Sunday, August 24, 2008

குழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்

அன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.

நான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.

எதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.

எதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.

என் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அருகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.

Saturday, May 24, 2008

அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு

ஒரு வழியாக இரண்டு வருடங்களாக படித்து கொண்டிருக்கும் யூமா வாசகியின் "அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு" என்ற கவிதை தொகுப்பை படித்து முடிக்க வாய்த்தது தனிமையோடான நீண்டதொரு பயணம். இந்த தொகுப்பை எனக்களித்த பாம்பாட்டி சித்தன் அவர்களுக்கும், அவரை எனக்கு அறிமுகம் செய்த முத்தமிழுக்கும், முத்தமிழுக்கு என்னை அறிமுகம் செய்த நிலாரசிகனுக்கும் நன்றி.

அனேகமாய்
வெயிலற்ற ஒரு பொழுதில் - உன்
வீடுள்ள தெருவழியாய் - நான்
என்றாவது நடக்க நேரிடும்.

என்று ஆரம்பிக்கும் இந்த கவிதை தொகுப்பின் முதல் கவிதையே படிக்க ஆரம்பித்ததுமே மிக அருமையான கவிதை தொகுப்பை தந்த சித்தருக்கு ஆயிரம் நன்றிகள் கூறிக் கொண்டேன். அப்படி என்ன விசேசம் இந்த கவிதையில் என்பவர்களுக்கு, ஒருவேளை அப்படி நான் நடக்கும் போது உள்ளே இருக்கும் நீ எந்த காரணத்திற்காவும் வெளியே வர வேண்டாம் வந்தாலும் யாருக்கும் தானம் கொடுக்கும் நோக்குக்கு உண்டான அளவான ஈர்போடு மட்டும் வா. உடனே உள்ளே சென்று விடு. ஒருவேளை

"உணர்ந்து பெயர்கூவி
அணைக்கின்ற ஆசையோடு
நெருக்கிவிடாதே
அதோடு என் பயணம் முடிந்துவிடும்."

:)

ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும் என்ற தலைப்பில் இடப்பட்டு இருக்கும் ஏழுகவிதைகளும் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அழகாக இருக்கின்றன. முத்தாய்ப்பாக

"என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்"

என்று அழைப்பது யாரை தெரியுமா? பிறை கூடிய அந்த இறையை, சிவபெருமானை.

"நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவிசெய்து ஒத்திருப்போம்"

என்று சொல்லும் போதும், வரும்போது நந்தியையும் நாகத்தையும் அழைத்து வா எனக்கு டீயும் சிகரெடும் வாங்கி வர தேவைப்படும் என்று சொல்லும் போதும் கவிக்கே உரிய ஆளுமை புலப்படுகின்றது.

தொகுப்பு முழுவதும் அழகியல் மழைத்துளிகளாக அங்காங்கே அழகாக தெளிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றில் இங்கே நனைவோம்

"கடவுள் விரல்கள் காட்டும் அபிநயங்களின்
அர்த்தங்களறியாதவர்களுக்குதவ உன் கொலுசு
தூண்டற்குறிப்புகளை வாரி சொரிந்தது."

தூண்டற்குறிப்புகள் என்பது அழகான சொல்லாடல் அல்லவா?

"பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று
சொட்டியதிர்கிற ஓசையையில்"

"உன் கொலுசொலி நிரம்பிய கடல் இந்த வராண்டா"

"கருகமணிகளின் சறுக்கு விளையாட்டில்
விழிக்கு வெளியேயும் சிதறும் பனுச்சில்லுகள்"

"உன் உள்ளங்கைகளின் மருதாணி புள்ளிகளிலிருந்து
பிறந்து வரும் இரவுகாலம்"

"உன் தீண்டலில் பொடிந்து தூசுபடலமாவேன் - அதில் நீ
வரையும் வடிவாய் வெளிப்படுவேன்"

"எங்கோ பெய்த மழை உன் பாதங்களை முகர்ந்தபடி
தவழ்ந்து வருகிறது என் வறட்சிக்கு"

அத்தனையும் அழகியல் அற்புதமான மொழி வசப்பட்டு இருக்கின்றது இந்த கவிஞருக்கு.

மேலும் கவிஞர் பெண்மையை போற்றும் இடத்திருக்கு பல இடங்களில் ஆதாரம் இருக்கின்றன். "உடலுக்கு வெளியே இலங்கும் உறுப்புகள் அனைத்திக்கும் இயக்கம் என்பது உன்னை வியப்பதே" இதை விட பெண்மையை போற்ற இயலுமா?

கவிஞர் கையாண்டு இருக்கும் உவமைகள் கூட அழகோவியமாய் திகழ்கின்றது.

"உச்சிகிளை இலவங்காய் வெடித்து - பஞ்சுப் பிசிறு
மெல்ல நிலமணைவதுபோல்" என்று தன் காதலியின் மெல்லிய நடைக்கு ஒப்பிடுகின்றார்.

"கன்னத்துப் பருவாக ஆஷ்டிரேவிற்குள் கிடக்கிறேன்"


மேலும் கவிஞர் துரோகத்தை வெறுப்பை பதித்திருக்கும் விதமும் அருமை "செரிப்பற்று இடறும் என் அன்பை மறைவில் சென்று வாந்தியெடுத்துப் போ".ஒரு முயல் வடிவ குப்பைத் தொட்டிக்கு கூட இரங்கும் கவிஞரின் சிந்தனை அதி அற்புதமானது.

பிளர்ந்தெரியும் நெருப்பாக தகிர்க்கும் தருணமும் "புகையின் முனையில் என் உதடுகள் உன் இருப்பிடத்தின் கதவுகளை முத்தமிட்டுத் திரும்புகின்றன" என்கின்றார். அவ்வளவு அதி
உன்னத காதல் அவரது.

தனிமையில் காதல் நுகர்தலை இதை விட அழகாக சொல்லமுடியுமா?

"இரவில் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிற்கும் உன் கனம்
பல நூறு துடிப்புகள் ஓடஓடத் துரத்தியடிக்கின்றன"

அடுத்து...

"இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருந்தேன்."

என்று ஆரம்பிக்கும் இந்த கவிதையில் கவிஞர் தன் அறையில் காதலி வந்து சென்றது போல நினைத்து தடயத்தை தேடுக்கின்றார். ஒரு துப்பறியும் நாவல் போல விருவிருப்பாக
இருக்கின்றது கவிதை. எங்கும் தேடி கிடைக்காத தடயம் தண்ணராக நீர்சாடியில் இருக்கின்றது. காலையில் காலியாக இருந்த சாடியில் நீர் இருக்கின்றது இப்போது. கைப்பட்டு சாடி கவிழ்ந்து அவர் நனைகின்றார் நாமும் தான்.

ஒரு கலவியை காமத்தை சொல்லிவிட்டு இறுதிவரிகள் இப்படி இருக்கின்றன

"கவுண்டருக்குள்ளிருந்து அவள்
சாந்தமாகவே டிக்கெட் கொடுத்தாள்
பெற்றகன்று
வழியோரம் துப்பிய எச்சில்
விழுந்தது விந்தென"

படிக்கும் போது அதிராமல் இருக்க முடியவில்லை.

இறுதியாக நான் தொலைந்து போன கவிதை இதோ.

"குற்ற உணர்வில் குமைந்து
கைகளைப் பிசைந்தபடி இத்திடலில் உலவும்போது"

இப்படி கவிஞர் கூறுவது காற்றை. காற்றுக்கு ஏன் இந்த குற்ற உணர்வு, ஒரு வேளை எங்கோ கடல் கொந்தளிபையோ, ஒரு புயலையோ ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறுவனில் பட்டத்தையோ அறுத்திருக்க வேண்டும் என்கின்றார். அதற்கு பரிகாரமாக சற்றே தூரத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டு இருக்கும் காதலியின் கூந்தலை அடிக்கடி நெற்றிக்கு தள்ளுகின்றாம் அதை ஒதுக்கும் போதெல்லாம் அவள் அவரை பார்க்கின்றாள்.

"பாவத்திற்கொரு பரிகாரம் செய்யும் பதட்டத்தில்
அது என்னைப் பலியிட்டுப் போய்விட்டது" என்கின்றார். :)

உடலியல் மொழியும் விரசமும் நிறம்பி ததும்புகின்றது பல கவிதைகளில். ஆனாலும் நல்ல கவிதைகளை பதிவிக்க ஆசைக் கொள்ளும் அனைவரும் ஒரு முறையேனும் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.

Thursday, January 24, 2008

ப‌டித்த‌ க‌விதைக‌ள்

தப்பித்தலின் சாத்தியங்கள்...
============================

நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..

விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

- காயத்ரி

வசந்தத்தின் திரட்சி
===================

கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய
விழுதுகளாய்
மண்ணோடு பிணைந்து விடும்
பிரயத்தணங்களோடு
எப்போதும் எதிர்த் திசையில்
ஒரு பயணம் நினைவுகளால்
கடந்து விட முடியாதவையாய்
மீண்டும் மீண்டும் பேசிப் போகும்
உன் வார்த்தைகள்
தொடர் செவி மடுத்தலில்
மறைந்திருக்கும் இன்னுமொரு பொருள்
முகம் காட்டிச் சிரிக்கும்

நிகழும் வசந்தங்களைப்
பதுக்கி வைத்துக் கொள்ள
திட்டமிட்ட வேளையில்
பயமுறுத்தும் இதற்கு முன்
தாண்டிச் சென்ற கோடை

இருந்தும்
என் காலடியிலெங்கும்

வசந்தத்தின் திரட்சி
பயத்தின் நிழல் மீறி
நாற்றுக்களாய் நெளிந்து
துளிர்விடத் துவங்கியிருக்கும்

- திலகபாமா

...
====

கண்கள் இறுக்கி
கொஞ்சமேனும் மூச்சடக்கி
ஆலம் விழுதைப் பற்றி
காற்றோடு பயணிக்கும் உற்சாகத்தை
உள்ளங்கை உராய்தலுக்கு அஞ்சி
தவறவிட்டதுண்டு ...

- ல‌ஷ்மி சாக‌ம்ப‌ரி

க‌ன‌வில் அல்லி ப‌திய‌ன்க‌ள்
=========================

எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் வடிவொத்து
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லிதாளுக்கு

- கௌரிப்ரியா

Monday, September 24, 2007

ஓயாத அலைகள் (புனைவு)




ம‌ணி காலை 6.52 இன்று இர‌ண்டு நிமிட‌ம் நேர‌மாகிவிட்ட‌து வீட்டிலிருந்து கிள‌ம்ப‌. சீருந்து ஓட்டுன‌ரிட‌ம் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌ ஓட்ட‌ச் சொன்னேன்.

அக‌நாழிகை பத்திரிகையில் "பாலை நில‌ காத‌ல்" எஸ்.செந்தில் குமார்.சிறுகதையை வாசிக்க‌ ஆர‌ம்பித்தேன்.

'பெருமாள் சாக்கை விரித்து போட்டு வாச‌லுக்கு அருகில் ப‌டுத்திருந்தான்.'

சீருந்து ஒரு ப‌ள்ள‌த்தில் ஏறி இற‌ங்கிய‌து. நேர‌ம் கார‌ண‌மாக‌ கொஞ்ச‌ம் வேக‌மெடுக்க‌ குறுக்கே வ‌ந்த‌ ஒரு சிறுமிக்காக‌ ச‌ட்டென‌ பிரேக்கை அழுத்தினார் ஓட்டுன‌ர். திடுக்கிட்டு க‌வ‌ன‌ம் சித‌றினேன்.

'வீட்டினுள் ப‌டுத்திருந்த‌ குழ‌ந்தைக‌ள் மேல் வெளிச்ச‌ம் உடையை போல் ப‌ட‌ர்ந்து நின்ற‌து'

அட‌ என்ன‌ ந‌ல்ல‌ உவ‌மான‌ம் இது எஸ்.செந்தில் குமார் ஒரு க‌விஞ‌ரும் கூட‌ அல்ல‌வா? அது வ‌றுமையை காட்டும் ப‌டிமாக‌ கூட‌ எடுத்துக் கொள்ள‌லாம் அல்லவா? எஸ்.செந்தில் குமாருக்கு சுந்த‌ர‌ராம‌சாமி விருது கிடைத்திருக்காமே இந்த‌ வ‌ருட‌ம்... அவ‌ர் க‌விதைக‌ள் சில‌ ம‌ண்குதிரையின் வ‌லையிலும் ப‌டித்தோம‌ல்ல‌வா, இந்த‌ முறை சென்னை செல்லும்போது அவ‌ர் க‌விதைத்தொகுப்பு வாங்க‌ வேண்டும்.


'பெருமாள் எதிரேயிருந்த‌ பொன்ராஜின் வீட்டைப் பார்த்தான்'

ம‌ணி 7.00 அடுத்த‌ இல‌க்கை அடைந்திருந்த‌து எங்க‌ள் சீருந்து. நித்தீஷ் ஏறிய‌தும் “ச‌ந்தீபிற்கு என்ன‌ ஆயிற்று இர‌ண்டு நாட்க‌ளாக‌ காண‌வில்லையே“ என்றேன். காலில் அடிப்ப‌டிருப்ப‌தாக‌ நித்தீஷ் சொன்னான். மீண்டும் வாசிப்பை தொட‌ர்ந்தேன்.

'தான் இற‌ந்த‌ பிற‌கு பிள்ளைக‌ளும் ம‌னைவியும் என்ன‌ செய்ய‌ போகிறார்க‌ள்'

எங்க‌ள் சீருந்தை க‌ட‌ந்த‌ ஒரு ப‌ள்ளிப் பேருந்தில் ஒரு குழ‌ந்தை அழ‌காக‌ சிரித்தாள் க‌ன்ன‌த்தில் குழி விழுந்த‌து. அவ‌ள் பார்க்க‌ விஜ‌ய் தொலைக்காட்சியில் வ‌ந்த‌ க‌னாக்காணும் கால‌ங்க‌ள் ஹேமாவை போல் இருந்தாள். ஹேமாவை என‌க்கு பிடிக்கும் அவ‌ள் ந‌ல்ல‌ ந‌ட‌ன‌க்காரி என்ப‌து ம‌ட்டுமில்லை அவ‌ளுக்கு க‌ர்வ‌மில்லை. பிரிய‌த‌ர்ஷினி கூட‌ அப்ப‌டித் தான். ந‌ல்ல‌ ப‌ல‌ திற‌மைக‌ள் இருந்தும் அவ‌ளிட‌ம் க‌ர்வ‌ம் என்ப‌து துளியும் இல்லை. இத்த‌னைக்கும் எல்லா தொலைக்காட்சி அலைவ‌ரிசையிலும் இருக்கின்றாள் அவ‌ள். திவ்யத‌ர்ஷினி திற‌மை இருந்தாலும் கொஞ்ச‌ம் அல‌ட்ட‌ல் அதிக‌ம் போல் தோணுது. இருந்தாலும் இது என் எண்ண‌ம் ம‌ட்டுமே.

'பெருமாள் ஒன்றும் பேச‌வில்லை. பேசினால் தான் ஏதாவ‌து உள‌ரிவிடுவோமோ என்று நினைத்தான்'
க‌தையின் ஓட்ட‌ம் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து.

நாமும் எழுத‌னும். காலையில் நினைத்தோமே. அது என்ன‌ இட‌ம் ம‌ங்க‌லாக‌ தான் நினைவிருக்கிற‌து. நான் சூட்கேஸை எத‌ற்கு திற‌ந்தேன் என்று தெரிய‌வில்லை. ஆனால் அதில் நிறைய‌ பெருட்க‌ளை திண‌றிக் கொண்டிருந்த‌து வெளியே விழுந்து விட்ட‌து. ச‌ரி அக்கா எங்கே அவ‌ச‌ர‌மாக‌ சென்று விட்டாள். மாமா வ‌ந்திருந்தாரா கூட‌? அவ‌ர்க‌ள் விமான‌த்திற்குள் சென்றிருக்க‌ வேண்டும் இந்த‌ நேர‌ம்.

என‌க்கு ம‌ட்டும் ஏன் இந்த‌ சோத‌னை? இந்த‌ அக்கா கொஞ்ச நேர‌ம் கூட‌ இருந்திருக்க‌ கூடாதா? போர்டிங் பாஸ் வாங்கியாற்று. ச‌ரி எங்கே செல்ல‌ வேண்டும் இந்த‌ விமான‌ம் அடைய‌. அதோ அனுராதா வ‌ந்திருக்கிறாள் அவ‌ளும் சென்னை தானே செல்ல‌ இருந்தாள்.

விமான‌த்திற்கு எப்ப‌டி செல்வ‌து? "நேரே சென்றால் க‌டைசி ஸ்க‌லேட்ட‌ர்." அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ஓடினேன். ‘இந்த‌ விமான‌ம் சென்னை செல்லுமா?‘ என்று ஆங்கில‌த்தில் கேட்டேன்.

அவ‌னும் அப்ப‌டி தான் நினைக்கிறேன் என்றான். அப்ப‌டித்தான் என்றால் ‘அட‌ங்கொங்யா‘. ச‌டுக்கில் பார்த்தேன் என் கைப்பை கீழே விழுந்து விட்ட‌து. யாராவ‌து எடுத்து தாங்க‌ளேன். ஏன் யாருமே எடுக்க‌ வில்லை.

நானே கீழே சென்றேன். ச‌ரி ஸ்க‌லேட்ட‌ர் ஏன் நின்று விட்ட‌து. அய்யகோ ஏன் க‌த‌வ‌டைத்து விட்டார். செக்யூரிட்டி போர்டிங் முடிவிட்ட‌தாக‌ சொல்கிறானே.

என்னிட‌ம் போர்டிங் பாஸ் இருக்கிற‌து என்று சொன்னாலும் அவ‌னுக்கு விள‌ங்க‌வில்லையே. என்ன‌ செய்வேன்? என்னைக் காண‌வில்லை என்று அக்கா என்ன நினைப்பாள்.

ச‌ட்டென‌ விழிப்பு த‌ட்டிய‌து. காலை 3.20. அட‌ச்சே க‌ன‌வு. ச‌ரி இதை ஒரு க‌தையாக்க‌ வேண்டும். அக்கா என்று எழுத‌ கூடாது அக்கா கோபித்துக் கொள்வாள்.



'அரைக்கீரையை தோட்ட‌த்திலிருந்து அறுத்துக் கொண்டு வ‌ந்து க‌டைந்து' காலை 6.00. சே.. அந்த‌ க‌ன‌வு வ‌ந்து விழிப்பு த‌ட்டிய‌தா?

மீண்டும் ச‌ரியா தூங்க‌ முடிய‌லை அப்ப‌தான் க‌ண்ண‌ய‌ர்ந்த‌து போல‌ இருந்த‌து அலார‌ம் அடித்துவிட்ட‌து. கொஞ்ச‌ம் சோம்பி குளிச்சிட்டு வ‌ந்தா ஆறாச்சு. சாப்பாடு வைச்சி க‌த்த‌ரிக்காயை க‌டைந்து ர‌ச‌த்துக்கு புளி க‌ரைக்கும் போது ம‌ணி 6.30. இந்த‌ நேர‌ம் நாம் அவ‌ச‌ர‌மாக‌ இருக்கும் போது ஏன் இப்ப‌டி ப‌ற‌க்கிற‌து. நேற்று த‌லைவ‌லி என்று வேலை ஓடாத‌ போது மாலை நான்கிலிருந்து ஐந்தாக‌ அதிக‌ நேர‌மான‌த‌ல்ல‌வா? பூசை முடித்து அவ‌ர‌ச‌மாக‌ காபி குடித்து 6.49.

வீடு பூட்டி வெளியே வ‌ந்தால் “த‌ண்ணீர் தாங்க‌ தங்கச்சி“ என்ற‌ ஓட்டுன‌ருக்கு தண்ணீர் நிரப்பி காலை 6.52 கிள‌ம்பியாச்சு அக‌நாழிகையில் படித்து முடிக்க வேண்டிய க‌டைசி க‌தையை இன்றைக்குள்ளாவது ப‌டிக்க‌ வேண்டும்.


'பாக்கிய‌ம் அவ‌னுட‌ம் "மாமா அப்புகுயெத்தானும் எதினும் தீசீயினி ராஒத்தோ" என்றாள்'

காலை 3.20 சே.. என்ன‌ இந்த‌ க‌ன‌வு தூங்க‌ணும் இல்லாட்டி அலுவ‌ல‌க‌த்தில் தூக்க‌ம் வ‌ரும். ச‌ரி அந்த‌ க‌ன‌வுக்கு கார‌ண‌ம் என்ன‌வா இருக்கும்

ப்ரான்க்போர்டில் இணைப்பு விமான‌ம் பிடிக்கும் போது அலுவ‌ல‌க‌த்தில் விமான‌சீட்டை மாற்றி த‌ர‌ தேவையான‌ ப‌ண‌ம் க‌ட்ட‌தால் க‌டைசி நேர‌ம் வ‌ரை போராடி விமான‌த்தை பிடித்த‌தும் அந்த‌ விமான‌ நிலைய‌ம் மிக‌ பெரிய‌தாக‌வும் அங்கே பாஷையும் திசையும் விள‌ங்காம‌ல் அலைந்து ப‌த‌ட்ட‌மாக‌ விமான‌ம் பிடித்த‌தும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாமோ...


இதை எப்ப‌டி எழுத‌லாம், அட‌ இப்போதான் தூங்கின‌து போல‌ இருக்கு அல‌ராம் அடிச்சிடுச்சே. த‌ண்ணீர் சுட‌ வைச்சிட்டு மீண்டும் கொஞ்ச‌ நேர‌ம் ப‌டுத்திருப்போம். அய்யோ ம‌ணி ஆறாச்சு.

'இர‌ண்டு மூன்று தின‌ங்க‌ளுக்கு முன் பெருமாளுக்கு க‌ட‌னுக்கும் ப‌ண‌ம் த‌ந்த‌வ‌ன் கூடுத‌லாக‌ நாலு வார்த்தை பேசி'

அலுவ‌ல‌க‌த்தில் போனா அதே வேலை. நான் சொல்லும் கார‌ண‌ங்க‌ளை ஏற்ப‌தில்லை மேலாள‌ர். அதை நான் சொல்லி அவ‌ன் சொன்னால் ஏற்கிறார். என‌க்கு எதுவும் தெரியாது என்று ஏன் எல்லோரும் முன் கூட்டியே தீர்மானிக்கிறார்க‌ள். வேலை விச‌ய‌த்திலும் ச‌ரி எழுதும் விச‌ய‌த்திலும் முத‌ல் முறை ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அதே நிலையில் தான் அவ‌ர்க‌ள் அறிவு என்றும் இருக்கும் என ஏன் மேதாவிக‌ள் எல்லோரும் நினைக்கிறார்க‌ள். எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டேயா வ‌ருகின்றார்க‌ள். எல்லாம் க‌ற்றால் தானே வ‌ரும் அல்ல‌வா?

எனக்கு ஏன் இந்த‌ அவ‌மான‌ம்.

'பாக்கிய‌ம் எல்லோருக்கும் பொதுவாக‌ க‌ஞ்சி காச்சினாள்.'

இர‌ண்டு லாரிக‌ளும் ஒரு சுவிப்டும் க‌ட‌ந்து போன‌து எங்க‌ள் சீருந்தை. ஒரு இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் ம‌ண் த‌ரையில் புழுதியை கிள‌ம்பியப‌டி சென்ற‌து. சாலையோர‌ம் தின‌ம் பார்க்கிறேன் ரங்க‌னுக்கு வீச‌ப்ப‌டும் வெண்சாம‌த்தை ஒத்திருக்கும் இந்த‌ க‌திர்க‌ளை. பார்க்க‌ மிக‌ அழ‌காக‌ இருக்கின்ற‌து.

ஒரு க‌விதை எழுத‌வேண்டும் இதை ப‌ற்றி. சோளத்த‌ட்டை போல் இருக்கும் த‌ட்டை குறைந்த‌ப்ப‌ட்ச‌ம் ஆற‌டி இருக்கும். அத‌ன் மேல் ம‌ல‌ர்ந்து விரிந்திருக்கும் இந்த‌ க‌திர்க‌ள் மென்மையாக‌ இருக்குமோ?

ஒரு விடுமுறை நாள் அவ‌ரோடு இந்த‌ புற‌ம் வ‌ந்து இவ‌ற்றை உண‌ர‌ வேண்டும். இத‌ன் பெய‌ர் என்ன‌வாக‌ இருக்கும்.நான் அந்த‌ அள‌வு அறிவாளியில்லை சுவார‌ஸியமான‌ பெய‌ர்க‌ளை உருவாக்க‌.

அய்யனார் பெய‌ர் தெரியாத‌ ப‌ற‌வைக்கு அட‌ர்தீற‌ல் கொண்ட‌ நீல‌ப்ப‌ற‌வை என்றும், பெய‌ர் சொல்லாம‌ல் அர‌ட்டையில் வ‌ரும் ஒரு பெண்ணுக்கு உரையாட‌லினி என்றும் பெய‌ர் வைத்தார்.


'பெருமாள் பிள்ளைக‌ளோடு இற‌ந்து கிட‌ந்தான்'

காலை 7.43 அட‌ இர‌ண்டு நிமிட‌ம் தாம‌தத்திலும் ச‌ரியாக‌ அலுவ‌க‌ல‌ம் அடைந்துவிடுவோம் போல‌ இருக்கே. வெளியில் ஒரு கூடையில் ம‌ஞ்ச‌ள் ரோஜா ம‌ற்றும் சிவ‌ப்பு ரோஜாக்க‌ள் கொண்ட‌ ஒரு சைக்கிள் க‌ட‌ந்து சென்ற‌து. அவை எல்லாம் பெங்களூர் ரோஜாக்க‌ள். ஆனால் விளையும் இட‌ம் குர்க‌வுனாக‌ தான் இருக்கும். பின் ஏன் அத‌ற்கு பெங்க‌ளூர் ரோஜா என்று பெய‌ர் வ‌ந்த‌து.


'அன்ன‌லெட்சுமியை பார்க்கும் போதெல்லாம் ம‌ன‌தில் அழுகை கூடுவிடும். பொன்ராஜிக்கும் அன்ன‌லெட்சுமிக்கும் தான் முத‌லில் க‌ல்யாண‌ம் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌து'

காலை 7.45 அலுவ‌ல‌க‌ம் வ‌ந்துவிட்ட‌து. சீருந்தை விட்டு இற‌க்கும் போது க‌வ‌னித்தேன். கதையின் ஒரு பக்கத்தை கூட வாசித்து முடிக்கவில்லை. பாதிதான் முடிந்திருந்த‌து.

'பொன்ராஜிக்கு டிவிக் டிவிக் ம‌ஞ்ச‌ள் மூக்கு மைனாவின் ச‌ப்த‌த்தை கேட்கிற‌ போது அழுகை வ‌ந்துவிடும்'

ஏன் என்று மாலை ப‌டிக்கும் போது தான் தெரியும்.

ச‌ரி இந்த‌ புனைவை முற்ற‌ம் என்ப‌தா தொட‌ரும் என்ப‌தா?

000

Sunday, June 24, 2007

கூடிடு கூடலே

நாச்சியார் திருமொழியின் ஐநூற்றி மூப்பதி நான்காம் பாடலின் ஆரம்பித்து வரும் பத்து பாடல்களில் ஆண்டாள் கூடல் இழைத்து பார்த்து கண்ணன் தன்னை மணப்பான் என்று மணம் தேற்றிக் கொள்வாள். கூடல் இழைப்பதென்பது, கை நிறைய மஞ்சள் கிழங்குகளை அள்ளி எடுத்து அவற்றை இரண்டிரண்டாகச் சேர்த்து இரட்டையாகச் சேர்ந்தே வருகின்றனவா கடைசியில் ஒற்றையாக ஒன்று தனித்து நிற்கிறதா என்றுப் பார்ப்பது தான். இரட்டையாக வந்தால் எண்ணம் கை கூடும்; நினைத்தது நடக்கும் என்று மனம் தேறலாம்.

"திருமாலிருஞ்சோலை வாழ் என் மணாளனார் பள்ளி கொள்ளும் போது அவர் கால்களை நான் வருடிடும் பேறு கிட்டுமா", "வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வானா", "வசுதேவரின் இளவரசன் வருவானென்றால் ","காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால்", "குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில்", 'கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில்", "கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில்", "நிலவுலகத்தையும் அண்டங்களையும் ஒவ்வொரு அடியால் அளந்து தன் உரிமையாய்க் கொண்டவன் வருவானெனில்", ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில்" கூடிடு கூடலே என்று கூறி கூடல் இழைக்கின்றாள் கோதை. அத்தனை முறையும் கூடல் கூடியே வருகின்றது.

இது ஒரு வகை மாய விளையாட்டு. இதை போன்ற பல நிகழ்வுகளை சகுனமாக கொண்டு இருக்கின்றேன் நான் என் வாழ்வில். நான் தினமும் மல்லிகை தொடுக்கும் முன் ரங்கனை வேண்டி சில விசயங்களை நினைத்த படி கூடிடுவாயோ கூடலே என்றபடியே மல்லிகை மலர்களை தொடுப்பது வழக்கம். தோழி சீக்கிரம் வேலை கிடைக்குமா? மல்லிகை தொடுத்து முடிக்கையில் இரட்டைபடையாக வந்திருந்து. இன்னுமொரு நண்பரின் இல்வாழ்கையில் பிணக்கு, அது சரியாக கூடிடு கூடலே என்ற போது கூடல் கூட்டிற்று. இன்னும் பலருக்காக பல விசயங்களை இப்படி நினைத்து கூடல் இழைக்கும் போது பெரும்பாலும் கூடியே வரும்.

அடிக்கடி ரிங்டோன் மாறி கொண்டே இருப்பார். இந்த முறை கூப்பிடும் போது "உனை நான் உனை நான்" பாட்டு இருந்தால், அம்மாவோட சண்டை போட்டு கொண்டு இருக்கும் பக்கத்து வீட்டுகாரன் சரி ஆவான் என்று நினைத்தேன். அவரை கூப்பிட்ட போது "உனை நான் உனை நான் கண்ட முதல்" என்ற பாட்டே ஒலித்ததது. அவரிடம் அம்மாவின் பிரச்சனையை சொன்னேன். வழக்கு பதிந்து அந்த பக்கத்து வீட்டுக்காரர் பண்ணிய அட்டகாசத்திற்கு ஒரு நீதி வாங்கி தந்தார். பணி இடத்தில் மிக அதிக தொல்லை இருந்தது. வேறு வேலையும் கிடைக்கவில்லை, எப்போதும் வெகு அரிதாக வரும் ஒரு பேருந்துக்காக காத்திருந்தேன். அந்த பேருந்து உடனே வந்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்து முடிக்கும் முன்னமே அந்த பேருந்தும் வந்தது, உடனே வேறு அலுவலகத்தில் வேலையும் கிடைத்தது.

இதை போல் ஆயிரம் விசயங்கள் சகுனங்களை நம்ப அது நடந்திருக்கின்றது. மனம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. எதை ஒன்றையும் மிக வேண்டினாலோ, மனமாற நினைத்தாலோ அது கண்டிப்பாக நடக்கும். சகுனங்கள் எல்லாமே மனதின் திடமும் சக்தியுமே. அப்படி தான் ஆண்டாள் கூடிடு கூடலே என்று கூறி கூடல் இழைத்தது. அந்த பத்து பாடல்களும் முத்து பாடல்கள்.

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ


ம‌ல்லிகை இந்த‌ பெய‌ருக்கே அப்ப‌டி என்ன‌ ஒரு ம‌ய‌க்கும் குண‌ம். ம‌ல்லிகை இந்த‌ பெய‌ர் கேட்டாலே ஏன் மல‌ர்ந்த‌ அத‌ன் அழ‌கும், ம‌ன‌ம் அப்பிக்கொள்ளும் ம‌ண‌மும் நினைவுவில் வ‌ருகின்ற‌து. முன்னொரு ப‌திவில் சொல்லி இருந்த‌ப‌டி, என‌க்கு ம‌ல்லிகை என்றால் கொள்ளை பிரிய‌ம். என் வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகையை அழ‌காக‌ நெருங்க‌ தொடுத்து எடுத்து த‌லையில் சூடிக் கொள்வ‌து என் தின‌ப்ப‌டி வேலை. உண‌வு உண்ப‌தை கூட‌ சில‌ வேளை ம‌ற‌ப்ப‌துண்டு ஆயினும் ம‌ல்லிகை தொடுப்ப‌தையோ அதை சூடிக்கொள்வ‌தையோ ம‌ற‌ப்ப‌தில்லை.

அலுவ‌ல் கார‌ண‌மாக‌ நேர‌ம் சென்று வீடு திரும்பினால் கூட‌ இருண்ட‌ இர‌விலும் விள‌க்கொளியின் உத‌வியோடு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை கொய்து எடுத்து மாலையாக்கி கொள்வ‌து என் விடாத‌ ப‌ணி. அதுவும் ஒரு ம‌ல‌ர் கூட‌ செடியில் விடாது கொய்து கொள்வ‌தென் வ‌ழ‌க்க‌ம். க‌ண‌வ‌ர் தின‌ம் கூறுவார் சில‌ ம‌ல‌ர்க‌ளை ம‌ட்டுமாவ‌து விட்டு செல், அல்ல‌து நீ தொடுக்கும் மாலையில் சிறிதேனும் தின‌ம் ர‌ங்க‌னுக்காவ‌து இட்டு செல் என்று. ஆயினும் அவ‌னோ நானோ வேறுவேறு அல்ல‌ர், யாமும் அவ‌னும் ஒன்றே என்றெண்ணி நானே சூடிக்கொள்வ‌து வ‌ழ‌க்கம். இருப்பினும் என் வீட்டு ம‌ல்லிகை செடிக‌ள் ச‌ற்றே குறும்பான‌வை என‌க்கு தெரியாம‌ல் சில‌ ம‌ல‌ர்க‌ளை காலையில் அவ‌ர் கையால் ர‌ங்க‌னுக்கு சூட‌ த‌ன்னோடு ம‌றைத்து வைத்துக் கொள்ளும்.

சரி இப்ப‌டியாக‌ ம‌ல்லிகை என‌க்கு ம‌ட்டுமல்ல‌ ஏனைய‌ர்க்கும் பிடிக்கும். ந‌ம்மாழ்வார் த‌ன்னை நாயகியாக‌(உல‌கில் பெருமாள் ஒருவ‌னே ஆண்ம‌க‌ன் என்ப‌து வைண‌வ‌ர் ஐதீக‌ம்) உருவ‌கித்து கொண்ட‌துமே ம‌ல்லிகைக்கு ம‌ய‌ங்க‌ ஆர‌ம்பிக்கின்றார் பெண் போல‌வே. தென்ற‌ல் த‌ட‌வுகின்ற‌தாம் அவ‌ர் மேனியை அதுவும் ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ள் நிறைந்த‌ வ‌ன‌த்தில் இருந்து வ‌ரும் தென்ற‌ல். அட‌டா பாருங்க‌ள் என்ன‌வொரு ர‌ச‌னை இந்த‌ ம‌னித‌ருக்கு. அந்த‌ தென்ற‌ல் த‌ட‌வுத‌ல் இவ‌ர் மேல் தீயிட்டு கொளுத்துவ‌து போல் இருக்கின்ற‌தாம்.

மேலும்

இனிமையான குறிஞ்சி இசை இனிமையானதாக இல்லை, அந்தி சாயும் அழகிய மாலை நேரமும் என்னை மயங்கச் செய்கிறது. செவ்வான மேகங்கள் என் உடலைச் சிதைப்பது போல் உள்ளன. அன்றலர்ந்த தாமரை போன்ற கண்களை உடைய கண்ணபெருமான், ஆயர்குலத்து ஆண்சிங்கத்தை ஒத்த என் மாயவனின் பிரிவுத்துயரால என் மார்புகளும், தோள்களும் விம்ம புகலிடம் தெரியாத பேதையாக தவிக்கின்றேன்.

ஆஹா ஆஹா... என்ன‌ ஒரு காத‌ல் பாருங்க‌ள்.

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ
அல்லியந் தாமரைக் கண்ணன்
எம்மான்ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ

ந‌ம்மாழ்வார் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம்.

Sunday, April 24, 2005

ப‌யம் த‌ரும் வெளிச்ச‌ம்

க‌ட‌வுளும் இன்ன‌பிற‌

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
-லஷ்மணன்

வாழ்க்கை என்ப‌து முத‌ல் முறை ஒரு ந‌தி ந‌க‌ர்வ‌தை போன்ற‌து. எந்த‌ இட‌த்தில் விழ‌‌ வேண்டும் எங்கே தேங்க‌ வேண்டும் என்ப‌வை ஒரு சில‌ அனுமான‌ங்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌. சீராக‌ ந‌க‌ரும் வ‌ரை பய‌ண‌ம் எளிமையான‌தே. ஆனால் உண்மையாக‌வே வீழும் போது விழுவ‌த‌ற்குண்டான‌ அதிர்வும், தேங்கும் போது அடுத்து எப்ப‌டி ந‌க‌ர்வோம் என்ற‌ பய‌மும் தொற்றிக் கொள்வ‌து இய‌ற்கை.

ந‌ம்பிக்கை இழ‌த்த‌ல்
==================

இர‌வு மீதான‌ ந‌ம்பிக்கை விடிந்து விடும் என்ப‌து. ப‌ய‌ண‌ம் மீதான‌ ந‌ம்பிக்கை ஒரு ச‌மய‌ம் முடியும் என்ப‌து. உண‌வு உண்ப‌து கூட‌ அது செரித்துவிடும் மீண்டும் ப‌சிக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் தான். ந‌ம் எந்த‌ ஒரு செயல்பாட்டையும் ஒரு ந‌ம்பிக்கை தான் ந‌க‌ர்த்திக் கொண்டு இருக்கின்ற‌து. இந்த‌ ந‌ம்பிக்கை எல்லாமே ஒரு அனுமான‌ம் தான். அந்த‌
அனுமான‌ங்க‌ள் மாறும் போது, ந‌ம்பிக்கை இழ‌க்கும் போது ஒரு வித‌ ப‌த‌ட்ட‌ம் ஏற்ப‌டும். இதுவ‌ரை ப‌ய‌ணித்த‌து எல்லாம் பொய்யோ என்ற‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ அப்ப‌ட்டமான‌ ப‌ய‌த்தையும், குழ‌ப்ப‌த்தையும் உள்ள‌ட‌க்கிய‌து க‌விதையின் க‌ரு.

ந‌ம்பிக்கை இழ‌ந்தால் தானே பய‌மும் குழ‌ப்ப‌மும் அதனால் அறிவுபூர்வ‌மான‌ த‌ர்க்க‌ங்க‌ளை விடுத்து க‌ட‌வுள் அல்ல‌து இன்ன‌பிற‌ விச‌ய‌ங்க‌ளை அப்ப‌டியே ந‌ம்புவ‌து தான் உத்த‌ம‌ம். ந‌ம்பிக்கையே வாழ்க்கைய‌ன்றோ.

துரோக‌ம் அறித‌‌ல்
================

க‌விதையின் ம‌றுகுறிப்பாக‌ அர‌ங்க‌ன் மேல் ஆண்டாள் கொண்ட‌ காத‌ல் போல‌ உன்ன‌த‌மான‌ காத‌ல் கொண்ட‌ பெண்ணொருத்தியை அவ‌ள் காத‌லித்த‌வ‌ன் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் "ப‌த்து நாள் பேசினாளே ப‌டுக்க‌ வ‌ந்துருவாடா அவ‌ ஒரு வேசிடா" என்ப‌தை சொல்ல‌ கேட்ப‌வ‌ளும், த‌ன் ம‌னைவியின் மேல் அதீத‌ ந‌ம்பிக்கை வைத்திருக்கும் ஒருவ‌ன்,அவ‌ள் இன்னொருவ‌னோடு உற‌வு கொண்டிருப்ப‌தை க‌ண்ட‌வ‌னும் எந்த‌ அள‌வு அதிர்வார்க‌ளோ, உட‌ம்பெங்கும் தீயிட்ட‌து போல‌ எவ்வ‌ளவு துய‌ர‌ப‌டுவார்க‌ளோ அதே அள‌வான‌ அதிர்வை,துய‌ர‌த்தை தான் இந்த‌ க‌விதையின் வெளிச்ச‌ம் த‌ரும் ப‌ய‌ம் காட்டி இருக்கின்ற‌து.

அதுவ‌ரை உல‌க‌மே தொலைந்தாலும் இவ‌ர்/ள் இருக்கின்றார்/ள் என‌க்கென‌ என்ற‌ அனுமான‌ங்க‌ள் பின் என்ன‌வாகும்?

முய‌ற்சி த‌வ‌ற‌ல்
==============

மூன்றாம் க‌ருத்தாக‌, முய‌ன்றால் முட‌வ‌ன் கூட‌ கொம்பு தேன‌டைய‌லாம். முய‌ற்சி செய்யாம‌ல் இருக்க‌ சோம்ப‌லோ, தெளிவின்மையோ, பய‌மோ எது வேண்டுமானும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம். ஆயினும் முய‌லாம‌ல் வெளிச்ச‌ம‌து ப‌ய‌ம் த‌ருமென‌வும், இருட்டை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளோடும் வாழ்ந்தால் அது பாதையை எளிமையாக‌ காட்டும் காட்சிப் பிழையாகும். முய‌ற்சி உடையோர் இக‌ழ்ச்சிய‌டையார். அத‌லால் அனுமான‌ங்க‌ளை ஆக்க‌ பூர்வ‌மான‌ முய‌ற்சியாக்கி வாழ்வில் மேன்மை பெற‌ முய‌ச்சிப்போம்.

ஏமாற்ற‌ம் எதிர்கொள‌ல்
=====================


திரும‌ண‌ம் நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணொருத்தி த‌ன் வ‌ருங்கால‌ க‌ண‌வ‌னைப் ப‌ற்றியும் தான் வாழ‌ப்போகும் வாழ்வைப் ப‌ற்றியும் ப‌ல்வேறு க‌ன‌வுக‌ளோடு இருப்பாள். அப்படிப்பட்ட அனுமானங்களோடு இருந்தவளுக்கு மணவாழ்க்கை உட‌ல்ரீதியாக‌வோ ம‌ன‌ரீதியாக‌வோ திருப்தி கிட்டாத‌ ப‌ட்ச‌ம், எதை செய்த‌தாலும் குற்ற‌ம் குறை கூறி அடித்து துன்புறுத்த‌வோ அல்ல‌து எத‌ற்கெடுத்தாலும் ச‌ந்தேக‌மோ கொள்ளும் க‌ண‌வ‌ன் அமைந்து விட்டால் அவ‌ள்
எதிர்கொள்ளும் ஏமாற்ற‌ம் மிக‌ கொடுமையான‌து. அதுவ‌ரை அவ‌ளுக்கு இருந்த‌ அனுமான‌ங்க‌ள் உண்மை வெளிச்ச‌த்திற்கு வ‌ரும் போது ப‌ய‌ம் வ‌ருவ‌து இய‌ற்கை தானே. இதே க‌ருந்து ஆண்ம‌க‌னுக்கும் பொருந்தும்.

தெளிவின்மை த‌விர்த்த‌ல்
=======================

த‌ன‌க்கு தெரிந்த‌து போதும் என்றோ, த‌ன‌க்கு ம‌ட்டும் தான் எல்லாம் தெரியுமென்றோ அனுமான‌த்தில் இருப்ப‌ர்க‌ள், ஒரு வேளை அது த‌வ‌றென்று புரியும் போது எதிர்கொள்ளும் வெளிச்ச‌ம் மிக‌ அதிக‌மாக‌ ப‌ய‌த்தை த‌ரும். தான் என்ற‌ அக‌ந்தை அட‌க்கி தெளிவு பெற்று வாழும் வேண்டுமெனில் இருளின் மீதான‌ அனுமான‌ங்க‌ளால் வாழ்க்கையை ந‌க‌ர்த்தாம‌ல், (தெளிவு)வெளிச்ச‌ம் த‌ரும் புது பாதையில் ப‌ய‌ணித்த‌ல் எல்லாம் ந‌லம். எங்கும் ஜெய‌ம்.