Tuesday, January 24, 2012

படித்தது பிடித்தது - கலாப்ரியாவின் "வனம் புகுதல்"


க‌லாப்ரியாவின் வ‌ன‌ம் புகுத‌ல் ச‌மீப‌மாக‌ வாசித்தேன். பல‌ க‌விதைக‌ள் மிக‌வும் பிடித்திருந்தது. வ‌ன‌ம் புகுத‌ல் க‌விதை தொகுப்பில் நான் ர‌சித்த‌ சில‌வ‌ற்றை ப‌கிர்ந்து கொள்கிறேன்.

//துணைத் த‌லைப்புக‌ளையே
பார்த்துக் கொண்டிருந்த‌தில்,
வாசிக்க‌ முய‌ன்று தோற்ற‌தில்,
ப‌ட‌விழா சினிமாவின்
மற்ற ந‌ல்ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளை
த‌வ‌ற‌விட்ட‌து போல்

ந‌ம் ச‌ந்திப்பு
நிக‌ழாம‌ல் போன‌து
நாம் ச‌ந்தித்த‌ அன்று//

என்ற இக்க‌விதை மனதில் அழுத்தமாக ப‌திந்த‌து. ப‌ல‌ எதிர்பார்ப்புக‌ளோடு சிலரை ச‌ந்திக்க‌ச் செல்கிறோம். ஆயினும் அந்த‌ ச‌ந்திப்பு ந‌ம் எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிடினும் ஒரு அவ‌ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்கும் வித்தாக‌ ஆகிவிடுவதுண்டு அல்ல‌து எதிர்ப்பார்த்தை விட‌ மிக‌ ப‌ல‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள் நடந்துவிட்டிருக்க‌லாம். இவ்விரு ச‌ம‌ய‌ங்க‌ளிலும் ச‌ந்திக்கும் நேர‌ம் ச‌ந்திப்பு நிகழ்வ‌தில்லை. துணைத்த‌லைப்பு என்ற‌ க‌விதை த‌லைப்பும் அந்த‌ உவமானமும் அழ‌கு.

‘விதை‘ என்ற‌ ம‌ற்றுமொரு க‌விதையில், எதையாவ‌து க‌ற்று த‌ரும் நண்பர்களோ, க‌தை சொல்லி பாட்டிக‌ளோ, நீச்ச‌லோ இன்ன பிற‌வோ க‌ற்றுத் தந்த‌வ‌னை அந்த‌ந்த‌ விச‌ய‌ங்க‌ள் செய்யும் போது நினைத்து பார்ப்ப‌தில்லை. எதையும் க‌ற்று த‌ராத‌, காத‌லிக்க‌ கூட‌ செய்யாத‌ நீ க‌விதையின் முற்றுப்புள்ளிக்கு பின் க‌ண்ணீர்ச் சொட்டாக‌ ஏன் இருக்கின்றாய் என்று வின‌வும் இவ‌ருக்கு க‌விதைக‌ளை த‌ந்த‌வ‌ள் அவ‌ள் என்ப‌தே என் விடையாகும்.

//ச‌ந்தேக‌மே இல்லை அதே தீக்கோல் தான் அருகில் கிட‌ந்த‌து//

ருசி என்ற‌ கவிதையில் மேல் வரும் வரிகளை சொல்லி இருக்கின்றார். அதில் இறந்தவ‌ளையும் வெட்டியானையும் அவ‌ன் பிண‌மெரிக்க‌ உத‌வும் தீக்கோலையும் ம‌ட்டும் பேச‌வில்லை. ம‌னித‌னுக்குள் எப்போதுமிருக்கும் மரணம் என்ற‌ ப‌ய‌த்தை ஒரு விர‌த்தியை பேசுகின்ற‌து. "காய‌மே இது பொய்யடா" என்ற‌ ப‌ட்டின‌த்தார் வ‌ரிக‌ளை நினைவூட்டிய க‌விதையிது. “அதே தீக்கோல் தான் என‌க்கும்“ என்று சொல்கிற‌து.

தொகுப்பின் த‌லைப்பில் வ‌ந்திருக்கும் க‌விதை ம‌ன‌தை அள்ளும் வண்ணமிருக்கின்ற‌து. உவ‌மைக‌ள் கிட்டாம‌ல் க‌விதை எழுத‌ முடியாத‌ வேதனையை ஒரு ம‌ர‌த்தில் பூக்க‌ள் உதிர்த‌லோடு ஒத்திருப்ப‌து அழ‌கு.

//கிளைக‌ள் மாறிக்கொண்டன
வேர்களில்
வேறு வேறு என்ற
பிரக்ஞையில்லாமல் //

என்று அன்பை, பிரிய‌ம் ப‌ல‌ரிட‌ம் வ‌ள‌ர்வ‌தை ஒரு குறியீடாக‌ சொல்லி இருக்கின்றார்.

//ஒரு தீக்குச்சி
கிழிப்ப‌து போல‌
வாக்க‌ளிப்ப‌து போல்
அம்புகுறி வரைவ‌தெளிது//

என்று தொட‌ங்கும் இந்த‌ க‌விதையில் நாட்டின் வ‌ன்முறையை இல‌ங்கை போன்ற‌ இட‌த்தில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறையை அனாய‌சிய‌மாக‌ சொல்லியிருக்கின்றார். ராம‌ ஜென்ம‌ பூமி போன்ற‌ இட‌த்தில் அம்பு குறிக‌ளை ஆயுத‌மென‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ கூடும் என்று சொல்லுமிட‌த்தில் ந‌ம் ப‌க்தி எதை நோக்கி என்ற‌ சிந்த‌னை விளைக்கின்ற‌து.

“ஒரு நாள்“ என்ற‌ க‌விதையில் ம‌னித‌னின் நினைவுக‌ளை ஒரு புதிய‌ ஊரில் விசால‌ம் தேடிய‌ ப‌டி ப‌ஸ்ஸிலிருந்து இற‌ங்கும் அன்னிய‌ன் போல‌ என்ற‌ வித்தியாச‌மான‌ உவ‌மையை கூறி இருக்கின்றார். “வீதி விளக்குகள்” கவிதையில் நிழலுக்கு வெற்று கையில் வீடு திரும்புவன் என்ற வேறுபாடு இல்லை என்று வித்தியாசமான சிந்தனையை சொல்லி இருக்கின்றார். பிர‌ம்ம‌ராஜ‌னுக்கு என்று எழுதி இருக்கும் சில‌ க‌விதைக‌ள் புரிய‌ க‌டின‌மாக‌ இருக்கின்ற‌ன‌. அந்த‌ கவிதைக‌ளில் “எவ‌ற்றின் ந‌ட‌மாடும் நிழ‌ல்க‌ள் நாம்” என்ற‌ வாக்கிய‌ம் என்னை மிக‌ க‌வ‌ர்ந்த‌து. அதே போல் க‌தை என்ற‌ த‌லைப்பிட்ட‌ க‌விதையில் சொன்ன‌பின் க‌தை யாருக்கு சொந்த‌ம் என்கின்றார். மிக‌ அழ‌மான‌ சிந்த‌னை இது. க‌தை மட்டும் அல்ல‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌, ஏன் வெளி உல‌க‌த்திற்கு வ‌ந்துவிட்ட‌ எந்த‌ விசய‌மும் நாமே ந‌ம‌க்கு ம‌ட்டும் தான் சொந்த‌மா என்ன‌?

மேலும் வனம் புகுதல் கவிதை தொகுப்பில் இரண்டு இடத்தில் இரண்டு வேறு வேறு கவிதைகளில் ஒரே விதமான வரிகளை சொல்லி இருவேறு கருத்தை உணர்த்தி இருக்கின்றார். இதுவரை படித்திருக்கும் எந்த தொகுதியிலும் இந்த வித நுட்பத்தை நான் கண்டதில்லை. “தெரு விளக்கு” மற்றும் “வீதி விளக்குகள்” என்ற கவிதையில் ஒரே விதமான வரிகளை பொதுவாக உபயோகபடுத்தி வேறு வேறு கருத்தை சொல்லி இருக்கின்றார். அதே போல் “தொடர்பிலி” மற்றும் “முக வரி” கவிதையிலும் பொதுவான வரிகளில் வேறு கருத்து வருமாறு சொல்லி இருக்கின்றார்.

இறுதியாக‌ ஒரு அழ‌கான‌ க‌விதை. “திணைம‌ய‌க்க‌ம்“ என்ற‌ இந்த‌ க‌விதையை நான் விக‌ட‌னில் 75 முத்திரை க‌விதைக‌ள் இணைப்பில் 2001 ம் ஆண்டு படித்தேன். அந்த‌ தொகுப்பில் என்னை மிக‌ க‌வ‌ர்ந்த‌ க‌விதையில் இதுவும் ஒன்று ஆகும். ஒரு பேருந்து ப‌ழுதாகி ம‌ர‌த்த‌டியில் நிற்கிற‌து. குழ‌ந்தைக‌ள் தயங்கி த‌ய‌ங்கி பேருந்தில் ஏறி பின் த‌ய‌க்கும் நீங்கி அந்த‌ பேருந்தில் விளையாடுக்கின்றார்க‌ள். ச‌ற்று நேர‌த்துக்கு பின் அந்த‌ பேருந்து ச‌ரி செய்யப்பட்டு சென்று விடுகின்ற‌து. அதிலிருந்து வெளியேறிய‌ டிச‌ல் ஒரு கறையை க‌ண்டு ம‌ர‌ம் குழ‌ம்பி நிற்ப‌து போல‌ இருக்கின்ற‌து அந்த‌ க‌விதை. இங்கே ம‌ர‌ம் குழ‌ம்பிய‌து என்ப‌து அழ‌கான‌ ப‌டிம‌ம். அந்த‌ டிச‌ல் சுவ‌ட்டை பேருந்தின் நிழ‌ல் என‌ நினைத்து ம‌ர‌ம் ம‌ய‌ங்கிய‌து என்றும், பேருந்து போய்விட்டதால் குழந்தைக‌ளையும் பிரிந்துவிட்டோம் ஏக்க‌த்தையும், அந்த‌ நிக‌ழ்வு விட்டு சென்ற‌ சுவட்டை நினைத்திருந்த‌ப‌டியும் என்று ப‌ல‌விச‌ய‌ங்க‌ளை சொல்லி போகிற‌து இந்த‌ க‌விதை.

இத்தொகுப்பிற்கு சுகுமார‌ன் எழுதியிருக்கும் முன்னுரை மிக‌ வ‌சீக‌ர‌மாக‌ இருந்த‌து. அதில் க‌லாப்ரியாவின் முந்தைய‌ க‌விதைத் தொகுப்பின் வந்த ஒரு கவிதையாக சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டு இருந்த ஒரு கவிதை என்னை மிக‌வும் பாதித்த‌து. ஆண்டாள் திருப்பாவையில் த‌ன் தோழிகளை அழைத்துக் கொண்டு க‌ண்ண‌னை காண‌ செல்வாள். எம்பாவாய் என்ப‌து திருப்பாவையில் வரும் ஒரு ம‌ந்திர‌ம் போல் ஒரு சொல் அந்த‌ சொல்லை த‌லைப்பாக‌ வைத்து, நக‌ர்புற‌த்தில் குடிசைவாழ் பெண்ணொருந்தி காலைக்க‌ட‌னை க‌ருக்க‌லில் செல்வதை எழுதி இருப்ப‌து மிக‌வும் வருத்தத்திற்குரியது.

Saturday, September 24, 2011

வெயில் பட்ட புல்லென வாடும் தலைவி

வெயிலுக்கு புல் வாடுவதும், பின் மழை பொழிய பொலிவு பெறுவதும் இயற்கையே. மழையை பொழிதலை கவிஞர்கள் காதல் மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு ஒப்பிடுவதும் அதற்கு உண்டான சூழலாக வர்ணிப்பதும் அந்த நாளில் இந்த நாள் வரை தொடர்கின்றது.


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?


வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

-Chennai library

திருந்திழாய்! என்ன அழகான விளித்தல் இது. இந்த பாடல் பொழிப்புரை இல்லாமலேயே புரிவது மிக வித்தியாசமன்றோ.

ஜே ஜே சில (பின்) குறிப்புகள்

இப்போதுதான் பூத்த மலர்
பறிக்கப்பட்டுவிடும் என்று
சற்றேனும் நினைக்கவில்லை“

"நல்ல சிந்தனை. யார் எழுதினது?"

"நான்தான்"

"அட அம்மிணி சரின்னு சொல்லிட்டாங்களா ?"

"இல்லைங்க.. அந்த வரிகள் வலி வேதனை"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று எனக்கு தோன்றியது.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க.. நான் செடியின் வலியை சொன்னேன்"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று
எனக்கு தோன்றியது - இது Hope.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க நான் செடியின் வலியை சொன்னேன்." -  இது Reality.

Hope and Reality is not always same.

--X--

நான் சுவீடனில் இருந்த போது வார இறுதியில் ஊர் சுற்றித்தானே ஆறு பயணக்கட்டுரைகள் அளித்திருந்தேன். சுவீடனில் பார்க்க அதிகம் இடமில்லாத காரணத்தால் ஊர் வெளியே கிளம்பும் போது வரைபடத்தில் இங்கி பிங்கி பாக்ங்கி போட்டு பார்த்து ஒரு இடம் செல்வோம். அப்படி போய்  ஒரு நிலையத்தில் இறங்கியதும் அங்கே பார்த்த ஒரு ட்ராமில் "சிக்கில ஹுட்டே" என்று எழுதப்பட்டு இருந்தது.

சிக்கில ஹூட்டே என்ற அந்த பெயர் கவர்ந்திருந்தாலும், அது வரை மெட்ரோவிலும் பஸ்ஸிலுமே அதுவரை பயணம் மேற்கொண்டிருந்தால் ட்ராமில் செல்ல எப்படி இருக்கும் என்று நினைத்து, வேறு ஒரு வார இறுதியில் அந்த ஊருக்கே செல்ல திட்டமிட்டு வரைபடத்தில் தேடி கிளம்பினோம்.

அங்கே சென்றதும்தான் தெரிந்தது அங்கே ஒரு தில்லி தாபா இருப்பது. (எங்கே போனாலும் துரத்தும் தில்லி). மேலும் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மாலும், ஒரு பனி மலைப்பிரதேசமும் இருந்தது. (ஸ்கியிங் என்ற மலை மேலிருந்து பனி சறுக்குமிடம்).

தில்லி தாபாவில் சாப்பிட்டோம், அன்னாசி லஸ்ஸி நன்றாக இருந்தது என்பதையும், அந்த ஷாப்பிங் மாலில் எல்லா பொருட்களும் மிக குறைந்த விலையில் இருந்தன என்பதையும், பனி சறுக்குமிடம் வரை வீராவேசமாக சென்று, பின் பயந்து போனாதால், என்னால் என் கூட வந்த யாருமே பனி சறுக்காமல் திரும்பியதுதான் எனது ஸ்வீட் சுவிடன் கட்டுரையிலேயே சொல்லி விட்டேனே.

சரி... ஏன் இந்த மலரும் நினைவுகள் ?

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்றாக பேசப்படும் சுந்தரராமசாமியின் ஜே, ஜே. சில குறிப்புகள்  புத்தகத்தை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிக்க, வாசிக்க நம்மையும் கதைக்குள் ஈர்த்து, நாமே நாவலின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டதான உணர்வேற்படுகிறது.

நாவலின் போக்கில் சாதாரணமாக வரும் வாக்கியங்களின் ஆளுமை மிகவும் அதிகம்.

உதாரணத்திற்கு…

"நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்" (பக்.20)

"பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போது தான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன்." (பக்.26)

"ஜேஜே சில குறிப்புகள் ஒரு நாவல் போல் இல்லாமல் ஒரு டைரி குறிப்பு போல இருக்கும் என்றும் அது தான் தமிழில் வந்த முதல் பின்நவீனத்துவ நாவல், போஸ்ட்மார்டனிசம் ஸ்டைல்..." என்றெல்லாம் கூறக்கேட்டு வாசித்துவிட்டு எடுத்த ஓட்டம் தான் மூச்சு வாங்க மேல எழுதி...

அதான் ஜே.ஜே. பின்குறிப்புகள்.


Friday, June 24, 2011

ஒரு வேப்ப‌ ம‌ர‌மும் வ‌ழி ம‌றிக்கும் சாலைக‌ளும்



எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மிக‌ப் பெரிய‌ வேப்ப‌ ம‌ர‌மிருக்கிற‌து. சுமார் ஒரு ஏழு வ‌ருட‌த்திற்கு முன் என‌து கை அள‌விற்கே ஒல்லியாக‌ இருந்த‌ இந்த‌ ம‌ர‌ம் த‌ற்ச‌மய‌ம் என்னை விட‌ குண்டு பெண்ணாகி விட்ட‌து. எங்க‌ள் வீட்டு மாடிக்கு மேல் வ‌ள‌ர்ந்து விட்ட‌து இந்த‌ ம‌ர‌ம். வேப்ப‌ம‌ர‌ம் வைத்த‌ கார‌ண‌மே எங்க‌ள் வீடு சாலையிலேயே அமைந்திருப்ப‌தாலும் அதில் தொட‌ர்ந்து க‌ன‌ வாக‌ன‌ங்க‌ள் புழுதியை அள்ளி இறைத்த‌ ப‌டி செல்வ‌தால் வீடு புழுதியாகி விடுவ‌தை சற்றேனும் த‌டுக்க‌லாம் என்ற‌ எண்ண‌மே.

இந்த‌ வேப்ப‌ ம‌ர‌ம் அட‌ர்ந்து வ‌ள‌ர்ந்து க‌ண்ணுக்கு எவ்வ‌ள‌வு குளுமையாக‌ இருக்கிற‌து என்று அருகிருந்து பார்ப்ப‌வ‌ர்க்கு ம‌ட்டுமே தெரியும். இடையிடையே க‌ண்ணாமூச்சி ஆடி சிரிக்கும் சூரிய‌னும் ம‌றைந்து ம‌றைந்து பொழியும் ம‌ழையும் எத்த‌னை அற்புத‌மாக‌ இருக்கும். இந்த‌ ம‌ர‌ம் சில‌ அணில்க‌ளுக்கும், ப‌ல‌ காக‌ங்க‌ள், குயில்க‌ள் ம‌யில்(எங்க‌ வீட்டுக்கே ம‌யில் வ‌ரும் ந‌ம்புங்க‌) இவ‌ற்றின் குதூக‌ல‌த்துக்கும் குர‌லுக்கும் அடித்த‌ள‌மாக‌ அமைந்திருந்த‌து.

வீட்டுக்கு முன் செல்லும் மின்சார‌ க‌ம்பிக‌ளில் வேப்ப‌ங்கிளைக‌ள் மோதுவ‌தாக‌ மின்சார‌ ஊழிய‌ர்க‌ள் வ‌ந்து இர‌ண்டு மூன்று பெரிய‌ கிளைக‌ளை வேப்ப‌ ம‌ண‌ம் ம‌ண‌க்க‌ வெட்டி சாய்த்துவிட்ட‌ன‌ர். ப‌ழைய‌ வேலைக்காரி வேப்ப‌ங்கிளைக‌ளின் மேல் க‌ண் கொண்டிருந்தாள் வெட்டிய‌து தான் தாம‌த‌ம், சில‌ரை அழைத்து வ‌ந்து வெட்ட‌ப்ப‌ட்ட‌ அத்த‌னை கிளைக‌ளையும் அள்ளிக் கொண்டு போய்விட்டாள். த‌ற்ச‌ம‌ய‌ம் வீட்டை விட்டு வெளியே வ‌ந்தால் சூரிய‌னும் ம‌ழையும் நேர‌டியாக‌ தெரிகின்ற‌ன‌.

"கூரை எரிந்து போன‌து
நில‌வு தெளிவாக‌ தெரிகின்ற‌து"

என்றொரு ஹைக்கூ க‌விதை இருப்ப‌தாக‌ கற்றதும் பெற்றதுமில் சுஜாதா எழுதியதைப் ப‌டித்திருக்கிறேன்.



வீட்டுக்கு அருகில் இருக்கும் சில‌ தெருக்க‌ளில் ம‌க்க‌ள் தா‌ங்க‌ளே அமைத்துக் கொள்ளும் வேக‌த் த‌டைக‌ளை க‌ட‌க்கும் போது என்ன‌வ‌ர் சொல்வார் "இது எல்லாம் தேசிய‌ செல‌வீன‌ம்(நேச‌ன‌ல் வேஸ்டேஜ்)". அவ‌ர் அப்ப‌டி சொல்ல‌ கார‌ண‌ம் இந்திய‌ அர‌சு அதிக‌ விலைக்கு பெட்ரோலிய‌ க‌ச்சா பொருள் வாங்கி செல‌வு செய்து பெட்ரோல் செய்து மிக‌ குறைந்த‌ விலைக்கு விற்கிற‌து. எண்ணை நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலும் அர‌சின் ந‌ட்ட‌ க‌ண‌க்கு பாக‌த்திலேயே வ‌ருகின்ற‌ன‌. அப்ப‌டி இருக்க‌ ப‌த்த‌டிக்கு ஒரு வேக‌த்த‌டை வாக‌ன‌த்தின் பெட்ரோல் செல‌வினை அதிக‌ரிக்கும். அதுவும் தெருக்க‌ளில் போட‌ப்ப‌டிருக்கும் வேக‌த்த‌டை விதிப்ப‌டி சீராக‌ கொஞ்ச‌ம் தொலைவிலிருந்து ஏறி இற‌ங்கி இருக்காது. கொக்கு மாக்காக‌ சுவ‌ர் போல் எழுப்பி இருப்பார்க‌ள் ஏறித் தான் குதிக்க‌ வேண்டும். என்ன‌வ‌ர் எண்ணை நிறுவ‌ன‌ர் ஆயிற்றே இத‌ற்காக‌ அலுத்துக்கொள்வார்.

சென்ற‌ வார‌ம் நேர்முக‌ தேர்வொன்றுக்காக‌ டெல்லி வ‌ரை செல்ல‌ வேண்டி இருந்த‌து. இந்திய‌ சாலைக‌ளில் முக்கால்வாசி குண்டும் குழியுமாக‌ வ‌ழி வார்ப்பதை விட்டு வ‌ழி ம‌றிப்ப‌தையே வேலையாக‌ கொண்டிருப்ப‌வை. அதுவும் டெல்லியின் தொட‌ர்ம‌ழை கார‌ண‌மாக‌ குண்டும் குழியும் மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌ன விழுந்து எழுந்து சென்று கொண்டிருந்தோம்‌. தெருவில் வேக‌த்த‌டைக்கே "நேச‌ன‌ல் வேஸ்டேஜ் என்பீர்க‌ளே இதை என்ன‌ சொல்வ‌து" என்றேன். இது "கொலைக்குற்ற‌த்திற்கு இணையான‌து" என்றார். ஆம் அவ‌ர் சொல்வ‌து ச‌ரி தான் அந்த‌ சாலையில் ஒரு நாளைக்கு எத்த‌னை வாக‌ன‌ங்க‌ள் க‌ட‌க்கின்ற‌ன‌? இத்தனை குண்டும் குழியுமாக‌ எத்த‌னை சாலைக‌ள் இருக்கின்ற‌ன‌? மொத்த‌ பெட்ரோலிய‌ க‌ச்சா எண்ணை இருப்பு என்ன‌? ம்ம் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் கொஞ்சமேனும் யோசிப்பார்க‌ளா அல்ல‌து காம‌ன் வெல்த் ம‌ட்டும் சேர்த்துக் கொண்டு இருப்பார்க‌ளா? அந்நிய‌ன் விக்ர‌ம் போல் யாராவ‌து வ‌ந்தால் தான் என் தாய்த்திரு நாட்டை காக்க‌ முடியும். ஹூம்ம்ம்ம்.

Tuesday, December 14, 2010

பெருங்கடலாடிடும் துளி மழை

எமது இரண்டாம் கவிதை நூல் காலச்சுவடு வெளியீடாக



அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி
நட்புடன்,
லாவண்யா

Friday, September 24, 2010

க‌ல்யாண்ஜி க‌விதைக‌ள்

1. நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது


2.தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

3.அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.

4.பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
'கோலம் நல்லா வந்த '
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.

புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ

விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.

உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.

- கல்யாண்ஜி

மல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாராக‌)
















எங்க‌ வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகைக‌ள் ச‌ற்றே பெரிய‌ குண்டு ம‌ல்லிகைக‌ள். பார்க்க‌ வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல‌ இருக்கும். என‌க்கு சிறு வ‌ய‌திலிருந்தே ம‌ல்லிகைப் பூ மேலே தீராத‌ காத‌ல். திருவ‌ர‌ங்க‌த்தில் இருந்த‌ நாட்க‌ளில் மென‌க்கெட்டு பூ மார்கெட் போய் ம‌ல்லிகைப் பூவை உதிரியாக‌ வாங்கி நெருக்க‌மாக‌ தொடுத்து, த‌லை நிறைய‌ வைத்துக் கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

என‌க்கு ம‌ல்லிகைப் பூ நிற‌ம்ப‌ பிடிக்கும் என்ற கார‌ண‌த்தால் ம‌ல்லிகை ப‌திய‌னிட்டு மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் வ‌ள‌ர்க்க‌‍ப்ப‌டுகின்ற‌ன‌ என் வீட்டில். தினம் காலையில் கிள‌ம்பும் போது தோட்ட‌த்தை வாஞ்சையோடு பார்ப்ப‌தை த‌விர‌ நான் வேறு எதுவும் செய்வ‌தில்லை அந்த‌ ம‌ல்லிகைச் செடிக‌ளுக்காக‌. தோட்ட‌த்தில் ம‌ல்லிகை ம‌ட்டும் அல்லாது நிறைய‌ ரோஜா செடிக‌ளும் ஒரு வேப்ப‌ ம‌ர‌மும், ஒரு சில‌ வாழை ம‌ர‌ங்க‌ளும், ஒரு ந‌ந்தியாவ‌ட்டை செடியும் இருக்கின்ற‌து. இருந்தாலும் ம‌ல்லிகையின் ப‌சுமையும் அடுத்த‌ப‌டியாக‌ வாழையுமே என்னை எப்போதும் க‌வ‌ரும்.

மார்ச் முடிந்து ஏப்ர‌ல் மாத‌ம் ஆர‌ம்பிக்கும் த‌ருண‌ம் என‌க்கு மிக‌ பிடித்த‌ கால‌ம். எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ளலும் ஒரு சில‌ ம‌ல்லிகை மொக்குக‌ளை த‌ர‌ ஆர‌ம்பிக்கும். முத‌லில் ஒன்று இர‌ண்டாக‌ ஆர‌ம்பித்து, மே மாத‌த்தில் த‌லை நிறைய‌ வைத்துக் கொள்ளும் அள‌வு பூக்கும். அதை சாயுங்கால‌ம் ப‌றித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வ‌து என் தின‌ப்ப‌டி செய‌ல்.(இங்கே ம‌க‌ளிர் த‌லையில் பூக்க‌ளை பெரும்பாலும் அணிவ‌தில்லை)

"ஏங்க‌ ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க‌ போச்சு?"

"இரு வ‌ரேன்"

வ‌ந்து விள‌க்கை போட்டார். அத‌ற்குள் என‌க்கு பூக்குத்தி கிடைத்து விட்ட‌து.

"பாரு ஒரு ஏர்பின் தேட‌ கூட‌ நான் தான் வ‌ர‌ வேண்டி இருக்கு"

"என்ன‌வோ ஒரு ஏரோபிளேனேயே தேடி த‌ந்த‌ மாதிரி சொல்லீங்க‌ ம்ம்ம்"

"ச‌ரி வெட்டியா பேச்சு தான் டிப‌ன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் ப‌ண்ண‌ முடியும்"

"அதுக்கு தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே வெட்டியா அப்ப‌ற‌ம் இன்னோரு ஆளை வேற‌ அப்பாயிண்ட் ப‌ண்ண‌னுமா?"

கிள‌ம்பி சீருந்தில் கொஞ்ச‌ தூர‌ம் சென்ற‌ இருப்போம். நான் எங்கே என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌த்தை பிடிப்பேனோ அதே இட‌த்தில் த‌ன் அலுவ‌ல‌க‌த்து வாக‌ன‌தை பிடிக்க‌ வேண்டி செல்லும் எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிப்ப‌வ‌ரை தின‌ம் ஏற்றி செல்வ‌து போல் இன்னும் ஏற்றி சென்றோம்.

"குட் மார்னிங் ஜி"

"குட் மார்னிங் கத‌வு சரியாக‌ மூட‌வில்லை மூடி விடுங்க‌ள்"

"எங்க‌ வீட்டு பைய‌ன் க‌ல்யாண‌ ரிசப்ச‌னில் உங்க‌ போட்டோ அழ‌கா வ‌ந்திருக்கு"

"ஓ அப்ப‌டியா?"

"ஆம் அப்ப‌ மேட‌ம் இங்கே இல்லையா என்ன‌?"

"ஆமா அவ‌ங்க‌ அப்ப‌ வெளிநாடு போயிருந்தாங்க‌."

"ஓ அப்ப‌டியா எங்கே..."

அவ‌ர்க‌ள் உரையாட‌ல் நீண்ட‌து. நான் கிடைத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தினேன்.

ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர் இற‌ங்கிய‌தும்

"பாரு அவ‌ர் சொல்றாரு நான் போட்டோல‌ அழ‌கா இருக்கேனாம்"

"சும்மா தின‌ம் வ‌ண்டில‌ வ‌ரோமே ஏதாவ‌து புக‌ழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்க‌ற‌து தானே வ‌ரும் போட்டோல‌"

"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழ‌கு அதான் அவ‌ரும் சொல்றாரு"

"அவ‌ருக்கு என்ன‌ அவ‌ரா உங்க‌ளை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி இருக்காரு அந்த‌ கொடுமைய‌ நான் இல்லை ப‌ண்ணி இருக்கேன்"

"ப‌க்க‌த்துல‌ இருக்க‌ பொருள் எப்போதுமே தெரியாது."

"அதுக்கு பேரு தூர‌ப் பார்வை என் பார்வை ச‌ரியா இருக்குன்னு டாக்ட‌ரே ச‌ர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க‌ தான் இந்த‌ ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்க‌ல் செக்க‌ப் கூட்டிட்டு போனீங்க‌"

அத‌ற்கும் என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌ம் வ‌ந்து விட்ட‌து.

*******















சில‌ நாட்க‌ளுக்கு முன் ஒருவார‌ இறுதியில் வெளியே கிள‌ம்ப‌ த‌யாரா இருந்தோம்...

"இன்னிக்கி வெளில‌ சாப்பிட்டு அப்ப‌டியே சூப்ப‌ர் மார்க்கெட் போய் உங்க‌ ஆபிஸ்ல‌ கொடுத்த‌ சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து ம‌ளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வ‌ர‌லாம்"

"சாப்பிட‌ போக‌லாம் ஆனா சூப்ப‌ர் மார்கெட் எல்லாம் வ‌ர‌ முடியாது"

"அதுக்காக‌ த‌னியாவா போக‌ முடியும் அப்ப‌டியே போயிட்டு வ‌ந்திருலாம்"

"நான் வ‌ர‌லை. சாப்பிட‌ ம‌ட்டும்ன்னா வேணும்ன்னா வ‌ரேன்"

"எங்கேயும் போக‌ வேண்டாம் என‌க்கு உன் கூட‌ சாப்பிட‌ போக‌ பிடிக்க‌லை"

இத‌ற்கு மேல் அங்கே அம‌ர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாத‌ம் தான் வ‌ள‌ரும் என்று கோப‌த்தோடு வெளியே வ‌ந்தேன். தோட்ட‌த்தில் இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ முத‌ல் ம‌ல்லிகை ம‌ல‌ர்ந்திருந்த‌து. ப‌றித்துக் கொண்டு உள்ளே வ‌ந்தேன். ம‌ண‌ம் அதில் ம‌ன‌ம் லயிக்க‌...

"ஹ‌லோ சொல்லுங்க‌ மோக‌ன்"

"இன்னிக்கா... கொஞ்ச‌ம் டைய‌ர்டா இருக்கு"

"எங்க‌ போக‌ணும்"

"ச‌ரி இருங்க‌ கேட்டு சொல்றேன்"

"மோக‌ன்ட‌ இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போக‌ணுமாம் அவ‌ருக்கு. அப்ப‌டியே சாப்பிட்டு வ‌ந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிள‌ம்பி தானே இருக்க‌. போயிட்டு வ‌ந்திருலாம்"

தோட்ட‌த்து முத‌ல் ம‌ல்லிகை என்னை பார்த்து புன்ன‌கைத்த‌து.