Thursday, January 23, 2014

Coffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்


நான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அம்மாயி தான் காப்பி குடிக்கும் போது நான் ஏங்கி பார்க்கிறேன் என்று ஒரு வாய் குடிக்க கொடுத்து பழக்கிவிட்டதாக அம்மா சொல்வார்கள். அம்மா தடுத்தாலும் பிள்ளை ஏக்கமா பாக்கறா குடுத்த சப்பு கொட்டி குடிக்கிறா ஏன் தடுக்கிறே என்று அடக்கி விடுவார்களாம். அப்படி என்னை தேவியாக்கும் காப்பி பாணம் எனக்கு தொட்டில் பழக்கம். அதற்காக எல்லா காப்பியையும் குடித்து விட மாட்டேன், நல்ல A ரக பிபேரி காப்பி கொட்டைகளை 50% விதமும் B ரக காப்பி கொட்டைகளை 50% சரிபட வறுத்து, 100 கிராமுக்கு 10 கிராம் சிக்கரி கலந்து அரைத்து வைத்த திருச்சி புகழ் பத்மா காபியை அல்லது கிராமத்தில் காப்பி ராமு அண்ணா கொண்டு வந்து தரும் ரமா காபி இவை மட்டுமே பிரியமானது. அதுவும் காப்பிக்கு பாலில் , தண்ணீர் அளவு அதை காய்ச்சும் முறையும் மிக முக்கியம், டிக்காசன் அதிகமா சக்கரை குறைவாக சேர்த்து ஒரு சிப் அருந்தும் போது நாவில் பரவுமே ஒரு சுவை, ஆஹா காப்பி மனிதரை தேவராக்கும் பாணம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.

திருமணமாகி ப்ரிதாபாத் போய் சேர்ந்த புதிதில் காப்பித் தூள் சரியாக கிடைக்காத காரணத்தாலும் மேலும் அங்கே கிடைக்கும் பாலில் கலந்த காப்பி சுவை நாவிற்கு ஒவ்வாத காரணத்தாலும் தேனீரில் இஞ்சி எலக்காய் இன்னபிற விசயங்களை சேர்த்து ஒருவாறு நாவினை ஒப்பேத்தி கொண்டிருந்தேன். கிட்டதட்ட ஒராண்டுக்கு காப்பி அருந்துவது அறவே இல்லாது போனது. பின்னர் டெல்லி முனீர்கா ரமா ஸ்டோர் அருகே ஒரு காப்பித் தூள் கடை மிக சிறப்பாக காப்பித் தூளை அரைத்து தருவார்கள் என்று அறிந்து அங்கே போய் வாங்கி வந்து காப்பி அருந்தும் போது திருச்சி பத்மா காபியின் அதே சுவையை மீட்டெடுக்க முடிந்தது. இந்த சுவைக்காக வேறும் காப்பிப் பொடி வாங்குவதற்காகவும் அந்த சாக்கில் சரவணபவனில் சாப்பிடுவதற்காகவும் ப்ரிதாபாத்திலிருந்து வார இறுதியானால் டெல்லி செல்வோம். அப்படிப்பட்ட ஒரு பொற்காலமது.

பெங்களூர் வந்து தனியளாக இருந்த ஒரு ஆறு மாத காலத்தில் என்னிடம் மிக குறைவான பாத்திரங்களே இருந்தது, அதில் காப்பி பில்டர் இல்லை. அதனால் மீண்டும் இஞ்சி ஏலக்காய் டீக்கு என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். அதன் பின்னர் அம்மா கூட வந்து இருக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் எப்படி தான் காப்பியை விட்டாயோ அதிசயமா இருக்கு என்றார்கள். அவர்கள் அப்படி ஆச்சரியப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஒரு படி உயர டம்பளிரில் முக்கால்பாகம் காப்பி கொடுத்தால் கூட முகம் சுண்டிக் கொள்வேன் என்று முழு டம்ளராக அல்லவா காபிக் கொடுத்து வளர்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் போய் அம்மா "வயிறு காப்பிக்கு பசிக்குது" என்று கூட சொல்வேனாம். அது எனக்கு நினைவில்லை ஆனால் அம்மா இதை அடிக்கடி சொல்வார்கள். அவ்வளவு பிரியம் எனக்கும் காப்பி மீது.

இத்தனை காப்பி ப்ரியம் கொண்ட நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே என் அலுவலத்தில் காப்பி வாசனை, அலுவலத்தில் மட்டுமல்ல ஸ்டார் பக்ஸ் காபே, லாவாசா இட்டாலியன் காபே, இத்தாயி என்று எல்லா இடத்திலும் ஏகபோகமாய் காப்பி மணம் மனதை மணக்குமளவுக்கு ததும்பி வழியும். நாவை அடக்கவே முடியாதபடி அந்த காபியின் மணம் நம்மை எங்கிருந்தாலும் ஈர்க்கும். அத்தனை ஆர்வமாய் போய் அவர்கள் தரும் சின்ன வாளி அளவில் இருக்கும் பெரிய குவளையில் காப்பியை நுரை பொங்க எடுத்து வந்து ஒரே ஒரு சிப் வைத்தால் போதும் காறி துப்பும் அளவிற்கு காப்பியின் மீது வெறுப்பாகி விடும். அமெரிக்கா சென்ற முதல் வாரத்தில் அலுவகத்தில் தினம் காப்பியை எடுப்பேன் பின்னர் அப்படியே வாஷ்பேசனில் கவிழ்த்து விடுவேன். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் வரை முழுமையாக காப்பியை வெறுக்க ஆரம்பித்தேன். அங்கே தேனீரும் நாம் நினைக்கும் சுவையில் கிடைக்காது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நல்ல காப்பி கிடைக்கவில்லையே என்று நா ஏங்கி போகும் தமிழ்நாட்டு காப்பி ப்ரியர்களுக்கு காப்பி ப்ரியர்களுக்கு சன்னிவேலில்(Sunnyvale) இருக்கும் கோமள விலாஸ் (திருச்சிக்காரர் இயக்கி வருவது) http://www.komalavilas.com/ மற்றும் http://www.madrascafe.us/ மெட்ராஸ் காப்பேயும் நல்ல வடிகால். சாப்பாடு, டிபன் முக்கியமாக காப்பி எல்லாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையுடன் கிடைக்கும். ஆகா அமெரிக்கா சென்று வந்த முதல் ஆறு மாதம் நான் காப்பியை அறவே தொடவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள் அங்கிருக்கும் காப்பி என்னை எந்த அளவு வெறுப்பேத்தி விரட்டி இருக்குமென்று.

தற்சமயம் அக்குபிரஸ்ஸர் என்று ஒரு உடலையே மருத்துவர் ஆக்கும் மருத்துவ முறையொன்றின் பொருட்டு பால், தயிர் இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்று, காப்பி டீ குடித்தே ஆக வேண்டுமென்றால் ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காப்பி குடியுங்கள் என்றும் அறிவுத்தப்பட்டு, பால் சேர்த்து காப்பி குடிப்பது முற்றாக நின்று போனது. கடந்த முறை திருச்சி சென்ற போது நவகிரக கோவில்கள் சென்றதில் எனக்கு பிடித்த விசயம் நாங்கள் அருந்திய கும்பகோணம் டிகிரி காப்பியே, மேலும் திருச்சியில் இருந்து பெங்களூர் வரும் நெடுங்சாலையில் தீபாவளிக்கு சென்று வரும் போது தான் கிருஷ்ணகிரி டோல்(toll) தாண்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் டிகிரி காப்பி கடையொன்றை கண்டோம். அங்கே காபி அருந்துவதற்கென்றே அடுத்த முறையும் காரில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன் அவரிடம், ஹூம்ம்ம்ம் இனி என்று பால் ஊத்தி நல்ல காப்பித் தூளால் தயாரிக்கப்பட்ட டிக்காசன் காப்பியை எப்போது குடிப்பேனோ தெரியவில்லை. I miss you coffee.

இப்போது பரிபூர்ணமாய் உணர்கிறேன் காப்பி மனிதரை தேவனாக்கும் பாணமென்று நன்றி சுகுமாரன் சார்.  பிரபஞ்சன் எழுதி இருப்பதாக அவர் தான் சொன்னார்.

Monday, January 13, 2014

மென் உணர்வுகளின் சங்கமிப்பு - திரிவேணி

 கவிஞர் தூரன்குணாவின் முதல் சிறுகதை தொகுப்பான "பாதரசம்" வெளியீடாக வந்திருக்கும் "திரிவேணி" சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் நெஞ்சார்ந்த நினைவுகளை புரட்டிப்பார்க்க ஏதுவான, மிக எளிய மொழிவளத்தில் எழுதப்பட்ட கவித்துவமான நூல். ஒரு நல்ல கதை சொல்லியின் கதை அவனை கதைக்குள் காட்டிக் கொடுக்கும். அதனை வாசிக்கும் போது அவன் உணர்ந்த வலி, துக்கம், சந்தோசம், பரவசம் எல்லாவற்றையும் வாசிப்பவர் உணர இயலும். இன்னும் மிகைத்து சொன்னால் வாசிக்கும் தருணத்தில் வாசகன் தானே கதைக்குள் சொன்று கதையாளியாக மாறும் ஒரு விசித்திர அனுபவம் தருவதே மிக சிறந்த எழுத்தின் வடிவம். அது கதையோ, கவிதையோ எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். அத்தகைய கூடுவிட்டு கூடு பாயும் அனுபவத்தை இந்த தொகுப்பின் பல கதைகளில் தந்திருக்கிறார் தூரன் குணா. வாசிப்பு ஒரு பேரனுபவம், சில நூல்களை கையில் எடுத்தவுடனே மின்னல் வேகத்தில் முடித்துவிடும் சுவாரஸித்தில் எழுத்தப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட இலகுவான மொழியின் வசீகரமாக எழுத்தப்பட்டது தான் இந்த திரிவேணி. கடுமையான பணிகளுக்கு இடையில் வேலையில் போக்கினையும் மன அழுத்தை குறைத்து கொள்ளவும் வேறு எதேனும் வலையில் படிக்கும் இடைப்பட்ட நேரத்தில்(6 மணி நேரம்) திரிவேணியை வாசித்து முடிக்க முடிந்தது.
 தூரன் குணா முன்னுரையில் கதைக்கான களத்தையும் தன் பற்றிய பின்புலத்தையும் வாழ்வாதாரம் வேண்டி தன்னை தானே ஊர்கடத்தி கொண்ட பலரது குரலை "நினைவின் ஊரை சுமந்து  கொண்டு நிலவொளியில் வாழும்" என பிரகணடப்படுத்துகிறார். இவர் கதை வெளிவந்த பத்திரிக்கைகளும், இவருடன் உரையாடலில் இருக்கும் ஆளுமைகள் நாஞ்சுண்டான், கோணங்கி, ஆதவன் தீட்சண்யா மற்றும் பலரும்,  இவரின் பிம்பத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிக பிராகாசமாக்கித் தருகின்றார்கள். சில கதைகளை வடிவங்களை உதாரணமாக "சாரப்படுத்துதல்" வடிவத்தில் முயற்சித்தாக குளம்படி நிலம் என்ற கதையின் வடிவம் சார்ந்தும், உயிரெழுத்து இதழில் வெளியாகி, இந்த நூற்றாண்டின் சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டதாக இவர் சொல்லி இருக்கும் "கர்ண மகாராஜா" சிறுகதையினை சார்ந்தும் எனக்கு மாற்று கருத்துண்டு. அதை இறுதியில் பகிர்தலே சிறந்தது.
  தூரன் குணா பயில்வது கவிதை என்று, இவரது இரண்டு கவிதை நூல்கள் வெளியாகி இருக்கின்றது என்ற அவரது அறிமுக உரையின் வாயிலாகவும், "செந்தீயின் சிறுதுளிகளாய் காடெங்கும் மெட்டபாப்பாத்திகள் தன் போக்கில் குழந்தைகளென அலைந்து கொண்டிருக்கும்"(குளம்படி நிலம்), "சுண்ணாம்பு பூசப்பட்ட காரைசுவர்களுக்கு வெளியில் கசியும் மின்விளக்கொளி, மௌன ரகசியமாய் இருளில் வெளியில் ததும்புகிறது"(மின் மினிகள் எரியும் மூன்றாம் சாமம்), "பயனுடைய ஒன்றாக எனக்கு வாழ்வில்லை, அது காலி செய்யப்பட வேண்டிய கோப்பை"(கைக்கிளை சிலுவை)  போன்ற வரிகளாலும் அறிகிறேன்.

  "சுகிலதம்" இந்த கதையே இந்த தொகுப்பினை சார்ந்து உடனடியாக என்னை எழுத தூண்டியது. தலைப்பினை பார்த்து கொஞ்சம் மனசங்கடத்தோடே படிக்க ஆரம்பித்தேன் ஆயினும் துளியும் விரசமற்ற கதையிது. கதையாளியின் கதை கற்பனை அனுபவத்தை அப்படி உணரக்கொடுத்த இந்த கதையில் அகம் சார்ந்த சில உணர்வுகள் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழந்தையின்மைக்கு தான் காரணமோ ஆகிவிட கூடுமோ என்ற அகச்சிக்கலை தன் மனைவியிடம் மிகுந்த கடுமையான வார்த்தை வெளிப்படுத்துவதிலும், சில நாட்களாக வேலையில் சரிவர செய்யாது இருப்பதாய் மேளாளர் சொல்லவதாய் பதித்தும், மரணம் சார்ந்த அச்சம் கொள்வதும் என்று மிக அழகாக வரைந்திருக்கிருக்கிறார். இந்த கதையினை படித்து முடித்ததும் ஒரு இனம் புரியாத உணர்வொன்று உறக்கம் கலையாத ஒரு சராசரி நாளை உத்வேகமும் மிக ஆக்கபூர்வமாகவும் மாற்றி தந்தது. கைகிளை சிலவை என்ற கதையும் எந்த வித மாற்று கருத்துமற்ற சிறந்த கதையாகும். மேலும் பல சிறந்த கதைகளான திரிவேணி, கொவ்வை படர்ந்த வேலி, அந்தர நதி, கள்ளன், இருளில் மறைவர்கள் போன்ற சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த சிறுகதை நூல்.
 
  அந்தர நதி, சுந்தர ராமசாமியின் திரைகள் ஆயிரம் என்ற நெடுஞ்கதையில் வரும் புதிர் முடிச்சுகளை போல் முடிச்சுகள் கொண்டதாக இருக்கின்றது. தனியாய் வாழும் ஒரு பெண்ணின் மேல், ஒரு ஆணுக்கு இருக்கும் இருக்கும் பொதுபுத்தி சார்ந்த எண்ணம் இந்த கதையில் நாயகனுக்கும் இருக்கிறது, இந்த கதையில் நாயகி போதையில் மயங்கிய அவனுக்கு உதவும் போது கையை பிடிக்க, குருதி படித்த கத்தியை போலிருந்த ஒரு அழுத்தமான பார்வையை வீசி விட்டு போவதகாக சொல்லி இருப்பது நாயகியின் நிலைபாட்டையும் அவளை சார்ந்த புதிரை மேலும் வலுவாக்கி இருக்கின்றது. மிக ஆறுதலாக இருக்கின்றது இந்த கதையின் கண்ணியம். மேலும் இருளில் மறைபவர்கள் என்ற கதையில் வரும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மனிதாபிமனத்தை அழகாக படம் பிடித்திருப்பதும் கண்களை நிறைக்கிறது.
  காலச்சுவடில் வெளியான திரிவேணி(நூலின் தலைபினை கொண்ட சிறுகதை) என்னை மிக கவர்ந்த கதைகளில் ஒன்று. கதை அம்மா(குயிலாத்தாள் என்கிற மயிலாத்தாள்), மகள்(சரசு என்கிற சரஸ்வதி), பேத்தி(பாப்பா என்கிற மைதிலி) மூன்று பெண்களை சார்ந்தது. மிக நெகிழ்வான கதை. அன்னை இளம் வயதில் விதவையாகிறாள், அவள் பெண் கணவனுடன் வாழ பிடிக்காமல் அம்மாவை அண்டி வருகிறாள், அவள் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த ஒரு கதைக்குள் மூன்று கதைகள் இருக்கின்றன, மூன்றையும் சேர்த்து படித்தால் முழுகதையாகவும் இருக்கிறது. சிறுகதையின் இந்த வடிவம் மிக புதுமையாகவும் வரவேற்க்க தக்கதாகவுல் இருக்கின்றது. அதே சமயம் இந்த கதையிலும் சரசு கணவனை இந்த அளவு வெறுக்க என்ன காரணமென்று சொல்லப்படாமல் போனது புதிராகவும் அதே சமயம் கதையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைந்ததாகவும் எனக்கு தெரிகின்றது. மைதிலி தற்கொலைக்கு செய்யும் அளவுக்கான கொடுங்காரணம் (அம்மா பெண்ணை திட்டும் வெறும் வாய் வார்த்தை திட்டுகளுக்காகவா ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வாள்?) எதுவுமில்லை. அந்த தற்கொலை பாரங்கல் சுமப்பது போன்ற வலியினை தரவேண்டிய அந்த சம்பவம், ஒரு நீர்குமிழி வெடித்தது போன்ற அதிர்வை மட்டும் தருவது மட்டுமே இந்த சிறுகதை சிறு குறை.  ஒருவேளை இது தூரன் குணா அவர்கள் கண்டறிந்த ஒரு சம்பவமாக இருக்கும்.  கதைபடுத்தும் போது சில இடத்தில் , சம்பவத்தின் ஊகம் மட்டுமே எழுத்தாகி இருக்கிருக்கலாம் அதனால் ஆழம் கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. மற்றபடி இது மிக சிறந்த கதையாகும்.

 "கொவ்வை படர்ந்த வேலி" என்ற சிறுகதை கல்கியின் சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதையெனயும் அதுவே தனது முதல் கதை என்றும் இந்த கதையை சார்ந்து தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்து இருக்கிறார். ஒன்று விட்ட அண்ணன் தங்கையின் இனிய உறவினை, அன்பை, சகோதர பாசத்தைப் பற்றி பேசுகிறது கதை. கன கச்சிதமாக அமைந்து விட்ட கதை களத்தில் உடன் பிறந்த தங்கையற்ற அண்ணன் சகோதரியின் பாசத்திற்கு ஏங்கும் மேலும் சில காட்சிகளையும், சித்தப்பாவின் அப்பாவின் பகைமையுணர்வை வேலி தாண்டி வரும் கிடாயை மிரட்சியாக துரத்தும் சிறுமியின் காட்சி சித்திரத்தில் சொல்லியதில் மட்டுமின்றி இன்னும் அழுத்தமான நிகழ்வுகளை சேர்த்திருந்தால் இந்த கதை ஆக சிறந்த கதையாகி இருக்கும். இவர் முதல் கதை என்றதால் இவை விடுபட்டு போயிக்கக்கூடும். ஆயினும் மிக அழக்கான சிறந்த சிறுகதை இது.

கார்போரேட் என்ற கதையில் கடைசி வரி மட்டுமே கதையின் மொத்த உணர்வை சொல்லி விடுகிறது. அந்த வரியை மட்டுமே ஒரு வரி கதையாக்கி இருந்திருக்கால் அத்தனை அழுத்தம் கொண்ட வரி அது. அந்த வரிக்கு முன் வரும் அனைத்து சம்பவங்களும் படிக்க சுவாரஸியமான சிலர் தற்காலத்தில் அனுபவத்து கொண்டிருக்கும் சம்பவங்கள். கள்ளன் என்ற கதையிலும் கடைசி வரி கதையை வேறு ஒரு தளத்துக்கு உயர்த்தி வைக்கிறது. கடின மனங்களிக்கிடை மென்மை, மென் மனங்களிடை உள்ள கள்ளம், பணம் வெறும் பணம் எதை தான் செய்ய வைக்காது?
கிழக்கில் ஒரு காலம் மற்றும் குளம்படி நிலம் போன்றவை நவீன கதைகளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. சகடம் மற்றும் கர்ண மகாராஜா இரண்டும் வேறு வடித்தில் முயன்றிருந்தால் இன்னும் மிக சிறந்த கதையாகி இருக்க கூடும். இவற்றை அணுகுவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சிறுகதை வடிவ மாற்று முயற்சிகளில் விளைவான அதே சமயம் சம்பவங்கள் அழுத்தி பின்னப்பட்ட கதைகளாக அமைந்துள்ளது. கதைத் தொகுப்பில் சில கதைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் கதைகள்.

ஒரு விதத்தில் இந்த தொகுப்பின் ஒரு சில சுமாரான கதைகள் என்று நான் கணித்து வைத்திருந்த கதைகளில் குளம்படி நிலமும், கர்ண மஹாராஹாவும் உண்டு. ஒருவேளை இந்த சிறுகதைகளின் வடிவம் சார்ந்த குழப்பம் என்னை அந்த சிறுகதைகளைகளிலுள் பயணப்பட தடுத்திருக்கூடும். குளம்படி நிலத்தில் கதை முற்று பெறவில்லையோ அல்லது சொல்ல வேண்டிய முக்கியமான கருத்து விடுபட்டு போனதோ, சில சம்பவங்களின் தொகுப்பாகி போனதோ என்ற குழப்பமும் உண்டு எனக்கு. மேலும் சுமாரானென நினைத்த கதைகளே மிக சிறந்த கதைகளாக பேசப்பட்டிருக்கும் போது மற்ற கதைகள் சார்ந்து சொல்ல வார்த்தைகள் வசப்படவில்லை. இருப்பினும் திரிவேணியில் வாசிக்கும் போது எனக்குள் பதிந்த சில விசயங்களை பகிரும் பொருட்டே இப்பதிவு.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம்
இந்த புத்தகத்தினை வாங்க

 திரிவேணி(சிறுகதைகள்)-தூரன் குணா-பாதரசம் பதிப்பகம் (ஸ்டால் எண்:654)

Monday, December 30, 2013

ஈதேன்ன பேருறக்கம்?

 மார்கழித் திங்கள் பக்தி இலக்கியம் சார்ந்த ஒரு பதிவை இந்த வருடம் பதிக்க வேண்டும் என்று மார்கழி முதல் தேதியே நினைத்திருந்தேன், ஆனால் சோம்பலும் தூக்கமும்(உறக்கம் என் பலகீனம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரம் உறக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்) உலகிற்கு கிடைப்பதற்கரிய பல விசயங்களை என்னை பதிப்பிக்க விடாமல் தொடர்ந்து தடை செய்கிறது. மார்கழி பனிரெண்டாம் நாள் திருப்பாவையில் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்" என்ற படித்த போது என்னை தான் சாடினாளோ ஆண்டாள் என்று தான் நினைத்தேன். இந்த பேருறக்கத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு இன்று எழுதி விடவேண்டும் என்று நினைத்து அலுவலகம் அடைந்த போது(பொதுவாக நான் எழுதுவது அலுவலத்தில் தான்) என்னை தவிர என் குழுவில் அனைவரும் விடுப்பெடுத்திருந்த காரணத்தால் இன்னொருத்தரின் சுமையை சுமக்கும் பொறுப்பு வந்து இடைபட ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை சார்ந்த எந்த பதிவையும் பதிப்பிக்க இயலாமல் போனது.  ஆனால் இன்று மார்கழி 15ஆம் நாள் சற்று எள்ளலாக ஆண்டாள் என்னை கேட்டாள் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதையோ?"  எழுத தொடங்கியாயிற்று.



உறக்கத்தை பல்வேறு விதமாக சொல்லி இருக்கிறார் ஆண்டாள். என்ன இப்படி துயில்கிறாய் குர்பகர்ணன் உறக்கத்தை உனக்கு தந்து விட்டானா என்றும், துயிலணை மேல் கண் வளரும்(கண் வளர்ந்தல் - அட போட வைக்கும் சிந்தனை), பேருறக்கம்,  மந்திரிக்க பட்டது போல ஏமப் பெருந் துயில் என்று பல்வேறு உறக்கத்தை பட்டியலிட்டு மிக அதிகாலை நேரத்தில் ஊரையே உறக்கத்திலிருந்து எழுப்பி, "குள்ளக் குளிரக் குடைந்து நீராடாடி", கண்ணனை தொழ அவன் இல்லம் தேடிச் சென்று வாயில் காவலனை எழுப்பி கண்ணின் பெற்றோரை எழுப்பி, பின்னர் கண்ணனையே எழுப்பி(கண்ணனும் கடும் சோப்பேறி தான், உலகின் பெரும் பகுதி கடல், அதில் பள்ளி கொண்ட பெருமாளை, திருப்பள்ளி எழுச்சி பாடி பாடி எழுப்பியவர் எத்தனை பேர், இன்னும் அவன் எழுத பாடில்லை). இத்தனை ஆரவாரத்தோடு பத்தியை கொண்டாடுகிறாள், தென்நாட்டு ராதை ஆண்டாள்.  பக்தி இலக்கியத்தில் கடவுள் மேல் காதல் கொள்வதே பக்தியின் உச்சகட்டம்.   ஆண்டாள் மட்டுமல்ல ஆழ்வார்களில் சிலர், திருவெம்பாவை எழுதிய மாணிக்க வாசகரும் இவ்வாறே. இதில் சில்லென்று (சில்லென்றெழையென்மின் என்பதும் ஆண்டாள் சொன்னதே) பக்தியை, காதலை தேன்மதுர தமிழை இனிக்க இனிக்க சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்கு காலையில் "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்"என்ற மாணிக்க வாசகர் வரிக்கு "நீயே என் தலைவன் என்று ஒற்றைகாலில் சிவதவம் செய்யும் பூச்செடிகள்" என்ற விளக்கம் சொன்ன மாணிக்க வரிகளை படித்தது இன்றைய நாளை தொடங்க போதுமானதாக இருந்தது.





"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" இந்த ஒருவரி போதுமானது பிரமாண்டமான சிவபெருமானை,(பெங்களூருவில் முருகேஷ்பால்ய அருகில் ஒரு பிரமாண்ட சிவன், 108 சிவ லிங்களும் உள்ள கோவில் உள்ளது, சிவ பெருமான் என்றால் அந்த பிரமாண்ட வெண் சிலையே நினைவுக்கு வரும்) அவன் அற்புத வடிவத்தை விளக்கி கூறிட. திருவெம்பாவையிலும் துயில் எழுப்புவது போன்ற காட்சிகள் சில உண்டு, இங்கும் மார்கழி மாதத்தில் நோன்புண்டு, அதிகாலை  "குள்ள குளிர" மார்கழி நீராடலுண்டு, "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி" வண்டுகள் மொய்க்கும் குளத்தில் (அப்படின்னா பூக்கள் நிறைந்திருக்கு), கையால் குடைந்து குடைந்து குளித்தோம் என்றும் இடத்தில் வனப்பமும்(பூக்களை கைகளால் தள்ளி விட்டு விட்டு குளிக்கின்றனர்), இயற்கை எழிலை ரசனையை ரசிக்கக் கொடுத்திருக்கிறார் மாணிக்க வாசகர். "பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்"(திருவெம்பாவை - 13) இந்த பாடல் மிக வியப்புடையது கன்னி பெண்கள் நீராடும் பொதிகையையே சிவனாகவும் பார்வதியாக பாவித்து நீராடாடுவது போல் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது. மறுமைக்கு வழிகாட்டலாவே அவன் "இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதந்தந்தருளுங் சேவகனே" என்றும் சொல்கிறார் மாணிக்கவாசகர். "முன்னிக் கடலைச் சுருக்கி"(திருவெம்பாவை -16) பாடலில் மாணிக்கவாசகர் மழையை பார்வதிக்கு ஒப்பிட்டு பாடுகிறார். திருவெம்பாவையில் பாடல்களில் இறையாய் சிவனும் பார்வதியும் சேர்ந்தே போற்றபடுகின்றனர்.

  பக்தி இலக்கியத்தில் கோவிந்தனை ஈசனை போற்றி வீடு பேறு பெற பெரிதாக ஆறு கால பூசையும் பட்டும் பட்டாசையும் பலவகை நேவேத்தியமும் எதுவும் செய்ய தேவையில்லை "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" நம் துயர் அனைத்தையும் போக்குவான் என்று எளிமையை ஆண்டாளும்,  "விண்ணுகொரு மருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினாயானை பாடிக்கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுகுருக" என்று மாணிக்க வாசகரும் கற்றுத்தருகின்றனர். மாணிக்க வாசகர், ஆண்டாள், மாணிக்க வாசகம் போல் இறைவன் மீது காதலாகி கசிந்துருகவிடுனும் இறையை அவர் பாடல்களால் போற்றுதல் எம் தீம்தமிழுக்கு நம்மாலான சிறுதொண்டு. பத்தி இலக்கியத்தில் தித்திக்கும் தமிழும், இறையனுபவமும் போற்ற தக்கவை. இறை மீது நம்பியவர்க்கு அது இறை வழிபாடு. நம்பிக்கையற்றவர்க்கு இது சிறந்த தமிழ் இலக்கிய பாடல்கள்.

திருப்பாவை:
http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruppaavai.html

திருவெம்பாவை:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் கொண்டாட கோடி இருந்தாலும் என்னால் இயன்ற எள்ளப்பமிது. ஆண்டாள் மற்றும் மாணிக்க வாசகர் திருவடிகளே சரணம்.

Sunday, December 22, 2013

என் வீட்டின் வரைபடம் - புத்தக விமர்சனம்

சமீப காலத்தில்(சுமார் ஒரு வருடத்திற்கு முன்) படித்த "என் வீட்டின் வரைபடம்" சிறுகதை தொகுதியின் மூலம் எனது சிறுகதை தேடலின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்தேன். என் வீட்டின் வரைபடம் இந்த தொகுப்பின் எல்லா கதைகளுமே ஒரு நாவலுக்குரிய அடர்ந்தியை பெற்றிருக்கின்றன. முன்னுக்கு பின் சொல்தல், சம்மந்தம் இல்லாத சம்பவங்களை ஒரு குறீயீடு சார்ந்து சேர்த்து சொல்லுதல் இந்த பாணியில் அமைந்ததே "என் வீட்டின் வரைபடம்". இந்த தொகுதியில் எனை மிக முக்கியமாக கவர்ந்த அம்சம், கதைகளில் வித்தியாசமான தலைப்புகள் "என் வீட்டின் வரைபடம்", "மிகு மழை", "உடைந்த புல்லாங்குழல்", "உருவங்களின் ரகசியம்", "தனிமையின் புகைப்படம்" என்றபடி நீள்கிறது கதையின் தலைப்புகள். தலைப்பிற்காகவே படிக்க தொன்றும் கதைகள் இவை. 

ஓவ்வொரு கதைக்கான களத்தினை தானே அனுபவித்தது போல அழுத்தமாக எழுதப்பட்டிருக்கின்றன எல்லா சிறுகதைகளும். உடைந்த புல்லாங்குழல் என்ற ஒரே ஒரு கதையை தவிர மற்ற எல்லா கதைகளின் கதை சொன்ன விதம் எல்லா நவீன கதைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. நேர்த்தியாய் தெளிந்த நீர் போல ஓடவில்லை ஜே.பி.சாணக்கியாவின் கதைகள். கொஞ்சம் கலங்கிய நீரும், தேங்கிய நீருமாய், சில இடத்தில் குழப்பிய நீருமாய் ஒடி இருக்கிறது. பெரும்பாலான கதைகளில் விரசமான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் கதாசிரியர். அது கதைக்கு தேவையானது என்ற சிந்தனையினும் சில இடம் மிக நீண்ட அருவருப்படையும் அதிருப்பியையும் தருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மிகு மழை ஏதோ தன்னிச்சையாய் தன்னிஷ்டம் போல இருக்கும் பெண்ணின் காமத்தை பற்றி பேசுகிறது. அவளை ஏதோ சமூகத்தின் அருவருக்கதக்கவள் கேலி குரியவள்  போல சித்திரக்கும் ஆசிரியரின் மனபோக்கு சற்றே கண்டிக்கத்தக்கது. இதே கதையில் ஆசிரியர் தன்னுடைய கண்ணோடத்தில் அந்த பெண்ணை சித்தரித்தது போலில்லாமல் அவளுக்கான நிலைப்பாட்டினை பேசி இருக்கலாமே என்ற ஆதங்கம் மிஞ்சியது கதையை வாசித்து முடித்த பின்னர். "உருவங்களின் ரகசியம்" என்ற மற்றுமொரு கதையில் கள்ள உறவுக்கு பெண் மட்டுமே கலங்கம் கற்பிக்கபடுகிறாள். எல்லா பொது புத்தி சார்ந்த கதைகளம் போல் அதில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். எவனால் அந்த பெண் இறந்தாளோ அவள் மகளையே காதலித்து அவளுக்கான தற்கொலையும் செய்து கொள்கிறான்.

தனிமையின் புகைப்படம் மற்றும் ப்ளாக் டிக்கெட் இரண்டு கதையின்களத்தின் அதிகப்படியான முரண் உறவுகளை சார்ந்த பகுதிகள் இல்லை. ஆனால் அதிலும் இல்லாவே இல்லை என்றெல்லாம் சொல்ல இயலாது. தனிமையின் புகைப்படம் பிச்சைகாரர்களின் வாழ்வினை சொல்கிறது. அதில் வரும் "குரு  மகராஜ்" கிழவன் இறக்கும் தருணம் புதுமைபித்தனின் கதையொன்றை(சாலையேரம் செத்து கொண்டிருக்கும் பிச்சைகாரனை பற்றியது) நினைவுபடுத்தியது. ப்ளாக் டிக்கெட் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வின் சோகத்தை, தன் அடுப்பை/வீட்டை முதுகில் சுமந்து திரியும் நாடோடிகளில் வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்கிறது. தனிமையின் புகைப்படத்தில் பிச்சைக்கார கிழவியும் குருமகராஜ் கிழவனும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்த்து விட மாட்டார்களா என்று ஏக்க வைத்தது.

"ரிஷப வீதி" மற்றும் "ஆட்டத்தின் விதிமுறைகள்" ஆண் ஆதிக்கத்த்தின் உச்சநிலையை பிரகணடப்படுத்திகிறது. தன்னால் தர முடியாத குழந்தையை, வன்புணர்வின் பின் பெறும் மனைவி தற்கொலை செய்து இறந்து விடுவாள் என்றே நினைக்கிறான் சராசரி இந்திய/தமிழக கணவன். அதுவே அவள் விதியாக இருக்க வேண்டுமென்று பின்னர் விரும்புகிறான். மொத்த தொகுப்பில் என்னை பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாக்கிய கதை ரிஷப வீதி. எவ்வளவு மிதிபடுகின்றனர் கீழ்தட்டு பெண்கள் என்று படித்து சீரணக்கவே இயலாத கொடும் கதாசித்திரங்களை புனைந்து வைத்திருக்கிறார் ஜே.பி.சாணக்கியா.

ஒட்டு மொத்த தொகுப்பின் என்னை மிகவும் கவர்ந்த கதை "என் வீட்டின் வரைபடம்", ஒரு வீட்டின் உறவுகளுக்கும் நடவடிக்களுக்கும் இருக்கும் மர்மங்களையும் அவலங்களையும் மனப்போராட்டங்களையும் தெளிவாக வரைந்திருக்கிறார் சித்திரமென. அதெப்படி ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் வெவ்வெறு விதமான பிரச்சனை, சினிமாதனமாக என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எப்படி சொன்னாலும் வித்தியாசமான மொழி, கதை சொல்லும் நேர்த்தி, எதார்த்தமான பாத்திரங்கள், சென்சாரே இல்லாத வாசங்கங்கள், சற்றே சிரமப்பட்டே இவர் கதைகளை உள்வாங்கி கொள்ள முடிகிறது.

Tuesday, December 10, 2013

ஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை


என்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓடும் பயணங்கள் எங்கள் வாழ்வின் ரசித்து ரசித்து நான் வாழும் சில தருணங்களில் ஒன்று. தற்சமயம் எங்கள் சிற்றுந்தில் இசைக்கருவி என்னை மதிமயக்கும் திறன் கொண்டது. தீபாவளி விடுப்பிற்கு எங்கள் வண்டியிலேயே பிறந்த கிராமமும் மேலும் சில சுற்றுலா தளங்களையும், கோவில்களுக்கு சென்று வர முடிவு செய்து ஊருக்கு சொன்றோம். அவ்வாறே சென்ற நெடும் பயத்தின் போது, ராமேஸ்வரத்திலிருந்து திருச்சியை நெருக்கிக் கொண்டிருந்த போது, இரவு இறக்கி விட்ட கருமை, வெளியில் கவனம் கொள்ள வியலாமல் பண்பலையை திருப்பிக் கொண்டிருந்தேன். (பெங்களூரிவில் எங்கள் வாகனத்தின் பண்பலையை அதிகமாய்  பயன்படுத்துவதில்லை. பண்பலையில் இசையினும் அதிகம் இழுவைகளே அதிகம் அதுவும் சொல்ப அறிந்த கன்னடத்தில் வசவசவென்று மாத்திலாடுவார்கள் அதனால் இசை தரும் இன்பதினும் இம்சையே அதிகமிருக்கும் ).

  பண்பலையில் திருப்பிக்கொண்டிருக்கும் போது, மதி மயக்கும் "முன்பே வா அன்பே வா" என்னை கட்டி இழுக்க அதே அலைவரிசையில் இசைகருவியில் எனக்கான இசையை மிதக்க விட்டேன். அது ஒரு மலையாள பண்பலை ஆங்கிலத்தில் தொகுத்து வழக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த பாடல் முடிந்தவுடன் தான் தெரிந்தது. அது ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. முன்பே வா பாடியது ஸ்ரேயா என்று அன்று தான் அறிந்தேன். ஸ்ரேயா பட்டும் படாமலும் பாடிய ஒரே ஒரு தமிழ் பாடல் என்று சொல்லலாம்.(ஆயினும் நீ பார்த்த பார்வைக்கோரு நன்றி என்றும், செண்பகமே செண்பகமே என்றும் இசை ஜாம்பவான் ஆ ஷா போன்சிலேவின் நுனி நாக்கில் கடிபடும் தமிழிலும் சிறந்ததது தான் "முன்பே வா"வில் ஸ்ரேயா பாடி இருக்கும் தமிழ்) இந்த பாட்டில் மட்டும் சில இடங்களில் ஸ்ரேயாவின் உச்சரிப்பு அவர் வேற்று மொழிக்காரர் என்பதை காட்டிக் கொடுக்கும், ஒரு வேளை இது ஸ்ரேயாவின் முதல் தமிழ் பாடலாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அது 2006-ல் வெளியான படம், அதற்கு முன்பாகவே 2003 ஜீலி கணபதியில் "எனக்கு பிடித்த பாடல்" பாடி இருக்கிறார். முன்பே வா பாடலில் ஸ்ரேயாவின் குரல் தனிப்பட்டிருந்தாலும் மிக அழகாவே இருக்கின்றது. ராவணனில் அவர் பாடிய கள்வரே கள்வரே என்ன ஒரு உச்சரிப்பு. அற்புதம். "உன்ன விட உலகத்தில் உசந்தது" இதில் ஒரு மதுரை தேவரச்சியாக வாழ்ந்திருப்பார் ஸ்ரேயா. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மலையாள பண்பலை 102.8, 12.11.2013 அன்று சுமார் இரவு 10 மணி அளவில் என்ன நிகழ்விற்காக ஸ்ரேயாவின் பல் வேறு மொழிப் பாடல்களை தொகுத்து வழக்கினார்கள் என்று தெரியாது, ஆனால் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒரு சிறு கிராமான எனது மாமியார் வீடு வரும் வரை திகட்ட திகட்ட ஸ்ரேயாவின் இசையோவியங்களை வழங்கியது அந்த பண்பலை, முன்பே வா பாடலுக்கு அடுத்து மலையாளத்தில் கண்ணனை சார்ந்த ஒரு பாடல்,(தேசியவிருது பெற்றது) என்ன அர்த்த சுத்தமான மலையாள உச்சரிப்பு. நான் வட இந்தியாவில் இருந்த சமயம் எனது அலுவலக நண்பர் ஒருவர் மலையாள பெண்ணை தனது கல்லூரியில் ராகிங் செய்து போது அந்த பெண் நான் கூறும் ஒரே ஒரு வார்த்தை ஸ்படமாக உச்சரித்தால் அவர் சொல்லும் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொன்னாலாம், அதற்கு அவர் சரி சவாலுக்கு தயார் என்றதும் "மழ" என்று சொல்ல சொன்னாலாம். என்னால் இறுதியாண்டு வரை அந்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை என்றார். அவ்வாறாக நாவினை சுழற்றிப்போடும் மலையாள வார்த்தைகளை எத்தனை அழகாய் பாடுகிறார் ஸ்ரேயா என்னும் வங்க மொழிக்காரி சொக்கிப் போகிறேன்.

மூன்றாவதாய்  தேவதாஸ் படப்பாடல் "கேசே காகும் ஹாய் ராம்" இசையால் உறுகி  வழியத் தொடங்கி இருந்தேன், ஸ்ரேயா ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக் காரரில்லை.   எந்த மொழியில் பாடினாலும் ஸ்ரேயாவின் பாடலை கேட்பவர் அவர் அந்த மொழியினை சேர்ந்தவர் என்றே நினைத்துக் கொள்வர். அதுவே ஸ்ரேயாவின் சிறப்புத்தன்மை. இதனையே தான் அந்த பண்பலையிலும் தொகுப்பாளரும் கூறினார். மேலும் ராஜத்தானிய மற்றும் வேறு சில மொழி பாடல்களை ஒலிப்பரப்பினர் அந்த பண்பாலையில். இடையில் வங்காள மொழியிலும் ஒரு பாடல் வந்தது. தனது தாய் மொழியில் அவர் பாடும் போது இன்னும் பிரத்தியோச இசையின்பம் தரவல்லவராக இருக்கிறார் ஸ்ரேயா. இசைக்கு மொழி கிடையாது என்றாலும், வங்க மொழி தெரியவில்லையே என்று இரண்டாம் முறையாக வருத்தப்பட நேர்ந்தது இந்த இசை தேவதையால். "நீலகண்டப் பறவையைத் தேடி" இதன் இரண்டாம் மூன்றாம் பாகம் இன்னும் வங்க மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்படவில்லை, மூலகாரணம் அந்த புத்தகத்தின் ஆங்கில மூலமும் இல்லை. வங்க மொழி தெரியாத காரணத்தால் ஒரு அதி அற்புத நாவலை முழுமையாக படிக்க இயலாமல் போனதே என்று முதல் முறையாக வங்க மொழி தெரியாதற்கு வருந்தினேன். அடுத்து ஸ்ரேயா பாடிய வங்க மொழி பாடலில் விளக்கம் தெரிந்திருந்தால் இன்னும் இசையை ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன்.

ஸ்ரேயா என்னும் ஒரு குட்டி தேவதையை எனக்கு தெரியும், என் தோழியின் மகள் அவள், எப்போதும் ஸ்ரேயா என்றாலும் அந்த குழந்தையின் நினைவு வந்து இனிக்கும். அதை கெடுத்தழிக்க வந்தாள் நடிகை ஸ்ரேயா. ஆனால் பாடகி ஸ்ரேயா மீண்டும் ஸ்ரேயா என்ற பெயரை கேட்டாலே இன்புறும் அனுபவத்தை தருகிறாள்.





  தலைப்பையும் ஸ்ரேயாவை பற்றி எழுதும் எண்ணத்தை தந்ததற்கு கவிஞர் சுகுமாரனுக்கும், சில காலமாய் எழுத பிடிக்காமல் முடிங்கி இருந்த என்னை மீண்டும் எழுத வைத்த மீராவின் சரவணனுக்கும் நன்றியும்,

கூடவே இந்த பதிவு அவர்களுக்கு சமர்பணம்.

Tuesday, September 24, 2013

வெற்றியைத் தேடி ஓடும் முட்டாள்கள்


3idiats4
பொதுவாக நான் ஹிந்தி படம் பார்ப்பதில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் போலவே பல படங்கள் வருவதும் அதுவும் ஒரே மாதிரியான மசாலா என்று, ஹிந்தி படத்திற்கென்று சில பார்முலாக்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சில  தந்திரங்களும் அதனுடன் சில நல்ல தகவலும் (மேசேஜ்) அளித்துள்ளது இந்த திரி இடியட்ஸ் படம். படத்தின் தலைப்பே படம் பார்க்க தூண்டுகின்றது. புத்தாண்டு அன்று டில்லியில் வைகுண்டநாதரையும் காமாட்சியையும் சேவித்து விட்டு வரலாமென்று கடந்த வெள்ளி சாயுங்காலம் சென்று திரும்பும் போது இந்த படத்தில் தலைப்பை பார்த்துவிட்டு வழக்கமான இந்த மசாலா படமாகவே இருக்கும் என்று நினைத்தேன். அதன்பின் பலரும் இந்த படத்தை பற்றி ஓஹோ என்று சொல்ல நேற்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் அவசரமாக உப்புமாவை கிண்டி, உண்டு 7.30 காட்சிக்கு சென்றோம்.
3idats
எஸ் ஆர் எஸ் என்ற மாலில் இருக்கும் திரையரங்கில் 10 நிமிட தாமதத்தில் அடைந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். முட்டாள்  தான் கதை சொல்லி. (நம் மேடி மாதவன்) அவன் தன் நண்பன் முட்டாள் - 2  இடம் தங்களின் மற்றொரு மிக நெருங்கிய நண்பனை பற்றிய தகவல் தெரிந்து விட்டதாக சொல்ல அவனும் பேண்ட் கூட போட மறந்து அவசர அவசரமாக தங்கள் படித்த கல்லூரிக்கு செல்கின்றான். அங்கே இன்னுமொருவன் (நல்லவேளை இவன் முட்டாளில்லை) அவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் இன்று நாள் நினைவிருக்கிறதா 10 வருடத்துக்கு முன்... என்று கதை ஆரம்பித்த உடன் நினைத்தேன், ஆஹா நல்லா மாட்டிகிட்டோம் என்று, ஆனால் அங்கிருந்து முட்டாள் - 3 தேடி சிம்லா புறப்பட்டதும்தான் தெரிந்தது படம் முடிந்த பின் தான் படம் முடிந்து விட்டது என்று நினைப்பே வந்தது அப்படி ஒரு தொய்வில்லாத கதையோட்டம், நல்ல திரைக்கதை அமைப்பு. கொஞ்சம் பிளாஷ் பேக் கொஞ்சம் நிகழ்காலம் என்று அழகாக கதையை நகர்த்தி இருக்கின்றார்கள்.
3idiats2
நிறைய நல்ல விசயங்களை சொல்லி இருக்கின்றார்கள் இந்த படத்தின் மூலம் நம் வெற்றி என்னும் தொடர் ஓட்டத்தில் ஓடிய படியே வாழ்க்கையை தொலைப்பதை விட பிடித்த விசயம் செய்தால் வெற்றி நம் பின் ஓடி வருமென்றும், படிப்பு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து வெள்ளை காகிதத்தில் வாந்தி எடுப்பது போலில்லாமல் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும்படி இருக்க வேண்டும். படிப்பு மன அழுத்தத்தை உருவாக்க கூடாது, பெற்றோர் தங்கள் பெருமைக்காக தமக்கு பிடித்த படிப்பை பிள்ளைகள் மேல் திணிக்க கூடாது. ராகிங் இருக்க கூடாது. இனொவேட்டிவ் படிப்பியல் படிப்பு எதையாவது புது விசயங்களை கண்டறியவோ புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். மில்லியன் டாலரில் வீடு  அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனத்தின் வேலை இது தான் வெற்றியின் அளவல்ல. பிடித்த விசயத்தில் மனமென்றி குறைவாக சம்பாத்தித்து நிறைவாக வாழ்ந்தாலும் வெற்றியே இப்படி நல்ல பல விசயங்களை முன் வைத்துள்ளது.
idiat2
இவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்கள் கொஞ்சம் மிகையாகவே காட்டப் பட்டிருக்கின்றன, நல்ல கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் நிறுவனர் மிகவும் கடினமானவர் இறக்கமற்றவர் படிக்கும் மாணவர் தற்கொலை புரிந்து கொள்ளமளவு மன அழுத்தம் தர கூடியவர், புத்தகத்தில் இருப்பதை மட்டுமே ஒப்பிக்க கூடிய மாணவர்களே ஆசிரியர்களை கவரும் வண்ணமிருக்கின்றனர் இப்படிப்பட்ட விசயங்களும் சில சினிமாத்தனமான இயல்பற்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த படத்தை மனமாற பாராட்டலாம். எது எப்படி இருந்தாலும் திரைக்கதை மற்றும் கச்சிதமான பாத்திர வடிவமைப்பிற்காக நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படமே இந்த மூன்று முட்டாள்கள்.
- லாவண்யா சுந்தரராஜன்

பேராண்மையும் ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ம‌ற்றும் திரைய‌ர‌ங்க‌ அர‌சிய‌ல்க‌ளும்

த‌மிழ் திருநாள் பொங்க‌லை முன்னிட்டு நீண்ட‌ விடுப்பெடுத்து த‌மிழ‌க‌ம் சென்று திரும்பியாயிற்று. தில்லியில் வ‌சிப்பு என்று விதிக்க‌ப்ப‌ட்ட‌ பின் த‌மிழ‌க‌ம் செல்லும் போதெல்லாம் முடிந்த‌ ம‌ட்டும் சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையாவ‌து பார்த்து விடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அந்த‌ வ‌கையில் இந்த‌ முறை நான்கு திரைப்ப‌ட‌ங்க‌ளையும் க‌ண்டு வ‌ந்த‌தில் ம‌க‌ழ்ச்சி சில‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ள்.

த‌மிழ‌க‌ம் அடைந்து இந்த‌ முறை நான் பார்த்த‌ முத‌ல் திரைப்ப‌ட‌ம் பேராண்மை. அடுத்த‌து ஆயிர‌த்தில் ஒருவ‌ன். நான்கு ச‌ண்டைக்காட்சி, ஐந்து பாட‌ல்க‌ள், கொஞ்ச‌ம் சென்டிமென்ட் என்று க‌ட்ட‌ம் கட்டி த‌வித்து வ‌ந்த‌ தமிழ் திரையுல‌கிற்கு ச‌மீப‌மாக‌ வ‌ந்திருக்கும் மாறுத‌ல்க‌ள் வ‌ர‌வேற்கத்த‌க்க‌வை. அந்த‌ வித‌த்தில் பேராண்மையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ச‌லாம் போட‌ வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ள்.


பேராண்மை மிகவும்‌ க‌வ‌ர்ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. எடுத்துக் கொண்ட‌ க‌தைக்க‌ள‌ம், திரைக்க‌தை அமைத்திருந்த‌ வித‌ம் எல்லாம் அருமை. சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் உறுத்த‌லாக‌ இருந்த‌து. ஆர‌ம்ப‌ காட்சிக‌ளில் அந்த‌ பெண்க‌ளின் அட்டகாச‌ம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அருவெறு‌க்க‌த்த‌க்க‌தாக‌ இருந்த‌து. என்ன‌தான் பெண்க‌ள் மாடர்‌ன் ஆகிவிட்டாலும் இந்த‌ அள‌விற்கு ஒருவ‌ரை ப‌ழிவாங்க‌ என்ன‌ வேண்டுமானாலும் செய்வோம் என்ப‌து திரைப்ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும். மேலும் ம‌லை வாழ் ம‌க்க‌ளை அதிகாரிக‌ள் கேவ‌ல‌மாக‌ ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டியிருப்ப‌தும் மிகையான‌து. மேலும் காம்யுனிச‌ம் ப‌ற்றிய‌ வசனங்கள் திணிக்க‌ப்ப‌ட்ட‌து போல் கதையோடு ஒட்டாமல் இருந்த‌து. எது எப்ப‌டி ஆனாலும் பெண்க‌ளை மிக‌ உய‌ர்வாக‌ காட்டி இருப்ப‌தும், காட்டில் சில‌ பெண்க‌ளும் ஒரு ஆணும் ப‌ய‌ங்க‌ர‌ எதிரிக‌ளை முறிய‌டிப்ப‌தும் அருமை. அதில் இர‌ண்டு பெண்க‌ள் பலியாவ‌து உண்மையாக‌ க‌ண்ணீரை வ‌ர‌வ‌ழைத்தது. அதுவும் சுசீலாவை புதைக்கும் போது அவ‌ள் எப்போதும் கேட்கும் க‌ந்த‌ச‌ஷ்டி ஒலிப்ப‌து க‌வித்துவ‌மாக‌ இருந்த‌து. என்ன‌தான் பேராண்மை கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ராக்கெட் ச‌ம்ம‌ந்த‌மாக‌ கூட‌ தெரிந்திருப்ப‌து மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. மொத்த‌த்தில் மிக‌வும் அருமையான‌ ப‌ட‌ம். வ‌ள்ளுவ‌ன் சொன்ன‌ பிற‌ன்ம‌னை நோக்கா இருப்ப‌து பேராண்மை என்ப‌திலும் நாட்டை நேச‌ப்ப‌தும் பெண்க‌ளை ம‌திப்ப‌தும் பேராண்மை என்று சொல்லி இருக்கும் அழ‌கு மிக‌ நேர்த்தி.


அடுத்த‌ப‌டி க‌வ‌ர்ந்த‌து... ஆயிர‌த்தில் ஒருவ‌ன். முத‌ல் பாதியில் சோழ‌ இள‌வ‌ர‌ச‌ன் தமிழ‌க‌த்திலிருந்து விய‌ட்நாம் அருகில் இருந்த‌ ஒரு தீவில் சென்று வாழ்ந்த‌தாக‌வும் அவ‌ன் விட்டு சென்ற‌ த‌ட‌ங்க‌ளை தேடி சென்ற‌வ‌ரை தேடும் பொருட்டு ஒரு ப‌டை கிள‌ம்புகின்ற‌து. ஏதோ ம‌ந்திர‌ த‌ந்திர‌ க‌தைக‌ளில் வ‌ருவ‌து போல‌ இருக்கின்ற‌து முத‌ல் பாதி. க‌ட‌ல், புதை ம‌ண‌ல், நாக‌ம், காட்டுவாசிக‌ள், ப‌சி, தாக‌ம் என்று சோழ‌ர்க‌ள் ஏற்ப‌டுத்திய‌ ஏழு த‌டைக‌ளை (இர‌ண்டு த‌டைக‌ள் சரியாக‌ விள‌ங்க‌வில்லை) தாண்டி செல்கின்ற‌தாம் அந்த‌ ப‌ய‌ண‌ம். இறுதியாக‌ ப‌ல‌ இழ‌ப்புக்குபின் அந்த‌ ந‌க‌ரை அடைகின்ற‌னர் சில‌ர். அங்கே நிஜ‌மாக‌வே சோழ‌ர்க‌ள் 800 ஆண்டையும் தாண்டி வாழ்வ‌தாக‌வும் பாண்டிய‌ வ‌ம்ச‌த்து எஞ்சிய‌ சில‌ர் த‌ங்க‌ள் ப‌ர‌ம்ப‌ரை தெய்வ‌ சிலையை மீட்க‌வே இந்த‌ ப‌ய‌ண‌த்தை மேற்கொள்வ‌தாக‌ சொல்லி க‌தை ந‌க‌ர்த்தி இருப்ப‌து இர‌ண்டாம் ப‌குதி. இதில் சில‌ குழ‌ப்ப‌ங்க‌ளை த‌விர்த்திருந்தால் இந்த‌ ப‌ட‌த்தை க‌ண்டிப்பாக‌ ஒரு உல‌க‌ த‌ர‌மிக்க‌ ப‌ட‌மென்று சொல்லி இருக்க‌லாம். த‌டைக‌ள் சில‌ ச‌ரியாக‌ புரிய‌வில்லை. க‌ட‌லில் என்ன‌ த‌டை என்றே தெரிய‌வில்லை. எப்ப‌டி ச‌ட‌ச‌ட‌வென்று ம‌க்க‌ள் இற‌க்க‌கின்ற‌ன‌ர் என்று தெரிய‌வில்லை. மேலும் சோழ‌ ந‌க‌ர‌த்தை அடைந்த‌வ‌ர்க‌ளுக்கு ஏன் பைத்திய‌ம் பிடித்த‌து போல‌ ஆகிற‌து. சோழ‌ ம‌க்க‌ள் உண‌வை நோக்கி வ‌ரும் போது ம‌ன்ன‌ன் ஏன் அடித்து விர‌ட்டுகிறான். பாண்டிய‌ இள‌வ‌ர‌சி சோழ‌ ம‌ன்ன‌னை கூட‌ ஏன் விழைகிறாள். ஏன் மாயாஜால‌ காட்சிக‌ள் போல‌ பல‌ காட்சிக‌ள் வ‌ருகின்ற‌து. க‌டைசியில் ஏன் அந்த‌ ப‌டை வீர‌ர்க‌ள் சோழ‌ பெண்டிரிட‌ம் அத்த‌னை வ‌க்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ன‌ர். இதெல்லாம் விள‌க்காம‌லேயே ப‌ட‌ம் முடிந்து விடுகின்ற‌து. ஆயினும் மிக‌ வித்தியாச‌மான‌ முய‌ற்சி. க‌ண்டிப்பாக‌ செல்வ‌ராக‌வ‌னை ந‌ம்பி படம் பார்க்கச் செல்வோரின் எதிர்பார்ப்பு வீணாக‌வில்லை.


மூன்றாவ‌தாக‌ ரேணிகுண்டா, க‌தைக்க‌ள‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ எல்லாமே மிக‌வும் பிடித்திருந்த‌து. சுப்‌ர‌ம‌ணிய‌புர‌ம் போன்றே வ‌ன்முறையை சாதார‌ண‌மாக்கிவிட்டு போய் இருக்கின்ற‌து இந்த‌ப‌ட‌ம். மனைவியை த‌ன் ப‌ண‌க‌ஷ்ட‌த்திற்காக‌ பாலியல் தொழில் செய்ய‌ சொல்லும் க‌ண‌வ‌னிட‌ம் இருக்கும் குற்ற உண‌ர்விலிருந்து, அப்ப‌டியிருக்கும் பெண்ணும் மேலும் ப‌ண‌த்திற்காக‌ கொல்லும் கூலிப்ப‌டையாக‌ இருப்ப‌வ‌ரிட‌ம் கூட‌ இருக்கும் இர‌க்க‌மும் நேர்மையும் வ‌ரை ப‌ட‌ம் பிடித்து காட்டி இருப்ப‌து அருமை. மிக‌ எளிய‌ சினிமாத‌ன‌ம‌ற்ற‌ க‌தாபாத்திர‌ அமைப்புக‌ள். த‌ன‌து ந‌ண்ப‌னை கொல்லும் வ‌ரை வ‌ன்முறையில் ஈடுப‌டாத‌ நாய‌க‌ன் அத‌ன் பின் இர‌ண்டு கொலை செய்வ‌தும் மிக‌ இய‌ல்பாக காட்ட‌ப்ப‌டிப்ப‌த‌ற்கு ஒரு ச‌பாஷ். ஆனால் க‌தாநாய‌கி மேல் இறுதி க‌ட்ட‌த்தில் கூட‌ ஒரு ப‌ரிதாப‌ம் வ‌ராம‌ல் போன‌து இந்த‌ ப‌ட‌த்தின் தோல்வி. பல‌ காட்சிக‌ள் க‌வித்துவ‌மாக‌ இருந்தது. ப‌ல‌ர் ந‌டிப்பு பாராட்டும் வ‌ண்ண‌மிருந்த‌து.

க‌டைசியாக‌ ‘குட்டி‘. இந்த‌ ப‌ட‌ம் மிக‌வும் அபாரமாக‌ இருந்த‌து. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் பார்த்துவிட்டு வ‌ந்த‌தும் என் க‌ண‌வ‌ர் அருகில் இருந்த‌ திரைய‌ர‌ங்கில் ஓடிக்கொண்டிருந்த‌ குட்டி ப‌ட‌த்தை பார்த்திருக்க‌லாம் என்றார். ஆனால் குட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது பேசாம‌ல் க‌ட‌ற்க‌ரை போய் வ‌ந்திருக்க‌லாம் என்றார். மொத்த‌த்தில் குட்டி ஒரு வெட்டி.

ஆகா... பார்த்த‌ நான்கு ப‌ட‌ங்க‌ளில் ச‌மீப‌கால‌த்தில் திரைய‌ர‌ங்குக‌ளில் ந‌ட‌க்கும் சில‌ விச‌ய‌ங்க‌ள் எனை மிக‌வும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்ற‌து. நான் பேராண்மையை என் சொந்த‌ ஊர் முசிறியில் பார்த்தேன். அங்கே நாங்க‌ள் திரைப்ப‌ட‌ம் பார்த்த‌ அன்று முத‌ல் வ‌குப்பில் எங்க‌ளையும் சேர்த்து ஆறு பேரும் மேலும் மொத்த‌ திரைய‌ர‌ங்கில் ப‌தினைந்து பேர்தான் ப‌ட‌ம் பார்த்தோம். முசிறியில் இருக்கும் ஒரே அர‌ங்க‌ம் அதுதான். இன்னொன்று திரும‌ண‌ ம‌ண்ட‌பமாக‌ மாறிவிட்ட‌து. ஆனால் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் வெளிவ‌ந்த‌ ம‌றுநாள் திருச்சியில் ர‌ம்பாவில் பார்த்தோம் முத‌ல் வ‌குப்பு டிக்கெட் விலை 120 ரூபாய் இதன் ச‌ரியான‌ விலை 50 ரூபாய் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இப்ப‌டி அதிக‌ப்ப‌டியாக‌ வ‌சூலிக்க‌ப்ப‌டும் பணம் யாருக்கு செல்கிறது...? திரையரங்குகள் இப்படி அதிக‌ கட்டணம் வ‌சூலிப்ப‌தால் தான் திருட்டு விசிடிக‌ள் ம‌லிகின்ற‌ன‌. என்ன‌ சொல்ல‌... விரைவில் திரைப்ப‌ட‌ங்க‌ளை விசிடிக‌ளிலும் அல்ல‌து தொலைக்காட்சிக‌ளிலும் ரிலிஸ் செய்தால் ஆச்ச‌ரிய‌மில்லை.