌ல். திருவ‌ர‌ங்க‌த்தில் இருந்த‌ நாட்க‌ளில் மென‌க்கெட்டு பூ மார்கெட் போய் ம‌ல்லிகைப் பூவை உதிரியாக‌ வாங்கி நெருக்க‌மாக‌ தொடுத்து, த‌லை நிறைய‌ வைத்துக் கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

என‌க்கு ம‌ல்லிகைப் பூ நிற‌ம்ப‌ பிடிக்கும் என்ற கார‌ண‌த்தால் ம‌ல்லிகை ப‌திய‌னிட்டு மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் வ‌ள‌ர்க்க‌‍ப்ப‌டுகின்ற‌ன‌ என் வீட்டில். தினம் காலையில் கிள‌ம்பும் போது தோட்ட‌த்தை வாஞ்சையோடு பார்ப்ப‌தை த‌விர‌ நான் வேறு எதுவும் செய்வ‌தில்லை அந்த‌ ம‌ல்லிகைச் செடிக‌ளுக்காக‌. தோட்ட‌த்தில் ம‌ல்லிகை ம‌ட்டும் அல்லாது நிறைய‌ ரோஜா செடிக‌ளும் ஒரு வேப்ப‌ ம‌ர‌மும், ஒரு சில‌ வாழை ம‌ர‌ங்க‌ளும், ஒரு ந‌ந்தியாவ‌ட்டை செடியும் இருக்கின்ற‌து. இருந்தாலும் ம‌ல்லிகையின் ப‌சுமையும் அடுத்த‌ப‌டியாக‌ வாழையுமே என்னை எப்போதும் க‌வ‌ரும்.

மார்ச் முடிந்து ஏப்ர‌ல் மாத‌ம் ஆர‌ம்பிக்கும் த‌ருண‌ம் என‌க்கு மிக‌ பிடித்த‌ கால‌ம். எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ளலும் ஒரு சில‌ ம‌ல்லிகை மொக்குக‌ளை த‌ர‌ ஆர‌ம்பிக்கும். முத‌லில் ஒன்று இர‌ண்டாக‌ ஆர‌ம்பித்து, மே மாத‌த்தில் த‌லை நிறைய‌ வைத்துக் கொள்ளும் அள‌வு பூக்கும். அதை சாயுங்கால‌ம் ப‌றித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வ‌து என் தின‌ப்ப‌டி செய‌ல்.(இங்கே ம‌க‌ளிர் த‌லையில் பூக்க‌ளை பெரும்பாலும் அணிவ‌தில்லை)

"ஏங்க‌ ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க‌ போச்சு?"

"இரு வ‌ரேன்"

வ‌ந்து விள‌க்கை போட்டார். அத‌ற்குள் என‌க்கு பூக்குத்தி கிடைத்து விட்ட‌து.

"பாரு ஒரு ஏர்பின் தேட‌ கூட‌ நான் தான் வ‌ர‌ வேண்டி இருக்கு"

"என்ன‌வோ ஒரு ஏரோபிளேனேயே தேடி த‌ந்த‌ மாதிரி சொல்லீங்க‌ ம்ம்ம்"

"ச‌ரி வெட்டியா பேச்சு தான் டிப‌ன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் ப‌ண்ண‌ முடியும்"

"அதுக்கு தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே வெட்டியா அப்ப‌ற‌ம் இன்னோரு ஆளை வேற‌ அப்பாயிண்ட் ப‌ண்ண‌னுமா?"

கிள‌ம்பி சீருந்தில் கொஞ்ச‌ தூர‌ம் சென்ற‌ இருப்போம். நான் எங்கே என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌த்தை பிடிப்பேனோ அதே இட‌த்தில் த‌ன் அலுவ‌ல‌க‌த்து வாக‌ன‌தை பிடிக்க‌ வேண்டி செல்லும் எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிப்ப‌வ‌ரை தின‌ம் ஏற்றி செல்வ‌து போல் இன்னும் ஏற்றி சென்றோம்.

"குட் மார்னிங் ஜி"

"குட் மார்னிங் கத‌வு சரியாக‌ மூட‌வில்லை மூடி விடுங்க‌ள்"

"எங்க‌ வீட்டு பைய‌ன் க‌ல்யாண‌ ரிசப்ச‌னில் உங்க‌ போட்டோ அழ‌கா வ‌ந்திருக்கு"

"ஓ அப்ப‌டியா?"

"ஆம் அப்ப‌ மேட‌ம் இங்கே இல்லையா என்ன‌?"

"ஆமா அவ‌ங்க‌ அப்ப‌ வெளிநாடு போயிருந்தாங்க‌."

"ஓ அப்ப‌டியா எங்கே..."

அவ‌ர்க‌ள் உரையாட‌ல் நீண்ட‌து. நான் கிடைத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தினேன்.

ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர் இற‌ங்கிய‌தும்

"பாரு அவ‌ர் சொல்றாரு நான் போட்டோல‌ அழ‌கா இருக்கேனாம்"

"சும்மா தின‌ம் வ‌ண்டில‌ வ‌ரோமே ஏதாவ‌து புக‌ழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்க‌ற‌து தானே வ‌ரும் போட்டோல‌"

"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழ‌கு அதான் அவ‌ரும் சொல்றாரு"

"அவ‌ருக்கு என்ன‌ அவ‌ரா உங்க‌ளை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி இருக்காரு அந்த‌ கொடுமைய‌ நான் இல்லை ப‌ண்ணி இருக்கேன்"

"ப‌க்க‌த்துல‌ இருக்க‌ பொருள் எப்போதுமே தெரியாது."

"அதுக்கு பேரு தூர‌ப் பார்வை என் பார்வை ச‌ரியா இருக்குன்னு டாக்ட‌ரே ச‌ர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க‌ தான் இந்த‌ ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்க‌ல் செக்க‌ப் கூட்டிட்டு போனீங்க‌"

அத‌ற்கும் என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌ம் வ‌ந்து விட்ட‌து.

*******















சில‌ நாட்க‌ளுக்கு முன் ஒருவார‌ இறுதியில் வெளியே கிள‌ம்ப‌ த‌யாரா இருந்தோம்...

"இன்னிக்கி வெளில‌ சாப்பிட்டு அப்ப‌டியே சூப்ப‌ர் மார்க்கெட் போய் உங்க‌ ஆபிஸ்ல‌ கொடுத்த‌ சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து ம‌ளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வ‌ர‌லாம்"

"சாப்பிட‌ போக‌லாம் ஆனா சூப்ப‌ர் மார்கெட் எல்லாம் வ‌ர‌ முடியாது"

"அதுக்காக‌ த‌னியாவா போக‌ முடியும் அப்ப‌டியே போயிட்டு வ‌ந்திருலாம்"

"நான் வ‌ர‌லை. சாப்பிட‌ ம‌ட்டும்ன்னா வேணும்ன்னா வ‌ரேன்"

"எங்கேயும் போக‌ வேண்டாம் என‌க்கு உன் கூட‌ சாப்பிட‌ போக‌ பிடிக்க‌லை"

இத‌ற்கு மேல் அங்கே அம‌ர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாத‌ம் தான் வ‌ள‌ரும் என்று கோப‌த்தோடு வெளியே வ‌ந்தேன். தோட்ட‌த்தில் இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ முத‌ல் ம‌ல்லிகை ம‌ல‌ர்ந்திருந்த‌து. ப‌றித்துக் கொண்டு உள்ளே வ‌ந்தேன். ம‌ண‌ம் அதில் ம‌ன‌ம் லயிக்க‌...

"ஹ‌லோ சொல்லுங்க‌ மோக‌ன்"

"இன்னிக்கா... கொஞ்ச‌ம் டைய‌ர்டா இருக்கு"

"எங்க‌ போக‌ணும்"

"ச‌ரி இருங்க‌ கேட்டு சொல்றேன்"

"மோக‌ன்ட‌ இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போக‌ணுமாம் அவ‌ருக்கு. அப்ப‌டியே சாப்பிட்டு வ‌ந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிள‌ம்பி தானே இருக்க‌. போயிட்டு வ‌ந்திருலாம்"

தோட்ட‌த்து முத‌ல் ம‌ல்லிகை என்னை பார்த்து புன்ன‌கைத்த‌து.

அமில‌ம் தோய்தெரிந்த‌‌ நினைவுக‌ள்



ப‌க‌ல்கொள்ளைகார‌னிட‌ம்
காட் பிர‌மிஸ் கேட்கும்
சிறுமியின் அறியாமையோடு
தானிருந்த‌து என்
சகோத‌ர‌த்துவ‌ம் உன்னுட‌ன்

மெல்ல அதிர்ந்தேன்
முன்பொருமுறை
மேலும் அதிர்ந்தேன்
ப‌ல‌முறை சில‌முறை

இன்று தான் புரிகின்ற‌து
நான் என்றுமே அதிர‌வில்லை
இது தெரியும் வ‌ரை
போக‌ட்டும்

உண்மையும் பிரிய‌மும்
எங்கானும் ஒரு ஓர‌த்தில்
ஒளிந்திருக்கிற‌தா
தேடிப்பார்கிறேன்

பையெங்கும்
அமில‌ம் தோய்த்த‌த்
தெரிந்த‌ அம்பென‌
கையெங்கும் மிஞ்சிய‌து
நினைவுக‌ள்

Saturday, October 24, 2009

த‌ம்பி யாத்ராவிற்கு



யாத்ராவை சமீப காலமாக தான் தெரியும். தூறல்கவிதைகள் முத்துவேல் கவிதை எனக்கு அனுஜன்யாவின் வலை மூலமும், அங்கிருந்து யாத்ராவின் கவிதையும் அறிமுகமானது. சென்ற முறை சென்னை வந்திருந்த போது நீண்ட நேரம் யாத்ரா, முத்துவேல், வாசுதேவன், லஷ்மண் மற்றும் சந்திரசேகருடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. பின்னர் யாத்ராவுடன் அடிக்கடி அரட்டையிலும் தொலைப்பேசியிலும் பேச முடிந்தது. இவர் மென்மையான குணம் மிக கவர்ந்த விசயம். இவரை என் தம்பியாக பெற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி. இவர் சமீபமாக எழுதிய தரை மற்றும் எறும்பின் பயணம் என்ற கவிதைகளை படித்தேன். மிகவும் நெகிழ்வாக உணர்ந்தேன். வேலை மற்றும் சிறு மனகசப்போடு இருந்த என்னை மீட்டது இந்த கவிதைகள். வெற்று வார்த்தைகளால் விளக்க இயலாத உணர்வுகளை பெற்றிருந்த தினம் அந்த கவிதைகளை வாசித்த தினம். அந்த கவிதைகள் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவை. விக்கித்த வார்த்தைகளால் சிறு பின்னூட்டமிட்டு வேலைப்பளுவின் காரணத்தால் வார இறுதி வரை நேரம் கேட்டிருந்தேன்.


தரை
====
கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்த இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.


இந்த கவிதையின் பாடுபொருள் சாதாரணமாக எல்லோராலும் நோக்கப்பட்டிருக்கும் ஒரு விசயம். இந்த படிமத்தை இவ்வளவு அழகான உணர்வாக்கிய யாத்ராவின் விரல்களுக்கு மோதிரம் தான் போட வேண்டும். இங்கே தரையின் ஈரம் என்பது ஒரு உணர்வு. இந்த கவிதையின் உணர்வை எந்த உறவோடும் ஒப்பிட்டு பார்க்க இயலும். ஒவ்வொரு உறவின் உணர்வின் தொடக்கமும் முழு தரை நிறைந்த ஈரமாகவும் தளும்பியபடியும், பின் சற்றே உலர ஆரம்பித்து அந்த உணர்வுகளுக்கு அர்த்தமாக்கும் சில வடிவங்களும், அந்த வடிவங்கள் சில சமயம் அழகானதாகவும் சில சமயம் புரிந்து கொள்ள முடியாதவையாகவும், சில சமயம் அகோரமாகவும் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து முடிந்ததும் அந்த மாய வடிவங்கள் மனதிரையில் ஓடிய படியே இருக்கும். மீண்டும் ஈரம் கோர்க்கும் ஈர காயும். இந்த ஈர உணர்வை சந்தோசம், சோகம், வருத்தம், சண்டை என்று எந்த உணர்வோடும் கட்டிப்பார்க்க முடியும். காதல், நட்பு, நேசம் ஒருவரிடத்தோ, ஓரிடம் காரணம் அறிந்தோ அறியாமலோ தவிர்க்க முடியாமல் முடிந்து போய் மற்றோரிடம் தொடர்வதோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த கவிதை இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டியது. நெகிழ்வோடு வாழ்த்துகிறேன் யாத்ரா வாழ்க பல்லாண்டு.


எறுப்பின் பயணம்
================
சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி
நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு
சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊறியபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்
ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க
ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்
ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்
என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்


எறுப்பின் பயணம் இந்த நிகழ்வும் அனைவராலும் பார்க்கப்படும் நிகழ்வு தான். எதை கண்டாலும் கவிதை கொட்டுகின்றது என் தம்பிக்கு. பாராட்ட வார்த்தைகளை தேடி திசை தெரியாத எறும்பைப் போல தவிக்கின்றேன் நானும். சிறு நிதானிப்பு, சிறு வளைவு சக எறும்புகள் செல்லும் திசையில் செல்லுதல், போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி போதல் ம்ம்ம்ம்ம் நம் தினசரி வாழ்வின் பயணத்திற்க்கும் எறும்பின் பயணத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. "யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்" எறும்பாய் உணர்ந்தாலும் தன் மென்மையான குணத்தை உணர்த்தி இருக்கின்றார். "பருகுவதற்கு யாருமற்று யுகயுகமாய் தனித்திருக்கும்" இந்த தனிமை கொஞ்சம் வெறுமை எல்லோரிடத்தும் ஒரு சமயம் உணரப்பட்டதாகவே இருக்கும். மேலும் பல கவிதை எழுதுவாயாக யாத்ரா.

Wednesday, June 24, 2009

அம்மாவுக்கு

"நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா"

அட கொடுமையே இந்த பாட்டையுமா ரிமிக்ஸ் பண்ணீட்டாங்க. நல்லவேளை சிவாஜி, பத்மினி இரண்டு பேருமே போய் சேர்ந்துட்டாங்க. இல்லாட்டி இந்த பாட்டை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று தோன்றியது. அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு நாதஸ்வரம் என்றால் ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் கேட்கும் எல்லா நாதஸ்வர இசையும் ஒன்று போலத் தான் தெரியும் எனக்கு ஆனால் அம்மா அது என்ன பாடல் அது என்ன ராகம் எல்லாம் சொல்வார்கள். நகுமோமோ அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். அம்மா ரொம்ப சார்ப். எந்த விசயம் என்றாலும் உடனடியாக கற்று கொள்வார்கள் அம்மாவிற்கு தெரியாத விசயமே கிடையாதோ என்று தோன்றும்.

தொலைபேசியில் அழைத்தேன். அம்மா ஹலோ சொல்லும் விதமே அழகாய் இருக்கும்.

"ஹலோஓஒ"

"ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க"

"நான் நல்லா இருக்கேன்ம்மா நீ எப்படி இருக்கே"

"நல்லா இருக்கேன்ம்மா சும்மா பேசலாம்ன்னு போன் பண்ணேன். உடம்பெல்லாம் நல்லா இருக்கா கால் வலி இருக்கா?"

"ம்ம் உடம்பெல்லாம் நல்லா இருக்கும்மா கால் வலி பரவாயில்லை அடுத்த வாரம் டாக்டரிடம் போகனும்"

"காலையில் என்ன சாப்பிட்டீங்க?"

"தட்டபயிரு துவையல் அரைச்சி சோறு பொங்கினேன் நீ என்ன செய்தே"

"நேத்து ரசம் இருந்துச்சி, அதோட வெண்டைக்காய் வறுத்து, கொடமுளக காயும் செய்து சாப்பாடு வைச்சி இருக்கேன்"

"கொடமுகளாவா நான் இதுவரை செய்தது இல்லை எப்படி செய்யறது?"

"ரொம்ப ஈசி தான்ம்மா பச்சைமிளகாய்,வெங்காயம்,தக்காளி எல்லாம் லைட்டா வதக்கிட்டு, கொடமிளகாயையும் வதக்கிட்டு உப்பு,சாப்பார் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு வேக வைக்கணும் அவ்வளவு தான் 10 நிமிசத்துல செய்துடலாம்"

"சாப்பாட்டோட கலந்து சாப்பிடலாமா?"

"ம்ம் சாப்பாட்டோடயும் சாப்பிடலாம், சப்பாத்தியோடும் சாப்பிடலாம்"

"சரி செய்து பார்க்கறேன். வேறென்ன விசயம் சொல்லும்மா"

"வேறொன்னுமில்லம்மா உடம்பை பார்த்துக்கோங்க எதாவது விசயம்ன்னா போன் பண்ணுங்க"

"சரிம்மா வைக்கிறேன்."

எனக்கு பழைய நாட்கள் ஞாபகம் வந்தது. தினம் திட்டு விழும். காலையில இவ்வளவு நேரம் தூங்கற, ஒருவேலையும் உருப்படியா பண்ண தெரியலை. ஒருநாளாவது வந்து சமையல் செய்ய துப்பில்லை. எங்கே போய் என் பேரை கெடுக்க இருக்கியோ. என்ன வளர்ப்பு வளர்த்திருக்கான்னு என்னைதான்டி சொல்லுவாங்க.... இப்படி தினம் ஒரு முறையாவது அர்ச்சனை கிடைக்காத நாளே இருக்காது. இன்று சமையலில் டிப்ஸ் அவர்களுக்கே தருவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது. இன்று இருக்குமிடத்தில் எவ்வளவு மரியாதை எனக்கு. ஏகப்பட்ட நல்லபேர். அம்மா எல்லாம் நீங்கள் கற்று தந்தது தான் அம்மா. உங்கள் நல்ல குணத்தில் 10% தான் என்னிடம் உண்டு அதற்கே இவ்வளவு நல்ல பெயர் எனக்கு.

I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.

Sunday, June 7, 2009

யாதுமான‌வ‌னுக்கு

ரோஜாப் பூக்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் சோலையில் அல‌ர்ந்த‌ தென்ற‌ல் விழி த‌ட‌வ‌ விழித்தெழுந்தேன் ஒரு புது காலை பொழுதினில். பொன் வ‌ண்ண‌ம் பூசிய‌ க‌திர‌வ‌ன் சிரித்த‌ப்ப‌டி என்னை பார்த்திருந்த‌து என் வாழ்வின் புது வ‌ர‌வை என‌க்கு அறிவித்த‌ப‌டி. இட‌துக‌ண், இட‌து புஜ‌ம், இட‌து தொடை துடித்து எனக்கான எல்லா சிற‌ந்த‌ ச‌குன‌ங்க‌ளையும் உண‌ர்த்தி சென்ற‌து நீ என்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம். தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.

க‌ண்ட‌தும் தோன்ற‌வில்லை நீ என‌க்கென‌ இருக்க‌ பிற‌ந்த‌வ‌ன் என்று. இத‌மான‌ புன்ன‌கை எனை ஈர்த்திருந்த‌து ஆயினும் ம‌ற்ற‌வ‌ரில் ஒருவ‌னாய் தான் தெரிந்தாய் நீ என‌க்கு. விடிய‌லில் தொட‌ங்கி உன்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம் வ‌ரை உண‌ர‌வில்லை வாழ்வின் உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ளை உன்னோடு க‌ழிப்பேன் என்று.

ஒன்றாக‌ உண்ட‌ பொழுதுக‌ள், கூடி பய‌ண‌த்த த‌ருண‌ங்க‌ள், நீ என்னை தூர‌த்திருந்து ர‌சித்திருந்த‌ ச‌மய‌ங்க‌ள் அத்த‌னையும் அழ‌கான‌ நிக‌ழ்வுக‌ள். ஒரு முறை என்னை சீண்டிய‌ சில‌ரை உன் கோப‌ க‌ணையால் சுட்டெரித்தாயே மென்மையான‌ உன‌க்குள்ளா இத்த‌னை கோப‌ம்? என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌. ஞயாப‌க‌ம் இருக்கின்றதா நாம் சென்று வ‌ந்த‌ கோவிலில் என‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கொத்து மரிக்கொழுந்து உன்னை போல‌ அழ‌கானதாக‌வும் வ‌ச‌னையோடுமிருந்த‌து. நீ அளித்த‌ நெற்றி குங்கும‌ம் இன்றும் நின்று சிரிக்கின்ற‌து.

என்ன‌ பார்க்கின்றாய் என்றால் உன்னை தான், உன் ஒவ்வொரு அசைவையும் ம‌ற்ற‌வ‌ரிட‌த்து நீ செலுத்தும் அக்க‌ரையும், உன் அணுகு முறையையும், தாயென‌ நீ பொழியும் அன்பையும் அணுஅணுவாக‌ ர‌சிக்கின்றேன் என்பாய். உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய் அப்புற‌ம் என்ன‌டா உற‌ங்கும் போது பார்க்க‌ என்றால் அது உன‌க்கு தெரியாத‌டி எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌ உண‌ர்வென்று, வார்த்தைக‌ளால் விள‌க்க‌ முடியாதென்பாய். ஆனால் ஒரு நாளும் நான் உற‌ங்குவ‌தை பார்த்த‌தில்லை என்ப‌து தானே உன் புல‌ம்ப‌ல் இன்று வ‌ரை. என‌க்கு உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ற‌தும் நீ ப‌த‌றிய‌தும் அளித்த‌ அர‌வ‌ணைப்பில் நான் க‌ண்டேன் இன்னுமொரு தாயாய் நீ என‌க்கு.

உன்னை க‌ட்டிக் கொள்ள‌வா ஒரு க‌ண‌ம் என்ற‌ போது உன்னை விட‌ இறுக்க‌ க‌‌ட்டிக் கொண்ட‌து நான‌ல்ல‌வா? நெற்றியோட‌ நீ இட்ட‌ முத்த‌த்தில் ஆர‌ம்பித்து இன்று வ‌ரை நீ த‌ந்த‌ முத்த‌ங்க‌ள் எண்ணிக்கையில் அட‌ங்க‌வில்லை. உன‌க்கு என்னை பிடிக்குமா என்றால் ம்ம்ம்ம் என்ற‌ப‌டி இத‌ழ் நிறைய‌ முத்த‌ம் த‌ருவாய். இறுக‌ அணைத்திடுவாய். என் எழுத்தை நீ எழுதிய‌து போல‌ ஏந்தி கொள்வாய். இணுக்க‌ம் இணுக்கமாய் விம‌ர்சிப்பாய். தாங்கி கொள்வாய் எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.

Friday, January 24, 2003

எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள்



இன்றிலிருந்து "மின்ன‌ல் ப‌க்க‌ம்" "உயிரோடை" ஆக உருமாறுகின்ற‌து. மின்ன‌ல் என்ற‌ பெய‌ர் எனக்குப் பிடிக்கும் என்றாலும், பொதுப்புத்தி சார்ந்த பலருக்கும் அது முதலில் கேலிக்குரிய ஒரு சொல்லாக கையாளத் தோன்றியது. இதை நீண்ட‌ நாட்க‌ளாக‌வே என்னை அறிந்தோர் தெரிந்தோர் அனைவ‌ரும் கூறிக்கொண்டிருந்தார்க‌ள். அதுவும் சில இடங்களில் சென்றதும் "வாம்மா மின்ன‌ல்" என்ற‌ வ‌ச‌ன‌ம் கூற‌ப்பெற்ற‌து. அது என‌க்கு க‌வ‌லைய‌ளிக்க‌வில்லை என்றாலும் இல‌க்கிய‌த்துவ‌மும் ஒரு அழ‌கிய‌லும் இல்லாத‌ பெய‌ர் போன்றிருப்பதாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ முடிவு. இன்றிலிருந்து மின்ன‌ல் ப‌க்க‌ம் உயிரோடையாக‌ வ‌ல‌ம் வ‌ரும். என்னை தொட‌ரும் அன்ப‌ர்க‌ளுக்கு உயிரோடை என்ற‌ சுட்டி தானாக‌வே இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

••••••

இந்த முறை சென்னை வந்த போது திருவ‌ர‌ங்க‌மும் சென்றிருந்தேன். எப்போதும் இரு முறை சேவிக்கும் வ‌ழ‌க்க‌ம் என‌க்கு. மேலும் 50 ரூபாய்க்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தி தேவ‌ஸ்தான‌த்தில் தெரிந்த‌ ஒருவ‌ர் பெய‌ர் சொல்லிவிட்டு ர‌ங்க‌னை 5 நிமிட‌த்தில் சேவிக்கும் பாக்கிய‌ம் என‌க்கு அவ‌ன் த‌ந்திருக்கும் வ‌ர‌ம். ஆயினும் இந்த‌ முறை இர‌ண்டாம் நாள் மூல‌ஸ்தான‌ம் ர‌ங்க‌னை 5 நிமிட‌த்திலும், தாயாரை 10 நிமிட‌த்திலும், வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப்ப‌த்தில் உல்லாச‌மாக‌ வீற்றிருந்த‌ உற்ச‌வ‌ ர‌ங்க‌னை நீண்ட‌ வ‌ரிசைக‌ளுக்கும் இடிபாடுக‌ளுக்கும் பின் சேவித்தேன். கோவில் நிர்வாகிக‌ள் வ‌ச‌ந்த‌ உற்ச‌வ‌த்தின் போது வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப‌ வ‌ரிசைக‌ளை வ‌கைப‌டுத்தி க‌ட்டுப்ப‌டுத்தினால் என்னை போன்றோர் அதிக‌ம் பாடுப‌டாம‌ல் நிம்ம‌தியாக‌ சேவிக்க‌லாம். இல்லையென்றால் சேவிக்கும் புண்ணிய‌ம் அங்கே விய‌ர்த்துக் கொட்டும் எரிச்ச‌லிலேயே ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும். ந‌ல்ல அனுப‌வ‌ம். அதிலும் இந்த முறை என்னுடைய ரங்கனை கண்டு கொண்ட பரவசத்தில் எதுவுமே குறையாகத் தோன்றவில்லை.

••••••

கடந்த ஞாயிறு (31.05.2009) சென்னையிலிருந்து நான் செல்ல‌ வேண்டிய‌ விமான‌ம் அரைம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ கிள‌ம்பி டெல்லியை அடைந்தும் த‌ரையிர‌ங்க‌ அரை ம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ ந‌ள்ளிர‌வு தாண்டி டெல்லியை அடைந்திருந்தேன். விமான‌த்திலிருந்து இற‌ங்கும் போதே புய‌ல் முன்னும் பின்னும் நெட்டி த‌ள்ளி தீர்த்த‌து. விமான‌ நிலைய‌ம் விட்டு வெளியே வ‌ந்து சீருந்தை அடையும் முன்னேயே பேய் ம‌ழை கொட்ட‌ ஆர‌ம்பித்த‌து. இர‌ண்டு நாட்க‌ளாக‌ டெல்லியில் புய‌லும் ம‌ழையும் பெய்து க‌டுமையான‌ வெப்ப‌ம் த‌ணிந்து ர‌ம்மிய‌மான‌ சூழ‌லாக‌ இருந்தது சந்தோஷமாக இருந்தது.

••••••


க‌ட‌ந்த‌ வார‌ம் சென்னை சென்று வ‌ந்த‌தில் மிக‌ புதிய‌ அனுப‌வ‌ங்க‌ள். உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ள். என் மான‌சீக‌ குரு ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ச‌ந்தித்தோம். க‌ட்ட‌ற்ற‌ காட்டாறு போன்றிருந்த‌து அவ‌ர் பேச்சை. எந்த‌ எடுத்து த‌ந்தாலும் அதில் இருந்து பேசினார். சுந்த‌ர‌ராம‌சாமி முத‌ல் சுஜாதா வ‌ரை. உட‌ன் இருந்த‌ 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா மூவ‌ரும் அவ‌ருட‌ன் நிறைய‌ நேரம் பேசினார்க‌ள். நான் படிப்ப‌தும் எழுதுவ‌தும் மிக‌ குறைவென்ப‌தால் அதிக‌ம் பேச‌வில்லை. நிறைய‌ உரையாட‌ல்,ஒரு கப் காபி, ஒரு வேளை மதிய உண‌வென்று அவருடனான மிக‌ நீண்ட‌ ப‌கிர்த‌லுக்கு பின் ம‌ன‌ம் நிறைந்திருந்த‌து. பின் க‌ட‌ற்க‌ரையில் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா, 'நெய்த‌ல்' ச‌ந்திர‌சேக‌ர் ம‌ற்றும் 'சுய‌ம்' இராவ‌ண‌ன் இவ‌ர்க‌ளோடு மனுஷ்யபுத்திரனின் 'நீராலானது' தொகுப்பை முழுவதுமாக வாசித்து கருத்துப் பகிர்ந்தோம். பிறகு க‌விதை திரைப்பாட‌ல்க‌ள் என்று இல‌க்க‌ற்ற‌ எண்ண‌ற்ற‌ பேச்சு... பேச்சு... மேலும் பேச்சு மட்டுமின்றி எழுத்தில் சொல்லிவிட தீராத‌ உன்ன‌த‌ங்க‌ள்.

••••••

இங்கே எழுத‌ப‌ட்டிருப்ப‌வை ஒரு ப‌ய‌ண‌க் க‌ட்டுரையோ, க‌ட்டுரையோ, குறிப்புக‌ளோ அல்ல‌து வேறு சிலவோ கிடையாது. என் ம‌ன‌தில் நான் பூசிக் கொண்ட‌ எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள். எண்ண‌ங்க‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும் உயிரோடையில் தொட‌ரும். தொட‌ர்ந்து வாசியுங்க‌ள்.

••••••

எனக்குப் பிடித்த கவிதையொன்று :

மனமொளிர் தருணங்கள்
தளர்ந்து இறுகும்
சிறகுகள் அசைத்து
கால் புதைய காற்றில்
நடக்கிறது ஒரு பறவை
என்னை நானே
அருந்தி இரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்த
பறவைச் சிறகின் கதகதப்பை
கைப்பற்றி
கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது
பறவை
உதிர்ந்த சிறகு குறித்த
கவலையேதுமற்று.
- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்