Wednesday, June 24, 2009

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

Sunday, June 7, 2009

யாதுமான‌வ‌னுக்கு

ரோஜாப் பூக்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் சோலையில் அல‌ர்ந்த‌ தென்ற‌ல் விழி த‌ட‌வ‌ விழித்தெழுந்தேன் ஒரு புது காலை பொழுதினில். பொன் வ‌ண்ண‌ம் பூசிய‌ க‌திர‌வ‌ன் சிரித்த‌ப்ப‌டி என்னை பார்த்திருந்த‌து என் வாழ்வின் புது வ‌ர‌வை என‌க்கு அறிவித்த‌ப‌டி. இட‌துக‌ண், இட‌து புஜ‌ம், இட‌து தொடை துடித்து எனக்கான எல்லா சிற‌ந்த‌ ச‌குன‌ங்க‌ளையும் உண‌ர்த்தி சென்ற‌து நீ என்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம். தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.

க‌ண்ட‌தும் தோன்ற‌வில்லை நீ என‌க்கென‌ இருக்க‌ பிற‌ந்த‌வ‌ன் என்று. இத‌மான‌ புன்ன‌கை எனை ஈர்த்திருந்த‌து ஆயினும் ம‌ற்ற‌வ‌ரில் ஒருவ‌னாய் தான் தெரிந்தாய் நீ என‌க்கு. விடிய‌லில் தொட‌ங்கி உன்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம் வ‌ரை உண‌ர‌வில்லை வாழ்வின் உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ளை உன்னோடு க‌ழிப்பேன் என்று.

ஒன்றாக‌ உண்ட‌ பொழுதுக‌ள், கூடி பய‌ண‌த்த த‌ருண‌ங்க‌ள், நீ என்னை தூர‌த்திருந்து ர‌சித்திருந்த‌ ச‌மய‌ங்க‌ள் அத்த‌னையும் அழ‌கான‌ நிக‌ழ்வுக‌ள். ஒரு முறை என்னை சீண்டிய‌ சில‌ரை உன் கோப‌ க‌ணையால் சுட்டெரித்தாயே மென்மையான‌ உன‌க்குள்ளா இத்த‌னை கோப‌ம்? என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌. ஞயாப‌க‌ம் இருக்கின்றதா நாம் சென்று வ‌ந்த‌ கோவிலில் என‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கொத்து மரிக்கொழுந்து உன்னை போல‌ அழ‌கானதாக‌வும் வ‌ச‌னையோடுமிருந்த‌து. நீ அளித்த‌ நெற்றி குங்கும‌ம் இன்றும் நின்று சிரிக்கின்ற‌து.

என்ன‌ பார்க்கின்றாய் என்றால் உன்னை தான், உன் ஒவ்வொரு அசைவையும் ம‌ற்ற‌வ‌ரிட‌த்து நீ செலுத்தும் அக்க‌ரையும், உன் அணுகு முறையையும், தாயென‌ நீ பொழியும் அன்பையும் அணுஅணுவாக‌ ர‌சிக்கின்றேன் என்பாய். உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய் அப்புற‌ம் என்ன‌டா உற‌ங்கும் போது பார்க்க‌ என்றால் அது உன‌க்கு தெரியாத‌டி எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌ உண‌ர்வென்று, வார்த்தைக‌ளால் விள‌க்க‌ முடியாதென்பாய். ஆனால் ஒரு நாளும் நான் உற‌ங்குவ‌தை பார்த்த‌தில்லை என்ப‌து தானே உன் புல‌ம்ப‌ல் இன்று வ‌ரை. என‌க்கு உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ற‌தும் நீ ப‌த‌றிய‌தும் அளித்த‌ அர‌வ‌ணைப்பில் நான் க‌ண்டேன் இன்னுமொரு தாயாய் நீ என‌க்கு.

உன்னை க‌ட்டிக் கொள்ள‌வா ஒரு க‌ண‌ம் என்ற‌ போது உன்னை விட‌ இறுக்க‌ க‌‌ட்டிக் கொண்ட‌து நான‌ல்ல‌வா? நெற்றியோட‌ நீ இட்ட‌ முத்த‌த்தில் ஆர‌ம்பித்து இன்று வ‌ரை நீ த‌ந்த‌ முத்த‌ங்க‌ள் எண்ணிக்கையில் அட‌ங்க‌வில்லை. உன‌க்கு என்னை பிடிக்குமா என்றால் ம்ம்ம்ம் என்ற‌ப‌டி இத‌ழ் நிறைய‌ முத்த‌ம் த‌ருவாய். இறுக‌ அணைத்திடுவாய். என் எழுத்தை நீ எழுதிய‌து போல‌ ஏந்தி கொள்வாய். இணுக்க‌ம் இணுக்கமாய் விம‌ர்சிப்பாய். தாங்கி கொள்வாய் எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.

Sunday, May 24, 2009

காதல் பனித்துளிகள்

அடர்ந்திருந்த மேகத்தில் இருந்த துளிகள் எல்லாம் புலம்பிக்கொண்டிருந்தன இப்படி சிறைபட்டபடி இருப்பதற்கு, எங்கெங்கோ அலைவதற்கு பிடித்த இடத்தில் கடலிலேயே கிடந்திருக்கலாமென்று. சட்டென அடித்த காற்றில் சிலிர்த்த மேகத்திலிருந்து துளிர்த்தன நீர்துளிகள் துள்ளி குதித்தன மகிழ்ச்சியில். வெளி காற்றின் ஈரம்பட்டு பனி துளிகளாய் உறைந்து போயின, பிறந்திருந்த பனி துளியில் இரண்டு மிக சிறப்பானது. ஒன்றின் மேல் ஒன்றிருக்கு அதீத காதல். கை கோர்த்த படி சுதந்திர காற்றை சுவாத்தபடி பாட்டுகள் பாடிய படி பறந்து திறிந்தன. காதலுற்ற பனிதுளி தன் காதலியின் மேலிருந்த காதலினால் கைபிடித்த படியே பறந்திருந்தது. காதலி பனித்துளிக்கு கை பிடித்திருந்தது சற்றே தன் சுந்திரத்தை இழந்தது போல இருந்தது. விட்டு விட்டு மெல்ல பறந்தது. துடித்து போல காதலன் பனித்துளி ஓடி வந்து மீண்டும் கரம் பிடித்துக் கொண்டது, கை விட்டு விடாதே கண்மணி அடிக்கின்ற காற்றில் இரு வேறு திசையில் பிறிந்து பரந்திடுவோம். அதுவா நீ விரும்புவது என்று கேட்டது. காதலி பனித்துளிக்கும் அந்த காதலும் அக்கரையும் பிடித்து போய் விட மெல்ல மெல்ல மிதந்த படி பூமியை நோக்கி பறந்து வந்தன அவ்விரு துளிகளும்.

ஒரிடத்தில் பறந்த பறவை கூட்டத்தை பார்த்து குதூகலித்தது காதலி பனித்துளி. அந்த பறவை மேல் அமர்வோம் அது போகுமிடமெல்லாம் நாமும் பறப்போம். இப்படியே மிதந்திருந்தால் கொஞ்ச நேரத்தில் பூமியை அடைந்து விடுவோம் அப்புறம் விழுந்த இடத்தில் கிடக்க வேண்டியது தான் மீண்டும் கதிரவன் நம்மை கரைக்கும் வரை அதானாலே மேலும் மேலும் பறந்திடுவோம் என்றது. காதலன் பனித்துளிக்கோ என்ன ஆகுமோ என்ற பயமிருந்தது. காதலி பனித்துளி மீண்டும் கூறியது வாழ்க்கையில் எல்லாம் முயற்சிக்க வேண்டும் பயந்தொடுங்கி இருந்தால் எதையும் அனுபவிக்காமலே பிறந்தோம் அழிந்தோம் என்றாகி விடுவோம் என்றது. காதலன் பனித்துளி சற்றே யோசித்தது. சரி தான் காதலியின் கை பற்றி சுற்றி திரிய அருமையாக தானே இருக்கும் என்ற நினைத்தது. இரண்டும் மெல்ல பறவைக்கு மேலே வந்தன. சரியாக பறவையின் இறகில் விழுந்தன. சற்றே சறுக்கிய காதலனை இறுக பற்றிக் கொண்டது காதலி பனித்துளி. அப்பாடா விழுந்து இருப்பேன் நல்ல வேளை உயிர் காத்தாய் தோழி என்றது காதலன் பனித்துளி. வெள்ளையாய் சிரிந்தது காதலி பனித்துளி. இரண்டுக்கும் புது அனுபவமது. பறவையில் வேகத்துக்கு தங்களை பழக்கபடுத்தி கொண்டுது. பின் பறவையோடு பறத்தல் அவர்களுக்கு சுவாஸியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நெடுந்தூரம் பயணித்தபின் பறவைக்கு பனித்துளிகள் பாறமாகி போனது. கொஞ்ச நேரத்தில் அவை இருந்த சிறகினை உதிர்த்துவிட்டு பறந்தது. சிறகு மிக வேகமாக பூமியை நோக்கி பறந்திட பனித்துளிகள் பயந்து போயின. என்ன நேருமோ என்ற அச்சத்தில் அடங்கி ஒடுங்கி போயின. வேகமாக கீழிறங்கிய சிறகு ஒரு மரக்கிளையில் தஞ்சமடைந்தது.

பயத்தில் பனித்துளிகள் மேலும் உறைந்து போயின. படபடப்படங்க அதிக நேரமானது. கிளையில் தாலாட்டில் மெல்லிய பூங்காற்றில், மரத்தில் பூத்திருந்த பூக்களை கண்டுகளித்த காதலி பனித்துளிக்கு மீண்டும் உற்சாகம் பிறந்தது. அதற்கு எப்போதும் பயமென்பதே கிடையாது போலும். ஓடிஆடி மகிழ்ந்தது. காதலன் பனித்துளி அதை மெல்ல அதட்டியது. கண்ணே நாம் இருப்பது ஒரு சிறகின் மேல் அதுவும் மரகிளை கவனம் தேவை. கீழே இருப்பது ஆபத்தான தார்சாலை என்றது. காதலி பனித்துளிக்கு கவலையில்லை. மகிழ்ச்சி கண்ணைக் கட்டியது. மேலும் மேலும் குதித்தாடியது. ஒரு சடுக்கில் சிறகை விட்டு வெளியே கீழே விழ தொடங்கியது. பதறிய காதலன் பனித்துளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தானும் குதிக்க எத்தனித்தது. சற்றே அடர்ந்து வீசிய காற்று காதலன் பனித்துளியை திசை மாற்றி பசும் புல்வெளியில் பறத்தியது. காதலி பனித்துளி தார் சாலையில் விழுந்து காதலனை பிரிந்ததை எண்ணி தவித்து போனது. சற்றே தொலைவில் இருந்த புல்வெளியிலிருந்து காதலன் பனித்துளி கண்ணீர் சிந்தியவாறு காதலி பனித்துளியை பார்த்துக் கொண்டு இருந்தது.

மறுநாள் மிக ரட்சத சப்த்தோடு ஒரு வாகனம் வந்தது. தார்சாலை மீதிருந்த பனித்துகள்களை அகற்றியவாறு அந்த வாகனம் சென்று கொண்டு இருந்தது. காதலன் பனித்துளி கண்ணெதிரே நசுங்கி பொசுங்கும் காதலி பனித்துளியை காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி பெருகிய கண்ணீரில் அந்த புல்வெளி முழுவது கடலானது. கழிவிரக்கம் பெருகி பொங்கிட தன் இனத்தை ஒன்று சேர்த்த பனித்துளி இறுகி பனிப்பாறையாகியது. அதன் மேல் மேலும் பனித்துளிகளை போர்த்தி மற்ற இடம் போலவே ஆக்கியது. அதன் மேல் நடந்த மானிடரை சறுக்கி விழ செய்தது. சறுக்கி ஒவ்வொரு எண்ணிக்கையையும் "உங்கள் வாகனம் வசதிக்காக செல்ல தானே என் காதலி போன்ற எண்ணற்ற பனித்துளிகளை கொன்று குவித்தீர்கள்" என்று பெருங்குரலில் கூவியபடி தன் காதலிக்கு சமர்பித்தது. சாகவரம் பெற்ற பனிப்பாறையாய் அங்கே வாழ்ந்திருந்தது.

பிடித்த கவிதைகள்

தண்ணீர்

பாத்திரங்கள் மாறுகின்றன
வடிவங்களும்
ஆனாலும்
நான் ஒரு போதும்
பாத்திரங்களல்ல
எனினும்
நான் பாத்திரங்களைப் போலிருக்கிறேன்
தவிர்க்க முடியாதபடிக்கு

பெருவெளியின் பனித்துளியாய்
அலைகடலின் நுரைமுதலாய்
இழை அவிழும் முதல் துளியாய்
ஆகிவிடும் என் கனவு
தேங்கிக் கிடக்கிறது
இமைகடவாதொரு துளியாய்

நிரந்தமின்மையின்
அந்தரத்துள் மூழ்கிப்
புதுப்புதுப் பாத்திரங்கள்
ஆனாலும்
நான் வடிவங்கள்
அற்றதொரு சோதி

-அகிலன்

======================================

அன்பெனும் பிடிக்குள்
அக‌ப்ப‌ட்ட‌ ம‌லைய‌து
எவ்வ‌ள‌வு பெரிதோ
அவ்வ‌ள‌விற்கு க‌ன‌மில்லை
என்றாலும்
சிறுபொழுதும் தாம‌திக்க‌வோ
உட‌ன் சும‌ந்து ஏக‌வோ இய‌லாத‌
வ‌ழிந‌டைப் ப‌ய‌ணி
நான்
இற‌க்கி வைத்துப் போகிறேன்
ப‌த்திர‌மா ய‌தை
பாதையின் ம‌றுங்கே
திசைக‌ளோடி பிரிந்த‌ வ‌ழிக‌ள்
இருண்ட‌ பிற‌கு
என் பிராதுக‌ளையும், பிரார்த்த‌னைக‌ளையும்
காலத்தின் ப‌லிமுற்றத்தில்
கிட‌த்திவிட்டு
வெறும‌ கையோடு நான்
திரும்பும் காலில்
அடைக்க‌ல‌ம் த‌ரும்
அசையாத‌ அம்ம‌லையின்
அடிவ‌யிற்றுக் குகை
நிழ‌ல்.

Monday, April 27, 2009

தொலைந்து போதல்

தொலைந்து போவதும் மீண்டு வருவதும் வாழ்கைத் தத்துவம் பூமாவின் கவிதை போல.

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

-- பூமா ஈஸ்வரமூர்த்தி

ஆனால் என் அனுபவம் ஒரு வித்தியாசமான தொலைந்து போதல்.

அன்னியதேசத்தில் தனிமையோடு இருத்தல் மிக கொடியது. அதனால் கிடைத்தவர்களை எல்லாம் தோழமையாக்கி கொண்டு ஒன்றாய் உண்பதும் வார இறுதியில் கூட்டமாய் வெளியே செல்வதும் வித்தியாசமான அனுபவங்களே. அதுவும் ஒரே மொழி பேசும் நண்பர்கள் வாய்த்துவிட்டால் மிக சீக்கிரம் தோழமையும் உரிமையும் பாராட்ட ஆரம்பிப்பது மிக இயற்கை. அதுவும் ஒரு தாய்க்கு உண்டான பரிவோடு அனைவர்க்கும் உணவை சமைப்பதிலும், பரிமாரி விடுவதிலும், கூட்டத்தை கூட்டுவதிலும் பிரசித்தி பெற்றவள். எல்லோர்க்கும் என் மேல் பிரியம் என்றே நினைத்திருந்தேன். ஒரு சுபயோக சுப வார இறுதியில் மதிய உணவிற்கு பிறகு வெளியே எங்கும் போவதற்கான ஆயத்தம் எதுவும் தெரியாத காரணத்தால் அறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் சென்று தமிழ் பேசும் அந்த நண்பரின் அறை எண்ணை அழைத்தேன் பதில் இல்லை. இன்னும் ஒரு தோழியின் அறையையும் அழைத்தேன் அங்கும் பதில் இல்லை. அவளுடைய செல்லிடைபேசியில் அழைத்தேன் எல்லோரும் வெளியில் கிளம்பி நீண்ட நடை சென்றிருப்பதாக சொன்னாள். சட்டென மனதை மேகம் திரையிட்டது. தனிமை போன்ற வெறுமையொன்று கூட வந்தமர்ந்தது. ஏதுவும் செய்ய தோன்றவில்லை.

வெளியே கிளம்பி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ளும் கிளிகளும், அழகிய மலர்களும், பூனை போலிருந்த சுவீடன் தேசத்து முயல்களும் என் வெறுமையை போக்கி கொண்டிருந்தன. தனிமை கூடக்கூட நடக்க ஆரம்பித்தது. நிறைய தெருக்களை கடந்து, சில பூங்காக்களை கடந்து ஒரு ஏரியை கடந்து ஒரு பாலமேறி நீண்ட தொலைவு சென்று பின் திசை புரியவில்லை. வளைந்து வளைந்து நடக்கின்றேன் வந்த வழி புரியவில்லை. எந்த வளைவில் திரும்பி நடந்தால் வந்த இடம் போகலாம் என்பது தெரியவில்லை. அருகே நடந்து வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பேசிய பாஷை புரியவில்லை. சட்டென தெரிந்தது தொலைந்து போய்விட்டேன் என்று. கையில் காசு கூட எடுக்கவில்லை. செல்பேசியும் இல்லை. வசிக்கும் தெருவின் பெயர் மட்டும் தோரயமாக தெரியும். சற்றே பயத்தோடு நடந்தேன். எப்படி எப்படியோ அலைந்து ஒரு பிராதான சாலையை அடைந்தேன். எங்கள் விடுதி வழி செல்லும் பேருந்து அவ்வழியில் செல்வதை கண்டேன். சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆயினும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ரங்கனை நொடி நேரம் மனதில் நினைத்து ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய வழி எனக்கு புலப்பட்டது. விடுதி சென்றதும் எதிர்பட்டாள் தோழி எங்கே சென்றிருந்தாய் உன்னை மிக தேடினோம் உன் கைப்பேசியை கூட அழைத்தேன் என்றாள். எந்த சமாதானத்துக்கும் இடம் தராத கலகக்காரியின் வேடமணிந்து அறையை தாளிட்டு கொண்டேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். மனித்தில் இருந்த வெறுமை குழப்பம் மறைய இந்த தொலைதல் உதவி இருந்தது.

Friday, April 24, 2009

பொம்மலாட்டம்

வாழ்க்கை என்பதே ஒரு பொம்மலாட்டம் தான். இங்கு பிரச்சனை நூல் யார் கையில் என்பதே. பல சமயங்களில் நம் ஆட்டத்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தான் தீர்மானிக்கின்றார்கள். ஆனால் இது ஆடுகின்ற பொம்மையை ஆட்டி வைத்ததவர் யார் என்ற ஆராய்ச்சியைப் பற்றிய நீள்பதிவு.

பொம்மைகள்

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்கேள்வி கூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

- ஹரன் பிரசன்னா.

பொம்மை ஆடிக்கொண்டு இருக்கின்றது. பார்ப்பவருக்கு இதை ஆட்டி வைத்தவர் யாராக இருக்கும் என்ற சந்தேகம். இந்த சாதாரண விசயத்தை இவ்வளவு அலச வேண்டிய காரணம் என்ன என்று நாம் ஆச்சரிய படலாம். ஆனால் இங்கே ஆடும் பொம்மை ஒரு இறுதி விளைவு.(End result) அந்த இறுதி விளைவின் தாக்கம், எப்படி நடத்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியம் அல்லது ஆர்வம் எதுவேண்டுமானாலும் காரணிகளை ஆராய காரணமாக இருக்கலாம்.

குற்றம் அறிதல்
-----------------------------

அலுவ‌ல‌க‌த்திலிருந்து த‌லைவ‌லியோடு வீட்டுக்கு வ‌ரும் பெண்ணிட‌ம், உணவின் சுவை சரியில்லை என்று கணவன் குறை கூறினால், பெரும் சண்டை தான் விளையும். அவள் எரிச்ச‌லுக்கு காலையில் இரண்டு நிமிடம் தாமதத்தில் தொட‌ங்கி அதை தொட‌ந்த‌ அலுவலக பேருந்தை தவறவிட‌ல், நெரிசல் மிகுந்த நகர பேருந்தில் பய‌ணித்தல் அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாம‌ல் த‌லைவ‌லியில் முடித‌ல், ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ளின் அல‌ட்சிய‌ம், உய‌ர் அதிகாரியின் தேவையில்லாத‌ கோப‌ம் இதில் எது வேண்டுமானாலும் கார‌ண‌மாக‌லாம்.

பிறிதொரு நோக்கில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற‌டைய‌ வேண்டிய‌ மிக முக்கியமான ஒரு கோப்பு சென்ற‌டைய‌வில்லையாயின், மேலாள‌ர் க‌ண‌க்க‌ரையும், க‌ண‌க்க‌ர் ப‌ணி பைய‌னையும், ப‌ணி பைய‌ன் அலுவ‌ல‌க‌ விதிமுறைக‌ளையும் ம‌ற்றும் சில‌ர் வேறு சில‌ரையும் கை நீட்டுவ‌ர். எவரின் த‌வ‌றாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். கோப்பு சென்ற‌டைய‌ வேண்டிய‌ இட‌ம் செல்ல‌வில்லை.

சரி இங்கே காரணிகளை பட்டியலிட்டாற்று. அதனால் ஆட்டம் நிற்கவா போகின்றது. எந்த பிரச்சனைக்கும் தீர்வை தேட வேண்டும். பிரச்சனை வந்ததன் காரணம் தேடுவதால் ஒரு பலனும் இல்லை. காரணிகள்(குற்றம்) அறிவதால் பொம்மையின் ஆட்டம் நிற்க போவதில்லை.

மாற்றங்களை மறுதலித்தல்
--------------------------------------------------

ஒரு பெண் குழந்தையின் தாய் த‌ன் தோற்ற‌ம் கார‌ண‌மாக‌ அவள் க‌ண‌வ‌னுக்கு த‌ன்னை பிடிக்க‌வில்லை என்று தெரிந்து தாய் வீடு வ‌ந்தும் விவாக‌ர‌த்து பெற‌ த‌ய‌ங்குகின்றாள். மாற்று வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றாள். இதன் காரணம் சமூகத்தின் மேல் இருக்கும் பயமா, மனத்தின் தெளிவின்மையா அல்லது பெண் என்பதால் சார்புடைமை அதிகம் என்பதாலா?

க‌ணினி துறையில் ப‌ணி புரியும் மிக‌ க‌டுமையான‌ உழைப்பாளி ஒருவ‌ர், வேலைக்கு தகுந்த சன்மானமுமில்லாத‌ போதும், பணி எப்போது வேண்டுமானாலும் போய்விடுமோ என்ற பயமிருந்த‌ போதும் வேறு வேலைக்கு முயற்சிக்கவில்லை. இதற்கு காரணம் தன்னம்பிக்கை இன்மையா? வாய்ப்பு வசதிகள் பற்றிய கவலையா? இங்கே இருக்கும் அளவு நண்பர் கூட்டம் திரட்ட முடியுமா, என்ன தான் கஷ்டம் என்றாலும் பழகிய இடமாகிவிட்டது என்பதா?

பணி இடம் குடி இருப்பிருலிருந்து மிக தொலைவில் இருந்தும் ஒருத்தி வீடு மாற்றிக் கொள்ள யோசிக்கின்றாள். அங்கே இதை போன்ற வசதியா வீடு கிடைக்குமா? வேலையாட்கள் கிடைப்பார்களா? குழந்தைக்கு பள்ளி சரியாக அமையுமா? மருத்துவம் பிற வசதிகள் எல்லாம் இங்கே ஓரளவு கைப்பட்டு விட்டது அங்கு அப்படி வாய்க்குமா?

எல்லோரிடத்திலும் எத்தனை கேள்விகள்? எத்தனை தயக்கங்கள்? மாற்றங்களை முயற்சிக்கும் வரை தான் துயரமெல்லாம். மாற்றத்திலும் அதற்குண்டான நன்மைகள் விளையத் தான் செய்யும் என்பதை அனுபவம் கொண்டு தெளியவேண்டும். மாற்ற‌ங்க‌ளை ம‌றுக்கும் வ‌ரை பொம்மைக‌ளின்(பிர‌ச்ச‌னைக‌ள்) ஆட்ட‌ம் நிற்க‌வா போகின்ற‌து

மடமை போற்றுதல்
-----------------------------------

மாத‌வி எப்பேர்ப‌ட்ட‌ பெண். இவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள். கோவ‌ல‌ன் பல ஆண்டுகள் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள்.

சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் மாதவி கூறுவதாவது

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

கோவ‌லன் மாத‌வியோடு கொண்டிருந்த‌து வெறும் உட‌ல் இச்சை. மாத‌வியின் மேல் இருந்த‌ ஈர்ப்பு குறைந்த‌தும், மாத‌வி அந்நாட்டு ம‌ன்னனை புக‌ழ்ந்து பாடினாள் என்ற‌ சிறு காரணத்திற்காக த‌ன்னை விட்டக‌ன்ற‌ கோவலனை, தான் தன் மனை என்று போனவன் போனானடி என்று விடாமல் "நம்மை மறந்தாரை நாம் மறக்கலாமா?" என்று வினவும் மாதவிக்கு கோவலன் மேல் இருந்தது காதலா, காமமா, இதை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றா? இப்படிப்பட்ட மாதவிகளின் மடமை போற்றுத‌லால் கோவலன் போன்ற பொம்மைகள் இன்றும் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.


கோதை ஒரு அற்புத‌ பிற‌வி. அவ‌ள் தோன்றிய‌தே ஒரு துள‌சி செடி அருகில் தான். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளையும் அவர் மூலமாய் கேட்டு, அந்தக் கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. க‌ண்ண‌ன் மேல் அவ‌ளுக்கு எத்த‌னை பிரிய‌ம். திருமாலுக்கு சார்த்த‌ வேண்டிய‌ மாலையை தான் அணிந்து கொடுத்து "சூடிக் கொடுத்த‌ சுட‌ர்கொடி" பெய‌ர் பெற்று கோதை ஆண்டாள் ஆனாள்.

நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

திரும‌ண‌ வ‌ய‌தில் திருமாலை ம‌ண‌க்க‌ வேண்டும் என்று வ‌ட்ட‌மிட்டு பார்த்த‌ல், கூட‌ல் கூடிய‌தா என்று பார்த்த‌ல், ம‌ன்ம‌த‌னை வேண்டுத‌ல், பாவை நோன்பிருத்த‌ல்,க‌ன‌வு காணல் என்ற‌ ப‌ல‌ ம‌ட‌மைக‌ளை ஆண்டாள் போன்றினாலும் அவை எல்லாவ‌ற்றிர்க்கும் முத்தாய்ப்பாக‌ "என் மார்பகங்கள் திருமாலுக்கேய‌ன்றி மனிதர்களுக்கு அல்ல‌" என்று கூறும் ஆண்டாள் தன்னிலை மறந்தவளா? கடவுளை கண்டவளா? அல்லது தானே கடவுள் என்ற அக‌ங்காரம் பிடித்தவளா? காரணம் எதுவாயினும் ஆண்டாள் மடமை போற்றியதால் திருப்பாவை, திருமொழி என்ற பொம்மைகள் ஆடி எழுந்தன.

Tuesday, March 24, 2009

ஒல்லென‌ ஒலிக்கும் புன‌லென‌ புல‌ம்பும் தலைவியும்

ச‌ங்க‌ கால‌த்தில் பெண்க‌ள் ம‌டைமை போற்றிய‌த‌ற்க்கு ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. இங்கே நாம் பார்க்க‌ இருக்கும் ஐந்திணை ஐம்ப‌து பாட‌ல்க‌ளில் ம‌ருத‌த் திணை பாட‌ல்க‌ள் அனைத்திலும் த‌லைவ‌ன் த‌லைவிகிடையேயான‌ உய‌ர்ந்த‌ப‌ட்ச‌ ஊட‌லும், த‌லைவியின் வேத‌னையும் புல‌ப்ப‌டுகின்ற‌ன‌.

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! 24

கோலம் - அழகு
குருகு - நாரை
"பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி கூறினாள்.


இப்படி த‌லைவ‌னுக்கு தன் வெறுப்பிருக்குமோ என்ற‌ அய்ய‌த்துக்கும் அத‌ற்கு முன் பின்வ‌ரும் பாட‌ல்க‌ளில் ஆதார‌ம் இருக்கின்ற‌ன‌ த‌லைவ‌ன் ப‌ர‌த்தை வீட்டுக்கு செல்கின்றான் அவ‌னை த‌ட்டி கேட்க‌ கூடாதா என்று அவ‌ன் ந‌ண்ப‌ரான‌ பாண‌றிட‌ம் கேட்கின்றாள்.


பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு! 26

வதுவை - திருமணம்
"வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.


இந்த‌ நிலையில் வெளிப்ப‌டும் சிரிப்பு விர‌த்தியாலா அல்ல‌து அப்ப‌டியாவ‌து அந்த‌ திரும‌ண‌ம் நின்ற‌து என்ற‌ ச‌ந்தோச‌மா? இந்த‌ த‌லைவியின் நிலை எவ்வ‌ள‌வு வேத‌னை இல்லையா?
இப்ப‌டி இருந்தாலும் இந்த‌ த‌லைவியின் ம‌டைமையை பாருங்க‌ள்.

'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? 29

வியல் - அகன்ற
இழை - அணிகலன்
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல்(அருவி) சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.


:) என்னென்று சொல்வ‌து இந்த‌ த‌லைவியை. இது தான் காத‌ல் என்ப‌தா? இப்ப‌டிப்ப‌ட்ட‌ காத‌ல் அவ‌ளுக்கு தேவை தானா? ஒல்லென் ஒலிக்கும் புன‌ல் எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காட்சிப‌டுத்துத‌ல் இந்த‌ பாட‌லில் இருக்கின்ற‌து.

பாட‌ல்க‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் சென்னை லைப்ர‌ரியில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து.