Thursday, August 5, 2004

விர‌க‌தாப‌ம் - உயிர் பிள‌க்கும் ரீங்கார‌ம், வேல் போல் தாக்கும் குழ‌லோசை

ஐந்திணை ஐம்ப‌து திணைக்கு ப‌த்து பாட‌லாக‌ ஐம்ப‌து பாட‌ல்க‌ள் எல்லா திணையிலும் த‌லைவ‌ன் த‌லைவி, தோழி என்று அனைவ‌ரும் பாடி இருக்கின்றாங்க‌.

குறிஞ்சி திணையில் த‌ன் விர‌க‌ தாப‌த்தை இத்த‌னை வெளிப்ப‌டையா பேசி இருக்கின்றாள் ஒரு த‌லைவி. மாலை ஆகிவிட்ட‌து. "வ‌ண்டுக‌ள் ரீங்கார‌ம் செய்வ‌து அவ‌ளுக்கு உயிர் பிள‌ப்ப‌தை போலிருக்கின்ற‌தாம்." ம‌ற்றுமொறு பாட‌லில் "சிறு குழலின் இனிய ஓசை அவ‌ளை வேல் கொண்டு தாக்குவது போலிருக்கின்றதாம்". காத‌ல் நோய் கொடிய‌த‌ல்ல‌வா எப்போதும்.


முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து.


தும்பி - வண்டு

மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.


------------------------------------------------------------------------------------


தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.


ஆன் - பசு
தொடி - வளையல்

கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.

ந‌ன்றி சென்னை லைப்ர‌ரி

Tuesday, July 27, 2004

என்ன தவம் செய்தனை

"என்ன தவம் செய்தனை யாசோதே..." எங்கேயோ வானொலியில் பாடுவது அந்த அந்தி மாலை நேரத்தில் என் காதில் விழுந்து என் மனதை என்னவோ செய்தது. அந்த பாடல் ஏதோ இனம்புரியாத உணர்வை என்னில் உண்டாக்குகின்றது. எத்தனை அருமையான பாடல் இந்த பாடலை யாசோதையே கேட்டால் அவள் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்ததிருக்கலாம் இதோ உங்கள் ஆய்விற்கு.

"கண்ணா மணிவண்ணா! நீ என் பிள்ளையாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ என்ற ஏக்கம், சந்தோஷம் எல்லோருக்கும். ஆனால் என் மன சஞ்சலங்களை அறிவாயா மாதவா கேசவா? மனம் திறந்து கேளடா என் புலம்பல்களை.... உருக்கமான உன் நெஞ்சையும் பிளக்கலாம் அவை.
"நீ பிறந்த அதே கணம் நான் பெற்ற மகளை உனக்காக பறிகொடுத்தேனே! இதற்கு நான் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்?" "பெற்ற பிள்ளையின் முகம் கூட காண முடியாத பாவியல்லவா நான்!" "என் பிஞ்சு மகள் சிறையில் தரையில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்படவா பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தேன்?" "அந்த பிள்ளையை நான் இழந்தேன் என்று கூட தெரியமல் அவளுக்குகாக் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் பதிணெட்டாண்டுகள் வாழ்ந்துவிட்டேன் என்ன கொடுமையடா இது" "அதை விட எல்லாம் விட கொடுமை முலைப்பால் தந்து வளர்த்த இந்த பிள்ளையை நான் பெறவேயில்லை என்ற உண்மை தெரியாமலே எத்தனை காலம் வாழ்ந்துவிட்டேனே!" இதெற்கெல்லாம் எத்தனை தவம் செய்து இருக்க வேண்டும்.

"இந்த பதினெட்டாண்டுகளில் உன்னால் நான் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமா?" " கோவிந்தா! கோபாலா! ஒரு நாள் நீ மண் தின்றாய், உலகாளும் பரம்பெருள் நீ என்றறியாத என் பேதைமையால் நீ மண்ணுண்டதைப் பார்த்து பதறினேன். வாயை திறக்க சொன்னால் அண்ட சாரசாரம் காட்டி என்னை மேலும் பித்தாக்கினாய். உன் குறும்பை தாங்காது உரலில் கட்ட நினைத்தேன் பரப்பிரும்மம் உன்னைக்கட்ட என்னால் முடியுமா உன்னை கட்ட இயலாது நான் பட்டப்பாட்டை நீ கிண்டலாக பார்த்து சிரித்து ரசித்தாய். சிறு வயதில் உன்னை கொல்ல எத்தனை எத்தனை சதிகள்? ஒவ்வொரு நாளும் உன்னை காக்க நான் பட்டபாடு எத்தனை என்பதை மறந்துவிட்டாயா தேவகி நந்தனா?" "பரந்தாமன் உன்னை காத்துக்கொள்ள உனக்கு தெரியும் என்று இந்த பேதைக்கு தெரியவில்லையே புருசோத்தமா?"
"அது மட்டுமா? உன் குறும்புகளால் எத்தனை அவபெயர் எங்களுக்கு. நம் வீட்டில் வெண்ணை புரண்டோடும்; ஆனால் நீயோ அடுத்தவர் வீட்டில் வெண்ணை திருடி உண்டதாக தினம் ஒரு குற்றச்சாட்டும், வழக்கும்." "நீ பருவம் அடைந்ததும் உன் லீலைகள் காரணமாக எத்தனை பெண்களை கண்ணீர் சிந்த வைத்தாய்? அத்தனை பெண்களில் பாவத்தை நாங்கள் அன்றோ சுமந்தோம்?"
"நீ சிறு வயதில் பெற்ற சாபத்தின் காரணமாக யாதவர் குலமே அழிய காரணமானாயே!" "உன்னை வளர்த்து நானும் அந்த பாவ செயலில் பங்கெடுத்துவிட்டேனே, பார்த்தீபா! என்னை நம் மக்கள் குலநாசம் செய்த கொடும்பாவி என்றல்லவா நினைப்பார்கள். இதற்கெல்லாம் என்ன தவம் செய்தேன் அய்யா நான்?"

"கண்ணுக்குள் வைத்து காத்து அரும்பாடு பட்டு உன்னை வளர்த்து எத்தனையோ துயர்களுக்கு இடையே உன் புன்சிரிப்பை கண்டு மனம் மகிழ்ந்து வாழ்ந்து வந்த நாங்கள் ஒரு நொடியில் நீ என் சொந்த மகனில்லை என்று தெரிந்ததும் எப்படி மனம் உடைந்து கலங்கிப்போனோம் என்று யோசித்தாயா? " "ஒருவனுக்கு எந்த உறவு வேண்டுமாயினும் ஒன்றுக்கு மேல் இருக்கலாம் ஆனால் ஒரு பிள்ளைக்கு இரண்டு அம்மை அப்பன் இருக்க முடியுமா?" "உலகில் எதை வேண்டும் என்றாலும் பங்கு போடலாம். ஆனால் பெற்ற பாசத்தை நீ பங்கு போட வைத்து விட்டாயே?" "மாயவனே! தூயவனே!" "இப்போது சொல்லடா, எங்கும் நிறைந்த பரப்பிரும்மம் நீ என்னை அம்மா என்று அழைக்கலாம் ஆனால் உன்னை பெற்றவள் தேவகியல்லவா? உனக்காக ஏழு குழந்தைகளை அநியாயமாக தொலைத்தவள். அவளன்றோ ஞானி. அவளன்றோ பெருந்தவம் செய்தவள்." நான் என்ன தவம் செய்துவிட்டேன்?

Thursday, June 24, 2004

சிறைவாழ்வு

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்...
--நன்றி வைரமுத்து.
இந்த உலக வாழ்வே ஒரு சிறை வாழ்வு தான். சிலருக்கு சிறை சற்று பெரியதாக இருக்கும். வீடு, அலுவலகம், உறவுகள், நண்பர்கள் என்று விரியும் அவர்கள் உலகம். ஒரு சிலருக்கு பிறக்க ஒரு நாடு வசிக்க ஒரு நாடென்று அமைந்து விடுகிறது. சிலருக்கு குறிப்பாக சில பெண்களுக்கு வீடு ஒரு சிறையாகும். அதை விட்டு விடுபடுவது அவள் இறப்பே ஆகும். மீன் தொட்டியை கண்டிருக்கிறீர்களா? அதில் நீந்தும் மீன்கள் மிக அழகாக இருக்கும். அவை எல்லாம் மிக சந்தோசமாக இருப்பதுப் போல நமக்குத் தோன்றும். சில சமயம் மெதுவாக நீந்தும், சில சமயம் மின்னல் வேகத்தில் மேலிருந்து கீழாக குதிக்கும். நாம் தருவதை உண்ணும். ஒரு சில கொடுத்து வைத்த மீன்கள் சற்று பெரிய தொட்டியில் ஒரு சில உறவுகளோடு காலம் கழிக்கும். ஒரு சில தொட்டிகள் பானை போன்ற வடிவில் சிறியதாக இருக்கும். கடலில் நீந்த தெரிந்தாலும்கூட அந்த அளவான இடத்தில் தான் மீன்கள் உலவ வேண்டும். அதன் வாழ்வு அந்த தொட்டிக்குள் மட்டுமே. மீன் தொட்டி மீன்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் யாவரும் பல காலமாக சிறை வாழ்வே வாழ்கின்றோம். கீழ் வரும் சங்க கவிதையை பாருங்கள்.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
உரை
---------
தாழி செய்பவனே! தாழி செய்பவனே! தருமம் நிறைந்த பழைய ஊரின் தாழி செய்பவனே! அச்சில் சுழலும் வண்டிச் சக்கரத்தில் ஒட்டியிருக்கும் சிறிய வெளிறிய பல்லிபோல இவனுடன் பலவிதமான பாதைகள் தாண்டிவந்த என்னிடமும் கனிவுகாட்டுவாயாக. மலர் நிரப்பி மண்ணில் இறக்கப்படும் உறுதியான பெரிய தாழியை இன்னும் பெரிதாக வனைவாயாக.
--நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"
இந்த கவிதை இறுக்கமான உணர்வு பொருந்தியது.இந்த வரிகளின் வலி உணர பெறுங்கள். எவ்வளவு ஆழமான துயரத்தை வெளியிட்டிருக்கிறாள் அந்த பெண்கவி. என்ன பொருத்தமான ஒரு உதாரணம் பாருங்கள், ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லியானது வண்டி செல்லும் இடம் எல்லாம் செல்லும் ஆனால் அதன் வாழ்வு இருக்கும் அதே இடத்தில் மட்டுமே. இப்படி தானே இருக்கின்றது சில பெண்களின் வாழ்வு இன்றும் கூட. மேலும் சொல்கிறாள் அவள் மலர் நிரப்பிய தாழி வனைக, எவ்வளவு ரசனை மிக்கவளாக இருந்திருப்பாள் ஒரு வேளை இனி அவளை கட்டுபடுத்தி சிறை அடைக்க ஆள் இருக்க போவதில்லை என்ற ஆனந்தமா அது? இன்னும் உறுதியான தாழியை சற்று பெரியதாக வனைக... இவ்வளவு இறுக்கமான வாழ்வு அவள் வாழ்திருந்தாள் இறக்கும் போதாவது சற்று விசாலமான இடத்தில் இறக்க வேண்டும் என்று எண்ணி இருப்பாள்.உடன்கட்டை ஏறுவதினும் கொடும் கொடுமை இதல்லாவா?
இப்போது இதற்கு இணையான இன்னும் ஒரு சூழலைப் பார்ப்போம். "புனரபி மரணம் புனரபி ஜனனம்" என்ற ஆதி சங்கரர் பாடல் கேட்டிருக்கின்றீர்களா? கருவிலுள்ள குழந்தைக்கு பிறக்கும் வரை புனர் ஜென்ம சிந்தனை எல்லாம் இருக்குமாம். அப்போது பட்ட அத்துணை துன்பங்களும் நினைவிலிருக்குமாம். அது கடவுளிடம் இந்தப் பிறவி வேண்டாம் என்று இறைந்துக் கேட்குமாம். அதையே வேறு விதமாக நாம் யோசித்தால் அக்குழந்தை இந்த புவிக்கு வரும் முன் "கடவுளே நான் ஒரு மீள முடியாத சிறைக்கு செல்ல இருக்கிறேன், எனக்கு ஒரு நல்ல வீடு, நிறைய சொந்தங்கள், சொத்து எல்லாம் தா, குறைந்த பட்சம் உன்னை அடையும் வரை புவி சிறையை முடிந்த அளவு சுற்றி வருகின்றேன் என்று கேட்பது போல கொள்ளலாம். இக்குழந்தை பிறக்கும் வரை தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும் ஆனால் அது வாழும் இடமோ தாயின் கருவறையே.
அடுத்த சூழலை வேறு விதமாக மேலே கூறிவிட்டேன். அதுவும் ஒரு பிறப்பு போல தான். திருமணம் முடிவாகி இருக்கும் ஒரு பெண் மனநிலை கூட ஒரு கருவில் உள்ள குழந்தைக்கு ஒப்பிடலாம். தன் கணவன் மற்றும் கணவனை சார்ந்த சொந்தங்களை பற்றிய பயம் கலந்த ஒரு சிந்தனை இருக்கும். அந்த குடும்ப சூழல் பழக்க வழக்கம் எல்லாம் பற்றிய கலக்கம் இருக்கும். ஒரு புது உலகை பற்றிய கனவிருக்கும், ஆனால் அவள் இருக்கும் இடம் தாயின் வீடாக இருக்கும். சிந்தனை அவளை சுற்றியடிக்கும்.
இதை திருமணம் முடிந்த ஒரு பெண் வாழ்வோடும் ஒப்பிடலாம். இருக்கும் இடம் கணவன் வீடாக இருந்தாலும் சிந்தனை மட்டும் ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லி போல தாய் வீட்டையே சுற்றி சுற்றி வரும். தாய் வீட்டில் அதிகாலை சூரியன் அவளை இப்போதும் விழிக்க வைக்கும். தாயோடு இட்ட செல்ல சண்டைகள் இன்று கூட சிணுங்க செய்யும். அப்பல்லி படும்பாட்டை பாருங்கள். தாய் வீட்டு திண்ணையோடு உலவும் தென்றல் எப்போதும் அவளை தாலாட்டும். வீட்டு தோட்டத்தில் உள்ள மல்லிகை செடிகளுக்கும் நினைவால் நீர் வார்க்கப்படும். அங்கே வந்து போகும் பட்டாம்பூச்சிகளின் நலம் விசாரிக்கும் அவள் மனம். மாடிப்படிகளில் அமர்ந்து ரசித்த அடுத்த வீட்டு அவரைக்கொடியின் பூங்கொத்து அவள் எண்ணங்களில் சிறகடிக்கும். மொட்டை மாடியில் பார்த்து கிறங்கிய சாயுங்கால கீழ்வான சிவப்பும் சின்ன புன்னகை பூக்க செய்யும். அவள் படுக்கை அறை ஜன்னல் வழி பார்த்த தென்னங்கீற்றிடை நிலவொளி உள்ளத்தை மயக்கும். எப்போதும் தாய் இடும் மருதாணி இப்போதும் சிவந்திருப்பது போல தோன்றும். சிறு வயதில் பிறந்த நாளுக்கு தலையில் தைத்து கொண்ட மல்லிகை பூக்களை கண்கள் தேடித் தொலைக்கும். பட்டியலிட்டது அவள் நினைவுகளின் ஒரு சிறு பகுதி தான். சொல்லாதவதை ஒரு கோடி இருக்கலாம்.


வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

நல்லதோர் வீணை செய்து

நல்லதோர் வீணை செய்து - அதை
நலங்கெட புழுதியில் ஏறிவதொண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
இப்பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது. எதை நினைத்து பாரதி இந்த பாடலை பாடி இருப்பான்? தன் வறுமையையா? செல்லம்மா தனக்கு கவிதைகள் மீதுள்ள காதலை புரிந்து கொள்ளாமல் கோபிக்கிறாளே என்றெண்ணியா? இவ்வளவு ஆற்றல் மிக்க அனல் பறக்கும் கவிதைகளுக்கு அவர் நினைத்த அளவு ஆக்கபூர்வமான பின் விளைவுகள் இல்லை என்ற வேதனையா? எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கே.பாலசந்தர் "வறுமையின் நிறம் சிவப்பு" என்ற தன் படத்தில் இந்தப் பாடலை மிக அழகாக பயன்படுத்தி இருந்தார். நன்கு படித்த இளைஞன் அவன் படிப்பிற்கு தக்க வேலை கிடைக்காமல் அவதியுறுவதை இப்பாடல் அழகாக வெளிப்படுத்தும்.

இந்தப் பாடலை ஒப்பிட்டுப் தக்க ஒரு சில சிந்தனைகள் இதோ.

அவள் ஒரு அழகோவியம். காண்போர் யாவரையும் ஒரு கணமேனும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகுக் தேவதை. யாருடனும் சட்டென பழகி விடுவாள். எவரையும் தன் பேச்சால் கவர்ந்திழுப்பாள், மகிழ்ச்சி அடைய செய்வாள். அவளிருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லொருக்கும் உதவுவாள். மிக அன்பானவள். குழந்தை போல் உள்ளம் கொண்டவள்.நன்கு படித்தவள். கற்பூர புத்தி கொண்டவள். கொடுத்த எந்த வேலையையும் இதை விட சிறப்பாக செய்ய யாராலும் செய்ய இயலாது என்னும் வண்ணம் செய்வாள். அதிலும் எதை செய்தாலும் மிக ரசனையோடு செய்வாள். மார்கழியில் தெருவடைத்து அவள் இடும் கோலம் அதற்கு அவள் தரும் வண்ணம, ஆஹா அற்புதம். எல்லோரும் தான் வண்ணக்கோலங்கள் வரைகிறார்கள். ஆனால் அவள் வரையும் போது மட்டும் ஏன் அது உயிர்பெற்று எழுகிறது என்று தோன்றும். ஒரு நாள் மயில் தோகை விரித்து ஆடும், ஒரு நாள் குயில் கூவும், பிறிதொரு நாள் வண்ண உடைகளில் அழகு பெண்கள் நடனமாடுவர், ஒரு நாள் சிறார்கள் விளையாடுவர். ஒரு நாள் அழகான பூ பூக்கும். அவள் பாடினால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. அவள் மலர் தொடுக்கும் அழகிற்கே கண்ணன் கூட அவள்மீது காதல் கொள்வான். அவளது சமையல் எட்டு ஊருக்கும் மணக்கும். அவள் எழுதும் கவிதைகளில் கவிரசம் பொங்கும்.. காவியங்களைப்பற்றி அவள் பேசும்போது அக்காவியமே நம் கண்முன் நடப்பது போல தோன்றும். சுருக்கமாக சொன்னால் அவள் பெண்மையின் இலக்கணம். அந்த நல்லதோர் வீணைக்கு கிடைத்தது ஒரு புழுதி போன்ற கணவன். அவனுக்கு ரசனை என்ற ஒரு வார்த்தை தமிழில் இருக்கின்றது என்றே தெரியாது. அவனுக்கு அவன் அலுவலகம், பின் வீடு, சாப்பாடு, தூக்கம். எல்லாமே ஒரு இயந்திரம் போல, மென்பொருள் இட்ட கணிபொறி போல. இத்துணை குணவதி அவளை பற்றி யாவரும் பெருமை பேசி என்ன பயன்? இதை பார்த்து தான் பாடி இருப்பானோ பாரதி?
அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவன். அவன் படித்தது ஒரு சாதாரண கல்லூரி. ஆனால் அவனுடம் பணி புரியும் அனைவருமே மிக பெரிய பெயர் போன கல்லூரிகளில் படித்தவர்கள். ஆனால் அவர்களின் அறிவிற்கு ஒரு படி மேலானதே அவன் அறிவாகும். அவன் அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொத்த திறமையையும் கொண்டவன் எனக்கொள்ளலாம். திட்டமிடுதல், கட்டமைத்தல், மென்பொருள் எழுதுதல், அதை திருத்தி தரமிடல் இப்படி மென்பொருள் வாழ்வு சுழற்சியின் எந்த பகுதியிலும் அவன் செயல் தரமாக இருக்கும். எவருமே குறை சொல்ல முடியாது. குழுவில் உள்ள மற்ற சக பணியாளர்கள் இவன் திறன் கண்டு மிரண்டு போவார்கள். ஆனாலும் அவன் படித்தது அவ்வளவு உயர்ந்த கல்லூரி அல்லாததால் அதை வைத்து அரசியல் நடத்துவர் குழு மேலாளரும் சக பணியாளர்களும். அவனிடம் நல்ல திறன் காட்ட கூடிய பணியே தரபடாது. வேறு ஒருவருக்கு அது தரப்படும். ஆயினும் வேலை இவனிடம் வாங்கபடும். அதில் வரும் பயன் வேறு ஒருவனுக்கு போய் சேரும். அவ்வளவு நல்லறிவு இருந்தும் என்ன பயன் அது ஒடுக்க படுகின்றதே இங்கே. ஒருவேளை இது போன்ற ஒரு சுழலை தான் பாரது பாடி இருப்பானோ?
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?" வற்றாத ஜீவ நதிகள், காடுகள். மலைகள், விளைநிலங்கள். பூமி நிறைய கனிமங்கள். தாது பொருட்கள். உப்பு, தங்கம், வைரம் , நிலகரி, கச்சா எண்ணைய் படிமங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் இந்த மண்ணில். எத்தனையோ போரட்ட வீரர்கள் இத்தனையும் இந்த மண்ணில். இருந்தும் இந்திய தாய் அடிமைப் பட்டு கிடக்கிறாள். அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சுடர் மிக்க அறிவோடு என்னை படைத்துவிட்டாய். ஆயினும் என் செய்ய அடிமைதளை உடைக்க முடியவில்லையே இப்படி தான் பாரதி யோசித்து இந்த பாடலை பாடி இருக்க வேண்டும்.
இன்று நாமும் நினைப்போம் இவ்வளவு வளங்கள் இருந்தாலும், எத்தனையோ அறி்வாளிகள் விஞ்ஞானிகள் இருந்தாலும், இந்திய மூளையை நம்பி பல பன்னாட்டு நிறுவனங்கள்.இருந்தாலும் இந்திய தாய் அவள் சுயநலம் மிக்க ஆட்சியாளர்களாலும், பொறுப்பற்ற குடிமக்களின் கைகளிலும் மாட்டிக்கொண்டிருக்கிறாளே என்று.

"நல்லதோர் வீணை செய்து அதை
நலங்கெட புழுதியில் ஏறிவதொண்டோ"


வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

படித்ததில் பிடித்தது : மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது‘

ஆட்களற்ற நீண்ட மலைப்பாதையில் தனிமையில், சூழலின் ரம்மியத்தோடு, பிடித்த பாடலைக் கேட்டு இரசித்தபடியிருக்கும் நிலையை சில புத்தகங்களின் வாசிப்பனுபவம் நமக்கு தருகிறது. நான் வாசித்தவற்றில் இப்படியான அனுபவத்தை எனக்களித்த சில புத்தகங்களைப் பற்றிய பகிர்தலே இப்பதிவு.

---

எத்தனை முறை வாசித்தாலும், ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது அனுபவங்களை தருகின்ற கவிதைகளை எழுதியிருக்கும் என் மானசீக குரு மனுஷ்யபுத்திரனின் நீராலானது தொகுப்பை சமீபத்தில் மீண்டும் வாசித்தேன். அதில் நான் ரசித்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது‘ தொகுப்பு, உன்னோடிருத்தல் தன்னோடிருத்தல் மற்றும் பிறரோடு இருத்தல் என்று மூன்று பிரிவுகளாக கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலற்ற மிக எளிமையான மொழி மனுஷ்ய புத்திரனுடையது. ஆனால் அவை அழைத்து செல்லும் தூரம் மிக அதிகம்.

உன்னோடிருத்தல் பகுதியின் கவிதைகளில் பிரியம் நிரம்பி வழிகிறது. பல கவிதைகளில் எந்த எதிர்ப்பார்ப்புமற்ற நேசம், ஈரம் தென்றலாக பகுதி முழுவதும் வீசிக்கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு கவிதையிலும் சில வரிகள் குறிப்பிட்டு சொல்லும் வண்ணிமிருக்கின்றன.


"இன்றிலிருந்து உனது
எல்லா பரிசுகளையும்"


இங்கே பரிசுகள் என்பது ஒரு உணர்வு அல்லது அனுபவம் என்றே கொள்ள வேண்டும்.
அந்த பரிசுகளை தரையில் விட்டு விடுவதாகவும் அவை ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல

தம் திசைகளை
தாமே அறியட்டுமென்று


அவ்வுணர்வுகளுக்கு உணர்வின் வயப்படாமல் இருப்பதையோ அல்லது அவை தன்வசம் தன் கட்டுபாட்டில் இல்லை என்பதையோ குறிக்கின்றது.

பற்றிக் கொள்ள
ஒரு பிடி நிலமில்லை
தனது ஈரத்தைத் தவிர
அதற்கு ஒன்றுமேயில்லை


இங்கே ஒரு இயலாமையையும், எதிர்ப்பார்ப்பற்ற பிரியத்தையும் ஒரு சேர பார்க்கலாம்.

தவித்து அருந்திய
தண்ணீரில் ஒரு திவலை சிந்தியதில்லை

வந்ததற்கும் போனதற்கும் நடுவே
எதுவும் இடம் மாறியிக்கவில்லை


என்னால் பாதிப்பு உனக்கோ உன்னாலான பாதிப்பு எனக்கோ என்றுமில்லை நம்மிடம் மிஞ்சுவது எல்லாமே நம் நினைவுகள் மட்டுமே என்று குறிக்கும் வரிகள். அழகு வரிகள்.

உன் தாவரங்களின் மேல்
உன் நிழல் விழாத போது
சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு
தாம் அளித்த நிழல்களைத்
திரும்ப எடுத்துக் கொள்கின்றன.


பிரியம் மேலும் பிரியத்தை வளர்க்கும் பிரியமின்மை மேலும் பிரியமின்மையை தொடரும் என்பதை இதை விட அழகாய் உணர்த்த இயலுமா என்ன?

குகை மூடிய பாறை
ஒரே ஒரு கணம் திறந்து
சாத்திக் கொண்டது.


குகை மூடிய பாறை என்பதிங்கே நமக்குள் தங்கிய இருக்கும் இறுக்கம். கண நேரம் திறந்து மூடுகையில் பிரியம் ஒரு நம்பிக்கை நுழைய போதுமானது. பிரியத்தின் பட்டியலை சொல்லிய கவிதை நம்பிக்கையை


குகையின் தீராத இருளுக்கு
பயப்படவுமில்லை


என்ற வரிகளில் சொல்லி இருக்கின்றார்.

எனது கட்டுமானங்களின்
விரிசல்களில் நீர் கசிந்துகொண்டிருக்கிறது



ஒரு காயத்தை இவ்வளவு அழகாக வெளிப்படுத்த இயலுமா?

விடை கொடுக்கும் போது
உன் அசையும் கைகள் உறுதியிழப்பதேயில்லை


பிரியம் பிரிவின் வலி இயலாமை இந்த வரிகள் சொல்லாத உணர்வுகள் தாம் ஏதும் உண்டோ?


ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி


ஒரு செடியின் வெளியுலக தொடர்ப்பிர்கான குறியீட்டை குறிப்பிட்டு என் சிந்தனையின் எல்லா துகள்களும் கொள்ளும் கடுந்துயரை இப்படி தானே சொல்ல இயலும்.

உன் எடையற்ற குரலின்
எடையற்ற துயரங்கள்


என்ன ஒரு சொல் ஆளுமை... குரலுக்கும் எடையில்லை, துயரக்கும் எடையில்லை ஆனால் துயர் கொண்ட மனம் மட்டும் கனத்திருப்பது விந்தையா, வியப்பா என்ன ஒரு சிந்தனை இந்த வரிகளில்.


எளிய பிரியத்தின் கண்ணீர்
முதலில் ஒரு மணல் துகளாகிறது.


எந்த பிரியமும் கண்ணீர் வரவலைக்குமெனில் அது பெரிய உறுத்தலாகத் தான் இருக்க இயலும். அதற்கு மணல் துகள் என்று உறுத்தலின் படிமம் சொல்லி இருப்பது அழகு. மிக பொருத்தம்.

நீயும் கொண்டுவராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.


பிரியத்தின் நீட்சியை, அது அந்த அனுசரனையை, அன்பை நேசத்தை இன்னும் சிலதை சொல்லி தீர்க்கின்றன இந்த வரிகள். என்ன ஆழமான வரிகள் அதே போல் இன்னும் சில வரிகள்

இல்லாதபோதும்
இருந்துகொண்டிருக்கும்
உன் நிழல் படர்ந்த முற்றங்களுக்கு

மேசைகள் திரும்பத் திரும்ப
துடைக்கப்படுகின்றன
அப்புறமும் நீ
அவற்றின்மீது படிந்துகொண்டேயிருக்கிறாய்


உணர்வுகளை இவ்வளவு படிய எளிமையாக சொல்லி இருப்பது அருமை.

சொல்லப்படாதவை
சொல்லப்படாதவையே

உன்னைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன
அழித்து முடியாத சுவடுகள்


பிரிவின் வலியை பின்வரும் வரிகளை விட நுணுக்கமாக உணர்த்த இயலுமா


இன்று
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்

ஒரு குருவி
திடீரென பறந்தபோது
காற்றில் ஒரு விரிசலைக் கேட்டேன்


சேர்ந்திருக்கவியலாத பிரியத்தின் ஏக்கமாக பின் வரும் வரிகளில்

ஏதோ ஒரு கனவின் விழிப்பில்
தோன்றிவிடுகிறது
உன்னோடிருப்பது
உன்னோடிருப்பது போல்
இல்லாமல்

நெருங்கவியலாதென விதிக்கப்பட்ட மலர்களை
முடிவில்லாமல் நெருங்கியபடி

Monday, May 24, 2004

வருந்தி அழைத்தால் வருவது மழையாகுமா?

மழைப்பிரார்த்தனைகளில் எனக்கு
சம்மதம் இல்லை
வருந்தி அழைத்தால் வருவதன்
பெயர் எப்படி மழையாகும்?

நன்றி: குமுதம்.

"மழை"


மழையைப் பிடிக்காத மனிதன் இருக்க முடியுமா இவ்வுலகில்? மழையை நினைத்தாலே ஒரு சுகந்தம் வந்து மனதோடு ஒட்டிக்கொள்ளும். மனது ஒரு குழந்தையைப்போல குதூகலிக்கும். குளிர்தென்றல் தாலாட்ட, மண் வாசனை வரவேற்க நம்மை வந்து சேரும் மழைக்காக வேண்டுவது தவறில்லை. எப்படி அழைத்தால் என்ன வரப் போகிறது, வந்து போவது மழையின் சுகந்தம், பலரின் வாழ்க்கை. இக்கவிதையைப்போல மழையை வருந்தி அழைக்க எனக்கு வறுத்தம் இல்லை. ஆனால் இந்த கவிதையில் வருந்தி அழைக்கப்படும் மழையைப் பற்றி மட்டும் பேசுவது போல தெரியவில்லை. எந்த செயலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்றே இந்த கவிதை மறைமுகமாக சொல்வதாக நான் உணர்கிறேன்.


காதல்:
-----

"குளிர் பார்வை பார்த்தால் கொடியோடு வாழ்வேன்
எனை தாண்டி போனால் நான் வீழ்வேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்"

-- நன்றி வைரமுத்து


"வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்

கண் மழை விழும் போது எதை கொண்டுக் காப்பாய்

பூவின் கண்ணீர் ரசிப்பாய்
நான் என்ன பெண் இல்லையா"

--நன்றி வைரமுத்து

காதலன் குளிர் பார்வைக்கு ஏங்கலாம். காதலன் பேச்சுக்கு மயங்கலாம். அவன் சொல்லுவது எல்லாம் கேட்கலாம். கொஞ்சிப் பேசி அவன் உயிரை கொள்ளைக்கூட கொள்ளலாம். அன்பால் அவனை அள்ளி எடுக்கலாம். இதெல்லாம் அவனும் உன்னை விரும்பி ஏற்கையில் செய்யடி பெண்ணே. மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன் என்றால் பின் உன் சுயம் எங்கே? உன் கண்ணீரை ரசிப்பவன் கண்ணனே ஆனாலும் அவன் உனக்கு வேண்டாம். உன் வீட்டு தோட்டத்தின் மல்லிகை மொக்குகளை நேசிக்கலாம். உன் வீட்டு நாய்குட்டியை நேசிக்கலாம். எங்கும் நிறைந்த தென்றலை சுவாசிக்கலாம். இயற்கையின் அற்புதத்தை ஆழ்ந்து ரசிக்கலாம். யாரிடமும் யாசித்து நேசம் பெற வேண்டாம்.

"மன்றாடி பெற்றால் அது எப்படி காதலாகும்?"

நம்பிக்கை
-------

அந்த காலத்தில் மக்கள் யாவரும் கூட்டம் கூட்டமாகதான் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பெண் ஒரு தெய்வம். பெண்ணின் தாய்மை வரத்தினால் அவள் கடவுளுக்கு நிகராக வணங்கப்பட்டாள். பிறகுதான் தனக்கும் அதில் பங்கு உண்டு என்ற அறிவை பெற்றான் ஆண். அதன் பின் வாரிசு என்ற வழக்கு வந்தது. தன் பிள்ளைக்கு தான் தான் அப்பன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான். அதன் விளைவே பெண்ணுக்கு கற்புநெறி கற்பிக்கபட்டது. ஆண் ஆதிக்கம் வளர்ந்தது. சீதை தீக்குளித்து தன் கற்பை நிரூபிக்கவேண்டி வந்தது. கண்ணகி மதுரையை எரித்து தன் கற்பின் சக்தியை உலகுக்கு காண்பித்தாள். வாசுகி சொல்லி வான் பொழிந்து அவளது கற்பின் வலிமையை காட்டியது.. ஏதோ ஒரு தேவனின் பிம்பம் அழகாக இருக்கின்றது என்று நினைத்த பரசுராமரின் அன்னை தன் மகனாலேயே கொல்லபட்டாள். காரணம் அவள் மணலால் செய்த பானை அவள் கற்பு போல் கரைந்தது. சகுந்தலைக்கோ தன்னை மனைவி என்று துஸ்யந்தனிடம் நிருபிக்க ஒரு மோதிரத்தின் துணை தேட வேண்டி இருந்தது. இப்படி பெண்களுக்கு எத்தனை எத்தனையோ சோதனைகள். கணவன் வீடு திரும்பும் போது மனைவி வீட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமல்லாமல் நாள் முழுதும் அவள் அங்கே தான் இருந்தாள் என்ற நம்பிக்கை கணவனுக்கு வரவேண்டும். நம்பிக்கை தானே வாழ்கையின் ஆதாரம். கற்பென்பதும் ஒரு நம்பிகை தானே?



"நிருபித்து பெறுவது எப்படி நம்பிக்கையாகும்?"


தானம்
-----

மஹாபாரதத்தில் கர்ணனின் பாத்திர படைப்பைப் போல வஞ்சிக்கப்பட்ட படைப்பு வேறு எதுவும் இருக்க இயலாது. அவன் பிறந்ததே குந்திதேவி தான் பெற்ற மந்திர சக்தியை சோதனை செய்ததன் விளைவு. பிறந்ததும் தாயே அவனை கை விடுகிறாள். தந்தையாய் சூரியன் தன் புத்திரனுக்கு எந்த கடமையையும் செய்யவில்லை. பாண்டவர் நாட்டை ஆளும் முதல் தகுதியுள்ள கர்ணன் தேரோட்டி மகனாய் பட்ட அவமானங்கள் கோடி கோடி. அவனுக்கு அமைந்த நட்பை தவிற அவனுக்கு வேறு என்ன கிடைத்தது? தருமத்தில் தலை சிறந்தவன். கொடுத்துக் கொடுத்து கை சிவந்தவன். கடவுளும் கூட அவனை தாய், தந்தைக்கு அடுத்தபடியாக வஞ்சிக்கின்றான். உயிர் காக்கும் கவசத்தை தானமாக பெற்றான் இந்திரன். தலையை காக்கும் தருமத்தை தானமாக பெற்றான் கண்ணன். கர்ணனின் கதையை பார்க்கும்போது என் மனத்தில் எழும் ஆழமான கேள்வி இது.


"கேட்டு(வஞ்சித்து) பெறுவது எப்படி தானமாகும்?"
"அநீதி செய்து நிலை நாட்டியது எப்படி தருமம் ஆகும்?"

இரண்டாவது கேள்வி இக்கட்டுரைக்கு சற்றே பொருந்தாது என்றாலும் என் மனதில் ஏனோ வந்த சிந்தனையது.

வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

த‌ன் வ‌லைப்பூவில் இட்ட‌ செல்வ‌னுக்கும் ந‌ன்றிக‌ள்

Wednesday, March 24, 2004

நனைதலின் தேடல்

அறியாமலே விட்டுச்செல்கிறது

ஒவ்வொரு நனைதலும்

பிறிதொரு மழைக்கான தேடலை ...

நன்றி:லக்ஷ்மி சகம்பரி


எப்போதும் மழை என்பது ரம்யம், சுகந்தம், சந்தோசம் தான். மழை எத்தனை சுகமென்றாலும், நனைத்தல் என்னவோ எல்லா மழையிலும் கிடைக்க கூடியதன்று. எப்போதும் எதாவது ஒரு காரணமிருக்கும் மழையில் நனைதலை தவிர்ப்பதற்கு. கையில் முக்கியமான அலுவல் சம்மந்தப்பட்ட தாள்களோ இல்லை அதிகப்படியான பண நோட்டுகளோ இருக்கலாம். நாம் நனைய நினைத்த இடத்தில் நிறைய மக்கள் கூடி இருக்கலாம். நமக்கு நம் ஆடை பற்றிய கவலை இருக்கலாம். வீட்டிலே இருக்கும் பட்சத்தில் கூட காய்ச்சல் பயமிருக்கலாம்.
காரணம் எதுவாயினும் மழையில் நனைதல் மண்ணுலகில் கிடைக்க கூடிய ஒரு மிக சிறந்த சந்தோசமான இழக்க கூடாத தருணம். அத்தருணத்தின் இழப்பை சொல்ல வார்த்தைகள் கிடையாது. நனைந்து பழகியவர்க்கு, நனைய பிடித்தவர்க்கு மட்டுமே புரிந்த ஒன்று இம்மழை நனைதல். அது வார்த்தையில் அடக்கவியலாத அனுபவம். அப்படிப்பட்ட மழை நனைதல் மீண்டும் மழை தேடலை தூண்டி செல்வது ஒரு ஆச்சரியமற்ற விசயமன்றோ. இங்கே நனைதல் என்ற உணர்விற்கு ஒத்த ஒரு சில உணர்வுகளை பார்க்கலாம்.


வன்மம்:

----------


வேம்புண்ட வாய்க்கு எதை தின்றாலும் கசக்கும். அதைப் போல என் நண்பர் ஒருவர் அலுவலக அரசியலில் பெயர் போனவர். நல்ல பேச்சுதிறன் கொண்டவர். அலுவலக நிர்வாகிகளிடம் பெரும் செல்வாக்குள்ளவர். அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் எப்படியாவது சில சிக்கல்களை உருவாக்கி அந்நபரை பழி வாங்கி விடுவார். அவர் என் தோழியின் மேல் ஏதோ காரணத்தால் வன்மம் கொண்டு விட்டார். பின் அவள் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளை கூட பெரிது படுத்தி அனைவரின் முன்னிலும் அவளுக்கு அவபெயரை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

ஒரு முறை அவள் தன் பணிக்காக ஒருவர் உதவியை நாடியதை மிகைப்படுத்தி அந்நபரை அடிமைபடுத்தி கொடுமை செய்கின்றார் என்பது போல பெயர் ஏற்படுத்தி விட்டார். இதைவிட கொடுமை அப்பெண்ணின் நடவடிக்கை, மற்றவரிடம் பழகும் தன்மை சரியில்லை என்று மேலிடத்தில் சொல்லி அவளுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வையும், பதவி உயர்வையும் இல்லாமல் செய்து விட்டார். இதனால் அப்பெண் அந்த அலுவலகத்தேயே விட்டுச்சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது.

அப்போது புரிந்தது. எப்போதும் வன்மம் தன்னை அறியாமலே மேலும் வன்மத்தை வளர்க்கின்றதென்று. இதே போல எதிர்பார்ப்பு இன்னும் எதிர்பார்ப்புகளை தூண்டும். ஏமாற்றம் மேலும் சில ஏமாற்றங்களுக்கு வித்திடும். சந்தேகம் சந்தேகங்களை வளர்க்கும்.


காதல்:

----------


ஒவ்வொரு நனைதலையும் ஒரு காதல் உணர்வோடு ஒப்பிடலாம். மழையை காதல் புணர்தலின் குறியீடாக பார்ப்பது பல
கவிஞர்களின் வழக்கம். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான காதல் உணர்வை பற்றி கூற எண்ணுகிறேன். என் சிறு வயதிலிருந்தே ஆண்டாள் மேல் ஒரு தனி பிரியம். அவளால் கவர்ந்து இழுக்கப்பட்ட நான் அரங்கனை தான் மணக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதை வெளியே சொல்லி அவமானபட்டதும் உண்டு. ஆனால் ஆண்டாள் போல் தூயவளோ திடமானவளோ அன்றே. நான் அற்ப பிறவி தானே.

சில காலம் கழிந்து ஒருவரை பார்த்த பின் இவர் கிடைத்தால் அரங்கன் தேவைஇல்லை என்று எண்ணினேன். அவர் முகம் தவிர வேறு எந்த விவரமும் இன்றுவரை தெரியாதெனக்கு. அதன் பின் வீட்டில் பார்த்து மணமுடித்தனர். இப்படியாக அரங்கன் மேலான காதலை மற்றுமோர் காதல் மாற்றியது. அந்த காதலையும் கல்யாணம் மாற்றியது.

என் நண்பர் ஒருவர் ஒரு முறை தன் நண்பரை சந்தித்த போது, 'அவளும் ஏமாத்திட்டு போயிட்டாடா, இன்னொரு பெண்ணை தான் தேட வேண்டும்' என்று புலம்பியதாக என்னிடம் சொன்னார்.


நீந்த தெரியாமல்

கிணற்றை

ரசிப்பது தவறென்று

ஒவ்வொரு முறை கால் தவறி

உள்விழும் பொழுதும்

நினைத்துக் கொள்கிறேன்

நன்றி:லக்ஷ்மண ராஜா


நிறைவேறா காதல் எல்லாமே இன்னொரு காதலுக்கான தேடலை அறியாமலே தந்து விட்டுத் தான் நீங்குகிறது.


ஆசை:

-----------


தொட்டணைத்தூறும் மணற்கேணியைப் போல ஆசைக்கு அளவில்லை. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆயினும் ஆசை யாரை விட்டது. உதாரணத்திற்கு என் எழுத்தார்வம். அதிகம் வாசிப்பதில்லை. ஏதோ எனக்கு புரிந்த ஒரு சில கவிதைகளை யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்றெண்ணி கவிதையின் பல கோணங்களை வடிக்க போக அதை ஒரு சிலர் வேறு வழியில்லாமல் நன்றாக இருப்பதாக சொல்லப் போக, அந்த போதை எனக்கு பிடித்துப் போக மீண்டும் ஒர் கவிதையை விவரிக்கும் கட்டுரை. இங்கே இப்படியாக ஆசை தன்னை அறியாமலே மேலும் ஆசையை வளர்த்து விட்டுவிடுகிறது. அதனால் பல நன்மைகளும் இருக்க தான் செய்கின்றது மழை நனைதலின் குதூகலம் போல, சுகந்தம் போல, சந்தோசம் போல.